இப்படியும் கொடுக்கலாம் - Frequent Flyer Miles

வெளிநாடுகளில் வசிக்கும் நம்மில் பலரிடம் frequent flyer miles இருக்கும். Northwest Airlines (NWA) மற்றும் Continental Airlinesன் மைல்கள் உங்களிடம் இருந்தால் Americares அதைப் பெற்றுக் கொள்கிறது. இதைச் செய்வது சுலபம். உங்கள் கணக்கு எண்ணுடன் NWA/Continental ஐத் தொடர்பு கொண்டு Americaresக்கு என் மைல்களைக் கொடுங்கள் என்றால் போதும். Americaresஇடம் இதைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமில்லை. 5 நிமிட வேலை.

இப்போது பார்க்கிறேன் செஞ்சிலுவைச் சங்கம் பல விமான நிறுவனங்களின் மைல்களையும் (including the famous Delta Skymiles) வாங்கிக் கொள்கிறதாம். நீங்கள் கொடுக்கும்போது "சுனாமிக்காக" என்று குறிப்பிடவும்.

ஒரு மதியம்

உண்டியல் குலுக்கக் காலையிலிருந்து ஆட்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருத்தரையும் காணலை. மதியம் நான் மட்டும் கிளம்பி எங்கே போவதென்று முடிவின்றி, கார் போன போக்கில் போய் Lowe's வாசலில் நின்றேன். அச்சடித்த துண்டுக் காகிதங்களும் ஒரு ப்ளாஸ்டிக் டப்பாவுடனும். ரெண்டு மணி நேரம் நின்றிருப்பேன். கேள்வி கேட்காது கொடுத்தவர்கள், கேள்வி கேட்டுக் கொடுத்தவர்கள், ஏற்கெனவே கொடுத்துட்டேன், இல்ல சாரின்னு போனவர்கள்,சுனாமியா, எங்கே? என்று எல்லா விதமாயும் இருந்தார்கள். நிறைய பேர் நின்று விசாரித்தார்கள். உன் வீட்டில் எல்லோரும் பத்திரமா என்றார்கள். ஒரு அம்மா கையைப் பிடித்துக் கொண்டு கண் கலங்கினார். இன்னொருத்தர் நமக்காக இறைவனைத் தொழுதார். வீட்டுக்கு வந்து எண்ணிப் பார்த்தபோது 125 டாலர்களும் 82 காசுகளுமிருந்தன. இன்னும் என் தோழரெல்லோரும் வந்திருந்தால், ஒரு பத்து இடங்களில் சேர்த்திருந்தால் என்று மனக்கணக்கோடியது. TROவுக்கு அனுப்புகிறேன். நன்றி மனிதமே.

புது சுனாமி எச்சரிக்கை காலாவதி

தற்போது நிலவும் புதிய எச்சரிக்கை இன்னும் சில மணிகளில் காலாவதியாகிறது. அதாவது இந்திய நேரப்படி 30ந்தேதி காலை ஆறிலிருந்து மாலை 6 வரை மட்டுமே இந்த எச்சரிக்கை. அரசும் ஊடகங்களும் இந்த எச்சரிக்கைக் கால வரையறையை இன்னும் உரத்துச் சொல்லி வீண்பயத்தைக் குறைக்க வேண்டும்.

உண்டியல் குலுக்குவோமா?

அமெரிக்காவிலிருப்போர் உண்டியல் குலுக்கலாமா?
பலமுறை நாம் பார்த்திருக்கிறோம், தீயணைப்புத்துறை, ஆப்பிரிக்க நிவாரணம், இது மாதிரி உண்டியல்கள் சாலைச் சந்திகளில், பாதையோரங்களில், கடைகண்ணிகளில் குலுங்கும். இது விடுமுறைக்காலம். கூட்டம் கூடும். இப்போது செய்திகள் கொஞ்சம் பரவியிருக்கின்றன. புஷ்ஷ¤ம் ஆதரவைக் காட்டியிருக்கிறார். இப்போது உண்டியல் குலுக்கினால் கொஞ்சம் காசு தேறும்.

எப்படிச் செய்வது?

நாம் எதையும் விற்கப் போனால்தான் பெரும் விண்ணப்பப் படிவங்கள், அனுமதிகள் என்று அலைய நேரும். விற்காமலிருக்கும் வரை நாம் உள்ளூர்ப் போலீசாரிடம் பேசி அந்தப் பகுதியில் நிதி கோரலாமா (zoning regulations) என்று கேட்டுக் கொண்டால் மட்டும் போதும் எனத் தெரிகிறது. நீங்கள் உங்களூர் தமிழ்ச்சங்கத்தோடு இணைந்து இதைச் செய்வது நலம். ஒரு நாலைந்து பேர், நாலைந்து இடங்களில செய்யமுடிந்தால் போதும்். இதைத்தான் நாளை செய்வதாகத் திட்டமிட்டு வருகிறோம். விடுமுறைக் காலத்திலேயே இதைச் செய்து முடிப்பது நல்லது என நினைக்கிறேன். எவ்வளவோ பேருக்குக் கொடுக்க மனமிருக்கும், எப்படி எங்கேயென்று தெரியாது. கையிலிருப்பதைப் போட்டுவிட்டுப் போவது அவர்களுக்குச் சுலபம். அவர்களது ஒவ்வொரு டாலரும் நமக்கு முக்கியம். எப்படிப் போகிறதென்று பார்க்கலாம்.

மறந்து விட்டது, ஒரு அரைப் பக்கத்தில், ஏன் இந்த வசூல், என்ன நடந்தது, நீங்கள் யார் (எந்த சங்கம்), விருப்பமானோர் வேறு எங்கெல்லாம் நிதியளிக்கலாம் அல்லது விபரம் பெறலாம் போன்ற விபரங்களை மக்களிடம் கையளித்தல் நல்லது.

அமெரிக்கத் தமிழர்களுக்கு

அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் நிதியினை பெட்னாவுக்கு (FETNA) அனுப்பலாம் என அறிகிறேன். சமீபத்தில் கும்பகோணம் விபத்துக்காக பெட்னா நிதியனுப்பியதைப் பற்றி வாசன் சொல்லியிருந்தார். இலங்கைத் தமிழருக்கு நிதியளிக்க விரும்புவோர் இலங்கை அரசின் இப்போதைய நிலவரத்தைப் பார்க்கும்போது தமிழர் புனர்வாழ்வு அமைப்பிடம் (TRO) கொடுப்பதே சிறந்ததெனத் தோன்றுகிறது. அமெரிக்காவிலிருப்போருக்கான TROவின் தொடர்பு எண்கள் இங்கே. விருப்பமுள்ள அன்பர்கள் பெட்னாவை/TROவைத் தொடர்பு கொள்ளலாம்.

என்னாலான நிதியுதவியைச் செய்வதைத் தவிர வேறேதாவது செய்யலாமா என முயன்று வருகிறேன். Americares என் ஊரிலிருந்து சுமார் 30 மைல் தொலைவில் இருக்கிறது. அழைத்து ஏதேனும் தன்னார்வலர்கள் தேவையா என்றேன். இன்றைக்குத் தேவையில்லை, இனிவரும் நாட்களில் வேண்டுமானால் அழைக்கிறோம் என்றார். கனெக்டிகட் தமிழ்ச்சங்கத்தோடு தொடர்பிலிருக்கிறேன்.

கொந்தளிப்பு - சிறு குறிப்பு

சுனாமி (tsunami, ஜப்பானிய மொழியில்) என்றழைக்கப்படும் கடல் கொந்தளிப்பு கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கங்களாலும், கடலடி எரிமலைகளாலும், விண்கற்கள் கடலில் விழுவதாலும் ஏற்படுகிறது. கடலில் ஒரு இடத்தில் ஏற்படும் இத்தகைய அதிர்வு மற்ற இடங்களுக்குக் கடல் கொந்தளிப்பாகப் பரவுகிறது. இக்கொந்தளிப்புப் பரவும் நேர அளவைக் கணக்கிட இயலும். 1960களின் ஆரம்பத்தில் பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் அலாஸ்காவையும், சிலியையும் பாதித்த பிறகு 1965ல் யுனெஸ்கோ உதவியுடன் 1965ல் International Tsunami Information Center ஹவாய்யில் ஹோனலுலுவில் நிறுவப்பட்டது. இது பசிபிக் கடற்பகுதியில் ஏற்படும் நிலநடுக்கங்களைப் பதிவு செய்கிறது. ரிச்டர் அளவு, நிலநடுக்கம் ஏற்பட்ட இடம் இவற்றைக் கொண்டு கொந்தளிப்பு எவ்வளவு நேரத்தில் எந்தெந்த நாடுகளுக்குப் பரவும் என்ற எச்சரிக்கையை அந்தந்த நாடுகளுக்கு அனுப்புகிறது. இந்த எச்சரிக்கையின் படி கடலோர மக்கள் இடம் பெயர்க்கப் படுகிறார்கள். இதோ இந்தப் படத்தைப் பாருங்கள்.



இதில் ஒவ்வொரு பட்டையும் கொந்தளிப்புப் பரவ ஒரு மணி நேரமாகும் என்பதைக் குறிக்கிறது. இதன்படி ஹவாயில் ஏற்படும் நிலநடுக்கம் அலாஸ்காவில் கடல் கொந்தளிப்பை ஏற்படுத்த சுமார் 6 மணி நேரங்களாகும்.

கொடுமை என்னவென்றால் இந்தத் தகவல் மையம் பசிபிக் கடற்பகுதிக்கு மட்டுமே எனத் தெரிகிறது. சமீபத்தில் நடந்த ஒரு மாநாட்டில் இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆசிய நாடுகளையொட்டிய பசிபிக் பகுதிகளுக்கும் இத்தகைய மையம் அமைக்கப்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது. எது எப்படியோ...இன்னொரு விபத்து தவிர்க்க முடியாமல் போனது.

தொடர்புடைய சுட்டிகள்: http://www.drgeorgepc.com/TsunamiFAQ.html
http://wcatwc.arh.noaa.gov/ttt/ttt.htm

கூகுள் படிப்பாளி

புதுசு புதுசா எதையாச்சும் சொல்லி அசத்தும் கூகுளின் (பரிக்கு 'குள்'ளு, காசிக்கு 'கிள்'ளு!) இன்னொரு அசத்தல் கூகுள் ஸ்காலர் (படிப்பாளி?!).

ஆராய்ச்சியில் விடை எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியமானது கேள்வியும், விடைக்கான வழியைத் தேடுதலும். ஒரு பரிசோதனையை யாராச்சும் முன்னாடியே செஞ்சிருக்காங்களா, எப்படிச் செஞ்சாங்க, அந்த விடையை எப்படி விளக்கினாங்க அப்படின்னெல்லாம் தெரிஞ்சுக்கறது முக்கியம். இல்லன்னா சக்கரத்தை மறுபடியும் கண்டுபிடிக்கிற மாதிரி (re-inventing the wheel) விரயந்தான். நான் உயிரியல் துறையிலிருப்பதால் இதில் நானறிந்த வகையில் தேடல் எப்படி இருந்திருக்கிறது, இப்போது எப்படிப் பரிணமிக்கிறது என்று சின்னதாய் ஒரு அலசல்.

ஒரு 10-15 வருடங்களுக்கு முன்னர் ஒரு சராசரி சென்னை ஆராய்ச்சி மாணவனுக்குக் கிடைத்ததெல்லாம் Chemical Abstracts, Biological Abstracts போன்ற தலையணை மாதிரிப் புத்தகங்கள். இவற்றில் நமக்குத் தேவையான கலைச் சொற்களைத் தேட வேண்டும். பிறகு அது குறித்த சுருக்கங்களைத் தேடியெடுத்து எழுதிக் கொள்ள வேண்டும். அதற்கான முழுக் கட்டுரை வேண்டுமெனில் அந்த நூலகத்திலிருந்தால் எடுத்துப் பிரதியெடுக்கலாம், இல்லையென்றால் அக்கம்பக்கத்து நூலகங்கள், இல்லையென்றால் அந்தக் கட்டுரையெழுதியவருக்கு ஒரு கால்கடுதாசி. இந்த முறையில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை வெளியானதிலிருந்து அதைச் சென்னையில் முழுமையாகப் படிப்பதற்கு ஆகும் காலம் சுமார் 2 மாதங்கள்.

பிறகு 1995 வாக்கில் நிலைமை சற்றே மேம்பாடடைந்தது. Current contents on disk போன்ற குறுந்தகடுகளால் அந்தத் தலையணைப் புத்தகங்கள் மாற்றப்பட்டன. அதாவது அதே ஆராய்ச்சிச் சுருக்கங்களைக் குறுந்தகடுகளிலிருந்து பிரதியெடுத்துக் கொள்ளலாம். முழுக்கட்டுரை வேண்டுமெனில் மேலே கூறப்பட்ட விதங்களில்தான் முயல வேண்டும். கிட்டத்தட்ட இதே காலத்தில்தான் முன்னேறிய ஆய்வகங்களில் இணையம் மூலமாகத் தேடுதல் தொடங்கியிருந்தது. பின்னர் இணையப் பரவலாக்கத்தால் பெரும்பாலானோர் இவ்வகைத் தேடுதல் முறையையே கையாள்கின்றனர். தற்போது பெரிதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு தளம் National Library of Medicineன் PubMed. இத்தளம் தரமான முறையில் வெளியிடப்படும் 20,000க்கும் மேற்பட்ட அறிவியல் பத்திரிகைகளிலிருந்து ஆராய்ச்சிச் சுருக்கங்களை வெளியிடுகிறது. இதில் ஒரு சில நொடிகளில் உங்கள் கலைச் சொற்களுக்கான சுருக்கங்கள் வந்து நிற்கும். இலவசமாகக் கிடைக்கும் முழுக் கட்டுரைகளுமுண்டு. அல்லது அந்தந்த நூலகங்களின் மூலமாக வெளியீட்டாளரின் இடத்துக்குச் சென்று முழுக்கட்டுரைக்கான pdf கோப்பையும் எடுத்துக் கொண்டுவிடலாம். இத்தனையும் ஐந்து நிமிடங்களில். அதே போல இந்தக் கலைச்சொல் சம்பந்தமாக இன்றைக்கு என்ன ஆராய்ச்சிக் கட்டுரை வெளி வந்திருக்கிறது என்பதையும் Cubby என்ற வசதியின் மூலம் அறிந்து கொள்ளலாம். PubMedல் நாம் ஒரு வார்த்தையைக் கொண்டு தேடுதல் நடத்தினால் தேதி வாரியாக எல்லாவற்றையும் கொண்டு வந்து போடும். வேண்டுமென்பதை நாம்தான் சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சமீபத்தில் கூகுள் ஸ்காலர் சோதனை முறையில் வெளிவந்திருக்கிறது. இதன் சிறப்பம்சம் என்னவெனில், இதுவும் கிட்டத்தட்ட ஒரு கலைச்சொல்லுக்கு அத்தனை விடைகளையும் தரும். ஆனால் எது முக்கியமாகக் கருதப் படுகிறதோ, அதிகம் பேரால் மேற்கோளிடப்பட்டதோ அதுவே முதலில் வரும், மற்ற கூகுள் தேடுபொறிகளைப் போலவே. இது ஒரு ஆராய்ச்சியாளருக்கு மிகவும் பயனுள்ளது, முக்கியமாய் ஆரம்பநிலையில் இருப்பவருக்கு. ஏனெனில் எவையெல்லாம் அந்தத் துறையில் முக்கியமான கட்டுரைகள் என்பதை அவர் கண்டு கொள்கிறார். கூகுள் செய்திகளில் இருக்கும் Sort by Date போன்ற வசதி எதிர்காலத்தில் வருமானால் நாளாந்த வெளியீடுகளைச் சுலபமாக அறிந்து கொள்ளலாம். முழுக்கட்டுரைக்கான காப்புரிமை போன்ற விஷயங்களால் எல்லாக் கட்டுரைகளும் முழுவதாகக் கிடைத்து விடுவதில்லை. இந்தக் காப்புரிமை விஷயத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் (அதாவது, மக்கள் ஏற்கெனவே இந்த ஆராய்ச்சிக்கான பங்கை வரிகளின் மூலம் அளித்துவிட்டார்கள், எனவே அரசு நிதியுதவியில் நடக்கும் ஆராய்ச்சிகளின் முடிவுகளை அறிந்துகொள்ள மக்கள் ஏன் பணம் கொடுத்து ஒரு கட்டுரையை/பத்திரிகையை வாங்க வேண்டும்?) கூகுள் ஸ்காலரை ஆராய்ச்சியாளர்கள் அதிகமாகப் பயன்படுத்த வைக்கும் என நினைக்கிறேன். மேலும் கூகுள் National Center for Biological Information, European Molecular Biology Laboratory போன்றவற்றின் ஏனைய புள்ளி விபரங்களையும் (மரபகராதி, புரத மூலக்கூறு வடிவங்கள் போன்றவை) பயன்படுத்திக் கொண்டு அவற்றைத் தன் பாணியில் வெளியிடலாம் என நம்புகிறேன். நன்றி கூகுள்!

மாவு பிசைந்த கதை

ராத்திரி வீட்ல சப்பாத்தி செஞ்சோம். ஒரு சின்ன மாவுருண்டையை அம்மா மகனிடம் கொடுத்தார். அவன் அதை உருட்டினான். பிறகு தரையில் வைத்துத் தட்டினான். இரண்டு விரல்களை அதில் பதித்துவிட்டுக் கண் என்றான். பிறகு பெயரிலி முகம்னான் (பெயரிலியின் இந்த முகங்களை அவன் பார்த்திருக்கிறான்!). இப்படியே உருட்டித் தட்டி நீட்டி பூ, மீசை, மேளம், நாதசுரம், பிட்ஸா, புக்காமணி (லிங்கம், ஆண்குறி) எல்லாம் செஞ்சான். பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். அவனுக்கும் மாவுக்கும் வித்தியாசமில்லை. அவனுக்குள்ள எல்லா உருவங்களும் இருக்கு. எல்லாத்துக்குமான விதையிருக்கு. அந்த சுயம் தன்னை எப்படியெல்லாம் பிசைந்து பிசைந்து உருக்கொடுத்துக்குதோ அப்படியெல்லாம் கொடுத்துக்கட்டும். அம்மாப்பா ஒரு துணையா இருந்தாப் போதும்னு தோணுது. அவனே அவனைப் பிசைந்து கொள்ளட்டும். என் கைகளையும் போட்டுப் பிரட்டி அந்த மாவை அழுக்காக்காம இருந்தாப் போதும்னு நெனச்சுக்கிட்டேன்.

இப்படியே போன மாவுக்கதை மனுசங்ககிட்டயும் போச்சு. நாமளும் இப்படித்தான் மாவா இருக்கோம். எல்லோருக்கும் வேணும்கற ஒரே விஷயம் சுகம். நித்யானந்தம். எங்கேன்னு தெரியல. அல்லது அப்படி ஒன்னு இல்ல. நான் காட்றேன் வான்னு கூப்பிட்டுக் கூப்பிட்டுக் குடுக்குது மடமெல்லாம். மதமெல்லாம். சாமியார்க் கூட்டமெல்லாம். கோயிலெல்லாம். மாவை உருட்டுது. நீட்டுது. பிசையுது. மதவாதியாக்குது. தனக்கான காரியத்தைச் சாதிச்சுக்குது. குலப் படையைக் கொண்டே குலத்தையழித்த ராமகாதை இன்னும் தொடருது. மதவெறிக் கும்பல்களின் இன்றைய நோக்கமென்ன, உங்களையும் என்னையும் பேரானந்தப் பெருவாழ்வுக்குக் கொண்டு போறதா? அப்படியொன்னு இல்லாத போது, அல்லது இருக்கது அதுக்கே தெரியாத போது அது நம்மள எங்க கூட்டிக்கிட்டுப் போகப் போவுது. சும்மா இங்கயும் அங்கயும் இழுத்தடிச்சுப் பம்மாத்துப் பண்ணி, அது நாலு காசையும், பேரையும், அதிகாரத்தையும் சேத்துக்கும். நாம இப்புடியே பரதேசியாத்தான் சாவோம்.

நாத்திகம் பயில்னு பாக்கும் போதும், சங்கர மடத்து வண்டவாளங்களைத் தட்டிக் கேட்கும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தோட பணிகளைப் பாக்கும் போதும், பெரியார் வேணும்கற ஆதங்கத்தைப் பாக்கும்போதும் கொஞ்சம் நிம்மதியாயிருக்கு.

தங்கமணியின் கடிதங்கள் - 2



காதலைப் பற்றி ஏன் விவாதம் செய்யப் போகிறாய்? என்ன செய்யப் போகிறாய்? தமிழர்களுக்கு ஒரு காதல், ஐரோப்பியர்களுக்கு ஒரு காதல், அமெரிக்க, நீக்ரோ காதல் உண்டா? எனக்குத் தெரியவில்லை. நான் ஏதாவது சொல்லப் பயமாயிருக்கிறது. ஏனெனில் அது மட்டுமாக காதல் இருக்காது. இன்னும் விளிம்பு தாண்டி வழிவது போல இருக்கும். காதலைப் பற்றிய எல்லா விளக்கங்களும் மனதின் கற்பிதங்களை, சமூக ஏற்பாடுகளை, ஆதிக்க விதைகளையே சுமந்து கொண்டிருக்கின்றன.

காதல் என்பது என்ன? இந்தக் கேள்வி எண்ணிலடங்கா முறைகள் கேட்கப்பட்டது. குறைந்தது ஒவ்வொரு உயிரும், ஒரு முறையேனும் நெஞ்சு முழுக்க வலியோடும், துயரோடும், தோள்களை மீறி எழும் மகிழ்வோடும் இந்தக் கேள்வியைக் கேட்காமலிருந்திருக்காது. எத்தனையோ பதில்கள், கவிதையாக, பாடலாக, மூச்சாக, கண்ணீர்த்துளிகளாக, விசும்பல்களாக, நெஞ்சுத் துடிப்புகளாக, ஓவியங்களாக, நெருப்புப் புகைகளாக, சாம்பலாக, சாவுகளாக, சிரிப்பாக உதிர்ந்திருக்கின்றன. நான் இந்தக் கடிதத்தில், என் அளவிலான அனுபவத்தில் இருந்து - காதல் ஹார்மோன்களின் கவிதை, போன்ற மூளையின் அனுமானங்களை அடியோடு நிராகரிக்கிறேன். காதலைப் பற்றிய கேள்விகளின் நோக்கம் என்ன என்பது ரொம்பவும் முக்கியமானது. ஏனெனில் ஒவ்வொருவரும், தங்களுக்கான பதில்களைக் கையில் வைத்துக் கொண்டே, கேள்விகளைச் செதுக்குகின்றனர். இது எல்லாக் கேள்விகளுக்கும் பொருந்தும்.

தமிழர்களுடைய காதல் என்று ஒன்றுமில்லை; சமூக வழக்கம் என்ற ஒன்று இருந்திருக்கலாம். அதுவும் மாறுதலுக்கு உட்பட்டதே. தமிழர்களுடைய பண்பாடும், எல்லா நிலவுடைமைச் சமூகங்களின் விழுமியங்களைத் (values) தன்னகத்தே கொண்டதே. விவசாய நாகரீகங்கள் (agrarian civilizations) அனைத்தும் ஆணாதிக்க விழுமியங்களைக் கொண்டதே. விவசாய நாகரிகம் தோன்றுவதற்கு முன்பிருந்த சமுதாய அமைப்பு பெண்ணாதிக்க விழுமியங்களைக் கொண்டதாக இருந்தது. சொத்துடைமை என்பது நிலவுடைமைச் சமூக அமைப்பில்தான் வலுப்பெறுகிறது. ஏனெனில் சொத்தின் மதிப்பு அதில் செலுத்தப்படும் உழைப்பின் மதிப்பாகும். நிலமே மனிதனின் மதிப்பு மிக்க சொத்தானது நிலவுடைமைச் சமுதாயத்தில்தான். ஏனெனில் நிலத்தின் மீதே மனிதன் அதிக உழைப்பை, அதைப் பண்படுத்த, பயிர் விளைவிக்க, பாதுகாக்க, செலுத்த வேண்டியிருந்தது. வாழ்வை முற்றிலுமாக அதைச் சார்ந்து முடக்க வேண்டியிருந்தது. எனவே நிலம் உடைமைப் பொருள் ஆனது. உடைமையின் மேல் அவனுக்கு அதிகாரம் வந்தது. அதிகாரத்தின் வரம்பை நீட்டிக்க ஆசை வந்தது. ஒருவன் சொத்தின் மேல்தான் அதிகாரம் செலுத்த முடியும். உயிரின் மீது செலுத்த முடியாது. எனவே அனைத்தையும் சொத்தாக மாற்ற வேண்டியிருந்தது. அதிகாரத்திற்கான ஆசை, சொத்தின் எல்லையை விரித்துக் கொண்டே போனது. சக ஆண், பெண், குழந்தைகள், கன்று காலிகள், வீடு, வாகனங்கள், அசைகின்ற அசையாத பொருட்கள், ஏன் கடவுளும் சொத்தின் எல்லைக்குள் வந்து விட்டார். சொத்தை விரித்து, அதிகாரத்தின் மதுவைக் குடிக்க தந்திரங்களும், உபாயங்களும், வழிமுறைகளும் வேண்டியிருந்தன. நீதி, அறக் கோட்பாடுகள், புராணக் கற்பிதங்கள் இவைகள் அதன் வழிமுறைகளாயின.

தமிழர்களுடைய வாழ்வில் அறம் மிகவும் எளிமைப் படுத்தப்பட்டும், கூடியவரை இயல்பாகவும் இருக்குமாறு இந்தச் சமூகத்தின் தொல்லறிவும், ஆன்மீக உணர்வும் அதை நெறிப்படுத்தின. பட்டிணத்தார், கண்ணதாசன், பத்ரகிரியார், தாயுமானவர் இவர்களெல்லோரும் ஆரிய ஆளுமைக்கு ஆட்பட்டவர்களே. அவர்கள் பழந்தமிழரின் பிரதிநிதிகளாக மாட்டார்கள். ஏறக்குறைய 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த வாழ்க்கை முறையினைப் பற்றிய அறிவு வேண்டும். வரலாறு மட்டும் போதாது. வரலாறு என்பது வலுத்தவற்றின் நிழல். அதனடியில் மறைந்து போன சாமானியனின் அடையாளத்தைக் கண்டுணர வேண்டும். அதற்கு என்ன செய்வது? அந்தச் சாமானியன் எங்கும் போய்விடவில்லை. அவன் உனக்குள்ளும், எனக்குள்ளும் அமிழ்ந்து கிடக்கிறான்.

காதல் என்பது சமூகவியல் ஒழுக்கமா, வாழ்வியல் ஒழுக்கமா? சமூகவியல் ஒழுக்கமெனின், அப்போது சமூகத்தின் சட்டகங்களுக்குள் அது வந்துவிடும்போது, தனிமனிதனின் திறமை, அந்தஸ்து, வசதி, தேவை, இவைகளால் உருக்கொடுக்கப்படும். அப்பொழுது, பெண் முற்றாக மாறிப்போன சொத்தாகிவிடுவாள். பிற சொத்தின் மீது உள்ள வரையறைகள், நியாயங்கள் இவைகள் போன்று அவள் மீதும் விழுகின்ற விதியின் கோடுகள் உன்னுடைய தேர்வையும், உரிமையையும் கூட லேசாக பாதிக்கவே செய்யும். எனினும், இது ஆணாதிக்க சமூகமாகையால் ஆண்களுக்குப் பெரிய பாதிப்பெதுவும் இருக்காது.

ஆனால், காதலை ஒரு வாழ்வியல் ஒழுக்கமென்று கருதினால், எல்லாக் கற்பிதங்களையும், சமூக நிலைப்பாடுகளையும் உதற வேண்டி வரும். வாழ்வு தனிமனிதனிடமிருந்து தொடங்குகிறது. தன்னுடைய விரிவடைதலை, எல்லையற்ற பிரக்ஞையின் கடலில் நீர்த்துப் போய்விடுவதற்கான விரிவடைதலை, ஒரு நதியைப் போல, ஒவ்வொரு வாழ்வும் தனக்கேயுரிய வழிகளில் செய்கிறது. பிரவாகமெடுக்கும் இந்த வாழ்வின் போக்கைக் காதல் தீர்மானிக்கிறது.

காதல் என்பது மதித்தல், பரஸ்பரம் உதவிக் கொள்ளுதல், உண்மையாய் இருத்தல் இப்படி எத்தனையோ அடங்கிப் போன ஆயிரமாண்டுப் பெட்டகம் எனலாம். ஆனால் இதையெல்லாம் மட்டும் வைத்துக் கொண்டு அதைத் தீர்மானமாகச் சொல்ல முடியுமா? அதைப்பற்றி எழுதுவது என்பது அதாகாது. நீ சொல்வாயே, நெஞ்சு இருக்கிற இடமே தெரியாத மாதிரியா இருக்கிறது என்று, அதுகூட ஒரு அழகான காதலுக்கான உரைதான்.

பூ உதிர்ந்து விட்டது
நதி கலந்து விட்டது
நட்சத்திரம் கரைந்து விட்டது
என் தலைச் சுமைக்கு
இன்னும் சில வார்த்தைகளைப் பொறுக்கிக் கொள்ளுதல்
என்ன நியாயம்?
____________________________________

பின் குறிப்பு:
இந்தக் கடிதம் மார்ச் 3, 1999 தேதியிட்ட கடித உறைக்குள்ளிருந்து. அந்தப் படம் நான் கிளிக்கிய கிறிஸ்துமஸ் மர உச்சாணிக்கொம்புத் தேவதை. ஸ்பெஷல் எபெக்ட் உபயம் மாசிலன் (அப்பாவை உலுக்கி விட்டார்)!

ஒளிர்தலும் குமட்டலும்

ஒரு வெளி. பரந்த வெளி. இருட்டு. ஒளிப்பொட்டுக்கள். என்னமோ ராத்திரி வானம்போல. தொலைவாயில்லை, இதோ கிட்டத்துல, ஒரு முப்பரிமாண விண்வெளிப் படம் மாதிரி. அதிலொரு நீள்வட்டம். நிற்கிறது. அது எப்படி நிற்கும், இல்லன்னா படுக்கும்? இருக்கு. நானாயிருக்கலாம். அதிலிருந்து ஒரு சின்னக் கோள் கிளம்பி வருகிறது. சுற்றுகிறது. ஆடுகிறது. திரும்பி வந்து நீள்வட்டத்துக்குள் அடங்குகிறது. இன்னொன்று, தொப்பி வைத்த கோள். வேறு நிறம். இது மேலும் கீழுமாய்த் துள்ளுகிறது. இன்னொன்று, இன்னுமொன்று. இப்படியே நிறைய கோள்கள். அல்லது பொட்டுக்கள். அல்லது என்னமோ. சிலதுக்கு ஒளி இருப்பதில்லை. சிலவற்றின் பொருண்மை அந்த நீள் ஒளியின் மையத்தையே ஆட்டி இழுக்கும். சாய்க்கும். அது நீள் வட்ட ஒளியாய் இருக்கிறது. அது ஒரு நாள் சொக்கப்பனைப் போல வெடித்தது, அது என்ன ஒரு நாள்? அங்கு நாளில்லை. இந்த சொக்கப்பனைப் போல மெதுவாய் எரியவில்லை. படாரென வெடித்தது. அதனுள்ளிருந்த சிறு கோள்களெல்லாம் வெடித்தன. இல்லை. காணவில்லை. எதையும் காணவில்லை.

அங்கு எத்தனை முறை போய் வந்திருப்பேன். நிறைய. அது ஒரு நாள் மேடையாய் இருக்கும். அந்தக் கோளெல்லாம் பாத்திரங்களாயிருக்கும். இன்னொரு நாள் அது வெண்மையாயிருக்கும், சிதறிய ஒளியெல்லாம் ஏதாவதொரு வண்ணமாயிருக்கும். அகத்தைப் பிரித்துப் பிரித்துப் பார்க்கிற விளையாட்டு. விளையாட்டின் முடிவில் ஒன்றுமில்லை. உள்ளே யாரும் இருப்பதில்லை. சாமியார்கள், மணியாட்டிகள், கிடாவெட்டுப் பூசாரி, டிரைவிங் லைசென்சு. இல்ல. திரும்பி வந்தப்புறம் வித்தியாசமாயிருக்கும். நிறைய காணாமப் போயிருக்கும்.

வீட்டுக்குள்ள திரும்பி வந்து குப்பையை ஒழிக்கத் தோணும். முந்தி எங்க ஊரு பஞ்சாயத்து யூனியன் ஆபீசுல அடிபைப்பு போட்டாங்க. அதுக்கு போர்வெல் போட்டாங்க. துளை போட்டதுக்குப் பிறகு நீள இரும்பு பைப்புகளை ஒன்னொன்னாத் திருகித் திருகி எறக்குவாங்க. அப்போ ஏற்கெனவே எறங்குனது ஆழத்துக்குள்ள விழுந்துடாம இருக்கதுக்காக நல்லா நெட்டு எல்லாம் போட்டுத் திருகி நிக்க வச்சிருப்பாங்க. அந்த மாதிரி உள்ளிறங்கவிடாமல் என்னமொ, என்னென்னமோ இழுத்துப் பிடிக்குது. மேலேயே சுத்துறேன். கருப்பர் கோயில் கொடராட்னத்துல சுத்துற மாதிரி. மூச்சு முட்ட மனுசரடைச்ச டவுன்பஸ்ஸுல போறாப்பல. உவ்வாக். வாந்தி. மூச்சு வாங்குது. உவ்வ்வ். வந்தும் வராம. ஒக்காரு. குனி. நெத்தியில கைய வச்சு அமுக்குது அம்மா. உவ்வாக். பொலிட்டிகல்லி கரெக்ட் ரைட்டிங்க் செரிக்காம கிடந்திருக்கு. கண்டதைத் திங்காதேன்னு சொல்றதா, இல்ல தின்னு, கண்ணாடி, விரியன் பாம்பு, இரும்பு எல்லாத்தையும் தின்னு. தின்னுப்புட்டு ஹடயோகி மாதிரி நில்லுங்கறதா? அது அப்புறம். இப்பக்கி இது போதும், வயிறு நல்லாருக்கு. வாய் கொப்புளிச்சுட்டு அடுத்த வேலயப் பாப்பம்.

பொன் குஞ்சு


அவனுக்கு இப்ப ரெண்டு வயசும் 5 மாசமும் ஆவுது. பாய்ச்சல்தான். அதன் நிதானம் அதுக்கு. எங்கே எப்ப முட்டுமோன்னு பின்னாடியே மனசோடும். அதுக்கெல்லாம் நிக்குமா அந்தப் பந்து. விசையுறு பந்து. எத்தனையோ ஆட்டங்கள். எல்லாப் பிள்ளைகளையும் போல. அது என்ன தம்பி? தேயிலை. என்ன செய்யப் போறீங்க? கீழே கொட்டப் போறேன். தெளிவா வருது பதில். கடைக்காரர் விளையாட்டாடும். அதுதான் கடைக்கார். ஏலக்காய் கொடுக்கும். எல்லாச் சாமானையும் கீழள்ளிப் பரப்பும். வெற்றுக்கைக் காசைச் சிரித்து வாங்கிக் கொள்ளும். காலைத் தூக்கித் தூக்கியாடி மேளமடித்து வீட்டுக்குள் ஊர்வலம் போகும். தன்பாட்டுக்குத் தனியே உட்கார்ந்து பாடிக் கொண்டிருக்கும். பேசுறது புரியலன்னா, தமிழ்ல பேசுங்கன்னு சொல்லும். வீட்டுக்கு வர்ற தொலைபேசிக்கெல்லாம் பதில் சொல்லும். பெருசுகளைப் பேர் சொல்லிக் கூப்பிடும். டேய் என்றால் சிரித்துவிட்டு மறுபடியும் அப்படியே. சில நேரங்களில் பேசென்றால் பேசாது. பல நேரங்களில் அப்பாம்மா தங்களது புத்தகத்தை எடுத்தால் வச்சிடுங்க அப்படிங்கும். ஆடும்போது பிடித்து அமுக்கினால் அவன விட்றுங்க என்று திமிறும். அது கன்றுக்குட்டி, மீன், குருவி, தூங்கும் தேவதைக் குழந்தை. ஆமாம், பொன்குஞ்சு.

சேரிச்சாமிகளும் ஒலக அதிசயமும்!

குடியானவனோட சாமியையெல்லாம் அவங்கிட்டேருந்து புடுங்கியாச்சு. முத்துக்கருப்பையாவையும் முனியனையும் புடுங்கி அவங்களுக்கு முன்னாடி ஒரு ஸ்ரீ சேத்து பேரைத் திரிச்சு மஹாகும்பாபிஷேகம் நடத்திப் புனிதப்படுத்தியாச்சு. அதுக்குள்ள பள்ளு பறையெல்லாம் போனா பிரச்சன. நீயெல்லாம் என்னத்துக்கு இந்தப் புனிதக் கோயிலுக்குள்ள வாற, இந்தா ஒனக்குன்னு ஒரு சாமி, ஒரு கோயில், ஒன்னோட சேரிக்குள்ளயே கட்டிக்க. அங்கேயே கெட. தமிழக அரசாங்கம் இதச் செய்யுது. 2005ம் ஆண்டுக்குள்ள 7000 கோயில்களை தலித்துகளுக்காக அவங்க குடியிருப்புப் பகுதிகள்ல 7.5 கோடி ரூவா செலவுல கட்டப் போவுதாம். நம்ப முடியல. இதுதான் அரசோட தீண்டாமைக் கொள்கையோ? புரிஞ்சவங்க சொல்லுங்கப்பா.

இந்த லெச்சணத்துல மீனாச்சி கோயிலை ஒலக அதிசயமாக்கனுமாம். ஆமா அது அதிசயந்தான், ஒலகத்துல இல்லாத அதிசயந்தான், இந்துக்கள் அல்லாதவர் உள்ளே வரக்கூடாதுன்னு சாமிய மனுசங்கிட்டேருந்து பிரிச்சு வக்கிற அதிசயக் கோயில்தான். நானும், நாம போயி ஓட்டுப் போட்றலாம், நம்ம ஊர்லயும் ஒரு ஒலக அதிசயம் அதனால இன்னும் கொஞ்சம் பிஸினஸ், இன்னம் நாலு வெள்ளக்காரன் வருவான்னு நெனச்சாலும் என்னமோ மனசு ஒப்ப மாட்டேங்குது. இது மட்டும் ஒலக அதிசயமாச்சுன்னா இந்தப் போலிக் கதைமூட்டை இந்துப் புனிதத்துக்கு இன்னும் கொஞ்சம் பவர் கூடிப் போகும்.(இந்து ஞானமரபின் தொண்டரடிப் பொடிகள் உடனே சிலிர்த்தெழுந்து ஞானப்பால், திரட்டு, ஆழ்வார்கள், தாயுமானவனையெல்லாம் தூக்கிக்கொண்டு வரலாம்!). இந்துத்துவாவெல்லாம் ஓட்டுப் போடுங்க போடுங்கன்னு கதறுது. ஏன்னா அம்மாவுக்குப் (மீனாச்சியச் சொல்றேன்) போடுற ஒவ்வொரு ஓட்டும் இந்துத்துவாவுக்குப் போடுற ஓட்டு மாதிரி. இது அதிசயம். இது பெருமை. இதோடு ஐக்கியப்பட்ட நான் இது. இந்து. இப்படியொரு ஈகோ மக்களுக்கு வளர்றது மதவாதிகளுக்கு நல்லதுதானே. மக்களின் அரசியொருத்தியைப் பிடுங்கி அவளைத் தெய்வமாக்கி, இந்துவாக்கி, அதைக் கொண்டு சாதீயத்தை நிலைநிறுத்திக் கொள்ளும் சாதிவெறியையா உலக அதிசயமாக்கணும்? வேணும்னா தலித்துகளுக்காகக் கட்டப் போற 7000 கோயில்களையும் அப்புடியே ஒட்டு மொத்தமா ஒலக அதிசயமாக்கிரலாம்; இந்தியாவின் சாதீயத்தை ஒலக அதிசயமாக்கலாம்!

கருத்தரங்கு-இடமாற்றம்

உலகத் தமிழ் அமைப்புக் கருத்தரங்கிற்கு ஒரு அழைப்பு விடுத்திருந்தேன். கருத்தரங்கு நடக்கவிருக்கும் இடம் கீழ்க்கண்டவாறு மாற்றப்பட்டுள்ளது:

Center Hall
Busch Campus Center
Rutger University
604 Bartholomew Road
Piscataway, NJ 08854-8002

டிசம்பர் 11, சனிக்கிழமை, காலை 11 மணி.

தங்கமணியின் கடிதங்கள்-1

தங்கமணி எனக்கு எழுதிய கடிதங்களை/அவற்றின் பகுதிகளை இங்கு இட நினைக்கிறேன். இளவயதிலிருந்தே ஒருவரையொருவர் அறிவோமென்றாலும், இளங்கலைக் கல்லூரி வாழ்வே எங்களை நண்பர்களாக்கியது. முதுகலைக்கு இருவரும் வேற்றூர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை. அப்போது ஆரம்பித்ததுதான் இக்கடிதப் போக்குவரவு. அதன்பின் சென்னையில் ஒன்றாயிருந்த சில வருடங்களில் பெரும்பாலும் எழுதிக் கொள்வதில்லை. பிறகு வேற்றூர், கடிதங்கள். இவற்றை நான் மட்டுமே வைத்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் எமது மற்ற நண்பர்களுடனும், உங்களுடனும் பகிர்ந்து கொள்ளுதலே இதன் நோக்கம். இவை வரிசைப் படுத்தப்படாதவை. பெரும்பாலும் எந்தக் கடித உறைக்குள்ளும் ஒரே நாளில் எழுதப்பட்டது இருக்காது. பல நாட்களாய் நினைக்கும் போதெல்லாம் எழுதி ஒன்றாய் வைத்து அனுப்புவான். சிலவற்றில் தேதியே இருக்காது, நலம், நலமா போன்ற விசாரிப்புகள் இருக்காது.

இதைப் பதிவதில் அவன் என் நண்பன் எனும் கர்வமும், அவனுக்கு என் நன்றியும் அடங்கியிருக்கின்றன.

மார்ச் 8, 1999
சுதந்திரமாக இருப்பதற்கே பெரும் தைரியம் வேண்டும் என்று ஓஷோ சொல்வதுண்டு. நானும் பலமுறை அதை உணர்ந்துதான் இருக்கிறேன். ஏனெனில் சுதந்திரமாக இருப்பதென்பது தனியாக இருப்பது. எந்த நம்பிக்கையும், பற்றுக்கோடும் இல்லாமலிருப்பது. யுகயுகமாய்ப் பற்றிக் கொண்டிருந்து, நமது இருப்போடு ஒன்றாகிப் போன கற்பிதங்களை உணருவது; ஏனெனில் அவைகள் கற்பிதங்கள் என்பதைத் தாண்டி அவை நம்மோடு பேசவும், உறவு கொள்ளவும், நம்மைத் துளைத்து நம்மைப் பிணைத்து நம்மோடு கலந்து இறுகிப் போன நம்பிக்கைகளை, நம்பிக்கைகள் எனப் புரிந்து கொள்வது. இதற்கு அசாத்தியமான துணிவு வேண்டும். எப்படி சுதந்திரத்தைப் பற்றி ஒருவன் கற்பனை செய்ய முடியாதோ அப்படியே இந்த தைரியத்தைப் பர்றியும் கற்பனை செய்ய முடியாது.

சகு 'பாரிசுக்குப் போ'வைப் படித்தார். முன்னுரையைப் படித்துவிட்டு அவர் புகழ்நத பொழுது முழுதும் படிக்கட்டும் என்றிருந்தேன். முடிக்கப் போகிறார். லலிதா பண்ணியது அவருக்குப் பிடிக்கவில்லை. துரோகம்தானே அது என்றார். அதைப் பற்றி நான் பேசவில்லை. அவர் ஒரு வார்த்தை சொன்னார். "படிக்கும் போது தலையை வலிக்கிறது; பயமாக இருக்கிறது" என்று. மனம் காலங்காலமாக எழுப்பியிருக்கும் கருஞ்சுவர்களின் மீது ஒளி வீசியபடி சில கடப்பாரையின் தாக்குதல்கள் விழும்போது, மனம் அதிர்கிறது. பெரிய எதிர்ப்புணர்வையும் கசப்பையும் ஏற்படுத்துகிறது. எத்தனையோ யுகங்களாய் இறுகிக் கிடக்கும் அதன் மேற்தளம் சற்றே கீறல் விடத் தொடங்கினாலும், பயங்கரமான வேதனையையும், பாதுகாப்பின்மையையும் உணர்ந்து வீறிட்டலறுகிறது. பன்னெடுங்காலமாய் இறுகிக் கிடக்கும் இமைகளின் மேல் விழும் முதல் ஒளி பயங்கரமான கூச்சத்தையும் வலியையும் தருகின்றது. இமைகள் இன்னும் இறுகிக் கொள்கின்றன. சுகமான கனவுகள் இன்னும் இருக்கின்றன.

ஒருவன் எதையெல்லாம் இழக்க வேண்டும்? சமூகம் அவனுக்குப் பொதுமையான விழுமியங்களைக் கொடுத்து, குழுமனப்பான்மையைக் கற்பித்து, வலிமையான கண்ணிகளில் அவனையும் மற்ற எல்லா தனிமனித, சமூக அமைப்புகளையும் பிணைத்து, அதைத் தாங்கி நிற்பதற்கான சகல ஒழுக்கங்களையும் கடவுளின் பெயராலும், விடுதலையின் பெயராலும் யுகங்களாக ஏற்படுத்தி ஒருவன்மீது முழுமையாகக் கவிழந்திருக்கும்போது ஒருவன் எதற்காக வெளியே வரவேண்டும்?

தன்னந்தனியனாய், கதகதப்பூட்டும் நம்பிக்கைகளைத் துறந்து, திசைகளையே ஆடையாகக் கொண்டு, இந்த முழு உலகின் ஆகர்ஸனத்தையும் புறந்தள்ளி எழ ஒருவனுக்கு எத்தனை வல்லமை வேண்டும்?

அவன் விழித்தெழும்போது எந்த நம்பிக்கையின் குரலைக் கேட்பான், அவன் நடந்து செல்ல சமைக்கப்பட்ட சாலைகள் எதுவுமில்லாத பெருவெளியில் அவன் தனது இலக்கை எங்ஙனம் உணர்வான்? அவன் எந்தப் பாராட்டைப் பெறுவதற்கு அல்லது எந்த உயர்ந்த பீடத்துக்குத் தனது கால்களைச் செலுத்துவான்?

தனது இருப்பொன்றைத் தவிர வேறெதையும் அவன் அங்கு காணமுடியாது.

இப்படியெல்லாம்தான் சுதந்திரத்துக்கான விளைவும், விடையும் இப்பொழுது கூட்டத்திற்கு இடையில் இருந்து பார்க்கும்போது அவனுக்குக் கிடைக்கும். பின் எதற்காக அவன் புறக் கருத்துலகத்தையும், அக உலகையும் கடக்க வேண்டும்?

ஒரு அழைப்பு!

எனக்குக் கிடைத்த ஒரு அழைப்பை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஆர்வமிருக்கும் அன்பர்கள் கலந்து கொள்ளலாம். உலகத் தமிழ் அமைப்பு (World Thamil Organization) நியூ ஜெர்ஸியில் ஒரு கருத்தரங்கை நடத்த இருக்கிறது. இதன் விபரம் கீழே:

மையக் கருத்து: துணைக்கண்டம் - நேற்று, இன்று, நாளை

இடம்: V.F.W
11 Henderson Road
Kendall Park
New Jersey - 08824
Tel: 732-297-9823

காலம்: டிசம்பர் 11, சனிக்கிழமை, காலை 10.30 முதல் மாலை 6.00 வரை

இந்துமாக்கடலா, அதன் பாதுகாப்புச் சிக்கலா, உலகமயமாக்கும் தோற்றத்திலே தமிழ்நாடா, ஈழப் போர் அழிவுகளா, ஈழப் பயணச் செய்திகளா, மாநிலங்கள்-நீர்வள நதிநீர் இணைப்பு ஒரு கேள்விக்குறியா, தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் அளவிளாச் செய்தித் தொகுப்புகளா, நம் புதுமைப் பெண்களின் தடம் அடைக்கப்படுகிறதா அல்லது வழிவிடுக்கப்படுகிறதா? என்பன குறித்த கருத்துரைகள் இடம் பெறுவதாக அழைக்கிறார்கள்.

கருத்துரை வழங்குவோரின் பகுதிப் பட்டியல்
1. அருட் கலாநிதி S.J. இம்மானுவேல் (Former Vicar General of the Diocese of Jaffna)
2. திரு. ராசா, செயலாளர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, புது டெல்லி
3. பேராசிரியர் நாகநாதன், பொருளியல் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம்
4. திரு. சிவராமன் (தராக்கி), இதழாசிரியர், ஈழம்
5. திருவாட்டி. கீதா குமரன், மேரி லாண்ட்
6. திரு. இரகுராசா, மேரி லாண்ட்
7. திரு. சங்கர பாண்டியன், மேரி லாண்ட்

மேலும், கலந்துரையாடல், கலை நிகழ்ச்சிகளுடன் நண்பகல், இரவுணவும் உண்டு. இக்கருத்தரங்கிற்கான பதிவுக் கட்டணம் $50.00 (துணைவருக்கு இலவச அனுமதி!). செல்வதாக உத்தேசம்.

கலாச்சாரச் சுற்றல்

அன்பு வெங்கட்,
எது குறித்தும் இன்னும் முழுமையடையாத கருத்துப் பொதிகளைச் சுமந்து கொண்டிருக்கிறேன். இந்நிலையிலே உங்கள் மனந்திறந்த விவாதம் மனதுக்கு நன்றாயிருக்கிறது. இதற்காக என் நன்றி. இனி எனக்குத் தோன்றுபவற்றைச் சொல்கிறேன்.

முதலில், நீங்கள் சொல்லியிருக்கும் அறிவுப் பரவலாக்கத்தைச் செய்வதையே அடுத்து ஆக வேண்டிய காரியமாக ஏற்றுக் கொள்கிறேன். இந்த விவாதத்தைக் கூட நீங்கள் சொல்லும் வெற்றுப் பிரசங்கத்தில் சேர்த்துவிடலாம்.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்து ஆவதென்ன என்ற அசூயை மிகுந்து போகிறது. ஆனாலும் அதன் எச்சத்தை இன்றும் காணும்போது அதே வரலாறு தொடர்கிறதோ என்ற சீற்றம் கிளம்புகிறது. பெரியவர் உள்ளே போனதுக்கப்புறம் சின்ன சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்குப் பின்னால் நின்று போஸ் கொடுக்கும் டி.என்.சேஷனும், இந்து ராமும் இவ்வரலாற்றை எப்படியாவது முன்னெடுத்துச் சென்றுவிட வேண்டும் என்பதன் சின்னமாய் எனக்குத் தெரிகிறார்கள். என் பார்வையிலே பிழையிருக்கலாம்! ஒரு மடத்தைக் கட்டிக் காப்பதன் மூலம் அரசியலைக் கட்டிக் காக்க முடியும் என்று அவர்கள் நினைக்கின்றார்கள், இல்லையா? அந்த மடத்துக்கு தெய்வாம்சத்தைத் தவிர இவ்வியாபார உலகில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. இல்லையென்றால் அது இத்தனை பேரையும் ஈர்த்து வைக்காது. அது என்ன? அவர்களை யாரென்று சொல்வீர்கள்? வணிகரா அல்லது பிராமணரா? இந்தக் கூட்டுதான் போராட்டங்களைக் கட்டுப் படுத்துகிறது. கலாச்சாரம், அரச நீதி, சமூக நீதியையும் இதுவே கட்டுப் படுத்துகிறது என நினைக்கிறேன். அதே நேரத்தில் எல்லாத்துக்கும் இதுதான் காரணமென்று நான் சொல்லவில்லை.

எல்லாத்துக்கும் பிராமணர்தான் காரணமென்று நான் சொல்வேனாகில் அது முதிர்வற்ற வாதம். நோயெதிர்ப்புத் தன்மையைப் போலவே இது வினை, இன்னொன்னு எதிர்வினை. எதிர்வினைக்கு இன்னொரு எதிர்வினை. திராவிடக் கொள்கைகளும் பார்ப்பனீயமும் இப்படித்தான் சுழல்கின்றதாக எனக்குப் படுகிறது. நடுவில் சந்திலே ஆயிரம் சிந்துகள். மூலம் எங்கேயென்று தேடினால் அதைக் கொண்டு போய் மனுவிடம் சேர்த்துவிட முடியும். துளசியும் தீவாளியும் கிளம்பிய இடத்தையும் அவ்வாறே கொண்டு சேர்த்து விட முடியும். இப்படிச் சேர்ப்பதன் மூலம் எல்லாத்துக்கும் காரணம் பிராமணர் என்பதாகிவிடாது. அது ஒரு முக்கியமான காரணமாயிருந்தது. இப்போது வணிகமும் அத்தோடு சேர்ந்து கொண்டது. இதிலே யாருக்கு எத்தனை சதவீதமென்று தெரியாது. ஆனால் கடைசியில் அலைக்கழிவது தூரத்திலிருக்கும் தனியாள், அவன்தான் உண்மையான கையாலாகாதவன். அவனுக்குச் சொல்லித் தருவதற்கான அறிவுப் பரவலாக்கம் என்பதில் வரலாற்றுப் பாடத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவன் புதிதாய்க் கற்கின்ற போது வருகின்ற ஆச்சர்யமும், வலியும் இதிலும் உண்டு. அதனைத்தான் நான் வெளிப்படுத்துகிறேன். இப்படி எனக்குத் தோன்றுகிறதே எனச் சொல்கிறேன். உடனே என்ன நடக்கிறது, நான் அப்படியான ஆள், பிராமண விரோதி என அவசர அவசரமாக இனங்காட்டப் படுகிறேன். இன்னும் எனக்கே தெரியாது நான் பிராமணனா அல்லது அதன் விரோதியா, ஆளும் வர்க்கத்தவனா அல்லது அடங்கிக் கிடப்பவனா என்று. உடனே ஒரு சண்டை முளைக்கும், இதன்போது சென்றது குறித்து முட்டி மோதி வார்த்தையாடப்படும். உங்களைப் போல் எல்லோராலும் அணுக முடிந்தால் அடுத்து ஆக வேண்டியதைப் பார்க்கலாம். அல்லது குறைந்தது என்ன நடந்தது அல்லது நடக்கிறது என்பதையாவது தெரிந்து கொள்ளலாம். இணையத்திலும் புத்தகங்களிலுமிருந்தும் தத்தமக்குச் சார்பாய் ஒவ்வொருவரும் எடுத்துப் போட்டுக் கொள்ளலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் நடக்கின்றவற்றை எது ஆட்டிவைக்கிறது, ஒரு திராவிடக் கட்சி அறிக்கையாகட்டும் அல்லது பிராமணக் கட்சியின் அறிக்கையாகட்டும் அதன் பின்னால் உந்து தண்டாக இருப்பது எது என்பதைத்தான் புரிந்து கொள்ள முயல்கிறேன். தாக்குதலையோ அல்லது வெற்றி தோல்வியையோ நோக்கியதல்ல இவ்விவாதம் என்று நினைக்கும்போது உங்களுக்கு இன்னொருமுறை நன்றி சொல்லத் தோன்றுகிறது.

கலாச்சாரம் பாயும் திசை

இது வெங்கட்டின் பின் தொடர்தலுக்குப் பின் தொடர்தல். மற்ற தாவரக் கடவுள்களைப் பற்றிய மேலதிகச் செய்திகளுக்கு அவருக்கு நன்றி. கள்ளி விஷயங்கள் நானறியாதவை. கலாச்சாரங்கள் எப்படிப் பரவுகின்றன என்பது குறித்த எனது பார்வைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

நம் சமூகம் படிக்கட்டு நிலைச் சமூகம். இதில் பிராமணர் பெரியவர். அல்லது பணமும் செல்வாக்கும் படைத்த அடுத்த நிலைச் சாதியார். எந்தக் கை அரசதிகாரத்திலிருந்தாலும் அவ்வரசு இத்தகைய மேற்குடிகளின் ஆளுகைக்கு உட்பட்டதே. இது காலகாலமாக ஊறிக்கிடக்கிறது. நேற்று நாலுபேர் சடக்கென்று எழுந்து உதறிச் சமத்துவம் பேசுவது உண்மையேயானாலும் இந்த மனோநிலையை மாற்ற இன்னும் காலம் பலவாகும்.

பழக்க வழக்கங்களாகட்டும், பண்டிகைகளாகட்டும் இவற்றில் மனிதர்கள் யாரால் பெரிதும் பாதிக்கப் படுகிறார்கள்? மன்னன் எவ்வகை குடிகள் அவ்வழி. மன்னன் யாரால் நடத்தப் படுகிறான்? குல குருவால். குல குரு யார்? உங்களுக்குத் தெரியும். எங்கள் தெருவில், அல்லது சிற்றூரில் பிறக்கின்ற அனேகம் பிள்ளைகளுக்குப் பெயர் வைப்பது எங்கள் பிள்ளையார் கோயில் அய்யர். சாமி பஞ்சாங்கத்தைப் பாத்துச் சொன்னா நல்ல பேருதான். அந்தக் காலத்தில் வளத்தான், சிங்கன், சடையன் என்று பேர் வைத்தார்கள். எங்கள் ஊருக்கு அய்யர் வந்தார். சிங்கனுக்கு கணேஷ் என்றொரு மகனும், முத்துக்கருப்பனுக்கு சோமசுந்தரமும், சோமசுந்தரத்துக்கு பாலசுப்ரமணியனும் பிறந்தார்கள்.

எந்த நோக்கில் கலாச்சார ஆதிக்கம் பரவுகிறது? மேலிருந்து கீழா அல்லது கீழிருந்து மேலா? முட்டி மோதி நாட்டுப் புறப்பாடல்கள் குறுந்தகடு ஏறுகிற காலம் வந்துவிட்டாலும், சபாக்களில் கொடிகட்டிப் பறப்பது எது? பத்திரிகைகளில் பத்தி பத்தியாகப் புகழப்படுவது எது? சுப்புடுவுக்கு விருது கிடைத்ததை எழுதிய எத்தனை பத்திரிகைகள் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு விருது கிடைத்ததை எழுதினார்கள். இதிலே இந்த ரெண்டுக் கலைஞர்களும் சாதியால் பிரிக்கப்படுகிறார்களோ என்னவோ தெரியாது. ஆனால் எதை அவர்கள் முன்வைக்கிறார்களோ/பரப்புகிறார்களோ அதன் பொருட்டே அவர்களது தகுதி தீர்மானிக்கப் படுகிறது. எத்தனை நாட்டார் கலைகள் நகரங்களுக்கு வந்திருக்கின்றன? அதே நேரத்தில் எத்தனை நாட்டார் கலைகள் அழிக்கப் பட்டிருக்கின்றன? வழக்கொழிக்கப் பட்டிருக்கின்றன? புதுவரவுகள் என்ன, அவை எங்கிருந்து யாரால் கொண்டுவரப் படுகின்றன? கலாச்சாரம் மேட்டுக் குடியிலிருந்துதான் பரவுகிறது. பணக்காரன் பிட்ஸா கார்னருக்குப் போனால் நடுத்தட்டுக்காரன் போக விழைகிறான். கீழ்த்தட்டு அதற்காக ஏங்குகிறான். சோளக் கூழுக்கு மேற்தட்டு ஏங்குவதில்லை. ஏன் கூழ்கார்னர் வரவில்லை? இது விலை போகாது. பிட்ஸா கார்னரை நம்பித் திறக்கலாம்.

கல்யாணங்கள் அந்தக் குலத்தின் பெரியவரொருத்தரின் ஆசியோடு நடப்பதுதான் வழக்கம். இவ்வழக்கம் சில சாதிகளில் இன்னும் இருக்கிறது. ஆனால் பெரும்பாலான கிராமங்களில் என்னவானது? பிராமணரொருவர் மந்திரம் ஓத நடக்கிறது. இந்தக் கலாச்சாரம் எப்படி வந்தது? இது மாடர்ன். இதான் இப்போ பேஷன் என்ற நிலை எப்படித் தோன்றியது? பிராமணர்கள் இல்லாத கிராமங்கள் எத்தனையையோ காட்டலாம். இக்கிராமங்களில் பிராமணர்களின் வரவுக்கு முன் திருமணங்கள் எப்படி நடந்தன? அல்லது திருமணங்களே நடக்கவில்லையா? இப்படிப் பரவுவதைத்தான் ஆதிக்கப் பரவல் என்று கருதுகிறேன். இந்தப் பரவலை முன்னெடுத்துச் செல்லும் வர்க்கத்தை ஆதிக்க வர்க்கம் என்று நினைக்கிறேன். கலாச்சாரத்தில் சில விஷயங்கள் மேலானவையாகக் கருத வைக்கப் படுகின்றன. புனிதமானவையென்று புகட்டப் படுகின்றன. அதை மக்கள் நம்பத் தொடங்குகிறார்கள். கலாச்சார மேலாதிக்கந்தான் இதற்குக் காரணமெனக் கருதுகிறேன். இதனால் என்ன கெடுதலென்று நீங்கள் கேட்கலாம். இது ஒரு புதுக் கலாச்சாரம். நதியா வளவி மாதிரி இது ஒரு புது தினுசு வளவி, தோடு. இருந்துட்டுப் போவுதேன்னு கேக்கலாம். ஆனா இத்தகைய கலாச்சாரப் புதுவரவுகள் ஏற்படுத்துற சீரழிவைப் பார்க்கும்போதுதான் அவற்றின் மேல் அவநம்பிக்கையும் அதிருப்தியும் வருது. தெலுங்குப் பாட்டுக்கள் வந்து தமிழ்ப் பாட்டுக்களைக் கீழிறக்குறதைக் கண்கூடாப் பாக்குறோம். முனியன் கோயில் பூசாரிகளை அய்யர்மார்கள் அப்புறப் படுத்துறதைப் பார்க்கிறோம். தமிழ் மந்திரங்களை ஓதலாம்னு சட்டம் சொல்ல வேண்டியிருக்கு. திருவரங்கம் ஸ்ரீரங்கமாகுறதையும், திருமுட்டம் ஸ்ரீமுஷ்ணமாகுறதையும் பாக்குறோம். இதைப் போலத்தான் பொங்கல் மாதிரி கிராமத்தான் பண்டிகையெல்லாம் பின்னுக்குத் தள்ளப் படுகிறது. தீவாளியும் நியூஇயருமாகப் பண்டிகைகள் முன்னிருத்தப் படுகின்றன.

நமது சமூகம் படிக்கட்டுநிலைச் சமூகம். ஆமாம். பிறக்கும் குலத்தை வைத்தே உயர்வு தாழ்வு இன்னும் கணிக்கப் படுகிறது. வளர்ந்த பிறகு பொருளாதாரம் செல்வாக்கைப் பொறுத்து இதன் மதிப்பு கூடவோ குறையவோ செய்கிறது. பிறக்கும்போதிருந்தே நம்மோடு இருக்கும் சாதீய மனநிலை எவ்வளவோ வளர்ந்த பிறகும் அடியாழத்தில் இருக்கவே செய்யும். படிப்பிலும் செல்வத்திலும் ஒரு பறையனும் பார்ப்பானும் ஒத்திருந்தாலும் மனசுக்குள் அந்தப் பறைய/பார்ப்பன பிம்பத்தை இல்லாமலாக்க முடியாது. அம்பேத்கார் என்றவுடன் நினைவுக்கு வருவது அவரொரு தலித். அப்புறந்தான் சட்டமேதை இத்யாதியெல்லாம். இப்படித்தான் நம் சாதீய மனம் இயங்குகிறது. இங்கும் அமெரிக்காவில் எப்படியாவது துருவித் துருவி வெவ்வேறு வழிகளில் முயன்று சாதியை அறிந்து கொள்ளும் வழக்கம் தமிழர்களிடம் இருக்கிறது. கொஞ்சம் நடுத்தரமாயிருந்தால் நீங்கள் பறையரா என்று கேட்பதில்லை. நீங்கள் பிராமிணா? ஏன்னா பறையரா என்று கேட்டால் ஒருவர் பெரும் பாதிப்படையக் கூடும். பிராமணரா என்று கேட்டால் பெருமையாக இருக்கும் பாருங்கள். சிறு வயதில் எங்க அக்காக்களில் ஒருவரை 'என்னம்மா நீ ஐயர் வீட்டுப் பொண்ணா?'ன்னு யாரோ கேட்டதுக்கு என் வீட்டில் யாரும் வருத்தப் பட்டதாக நினைப்பில்லை. அதே நேரத்தில் நீ பறச்சியான்னு யாராவது கேட்டிருந்தா எல்லார் மூஞ்சியும் எப்படிப் போயிருந்திருக்கும் என இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

இத்தகைய ஒரு நிலையில் உயர்சாதிகள் செய்வதெல்லாம் பெரிய விஷயங்கள். பின் தொடரப் பட வேண்டிய செய்கைகள். அவற்றைச் செய்வதன் மூலம் தானும் அவர்களை மாதிரி ஆகிவிடலாம் என்றொரு எதிர்பார்ப்பு. அவர்களது பழக்க வழக்கங்கள் கீழ்த்தட்டு மக்களைப் பாதிப்பது போல், கீழ்த்தட்டு மக்களின் நடைமுறைகள் மேலேயிருப்பவர்களால் சட்டென ஏற்றுக் கொள்ள முடியாது. ஏண்டா பறப்பய மாதிரி உக்காந்து சாப்பிடுறேன்னா அது அசிங்கம். என் வீட்டுக்காரர் பிராமணன் மாதிரி, குளிக்காம சாப்புட மாட்டார் அப்படின்னு சொல்றது பெருமை. இதற்கும் மேலாக எது நம் முன்னால் அதிகம் வைக்கப் படுகிறது, பரப்பப் படுகிறது? ஊடகங்களில் எது சிறந்ததென்று புகட்டப் படுகிறது? விளம்பரங்களில் எவரது வாழ்வு சித்தரிக்கப் படுகிறது? சோப்பு, போர்ன்விடா விளம்பரத்துக்கு ஒரு கிராமத்தானை/ளைக் காட்டுவாங்களா? மிஞ்சிப் போனா உர விளம்பரத்துக்கு கிராமத்தான் முண்டாசும் மீசையுமா வருவான், பக்கத்துல நாட்டுப் புறத்தியும்.

இது எல்லாத்துலயும் எதாச்சும் விதிவிலக்கு இருக்கும். அதைத் தூக்கிட்டு வந்து இங்க பார் அப்படின்னு போட உங்களுக்கு நேரமாகாது. ஆனா பெரும்பாலும் இப்படித்தான் என்று சொல்கிறேன். இந்த ஊடக வலிவு, நிறைய பேரைச் சென்றடையும் திறன் எல்லாம் சேர்ந்து ஒரு ஆதிக்க வர்க்கத்தை முன்னிருத்துகிறது. இது செய்வதெல்லாம் சடங்கு, இது நம்புவதெல்லாம் புனிதம், இது கொண்டாடுவதெல்லாம் பண்டிகை, இதன் வருத்தம் நாட்டுக்கே வருத்தம். என் சித்தியின் அந்தத் துளசிச் செடி இப்படியான கலாச்சாரக் காப்பியடித்தலுக்கு ஒரு உதாரணம். மேலாதிக்கச் சின்னத்தைத் தானும் வைத்திருக்க வேண்டும் என்ற கீழ்த்தட்டு மக்களின் ஆசையின் வெளிப்பாடு. இதைக் காட்டித் தன் வேலைக்காரியிடமிருந்தும், சுற்றத்திடமிருந்தும் தன்னை உயர்த்திப் பிடித்துக் கொள்ளலாம். அவர்களைப் பயமுறுத்தலாம், சிறுமைப்படுத்தலாம். இதுதான் அடியிலியங்கும் மனோநிலையாக நான் பார்க்கிறேன். அந்தப் பிராமணரும் ஒரு உதாரணமே. ('அய்யரு வீட்ல'ன்னு எழுதாம 'எங்க தெருவுல ஒரு வீட்ல'ன்னு எழுதுறது அசிங்கமாப் பட்டுச்சு). பிராமணரல்லாத ஆதிக்கக் காரர்களும், ஆதிக்க வெறியற்ற பிராமணர்களும் நிறையவே இருக்கிறார்கள். இன்னொரு முறை அழுத்திச் சொல்கிறேன், எனக்கு எரிச்சலூட்டுவது ஆதிக்க வெறியேயன்றி தனிப்பட்ட பிராமணர்களில்லை. என்னுள் இயங்கும் ஆதிக்க/அடங்கிய மனோநிலையை நான் கண்காணித்துக் கொண்டிருக்க இத்தகைய அலசல்கள் அவசியமாகின்றன.

ஜகத் சக்கரம்

அமெரிக்கா அப்புறம் மேற்கத்திய கிறிஸ்தவச் சாமிமாரெல்லாம் காமக் குற்றத்துக்காக உள்ளே போறது சகஜம். நியாயம். பொதுமக்கள் யாரும் அவரை விட்டுருங்கன்னு சொல்றது இல்ல. கிறிஸ்தவ மதம் 2000 வருடங்கள் பழமையானது, பல பெரியவங்க இதுல இருந்தாங்க, இருக்காங்க, இதுக்கு கோடிக்கணக்குல சொத்து இருக்கு, அரசியல் செல்வாக்கெல்லாம் இருக்குன்னு யாரும் சொல்லுறதில்லை. மதவாதிகள் சேர்ந்து கைதைக் கண்டித்துப் போராட்டத்தைத் தூண்டுறதில்லை, சிறையில சிறப்பாக் கவனிங்கன்னு கேக்குறதுமில்லை; இன்னொரு பக்கம் சாமியார்க் கொடும்பாவியைக் கொளுத்துறதுமில்லை. தப்பு பண்ணுனாரா, இல்லையா, விசாரிக்கட்டுமே. அதற்கு இடையூறாய் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?

எனக்கென்னவோ பிரேமானந்தரைப் போலவே ஜகத்குருவையும் அரசியல்வாதிகள் கைகழுவி விட்டதாகவே தோன்றுகிறது. இவரும் உள்ளே போனாலும், மதத்துக்கான தேவையும், தேடலுக்கான ஆவலும் மனிதனுக்கு இருக்கும் வரை போலிச் சாமியார்கள் மக்களைப் பல வழிகளிலும் கொல்வது நடந்து கொண்டேதானிருக்கும். இன்று நீ நாளை நான் என்று ஜகத் சக்கரமும் சுற்றிக் கொண்டேதானிருக்கும்.

தீவாளிப் பொறி

இன்றைக்கு தீபாவளி. தீவாளின்னுதான் சொல்லுவோம். அப்பாயி தீவிளின்னு சொல்லும். அப்பவெல்லாம் புதுக்கோட்டை சித்தப்பா எப்படா வரும்னு இருப்போம். வந்தா ஒரு பட்டாசுக் கட்டு வாங்கிட்டு வரும். ஏண்டா காசைக் கரியாக்குறீங்கம்பார் அப்பா. வெடிச்சத்தத்துல அதெல்லாம் காதுல ஏறுமா? ராத்திரி ஆரம்பிச்சு ஒரு பாட்டம். அப்புறம் காலையில. வெடிச்ச குப்பை தீவாளி வாசலுக்குக் களை.

படுவாப்பய அப்புடியே இருந்திருந்திருக்கலாம். இருந்திருந்தா இன்னைக்கு நானும் எண்ணெய் தேச்சுக் குளிப்பேன், எங்கெருந்தாச்சும் மத்தாப்பு வாங்கிட்டு வந்து கொளுத்துவேன், பொண்டாட்டியோட சேர்ந்து பலகாரம் சுட்டுத் தின்னு அஜீரணத்துக்கு சூரணம் தின்னுக்கிட்டு சந்தோஷமா இருந்திருப்பேன். ம்...என்ன செய்ய? தீவாளி கதைகளைப் படிக்கிறப்ப, அதுக்கு ஆயிரத்தெட்டு நேர்மறைக் காரணங்களைச் சொன்னாலும், என்னால இராவணனைக் கொன்னதுக்காக இந்த விழா, இராவண பொம்மையை எரிக்கிற நாள், மாவீரர், தெய்வத்திருமகர் இராமருடைய வரவைக் கொண்டாடுற நாள் அப்படின்னு சொல்லும்போதுதான் இதைக் கொண்டாடனுமான்னு கேக்குறேன். ஏதோ திங்கறதுக்கும், உடுத்துறதுக்கும், நண்பர்களைப் பாத்து சந்தோஷமா இருக்கதுக்கும் ஒரு நாள் அப்படிங்கற அளவில இதைக் கொண்டாடலாமே தவிர, இதுக்கு வேற எந்த மதக் காரணங்களுக்காகவோ, அல்லது தீமை/நன்மை பாகுபாட்டில் நாமெல்லாரும் திடீரென நல்ல பிள்ளைகளாகித் தீமையைக் கொல்லுவோம், தீமை செஞ்ச அசுரன் செத்தான், இராவணன் செத்தான்னு கங்காஸ்நானம் பண்ணிக்கிட்டு திடீர்த் தேவாம்சம் பெற்றுக்கிற மாதிரி கற்பனையோ அல்லது நினைப்போ இருந்தா இந்த தீவாளியை மாதிரிக் கேலிக் கூத்து ஒன்றும் கிடையாது.

நம் கண் முன்னாலேயே நேத்து திடீர்னு ஒரு அரக்கன் உருவாக்கப் பட்டிருக்கான். வீரப்பன். அவனை ஒரிஸ்ஸாவுல துர்காதேவி வதம் செஞ்சிருக்கா. இதே மாதிரி ஒரு அரசியல்தான் இராவணனையும், நரகாசுரனையும் அசுரர்களாக்கியிருக்கு. கலாச்சார மேலாண்மை, அரசதிகாரம் அதை விழாவாக்கியிருக்கு. குடிகள்/நடுத்தட்டு என்ன செய்யுறோம், அவதி அவதியாய் மேற்தட்டோட சேர்ந்துக்கப் பாக்குறோம். நா ஒன்னும் கொறச்சல் இல்லன்னு சொல்லிக்கிறோம். அப்புடித்தான், இந்தத் துளசிச் செடி பாருங்க, எங்க வீட்டு வேலியில ஓணான் ஓடு பாதையில, வயல்ல நடந்து போற வரப்புல மண்டிக் கெடக்கும். நெனச்சா பறிச்சுத் திம்போம். அதைப் புனிதமாக்கி ஒரு மாடத்துல வச்சு அதுக்குப் பூசை பண்ணித் தடபுடல் நடக்கும் எங்க தெரு அய்யரு வீட்டுல. அதைப் பாத்து எங்க சித்தியும் அது மாதிரி ஒரு மாடம் கட்டி வேலியில கெடந்த துளசிச் செடியக் கொண்டாந்து மாடத்துல வச்சு. துளசி நல்லது, அதுல இருக்க மருத்துவ குணங்களுக்காக அதைக் காப்பாத்தனும், கொண்டாடனும். ஆனா இந்த மாடங்கட்டி காவிப்பட்டை போட்டு சமாச்சாரம் எங்கேயோ இடிக்குது. (அதுவும் துளசிக்கு மட்டுந்தான் இந்த மரியாதை, கீழாநெல்லிக்கோ, பிரம்மிக்கோ, தூதுவளைக்கோ மாடம் கட்டினா யாராச்சும் சிரிக்கக் கூடும்!). இத்தகைய செயற்பாடுகள் ஏதோ ஒரு கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவிக்குது, கட்டிக் காக்குது, பரப்புது. அப்புடித்தான் இந்தத் தீவாளியும். குடியானவனுக்கு இது கொண்டாட்டமில்லை. பொங்கல்தான் அவனுக்கு. ஆனாலும் கொஞ்ச கொஞ்சமா இந்த மேலாதிக்கம் கிராமங்களுக்கும் பரவுது. ஏன்னு கேக்காம, காரணம் தெரியாம அந்தக் குடிகளும் கடன் வாங்கியாச்சும் கொண்டாடுது, இல்லன்னா திண்டாடுது. காம்பவுண்டு சுவத்துக்கு வெளியில நின்னு மத்தாப்புப் பொறியைப் பாத்துட்டுப் பெருமூச்சோட போகுது.

எப்படியோ இருந்துட்டுப் போவட்டும். கொண்டாடுறவங்களுக்கு என்னோட வாழ்த்துக்கள்!

பறந்த நொடி

கண்ணாடி சன்னலின் அருகே இருந்தும் வெளியே பார்க்கவில்லை. பார்க்காமலிருந்ததாலேயே வெளியே எதுவும் நடக்காமலுமில்லை. கடைக்கண்ணில் விர்ரென்று பறந்த குருவிக்கூட்டம் பார்வையை இழுத்தது. பார்த்தேன். குருவிகளில்லை. இலைச் சருகுகள். காற்று பறக்கடித்தது. ஒரு நொடித் தோற்றந்தான். அதைச் சொல்ல இவ்வளவு நேரமாகிவிட்டது!

உருப்படியாய்

நேற்று பிட்ஸா வாங்கி வந்த அட்டைப் பெட்டியை எடுத்தேன். ஒரு கிண்ணத்தை அதன் மேல் கவிழ்த்து இரு வட்டங்களை வரைந்தேன். அந்த இரண்டு வட்டங்களையும் வெட்டியெடுத்துக் கொண்டேன். அவற்றில் தலா மூன்று துளைகளிட்டேன். துளைகளில் நூலைக் கட்டினேன். அவற்றை ஒரு உடைதொங்கியின் (hanger?) இரு புறங்களிலும் தொங்கவிட்டேன். இப்போது என்னிடம் ஒரு தராசு இருக்கிறது. இதனைக் கொண்டு இனி நான் எல்லாவற்றையும் எடை போடவும், சீர்தூக்கிப் பார்க்கவும் முடியும். நீதிமானாய் இருக்க இந்தத் தராசு மிகவும் உதவியாய் இருக்கும். என் முன்னறைக் கதவின் உட்புறம் தொங்க விட்டிருப்பதால் அதைப் பார்க்கும் விருந்தினர்களும் தங்களை நியாயவாதிகளாக வைத்துக் கொள்ள முயற்சிக்கக் கூடும். நியாய பரிபாலனம் செய்தது போக மீந்த நேரத்தில் என் மகனும் நானும் கடை வைத்து விளையாடலாம். அண்மைக் காலத்தில் நான் செய்த ஒரு உருப்படியான வேலை என்றால் அது இதுதான்!

சிலையொன்று காண்கிறேன்

வேலைக்குச் செல்லும் வழியில் நான் அநேகமாய் தினமும் கண்டுவிடும் காட்சிகளில் இச்சிலையுமொன்று. அழகான சிலையென்பதையும், இதனடியில் "An American Dream" என்றெழுதி ஒரு பெயரெழுதியிருப்பதையும் தவிர இச்சிலையைப் பற்றி எனக்கொன்றும் தெரியாது. இந்தக் கூட்டு விளையாட்டு, துள்ளும் இளமை, ஒரு கால் மட்டுமே ஒட்டியபடி அந்தரத்தில் நிற்கும் அந்தப் பெண், ஒட்டுமொத்தச் சிலையையும் தாங்கும் அவன் பாத நுனிகள். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுவது. எத்தனையோ சேதிகளைச் சொல்வதுபோல் எனக்குப் படுகிறது. இனி சிலையை உங்களிடம் விட்டுவிடுகிறேன்!

வீரப்ப சம்ஹாரம்

காடுகளை அழிப்பது தவறு. சந்தனம், தேக்கு போன்ற மரங்களைக் கடத்துதல் குற்றம். மனிதர்களைத் துன்புறுத்துவதும் கொல்வதும் நியாயமன்று. இவற்றில் எனக்கு மறுப்பில்லை. வீரப்பன் ஒரு குற்றவாளி. மக்களாட்சியின் நீதிக்கு முன் கொண்டுவரப்பட்டு நியாயமாகத் தண்டிக்கப் படவேண்டியவர். அவர் மட்டுமில்லாது அவரை யாரெல்லாம் தவறிழைக்கத் தூண்டினரோ அவர்களனைவருமே தண்டிக்கப் படவேண்டியவர்கள். இக்குற்றவாளியைத் தேட உடலை வருத்திக் காட்டில் கிடந்து பாடுபட்ட காவல்துறையினரின் உழைப்புக்கு என் வணக்கங்கள். ஆனால் நீதியின்பாற்பட்ட அணுகுமுறைக்கு ஒரு குற்றவாளியைக் கொண்டுவராததன் மூலம் அரசு பிழை செய்து விட்டதாகக் கருதுகிறேன். வீரப்பன் கொலை முன்வைக்கும் கேள்விகள் எத்தனையோ. இதற்கான பதில்கள் எல்லாம் ஒவ்வொருவரின் அனுமானம், நம்பிக்கை, எதிர்பார்ப்பே. உண்மையில் நடந்தது என்ன என்பது நடத்தியவர்களுக்குத்தான் தெரியும். பத்திரிகைச் செய்திகளின் வாயிலாக எத்தனையோ முரண்பாடுகளைக் காண்கிறேன். உங்களுக்கு இதற்கு மேலும் தோன்றியிருக்கலாம்.
1. வீரப்பனை இவ்வளவு தூரம் அழைத்து வந்த ஓட்டுனரால் மருத்துவமனைக்குள் கொண்டு சென்றிருக்க முடியாதா?
2. முதலில் சுட்டது போலீஸ்தான் என்கிறது கர்நாடகப் போலீஸ். இல்லை வீரப்பன் கூட்டம்தான் என்கிறது தமிழக போலீஸ்.
3. சடலத்தைக் குடும்ப வழக்கப்படி புதைப்போம் என்று குடும்பத்தினர் சொல்ல, போலீஸ் வீரப்பனின் சடலத்தை எரிக்கச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறது, இதற்காக எரிபொருட்களையும் போலீஸே தயாராக வைத்திருந்திருக்கிறது. எரிக்கச் சொல்லி அவசரப் படுத்தியிருக்கிறது. வாக்குவாதங்களுக்குப் பிறகு ஒருவழியாய்ப் போலீஸ் புதைக்க ஒப்பியிருக்கிறது.
4. சடலத்தை முழுமையாகப் பார்க்க மனைவியைக் கூட அனுமதிக்கவில்லை. முகம் மட்டுமே காட்டப் பட்டது.
5. வீரப்பனின் இடது கண் காணாமல் போயிருப்பது இந்த என்கவுண்டரின் பேரில் பெரும் சந்தேகங்களைக் கிளப்புகிறது.

என்னைப் பாதித்த சில:
1. தினமலர் வெளியிட்ட முதல்வரின் பஞ்சமுகமலர்ச்சி (ஐந்து விதமாகச் சிரித்திருந்தார்). ஐயாயிரம் குர்தியர்களைக் கொன்றதாக, இன்னும் பல சர்வதேசக் குற்றங்கள் சுமத்தப்பட்ட சதாம் உசேனைப் பிடித்துவிட்டதாக (கவனிக்க: உயிருடன்) என்று புஷ் சொன்னபோதுகூட அவர் முகத்தில் இத்தனை முகமலர்ச்சியை நான் பார்க்கவில்லை.
2. போலீஸாரின் வீதிவழிக் கொண்டாட்டங்கள், இனிப்பு, விழா, அவர்களுக்கு அறிவிக்கப்பட்ட உடனடிச் சலுகைகள், தீபாவளி-நரகாசுரன் கதைகள்.
3. தேவாரம் அவர்களின் பிபிசி செவ்வியில் "இந்த மனித உரிமைக்காரங்க சொல்றதையெல்லாம் கேட்டுக்கிட்டிருந்தா வேலை பாக்க முடியாது" என்ற வாசகங்கள். இது ஒரு தலைமைப் போலீஸின் மனித உரிமை மீதான கருத்து. இதுவே இப்படியிருந்தால் மற்ற அனைத்து மட்டங்களிலும் மனித உரிமை எப்படியிருக்கும் என்பது கேள்விக்குறி.
4. அபத்தத்தின் உச்சமாக, ஒரிஸாக் கடற்கரையில் துர்கா தேவி வதம் செய்வதற்கு இந்த வருடம் மகிஷாசுரனை விட்டுவிட்டு வீரப்பனின் உருவத்தைச் செய்திருக்கிறார்களாம். வீரப்பனின் குடும்பத்திலிருப்பவர்களும், முக்கியமாய் அவரது குழந்தைகள், இன்னுமொருமுறை வீரப்ப சம்ஹாரத்தைப் பார்த்துக் கொள்ளலாமல்லவா. இதனைத் தொடர்ந்து தமிழர்களும் இன்னொரு தீபாவளிப் பண்டிகையை ஏற்படுத்திக் கொண்டாடலாம். அல்லது முருகன் கோவில்களில் சூரசம்ஹாரத்தில் வீரப்பனை வைத்துக் கொள்ளலாம்.

ஒரு மரணத்துக்கு, அதுவும் சந்தேகத்துக்குரிய மரணத்துக்குப் பின் இப்படியான எதிர்வினைகளைப் பார்ப்பது வேதனையாயிருக்கிறது, அந்த ஆள் குற்றவாளியாகவே இருந்தாலும். இதற்கு மாறாக, மதத்தின் பெயரால் எத்தனையோ கொலைகளை நிகழ்த்திய நிகழ்த்தும் மதவாதிகள் பாதுகாப்பையும், உயர்மரியாதையையும் பெறுவதை இன்னொரு புறத்தில் நாம் கண்டபடியேதானிருக்கிறோம். எல்லோருக்கும் உரிமை என்பதை, மனித உரிமை என்பதை வெறுங்கனவென்று புறந்தள்ளி, ஆளும் வர்க்கத்துக்கு அடிவருடியபடி தாழ்ந்தோரை இன்னும் தாழ்த்தும் மனநிலை என்று ஒழியும்? வீரப்பன் குறித்து நம் வலைப்பூவுலகில் கிளம்பிய வினைகளைப் பற்றி நான் எதுவும் எழுதுவதாயில்லை. மூக்கு சுந்தர் சொல்றது மாதிரி அவரவர் மூக்கு அவரவர்க்கு, வைத்துக் கொள்வோம்.

நிறம் மாறும் இலைகள்


சில வாரங்களாக இலைகள் உதிர்கின்றன. சாலைகளெங்கும் பழுத்த இலைகள். மரங்களில் வண்ணப் பூச்சு. பச்சையிலிருந்து கிளம்பி, பசுமஞ்சள், மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு, கருஞ்சிவப்பு என்று விதவிதமாய் இலைகள் நிறம் மாறியசைகின்றன. காற்று பழுத்த இலைகளைக் கீழே தள்ளுகின்றது. மழை அவற்றை நனைக்கிறது. சீக்கிரம் மக்கிப் போக வைக்கவா இந்த மழை? சில்லென்று கார்காலம் கவிகின்றது.

அமெரிக்க வேகப்பெருஞ்சாலைகளைத் தவிர்த்துச் சிறு சாலைகளில் மெல்லப் பயணிக்கலாம். பன்னிற மரங்களை இருபுறமுங் கண்டபடி போகலாம். சிலவிடங்களில் ஏதோ பூக்களினால் செய்யப்பட்ட தோரணவாயிலினூடே நடப்பது மாதிரியான தோற்றம். தலையைச் சுற்றி அத்தனைத் திக்கிலும் வண்ணங்கள். எந்தப் புகைப்படக்காரனும் எடுத்துவிட முடியாதெனுமொரு சூழல். நானெடுத்த சிலவற்றை இங்கே இடுகிறேன். இனிவரும் வார இறுதிகளிலும் பயணிக்கவும், புகைப்படமெடுத்துக் காட்டவும் ஆவல். இலைகள் எனக்காகக் காத்திருக்குமாவெனத் தெரியாது. ஒரு கனத்த மழையிலும் காற்றிலும் சீக்கிரமாகவே உதிர்ந்து போகலாம்.


கொசுறு: இந்த இலைகளின் நிற மாற்றத்துக்கு, பச்சையம் குறைகின்ற காலத்தில், கரோட்டினாய்டுகள், ஆந்தோசயானின்கள் என்ற நிறமிகள் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதுதான் காரணமாம். அத்தோடு இலையின் நிறமாற்றம் அந்த மரத்தின் வயது, வெளிச்சம், காற்று, மண், ஈரம், தகைவு(stress), சுரப்பு(hormone) எல்லாம் காரணமாம். இதனால்தான் பாருங்கள் ஒவ்வொரு மரமும் நிறமாறும் விகிதத்தில் மாறுபடுவதை. ஏன், ஒரே மரத்தில் அடியில் ஒரு நிறமும் உச்சியில் ஒரு நிறமும் இருப்பதைப் பாருங்கள். ரொம்ப எல்லாத்துலயும் அடிபடுறது சீக்கிரமே பழுக்குது, உதிருது!



என் மேலேறிய பாஸ்பேட்!

வயலுக்குப் போட்டோமோ என்னமோ ஞாபகமில்லை, ஆனாலும் பாஸ்பேட்டுன்னதும் வயல்களுக்கு நடுவில அஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட மஞ்சள் நிற விவசாயக் கட்டிடமும் அதோட செவத்துல மீசையும் முண்டாசுமா நிக்கிற ஆளோட விளம்பரப் படமும் நினைவுக்கு வருது. நான் சொல்ல வர்ற பாஸ்பேட் வயலுக்கில்ல. நமக்கு. நம்மை ஆட்டுவிப்பது. நம்ம ஒடம்புல நடக்குற முக்கியமான வேதிவினையான பாஸ்போ ஏற்றத்தைப் பத்திச் சுருக்கமா இங்கே எழுதியிருக்கேன்.

உண்மை நின்றிட வேண்டும்!

மூடுன ஓட்டுக்குள்ள இருக்கது கதகதப்பாத்தான் இருக்கு. வெளியில நடக்குறது தெரியாம வேலை வேலைன்னு திரியறதும் ஒரு ஓடுதான். அப்புடித்தான் ஓடுது ஓட்டு வாழ்க்கை.

அப்படியிருந்தப்பதான் நேத்து மேடத்தோட செவ்வியை பிபிசில பாத்தேன்.

அம்மா, அய்யா, இத்யாதிகள் எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் இருக்கு. ஒலகம்ங்கறது உங்ககிட்ட வேட்டியும் சேலையும் இலவசமா வாங்கிக்கறவங்க மட்டுமில்ல. ஒங்ககிட்ட அரிசிக்குக் கையேந்திக்கிட்டும், ஒங்க தப்பால எரிஞ்சு சாம்பலாப் போன உயிர்களுக்கு நீங்க எறியற தயவுப் பண நன்றிக்குக் கட்டுப்பட்டு அமைதியாப் போற மானஸ்தனுங்க மட்டுமில்ல. ஓட்டு அவங்ககிட்ட இருந்தாலும் ஒலகம் வெளியிலயும் இருக்கு. வீட்டுக் கூரை மேல இருந்த மல்லாத்தி வச்ச கொடை வழியா வந்த 48 சேனல் காட்சி ஒங்களுக்கு மட்டுமிருந்தது அந்தக் காலம். திரைகடலோடுவது மேட்டுக்குடி என்பதும் அந்தக் காலம். இன்றைக்கு எங்களுக்கும் தெரியும். கேக்குறதுக்கெல்லாம் not at all அப்படின்னு யாரு சொல்லுவா, you must remember, you did not read அப்படின்னு எப்படியாபட்ட மனசுலேருந்து வருமின்னு எங்களுக்கும் தெரியும்.

அரசியல்வாதி, முதல்வர், பிரதமர்...நீங்க எல்லாரும் எங்கள் எஜமானர்கள் இல்லை. எங்களுக்குத் தொண்டு செய்றவங்கன்னு தெரிஞ்சுக்கங்க. நாங்க கேள்வி கேட்டா நீங்க பதில் சொல்லணும். புஷ்ஷும் கெர்ரியும் சொல்றாங்க, ப்ளேயர் சொல்றாரு. பொய்யா மெய்யான்னு ஒங்க அகத்தின் அழகை முகத்திலும், உங்க வெத்து வார்த்தையைத் தாண்டி உண்மையையும் எங்க அறிவைக் கொண்டு நாங்க கண்டுக்குவோம். நீங்க ஒவ்வொருத்தரா வந்து பதில் சொல்லணும். அமெரிக்கத் தேர்தல் ரெண்டாம் கட்ட விவாதத்துல மக்கள் உக்காந்து கேட்ட மாதிரி எல்லாக் கட்சி/கட்சியில்லாத மக்களெல்லாம் ஒக்காந்து, ஒங்கள நடுவுல நிக்க வச்சு கேள்வி கேக்கணும். இது அரசியல்வாதிங்க மட்டுமில்ல, மக்கள் பணம் எங்கெல்லாம் புரளுதோ டாக்டரு, ஆராச்சிக்காரரு, எஞ்சினியரு, போலீசு, கலெக்டராபீஸ் கிளார்க்கு, தனியாரு, கெவுர்மண்டு எல்லாருக்கும் பொருந்தணும். ஒவ்வொரு டிவிகாரங்களும் வாராவாரம் இந்த மாதிரி ஆட்களை, ஒரு எம்.எல்.ஏ, எம்.பியை மக்கள் கேள்வி கேக்குறதைக் காட்டணும். சினிமாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் ஒதுக்குற நேரத்தை இதுக்கு ஒதுக்கணும். டிவி ஸ்டேஷனுக்குள்ள ஒரு ரூமுக்குள்ள ஒக்கார வச்சு ஒண்டிக்கு ஒண்டி கேக்கக் கூடாது, பொது எடத்துல பொது மக்களுக்கு முன்னாடி ஒக்கார வச்சுக் கேக்கணும். அப்பதான் ஒரு பொறுப்பான, வெளிப்படையான, நேர்மைக்குக் கட்டுப்பட்ட அமைப்பை மீட்டெடுக்க முடியும்.

இப்படிப்பட்ட வெளிப்படையான ஜனநாயக அமைப்பு புடிக்கலை, வசதியான இருட்டடிப்பு ஜனநாயகந்தான் புடிச்சிருக்கு அப்படிங்கறவங்கதான் இந்த மாதிரிப் பேட்டிகளுக்கெல்லாம் பயப்படணும், அய்யோ என்னமா கொடையுறான்னு பாவப் படணும். யாரும் மகானில்லை. மாசுள்ளவர்கள்தான். அதைப் பரிசீலிக்கறதுலயும் திருத்திக்கிறதுலயுந்தான் அகவளர்ச்சி இருக்கே தவிர, நான் இரும்புக்கழியை நட்டு வச்சிருக்கேன் அது வேர்விட்டு வளர்ந்து பூப்பூக்கும்னா, இதுக்கு மேலயும் நாங்க நம்பத் தயாரில்லை.

எங்கே போனேன்

நீங்க மாநாட்டுக்குப் போயிருக்கீங்களா? அப்படின்னா இது உங்களுக்குப் பெரிய அதிசயமா இருக்காது. போகாதவங்களுக்கானது இந்தப் பதிவு.

சியாட்ல் (Seattle) நகரம் வாஷிங்டன் மாநிலத்துல இருக்கு (இந்த வாஷிங்டன் அமெரிக்கத் தலைநகர் இல்ல!). அங்கெ ஒரு அஞ்சு நாள் இருந்தேன். எலும்பாராய்ச்சியாளர் மாநாடு (American Society for Bone and Mineral Research). அந்த அமைப்புல சுமார் அம்பது நாடுகளைச் சேர்ந்தவங்க இருக்காங்க. நிறைய அமெரிக்கக் கூட்டம். பல நாடுகள்லேர்ந்தும் மக்கள் வந்திருந்தாங்க. சில தமிழர்களையும் சந்தித்தேன்.

ஒரு பெரிய மாநாட்டரங்கில் நடந்தது. காலையில யாராச்சும் பெரிய ஆள் ஒருத்தர் பேசுவார். இவரோட பேச்சு எலும்புத் துறையில் எல்லோருக்கும் பொதுவான விஷயங்களைப் பத்தி இருக்கும். அப்புறமா சின்னச் சின்னக் கூட்டங்கள். சின்னச் சின்ன அரங்குகளில். ஆனாலும் அவங்கவங்க ஆராய்ச்சி அவங்கவங்களுக்குப் பெருசு. நம்ம வலைப்பூக்கள் மாதிரி. சுவரொட்டி/தட்டிகளிலும் தங்களோட ஆராய்ச்சி முடிவுகளை ஒட்டி வச்சுப் பேசிக்கிட்டிருப்பாங்க. ஒரு பக்கம் பாத்தீங்கன்னா கடைக்காரங்க. நா மருந்து வச்சிருக்கேன், நா கண்டுபிடிக்க புது மிஷினு வச்சிருக்கேன்னு கண்காட்சி காட்டுவாங்க. திருவிழா மாதிரிதான். காலையிலெ எட்டுலேருந்து சாயங்காலம் ஒரு அஞ்சு மணி வரைக்கும் இப்படி. பயனுள்ள நாட்கள். புதுப் புதுப் பாதைகள். பெருஞ்சந்தையிலிருந்து சில அழகான மணிகளை வாங்கிக் கொண்டு வந்தது மாதிரியான ஒரு அனுபவம். இதுக்குத்தான், இந்தத் தெளிவுக்கும், தீர்மானத்துக்கும், ஒரு பரந்த புரிதலுக்காகவுந்தான் வருசத்துக்கு ஒன்னு ரெண்டு தரம் மாநாடுகளுக்குப் போறது.

சியாட்ல் மைய நகரம் அழகானது. அமெரிக்காவில் நிறைய ஊர்களில் சாலைகளில் மனிதர்களைப் பார்க்க முடியாது. ஆனால் இதுவோ மக்கள் கூட்டம் நடக்கும் உயிர்த் துடிப்பானது. பசிபிக் பெருங்கடல் பல மைல்கள் தள்ளியிருந்தாலும் (கடலைப் பார்க்க ரெண்டு மணி நேரம் கார்ல போகனும்னார் ஒரு நண்பர்) கடலின் தண்ணீர் வளைந்து வளைந்து சியாட்ல் வரை உள்ளே வந்திருக்கும். அதிலே படகுகள். மூடுபனி கவிந்திருந்தது ஒரு தரம். அந்தக் கரையிலே சாப்பாடு, வியாபாரம், கண்காட்சி, பூங்கா, மக்கள் கூட்டம். பைக் சந்தை (Pike place market) அழகானது. நண்பர் குழாமோடு ஓரிரவு உண்டு குடித்துக் கும்மாளமிட்டுத் தெருக்களில் நடந்து ஒரு நடனக் கூடத்துக்கு வந்தோம். அந்தோ விதிவசமே, திங்கக்கிழமை லீவுங்க!

எல்லாம் ஒவ்வொரு உலகங்கள். அந்த மாநாடு ஓருலகம், இந்த வலைப்பூ ஓருலகம், வீட்டிலொன்று, வேலையிலொன்று. உள்ளேயொன்று கிடந்து எல்லாத்தோடயும் கலந்துக்கத் துடிக்குது. இதுலயா, இதுலயா, எதுல நானிருக்கேன்னு ஒட்டி ஒட்டிப் பாக்குது. போவட்டும். அறிவியல்ல கொஞ்சம் பொழுதைப் போக்கணும்னு ஒரு எண்ணம். பாக்கலாம்!

ஆப்பிள் தோப்புக்குள்ளே

அமெரிக்காவுல நெறைய தோட்டமெல்லாம் இருக்கு. காலத்துக்குத் தகுந்த மாதிரி பூக்கும் காய்க்கும் பழுக்கும். அன்னெக்கி நாங்க போனது ஒரு ஆப்பிள் தோப்பு. சின்னப் புள்ளையில நான் பொதுவாக ஆப்பிள் சாப்புட்டுத்தான் வளந்தேன். அதாவது ஒரு ஆப்பிள் வீட்டுக்கே பொது. ஆளுக்கொரு துண்டு.


இப்புடி சடை சடையாக் காய்ச்சுப் பழுத்துக் கெடந்ததை, கீழே கொட்டிக் கெடந்ததை என்னன்னு சொல்ல. காலையிலேருந்து சாய்ங்காலம் வரைக்கும் சனம். நூத்துக் கணக்குல. வர்றவங்களையெல்லாம் டிராக்டர் வச்சுக் கூட்டிக்கிட்டுப் போயி தோட்டத்துக்குள்ள உடுறான். சனம் போவுது, திங்கிது. ஓடி ஓடிப் பறிக்கிது. போறப்பவே பையும் குடுத்துர்றான். சின்னதோ பெருசோ. தேவையான அளவுக்குப் பறிச்சு ரொப்பிக்க. ஆனா ஒன்னு, பாத்துப் பறி. பூச்சியாருந்தா பறிக்காம மரத்துலேயே வுட்ரு. உலுக்காதே. மரத்துல ஏறாதே. வருசமெல்லாம் புள்ள மாதிரிப் பாத்துப் பாத்து வளத்து வச்சிருக்கேன், அதப் பாத்து நாம் பெருமப் படுற மாதிரி நீயும் பெருமப் படு, சின்னப் புள்ளைகள் கண்டபடி பறிச்சுத் தள்ளிரும் கொஞ்சம் பாத்துக்க, அப்படின்னு எழுதிப் போட்டிருக்கான். போறப்ப பறிச்ச எடைக்கித் தக்கன காசு குடுத்துரணும். ஒரு பவுண்டு 75 காசு.

உள்ள போற சனங்கள் பொதுவா ஆளுக்கு ஒன்னோ ரெண்டோ திங்காம இருக்கதில்லை. திங்காதேன்னு அவனும் சொல்லுறதில்லை. என் நேர்மக்கி நாலு மார்க்கு கொறஞ்சாலுஞ்சரி, கூடுனாலுஞ்சரி, சரியா தப்பா நீதியா தர்மமான்னு வெகு குழப்பத்துக்கப்புறம், நானும் ஒன்னு + மாசிலன் கடிச்ச பாதி தின்னேன். (தோப்புக்குள்ள நொழஞ்சதுக்கும் தின்னதுக்கும் நடுவுல நடந்த போராட்டத்த இன்னொரு தனிப்பதிவா எழுதலாம்!) எனக்குத் தெரிஞ்சதெல்லாம் கடையில கெடைக்கிற ஒரு நாலஞ்சு ரகந்தான். அந்தத் தோட்டத்துல என்னென்னமோ ரகமெல்லாம் வச்சிருக்கான்.

இந்த மாதிரி நம்ம ஊரு மாந்தோப்புக்கும், கொய்யாத் தோப்புக்கும் மக்கள் போற காலம் வரணும்!

இதான் நாங்க போன தோப்பு.

சம்பந்தமில்லாத பின் குறிப்பு: பணியின் காரணமாக இன்னும் சில நாட்களுக்கு இந்தப் பக்கம் வர முடியாது.

ஈயடிச்சான்!

பாதிப்பு: வலைப்பூ-The Dullest Blog in the World

நேற்று வீட்டுக்கு வரும்போது என் ஜீன்ஸ் பாண்ட் மழையில் நனைந்து விட்டது. அதைக் கழற்றித் துணி அலமாரிக்குள் தொங்க விடாமல், அலமாரிக் கதவிலேயே வெளிப் பக்கம் தொங்க விட்டுவிட்டேன்.

ஒரு சந்திப்பு

முன்பொரு பதிவில் ஏல் பல்கலையில் ஒரு ஆராய்ச்சிக் குழு எயிட்ஸ் பரவலைத் தடுக்கும் ஆராய்ச்சியொன்றை மேற்கொள்வதாக எழுதியிருந்தேன். அதன் முதன்மை ஆராய்ச்சியாளரான கிம் ப்ளாங்கென்ஷிப்பை நேற்று சந்தித்தேன். உங்க வலைப்பதிவைப் படிக்க மொழி தெரியவில்லையே என்று புன்னகைத்தார். அவர் தனது திட்டத்தைப் பற்றிச் சொன்னதைச் சுருக்கமாகக் கீழே தந்திருக்கிறேன்.

"ஜூன் மாசந்தான் ஆரம்பிச்சிருக்கோம். இந்தத் திட்டத்துல ரெண்டு பிரிவுகள் இருக்கு. ஒன்னு கேர் செய்யுற வேலைகளுக்கு ஆதரவு குடுக்குறோம். கேர்தான் களமிறங்கி வேலை செய்யும். இன்னொன்னு கேர்லேருந்து வர்ற தகவல்களை ஆராயப் போறோம். இதுக்காக ஆவாஹன் அப்படிங்கற ஒரு அமைப்புல இணைந்திருக்கோம். இது கேட்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்குறது. ஒரு பத்து, பதினைந்து அவஹன் குழுக்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் வெவ்வேறு இடங்களில் அமைப்புக் குறுக்கீட்டு (structural intervention) முறையினை ஆராய்ச்சி செய்பவை.

அமைப்புக் குறுக்கீட்டு முறையானது தனியாட்களுக்குக் கற்பிப்பதை முக்கியமான நோக்காகக் கொள்வதில்லை. அது, இருக்கின்ற அமைப்பைச் சரி செய்ய முற்படுகிறது. உதாரணமாக ஆணுறையைப் பயன்படுத்தனும்னு எல்லா விலைமாதுக்கும் தெரியும். இதைச் சொல்லித்தரத் தேவையில்லை. ஆனா ஆணுறையைப் பயன்படுத்த விடாம தடுக்குற அமைப்பை நாங்க ஆராயுறோம். அதாவது ஆணுறையை அணியச் சொன்னால் மறுக்கும்/அச்சுறுத்தும்/வேறிடத்துக்குச் சென்றுவிடும் வாடிக்கையாளர்கள், ஆணுறை வைத்திருப்பதாலேயே சிறைபிடிக்கப்படும் விலைமாதர்கள், இவர்களிடையே அமைப்புக் குறுக்கீட்டு முறை மூலம் எல்லா விலைமாதர்களையும் திரட்டி ஆணுறையில்லையென்றால் கலவியில்லை என்று தீர்மானிக்கலாம். காவல்துறையினரோடு கலந்து பேசி இத்தகைய கைதுகளை/பின் தொடரும் சித்திரவதைகளைக் குறைக்கலாம். இம்முறை ஏற்கெனவே கல்கத்தாவில் கேரினால் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறது. இதனைச் சமுதாய அமைப்புக்கேற்ற சிறிய மாற்றங்களுடன் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் செயல்படுத்த உள்ளோம்.

இத்திட்டத்தில் குழுக்களுக்கிடையேயான பரிமாற்றங்கள் நிகழும். அமெரிக்கக் குழுக்கள் இந்தியாவுக்கும், இந்தியக் குழுக்கள் அமெரிக்காவுக்கும் வந்து கற்கும். இதற்காக கேர், சிரா முதலியவற்றில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளோம்.

ஆப்பிரிக்காவில் சில ஆராய்ச்சி முடிவுகளின்படி பெண்களின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் வழிவகைகளைச் செய்த பின்னர் அங்கு விபச்சாரத்தின் அளவு குறைந்துவிட்டது. கல்கத்தாவில் விலைமாதர்கள் வங்கிக் கடன் கேட்டபோது அங்கே ஒழுக்கமில்லாதவர்களுக்கு (low morale) கடன் கொடுப்பதில்லையென்றொரு சட்டமிருந்ததாம். அதனைத் திருத்திய பின்னரே அவர்களுக்குக் கடன் கிடைத்ததாம். கேரளத்தில் எப்படி எயிட்ஸ் கட்டுக்குள் இருக்கிறதென்று தெரியவில்லை. அங்கே விபச்சாரம் இருந்தாலும் எயிட்ஸ் பரவும் வீதம் குறைவு. கல்விக்கும் இதற்கும் சம்பந்தமிருக்கலாம், தெரியவில்லை.

விபச்சாரம் என்பதை சட்டபூர்வமாக்குவதா (legalization) அல்லது அதற்கான விதிகளைத் தளர்த்துவதா (deregulation) என்ற குழப்பந்தான் நிறைய நாடுகளில் நிலவுகிறது. சட்டம், சமயம் போன்றவை எந்தளவுக்கு இதனை அமுக்கி வைத்திருக்கின்றனவோ அந்தளவுக்கு இவை வேறு வழிகளில் விரிவடையவும், குடிமக்களுக்கு ஆபத்தானதாகவும் மாற சாத்தியங்கள் அதிகம். நோய் பரவலுக்கான முக்கிய காரணம் இவ்விலைமாதருக்குப் போதிய பாதுகாப்பில்லை. இவர்கள் தாக்குதலுக்குள்ளாவதற்குக் காரணம் இவர்களிடம் போதிய வலிமை (மனோ, குழு, சட்டரீதியான) இல்லாமையே. பெண்களை மேலும் வலிமை படைத்தோராக்குவதன் மூலம் நோய்ப்பரவலைத் தடுக்க முடியும். இவர்கள் தங்களுக்குள்ளாகவே ஒரு குழுவாகச் செயல்படவும், தமக்கான ஒழுக்க விதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும் அனுமதிக்கப் படவேண்டும்.

தேவை இருக்கும் வரை இத்தொழில் இருக்கவே செய்யும். சமயங்களோ அல்லது சட்டமோ இதனை ஒழிக்க முடியாது. ஆனால் மக்களிடையே நோய் பரவாமல் காக்கப் படவேண்டியது அவசியம். அதற்கு இந்தத் திட்டம் உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்."

இவ்வாறு முடிந்தது அவருடனான சந்திப்பு. மக்களின் பங்களிப்பு நிறைய இருக்கும் என எதிர்பார்க்கிறார். தற்போதைக்குத் தமிழ்நாட்டில் ஏதும் செய்வதாகத் திட்டமில்லையாம். முதல் கட்டமாக ராஜமுந்திரியில் தொடங்கப்படும் திட்டந்தான் இதுவரைக்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அவரது துறையில் இது சம்பந்தமான கூட்டங்களில் வந்து கலந்து கொள்ள வரவேற்றார். நன்றியுடன் விடை பெற்றேன்.

உனக்கு

வானந் தெளிந்து வீசும் வளர்மதி
சுடரைத் தெறிக்குங் கடலின் மெல்லலை
இரவுக் காற்றிலே யேறுங் குளுமை
மணலிலே யிட்ட அடியெலாஞ் சிப்பிகள்
இரையைக் கொண்டு காற்தடம் விட்டுப்போய்
எங்கோ வுறங்கலாம் வெண்கடற் பருந்துகள்
துணையொரு மாது கைப்பிடி மதலை
தொலைவிற் தெரியும் விளக்க வெளிச்சம்

நெஞ்சில் லமைதி நிறைந்த வோரிரவு
எனக்கிருந் தாற்போல் உனக்கும் வேண்டும்.

கரைந்து கரைந்து

புதுக்கோட்டை என்னோட மாவட்டம். குளத்தைக் காணோம், ஆத்தைக் காணோம், ஏரி இருந்த எடத்துல வீடு இந்த மாதிரி 'சாதாரண' பிரச்சினைகள் எங்க மாவட்டத்துலயும் உண்டு. தப்பிப் பிழைச்ச குளம் குட்டைகளும் உண்டு. மழை வந்தால் சில மாதங்களுக்கு இதுகளிலே தண்ணீரைப் பார்க்கலாம். தலையில் சுமந்தும், சைக்கிளில் குடத்தைக் கட்டியும் தண்ணியடித்த அனுபவம் நிறைய எனக்குண்டு. காவிரிப்பாசனக்காரியான எங்கம்மா, தாங்க முடியாதப்ப "இந்தக் காஞ்ச பய ஊர்ல"ன்னு திட்டும். எங்க மாவட்டத்தை வறட்சி மாவட்டம்னு அரசாங்கம் சொல்லுதோ இல்லையோ நாங்க அப்படித்தான் நெனக்கிறோம்.

தப்பித் தவறிப் பெய்யுற மழையில சேர்ந்து கெடக்குற கொஞ்சந் தண்ணியக் கூடப் பயன்படுத்தவிடாம அடிக்கனுமா? நாங்கூட இந்தக் கடல் இருக்கப் பெரிய ஊர்கள்ல இருக்கவங்கதான் இப்படின்னு நெனச்சேன். இப்ப வறண்டு போன எங்க மாவட்டத்துக் காரங்களுக்குக் கூடத் தண்ணியோட அருமை தெரியாமப் போச்சேன்னு நெனக்கிறப்ப...ங்கொப்புறான...நாம எங்க போறோம்?

புரியலயா? எனக்குந்தான். அந்தச் சேதியப் படிச்சதுக்கப்புறம் ஒன்னுமே புரியல. புத்து நோய் மாதிரிப் புரையோடுற இந்த வெறி எனக்குப் புரியல. போபால் நச்சுக் காத்தா ஊர் ஊராப் பரவுற இந்த மதிகெட்டதனம் எனக்குப் புரியல. இதுக்கு வழியென்ன இருக்குன்னும் புரியல. ஊர்ல ஒருத்தருமே ஏன்னு கேக்க மாட்டாங்களா? ஊர்த்தலைவனுங்க/கவுன்சிலனுங்க எல்லாருமாக் கூடி நின்னு செஞ்சா யாருகிட்ட போயி சொல்றது?

உழவாரத் திருப்பணின்னு ஊர் ஊரா அலைஞ்ச அப்பருக்கு இருந்தது சமூக அக்கறை. நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சன நீருன்னு இருந்த தாயுமானவனுக்கு இருந்தது அறிவு. அறிவியல் பூர்வமான மதமென்று தம்பட்டங்கொட்டி ஊர்களைச் சாக்கடையாக்கும் இந்த மத நம்பிக்கை அவசியமா?

தண்ணிய நாசமாக்குற இந்தப் புது வழக்கம் நாசமாப் போவனும்!

செய்தி

ரத்தச் சோகைக்கு ஐஸ்கிரீம் சாப்பிடலாமா?

வனிலா ஐஸ்கிரீமுக்கும், ஒரு வகையான ரத்தச் சோகைக்கும் சம்பந்தம் இருக்கான்னு தெரிஞ்சுக்க ஆசையா? அறிவியல் கூட்டுப்பதிவுல ஒன்னு எழுதிருக்கேன், பாருங்களேன்!

இளநீரும் நானும்!



உயரத்தில் இருக்கும்
அறுபட்டால் கீழ்விழும்
உவர்ப்போ இனிப்போ உள்ளேயாடும்
எங்கோ விளைந்து எங்கோ வெட்டுப்படும்
வழுக்கை எட்டிப் பார்க்கும்
முற்றினால் பருப்பாகும்
காய்ந்த மட்டை எரிக்கவாகும்!

(எல்லாம், நேற்று ஒரு அமெரிக்கக் கடையில் முதன்முறையாக இளநீரைக் கண்ட ஆனந்தம்தான்!)

பாதை மாறிப் போனோமா?

நேற்று படித்த இரு பதிவுகள் நாளை நிரப்பி விட்டன. ஒன்று எஸ்.ராவின் பூம்புகார்-கொடுங்கலூர்ப் பாதை. இன்னொன்று மதுரபாரதியின் ஆணழகனின் அலங்காரம். இவை இரண்டுமே என்னை ஒரு பழைய காலத்துக்குத் தூக்கிச் சென்றன.

அத்தனை செழுமையாய் ஒரு இனம் வாழ்ந்திருந்திருப்பதை ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்க்கிறேன். நாட்டுக்கு நாடு புராதனங்களைத் தோண்டியெடுத்து ஆராய்ச்சி செய்தும், கண்டம் விட்டுக் கண்டம் சென்று மனிதர்கள் தம் வேரினைத் தேடியும் வரும் இக்காலத்தில் நாம் என்ன செய்கிறோம்? பழையன என்று நாம் நினைப்பவை எவ்வளவு தூரம் பழையன? மேற்புறத்திலே எஞ்சியிருக்கும் கற்கோயில்களும், கிணற்றாழத்தில் கிடைக்கும் தேவியர் சிலைகள் மட்டிலுந்தான் நம் வரலாறா? இதையும் தாண்டிப் பின்னே போனால் என்னென்ன இருக்கும்?

பள்ளிக்கூடத்தில் படித்து "அல்லலுற்று ஆற்றாது அழுவாளைக் கண்டேங்கி, மல்லல் மதுரையார் எல்லாருந் தாமயங்கி" என்று நெட்டுருப் போட்ட வரிகளோடு சிலப்பதிகாரம் நின்று போனது. அதனை முழுதும் படிக்கும் தாகம் எழுகிறது. மதுரபாரதி வருணிக்கும் ஆடவனும் பின்புலத்தில் நம் மனக்கண்ணில் காட்சியாய் விரியும் நிலமும் பெருமூச்சைத்தான் வர வைக்கின்றன. கபிலன் வாழ்ந்த காலத்தின் இயற்கை அழகை முன்பொருமுறை ஒரு ஆங்கில மாது சொன்னது நினைவுக்கு வந்தது.

தொழில்மயமாக்கலில் சிதைந்து போன இயற்கை வளங்கள் ஒரு புறம் இருந்தாலும், அட இப்போதிருக்கும் இச்சமூகத்திலாவது மக்கள் ஒவ்வொருவரும் நிறைவான, மரியாதையான, அறிவான வாழ்வினை வாழமுடியாதா என்ற ஏக்கம் படருகிறது. நமக்குத் தெரியாத விசயம் நாம் யார் என்பதும், நம் முன்னோரின் வாழ்வு என்னவென்பதும்தான். நாமறிந்த பெருங்கட்டிடங்களெல்லாம் கோயில்கள். நாமறிந்த சிற்பங்களெல்லாம் தெய்வங்கள். நாமறிந்த பாட்டுக்களெல்லாம் சாமிகளைப் பற்றியவை. இல்லை. இது நிச்சயமாகத் தமிழ்ச் சமுதாயத்திற்கு மிக அண்மையில் நிகழ்ந்தவொரு மாற்றம். நம் கண்ணுக்கு முன்னாலேயே கணேஷா வந்து கடலில் கரைகிறாரென்றால், பல நூறாண்டுகளுக்கு முன்னிலிருந்து என்னென்னவெல்லாம் செருகப் பட்டிருக்கும்? செருகினதெல்லாம் பொய்யென்று சொல்லவில்லை, அவை சொல்வதையெல்லாம் புரட்டென்று சொல்லவில்லை. அவ்விதமான கருத்துக்கள் மானுடத்தில் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தின? அத்தகைய மதங்களால் மனிதப் பெரும்பான்மைக்கு முன்னேற்றம், ஆன்மாவிலோ, பொருளியலிலோ, கிடைத்ததா? கிடைக்காத பட்சத்தில் அவற்றை உயர்ந்தவையென்று நாம் ஏன் போற்ற வேண்டும்? கடைபிடிக்க வேண்டும்? வைத்திருக்க வேண்டும்?

ஒன்று "பழையன கழிந்து" வேகமாய் முன்னோக்கிப் போக வேண்டும், அல்லது பின்னோக்கிப் பார்த்து நம்மைச் சரி செய்து கொள்ள வேண்டும். இரண்டுங்கெட்டானாய்க் கிடந்து குழம்புவதில் இழப்புதான் மிஞ்சும். இத்தகைய குழப்பச் சமுதாயத்தில் பிறப்போரெல்லாம் "தாழ்வுற்று, வறுமைமிஞ்சி, விடுதலை தவறிக்கெட்டு" இன்னொரு தாழ்வான சந்ததியை உண்டாக்கித் தாழ்வான சாவினைத் தழுவ வேண்டியதுதான். நாம் திரும்பிப் பார்க்க வேண்டும், ஒவ்வொன்றையும். நாம் பார்க்கின்றவற்றுக்கு இன்னும் முந்தைய காலத்துக்கு. ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் மட்டுமே பழமையென்று சொல்லாமல் அதனினும் பழமையான சிலப்பதிகாரத்துக்குச் செல்ல வேண்டும். அதனினும் பழமையாய் ஏதேனும் கிடைத்தால் அதற்கும். நாம் யாரென்பதும், எந்த மொழிப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியென்பதையும் தெரியவரும். கபடமில்லா அந்த ஆராய்ச்சியில் நாம் இன்று களைய வேண்டியவை எவையென்பதும் தெரிந்து போகும்.

நிச்சயமாய் மயில்கள் விளையாடும் வீட்டுக் கொல்லைப்புறத்தை நீங்களும் நானும் காணப் போவதில்லை. ஆனால் மனிதர்களாவது நிம்மதியாகவும், பெருமையாகவும், அறிவோடும் வாழலாம். பின்னுக்குப் போய்த் தோண்டிப் பார்த்து நீயெல்லாம் இது நானெல்லாம் இது என்று வேற்றுமையை வளர்ப்பதில்லை நம் நோக்கம், நாமெல்லாம் ஒரு மொழிக்குடும்பத்தினர், நம் மொழியைப் பேசிய இனம் இப்படியிருந்திருக்கிறது, இதிலே இன்னின்ன மாற்றங்கள் வந்து கெடுத்திருக்கின்றன, இவற்றைக் களைவோம், ஒன்றாய் வாழ்வோம். சொல்லச் சுலபந்தான், எத்தனையாயிரம் சிக்கல்களிருக்கின்றன? ஆனாலும் ஒரு நியாயமான தமிழ்ச் சமுதாயத்துக்கான வேட்கையையும், நம்பிக்கையையும் நாம் எழுப்பிக் கொள்ள வேண்டியது அவசியமென்றே தோன்றுகிறது.

போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 4

அருந்ததி ராய் அடுக்கிய பிரச்சினைகளோடு முடிக்க விருப்பமில்லை. கடைசியில் இதற்கெல்லாம் ஏதாவது தீர்வு வைத்திருக்கிறாரா அல்லது முடிவாக என்ன சொல்லுகிறார் என்று பார்க்கத்தான் இந்தப் பதிவு.

இதன் முந்தைய பதிவுகள் (பாகம் 1, பாகம் 2, பாகம் 3).

இனி அவரது உரையிலிருந்து:
எதிர்ப்புகளுக்கான உத்திகளை வடிவமைத்துக் கொள்ளுவதைப் பற்றிய விவாதங்கள் ஏதும் இன்றைய உலகில் நடைபெறவில்லை. எதிர்ப்புகளைக் எப்படிக் காட்டுவது என்று வழிமுறைகளைத் தேர்ந்தெடுப்பது மக்களின் கையில் மட்டுமில்லை. இது அரசாங்கத்தின் கையிலும் இருக்கிறது. எக்கச்சக்கமான ராணுவ பலத்துடன் அமெரிக்கா, ஈராக்கை ஊடுருவி ஆக்கிரமித்து வைத்திருக்கும்போது, அதற்கான எதிர்ப்பை ஒரு முறையான ராணுவத்திடமிருந்தா எதிர்பார்க்க முடியும்? அப்படியே முறையான ராணுவ எதிர்ப்பாகவே இருந்தாலும் அதுவும் தீவிரவாதம் என்றே அழைக்கப்படும். விந்தை என்னவென்றால், அமெரிக்காவின் ஆயுதங்களும், நிகரில்லா வான்படை மற்றும் சுடுதிறன் ஆகியவையும், பயங்கரவாதத்தை நிர்ப்பந்திக்கின்றன. செல்வமும் வலிமையுமில்லா மக்கள், தம் உத்திகளாலும் திருட்டுத்தனத்தாலும் நிரவுகிறார்கள்.

நம்பிக்கையிழந்தும், முரட்டுத்தனமாக ஒடுக்கப்பட்டும் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அரசாங்கங்கள் வன்முறையற்ற போராட்டங்களை மதிக்கவில்லையென்றால் அது வன்முறைக்கான உரிமையத்தான் வழங்குவதாகும். வன்முறையற்ற வகையில் தெரிவிக்கப்படும் மாற்றுக் கருத்துக்களின்பேரில் மாற்றங்களைக் கொண்டு வராத எந்த அரசும் பயங்கரவாதத்தைக் கண்டிப்பது நம்புதற்குரியதன்று. ஆனால் இத்தகைய வன்முறையற்ற எதிர்ப்பியக்கங்கள் நசுக்கப் படுகின்றன. மக்களை ஒன்று திரட்டுதலோ அல்லது ஒரு நிறுவனமோ எதாயிருந்தாலும் சரி, அவை விலைக்கு வாங்கப்படுகின்றன, உடைக்கப் படுகின்றன அல்லது அலட்சியப்படுத்தப் படுகின்றன. இதே நேரத்தில் அரசுகளும், கூட்டுத்தாபன ஊடகங்களும், திரைப்படங்களும், நேரம், அவர்கள் மேல் குவியும் கவனம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, பயங்கரவாதத்துக்கெதிரான போரின் மீது கொண்ட மதிப்பு எல்லாவற்றையும் பகட்டாகச் செலவிடுகின்றன. இவையெல்லாம் சேர்ந்து வன்முறையைத் தெய்வீகமாக்கிவிடுகின்றன.

இது நமக்குச் சொல்லும் சேதி நிலைகுலையச் செய்வதும் ஆபத்தானதும் ஆகும். இச்சேதி என்னவென்றால்: நீ பொதுமக்களின் துன்பத்தை வெளியே கொண்டு வர விரும்பினால் வன்முறையே வன்முறையற்ற வழியை விட ஆற்றல் மிக்கது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமிடையேயான பிளவு மேலும் வளரும் இவ்வேளையில், இருக்கின்ற வளங்களைக் கைப்பற்றுவதும் ஆளுவதுமே பெரும் மூலதனக்காரர்களுக்கு மிக முக்கியமானதாகிவிடுகிறது. இது அமைதியின்மையைத்தான் வளர்க்கும்.

பேரரசின் மாற்றுப் பக்கத்திலே இருப்பவர்களுக்கு இந்தச் சிறுமைப்படுத்தப் படுதல் பொறுக்க முடியாததாயிருக்கிறது. அமெரிக்காவால் ஈராக்கில் கொல்லப்படும் ஒவ்வொரு குழந்தையும் நம் குழந்தை. அபு க்ரெய்பிலே சித்ரவதை செய்யப்பட்ட ஒவ்வொருவரும் நம் தோழர். அவர்களுடைய அலறல் நம்முடையது. அவர்கள் சிறுமைப்படுத்தப் பட்டபோது நாமும் சிறுமையடைந்தோம். ஈராக்கிலே போராடும் அமெரிக்கச் சிப்பாய்கள் இருக்கிறார்களே, பெரும்பாலும் ஏழ்மையிலிருந்தும் சிற்றூர்களிலிருந்தும் வந்த தன்னார்வலர்கள், அவர்களும் ஈராக்கியர்களைப் போலவே இக்கொடு நிகழ்வுக்குப் பலியாடுகளே. இப்போர்வீரர்கள் தமக்கென்றில்லாத ஒரு வெற்றிக்காக சாகச் சொல்லப் படுகிறார்கள்.

CEOக்கள், வங்கியாளர்கள், அரசியல்வாதிகள், நீதிபதிகள், தளபதிகள் போன்ற பெரியோர்கள் மேலிருந்தபடி கீழே நம்மைப் பார்த்துத் தலையை முடியாதென ஆட்டுகிறார்கள், "வேறு வழியில்லை" என்கிறார்கள். போர் நாயை அவிழ்த்து ஏவிவிடுகிறார்கள். அப்புறம் என்ன நடக்கிறது, ஆப்கானிஸ்தானின் அழிவுகளிலிருந்தும், ஈராக், செச்னிய இடிபாடுகளிலிருந்தும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன, காஷ்மீர வீதிகளிலிருந்தும், கொலம்பியாவின் மலை, வெளிகளிலிருந்தும், ஆந்திரா, அஸ்ஸாம் காடுகளிலிருந்தும், சிலீரிடும் இந்தப் பதில்தான் வருகிறது, "பயங்கரவாதத்தைத் தவிர வேறு வழியில்லை".

பயங்கரவாதம், கிளர்ச்சி, ஆயுதப் போராட்டம், எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். அது ஆபத்தானது, அசிங்கமானது, கடைபிடிப்போரையும் பலியாடுகளையும் மனிதத்தன்மையற்றவராக்கக் கூடியது. ஆனால் போரும் அப்படித்தான். நீங்கள் பயங்கரவாதம் என்பது தனியாரின் வசப்படுத்தப்பட்ட போர் என்று சொல்லலாம். பயங்கரவாதிகள் போரின் சில்லரை வியாபாரிகள். சட்டபூர்வமான முறையில் வன்முறைகளை நிகழ்த்த அரசாங்கத்துக்கு மட்டுந்தான் ஏகபோக உரிமை இருக்கிறது என்பதைத் தீவிரவாதிகள் நம்புவதில்லை.

மனித சமுதாயம் ஒரு பயங்கரமான இடத்துக்குப் பயணிக்கிறது. நிச்சயமாக பயங்கரவாதத்துக்கு மாற்று உண்டு. அதன் பெயர் நீதி. அணு ஆயுதங்களாலோ, பரந்த மேலாதிக்கத்தாலோ, டெய்சி கட்டர் குண்டுகளாலோ மோசடித்தனமான ஆட்சிக் குழுக்களினாலோ, லோயா ஜிர்காக்களினாலோ நீதியை விலையாகக் கொடுத்து அமைதியை வாங்க முடியாது. ஒரு சிலரின் மேலாதிக்கத்துக்கும் பெரும்பான்மைக்குமான ஆசைக்கு, சுயமரியாதைக்கும் நீதிக்கும் ஏங்குவோரின் விஞ்சும் வலிவினால் பதிலடி கொடுக்கப்படும். அது அழகானதா அல்லது ரத்தம் தோய்ந்ததா, என்ன மாதிரியான போராட்டம் அது என்பதெல்லாம் நம்மைப் பொறுத்துத்தான் இருக்கிறது.
(நிறைவு)

போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 3

போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 1
போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 2

அருந்ததி ராயின் பேச்சிலிருந்து:

3. அடக்குமுறைகள்
மக்களின் உரிமைப் போராட்டங்கள் சந்திக்கும் மூன்றாவது சவாலைப் பற்றி இப்போது பார்ப்போம். அடக்குமுறை அரசாங்கங்களுக்கும் போராட்டக்குழுக்களுக்கும் ஏற்படும் நேரடி மோதல்கள். இவை மக்கள் சக்திக்கும் பேரரசின் சக்திக்குமிடையேயான மோதல்கள். குடிமக்களின் எதிர்ப்புகள் ஒருவேளை (பேரரசுக்கு)ஆபத்தாகலாம் என்ற ஒரு சிறு அறிகுறி தென்பட்டாலும் போதும், அந்தப் போராட்டத்தின் மீதான அடக்குமுறை இரக்கமற்றதாயிருக்கும். சியாட்டில், மயாமி, கோதென்பர்க், ஜெனோவா ஆகிய இடங்களில் நடந்த ஊர்வலங்களிலெல்லாம் இத்தகைய ஒடுக்குமுறையை நாம் கண்டோம். அமெரிக்காவில் நீங்கள் வைத்திருக்கும் அமெரிக்க நாட்டுப்பற்றாளர் சட்டமானது உலக நாடுகளுக்கெல்லாம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கான ஒரு முன்னோடியாக இருக்கிறது. சுதந்திரத்தைக் காக்கின்ற பெயரிலே சுதந்திரம் ஒடுக்கப் படுகிறது. நாம் ஒரு முறை சுதந்திரத்தை ஒப்புவித்துவிட்டால் அதை மீளப் பெறுவதற்கு ஒரு புரட்சி செய்ய வேண்டியிருக்கும்.

சில அரசாங்கங்களுக்குச் சுதந்திரத்தை ஒடுக்குவதில் பெரும் அனுபவங்கள் இருக்கும், இருப்பினும் அவ்வரசுகள் நறுமணத்துடனேயே திகழும். இந்த ஆட்டத்திலே பழங்கையான இந்தியா இவ்வழிக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கடந்த ஆண்டுகளில் அது எக்கச்சக்கமான சட்டங்களை உண்டாக்கி அவற்றின் மூலம் எந்தவொரு ஆளையும் பயங்கரவாதி, கிளர்ச்சிக்காரர், போராளி என்று அழைத்துக்கொள்ள முடியும். இப்போது எங்களிடம் ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டம், பொதுப் பாதுகாப்புச் சட்டம், சிறப்புப் பகுதிகள் பாதுகாப்புச் சட்டம், குழுப்போராளிகள் சட்டம், பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைப் பகுதிகள் சட்டம் (இது ஏற்கெனவே காலாவதியான சட்டமாக இருந்தாலும் இதன்கீழ் மக்கள் இன்னும் வழக்குகளை எதிர்கொள்கிறார்கள்), மற்றும் தற்போது வந்திருக்கும் பொடா சட்டம், ஆகியவை இருக்கின்றன. இவை மாற்றுக் கருத்தைக் கொண்டவர்களுக்கான பல்திற உயிர்க்கொல்லி மருந்துகளைப் போன்றவை.

இதற்கு அப்பாலும் சில முறைகள் இருக்கின்றன. அவை நீதிமன்றங்களிலிருந்து தீர்ப்பாகக் கிடைக்கும். அவையாவன, பேச்சுச் சுதந்திரத்தை, அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை, வாழ்க்கையைப் பிழைப்பை நடத்தும் உரிமையை நறுக்குதலாகும். நீதிமன்றங்கள் எங்கள் வாழ்வை குறுமேலாண்மை செய்துவருகின்றன, அத்தகைய நீதிமன்றங்களை விமர்சிப்பது தண்டனைக்குரிய குற்றம்.

திரும்பவும் இந்த பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு வருவோம். போன பத்தாண்டுகளில் மட்டும் காவல் துறையினராலும், பாதுகாப்புப் படையினராலும் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில். ஆந்திர மாநிலத்தில் (இம்மாநிலம் இந்தியாவில் உலகமயமாக்கலின் கவர்ச்சிக்கன்னி) ஒவ்வோராண்டும் "திடீர்த்தாக்குதல்களில்" சராசரியாக 200 "தீவிரவாதிகள்" கொல்லப் படுகிறார்கள். பம்பாய்க் காவல் துறை "துப்பாக்கிச்சூட்டில்" எத்தனை "குழுப்போராளிகளைக்" கொன்றோம் என்று பெருமை பேசுகிறது. கிட்டத்தட்ட போர்ச்சூழல் நிலவும் காஷ்மீரில் 1989ம் வருடத்திலிருந்து 80,000 பேர் கொல்லப் பட்டிருப்பதாகக் கணக்கு. ஆயிரக்கணக்கில் சும்மா "காணாமல்" போய்விட்டார்கள். வடகிழக்குப் பகுதியிலும் சூழ்நிலை இப்படித்தான். அண்மையக் காலங்களில் இந்தியக் காவல்துறை ஆயுதமேந்தாத பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. இம்மக்களில் பெரும்பாலானோர் தலித்துகளும், பழங்குடியினருமாவர். காவலர்களுக்குப் பிடித்தமான முறை என்னவென்றால் முதலில் அவர்களைக் கொன்றுவிட்டுப் பின்னர் அவர்களைத் தீவிரவாதிகள் என்று அழைப்பது.

இந்தியா மட்டுந்தான் இப்படியென்றில்லை. பொலிவியா, சிலி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் இது நடப்பதைக் காண்கின்றோம். தாராளமய காலத்தில் ஏழ்மை என்பது ஒரு குற்றம். ஏழ்மையை எதிர்த்துப் போராடுவது பயங்கரவாதம் என்று வர்ணிக்கப் படுகிறது. இந்தியாவில் பொடா, சமயங்களில் Production of Terrorism Act என்றுதான் அழைக்கப்படுகிறது. அந்தச் சட்டமானது ஒரு அல் கெய்தா செயலாளியிலிருந்து ஒரு சிடுமூஞ்சி பஸ் கண்டக்டர் வரை அனைவரையும் பிடித்துப் போடுவதற்கான சட்டம். எல்லா பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களையும் போலவே, பொடாவின் மேதைமை என்னவென்றால் இதை அரசாங்கம் விரும்பியபடியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம். 2002ல் குஜராத்தில் மாநில அரசின் உதவியோடு நிகழ்த்தப்பட்ட திட்டங்களைத் (இத்திட்டத்தின் வாயிலாக இந்துக் காலிகளால் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதும், 150,000 பேர் இல்லங்களைத் துறந்ததும் நிகழ்ந்தது.) தொடர்ந்து 287 பேர் பொடாவின் மூலம் கைது செய்யப் பட்டார்கள். இதில் 286 பேர் முஸ்லிம்கள், ஒருவர் சீக்கியர். பொடாவில் காவல் நிலையத்தில் கறக்கப்படும் வாக்குமூலங்கள் சாட்சியங்களாகக் கொள்ளப்படும். இதன் விளைவாக விசாரணையைச் சித்திரவதை இடப்பெயர்ச்சி செய்தது. இந்தியாவில்தான் உலகிலேயே அதிகமான சித்திரவதையும் சிறைச் சாவுகளும் நிகழ்கின்றன என்று தெற்காசிய மனித உரிமைப் பதிவு மையம் சொல்கிறது. அரசாங்க ஆவணங்கள் 2002ல் மட்டும், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தோரில் 1307 மரணங்களைப் பதிவு செய்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னர் பொடா தீர்ப்பாயத்தில் நானொரு உறுப்பினராக இருந்தேன். எங்களது அருமையான மக்களாட்சியில் என்ன நடக்கிறதென்பதை அந்த இரண்டு நாட்களில் கிடைத்த கிளுகிளுப்பூட்டும் வாக்குமூலங்களிலிருந்து தெரிந்து கொண்டேன். அதில் எல்லாமே அடக்கம். அதாவது, சிறுநீரைக் குடிக்கச் சொல்வது, ஆடை களைவது, தாழ்மையடையச் செய்வது, மின்னதிர்ச்சி கொடுப்பது, சிகரெட்டால் சுடுவது, ஆசனவாய்க்குள் இரும்புக்கழிகளை விடுவது, அடித்து உதைத்துக் கொல்வது ஆகியவை அடங்கும். பொடா இல்லையென்றால் மொடா அல்லது இதுமாதிரி ஏதாவது ஒன்று இருக்கும்.

வன்முறையற்ற முறையில் காட்டப்படும் எதிர்ப்புகளுக்கான வாசல் மூடப்பட்டு, மனித உரிமைகளுக்காகப் போராடும் ஒவ்வொருவரும் தீவிரவாதியென அழைக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையில் யாராவது நாட்டின் பெரும்பகுதியில் ஆயுதந்தாங்கிய போராளிகளின்வசம் இருப்பதையும், நிலைமை அந்தந்த மாநிலங்களின் (காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், மத்தியப் பிரதேசத்தின் பெரும்பகுதி, சத்திஸ்கர், ஜார்கண்ட், ஆந்திரப்பிரதேசம்) கையை விட்டுப் போனதையும் குறித்து ஆச்சரியப்படுவார்களா? காஷ்மீரில் எந்தவொரு நிமிடத்திலும் 3000 முதல் 4000 போராளிகள் இயங்குவதாக இந்திய ராணுவம் கணக்கிடுகிறது. இவர்களை அடக்க இந்திய அரசு 500,000 படைவீரர்களை அனுப்புகிறது. தெளிவாக இது எதைச் சொல்கிறதென்றால், தீவிரவாதிகளை ஒடுக்க மட்டுமே இந்தப் படை செல்லவில்லை. அங்கிருக்கும் தாழ்வுபடுத்தப்பட்ட மக்களை, இந்தியப் படையை ஒரு அந்நியப் படையாக நினைக்கும் மகிழ்ச்சியற்ற மக்களையும் சேர்த்து ஒடுக்கவே செல்கிறது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமானது அதிகாரிகளுக்கு மட்டுமின்றி குறைந்த அதிகாரம் கொண்ட ராணுவத்தினருக்கும், பொது விதிகளை மீறுவோரை, தாக்கவும் கொல்லவும் அதிகாரம் கொடுக்கிறது. 1958ல் மணிப்பூரின் சில மாவட்டங்களில் மட்டுமே இருந்த அந்தச் சட்டம் இப்போது மாநில முழுமைக்கும், காஷ்மீருக்கும் செல்லுபடியாகும். சித்திரவதை, காணாமல் போதல், நீதிமன்றக் காவலில் சாதல், வன்புணர்ச்சி மற்றும் கடைசியில் தீர்த்துக்கட்டுதல் ஆகியவை குறித்த பதிவுகள் உங்கள் குடலைப் புரட்டவைக்கப் போதும்.

இந்தியாவின் இதயமான ஆந்திரப் பிரதேசத்தில், வாரங்கலில் ஜூலை 28, 2004ம் தேதி, பல்லாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் (ஆந்திரக் காவல்துறையின் குறியான) மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் மக்கள் போர்க் குழு ஒரு கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பொடாவின் கீழ் இந்த மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள்தான். இவர்களனைவரும் குவாண்டனாமோ சிறையினை ஒத்ததொரு இந்தியச் சிறையிலே அடைக்கப்படுவார்களா? மொத்த வடகிழக்கும், காஷ்மீரும் நொதிக்கின்றன. அரசாங்கம் இத்தனை லட்சம் மக்களை என்ன செய்யப் போகிறது?

(இதன் இறுதிப் பகுதி நாளை)

போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 2

போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 1

அருந்ததி ராயின் பேச்சிலிருந்து...

2. NGO-ஆக்கல்
போராட்ட இயக்கங்கள் எதிர்கொள்ளும் இன்னொரு நச்சு என்னவென்றால், எதிர்ப்பியக்கங்களை NGO(அரசு சாரா நிறுவனங்கள்)-ஆக்குதல். நான் இப்போது சொல்லப் போவதை NGOக்களின் மீதான ஒரு குற்றப்பத்திரிகையாகச் சுலபமாகத் திரித்து விடலாம். அது தவறு. மதிப்புமிக்க பணிகளைச் செய்யும் NGOக்கள் இருக்கிறார்கள், ஆனால் போலித்தனமான NGOக்கள், இருண்ட நீர்ப்பரப்புகளிலிருந்து (திட்டங்களுக்கான பணம், வரி ஏய்ப்புகள்) உறிஞ்சுவதற்காகவே அமைக்கப் பட்டிருக்கின்றன. பீகார் போன்ற மாநிலங்களில் இந்நிதிகள் வரதட்சிணை மாதிரிக் கொடுக்கப் படுகின்றன. இந்த NGO கொள்கையைச் சற்றே பரந்த அரசியல் நோக்கில் காணவேண்டும்.

இந்தியாவில் NGOக்களுக்கான நிதியுதவி 1980, 1990களிலிருந்து கொழிக்க ஆரம்பித்தது. இது இந்தியா தாராளமயமாக்கலுக்குத் (neoliberalism) தன் கதவுகளைத் திறந்துவிட்டபோது நிகழ்ந்தது. இந்த நேரத்தில், இந்தியா, புதிய மாற்றங்களுக்குத் தன்னைச் சரிசெய்துகொள்ளும் வகையில், கிராமப்புற முன்னேற்றம், விவசாயம், சக்தி, போக்குவரத்து, சுகாதாரம் ஆகிய துறைகளிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டது. வழக்கமாக அரசு செய்யவேண்டிய, ஆனால் புறக்கணித்துவிட்ட, இத்துறைகளில் NGOக்கள் வேலை செய்ய முன்வந்தனர். அரசுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் என்னவென்றால், NGOக்களிடம் மொத்த தேவைக்கான பணத்தில் ஒரு சிறு அளவே இருந்தது. பெருவாரியான பணம் கொழிக்கும் NGOக்களுக்குப் பணம் கொடுப்பது யாரென்றால், உதவி மற்றும் வளர்ச்சி நிறுவனங்கள். இந்நிறுவனங்களுக்குப் பணம் கொடுப்பது யாரென்றால் மேற்கத்திய அரசுகள், உலக வங்கி, ஐநா மற்றும் சில பன்னாட்டு நிறுவனங்கள். இவர்களெல்லோரும் ஒன்று போலத்தான் என்று சொல்ல முடியாவிட்டாலும், இவர்கள் எல்லோருமே இளக்கமாகப் பிணைக்கப்பட்ட ஒரு அரசியல் வியூகத்தின் பகுதிகளே. இவர்களது பணி என்னவென்றால் தாரளமயமாக்கலை மேற்பார்வை செய்வதும், அரசுகள் இத்துறைகளில் செலவு செய்வதைக் குறைக்கச் சொல்வதுமாகும்.

ஏன் இந்நிறுவனங்கள் NGOக்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும்? வெறுமனே பழங்காலத்திய சமயச் சங்கங்கள் மாதிரியா? குற்றமனப்பான்மையா? இது அதற்கும் கொஞ்சம் மேல். NGOக்கள் அரசின் பின்வாங்குதலால் ஏற்பட்ட ஒரு வெற்றிடத்தை நிரப்புவது போன்ற ஒரு தோற்றத்தினை ஏற்படுத்துகின்றன. இவை வேலை செய்கின்றன, ஆனால் பொருள்ரீதியாக ஒரு தேவையற்ற/மடத்தனமான வகையில். இவற்றின் பங்களிப்பெல்லாம் அரசின் மேல் மக்களுக்கிருக்கும் கோபத்தைத் தணிப்பதும், மக்களுக்கு நியாயமான உரிமைகளாகக் கிடைக்க வேண்டியதை இலவசமாகவும், கொடையாகவும் கொடுக்கிறதும்தான். இவர்கள் மக்களின் மனதை நிலைமாற்றுகிறார்கள். இவர்கள் மக்களை ஒரு சார்ந்து நிற்கும் பலிகளாக்கி, அவர்களது அரசியல் எதிர்ப்பை மழுங்கடிக்கிறார்கள். NGOக்கள் அரசுக்கும் மக்களுக்குமிடையேயான ஒரு தாங்கி/தடுப்பாக இருக்கிறார்கள். பேரரசுகளுக்கும் குடிகளுக்குமிடையே இவர்கள்தான் நடுவர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், தூதுவர்கள்.

நெடுநோக்கில், இந்த NGOக்கள் இவர்களுக்குப் பணம் கொடுத்தவர்களுக்குத்தான் பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்களேயன்றி, இவர்கள் யாருக்காக உழைக்கிறார்களோ அம்மக்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை. இவர்களைத்தான் தாவரவியலாளர்கள் 'காட்டி' (indicator) என்கிறார்கள். தாராளமயமாக்கலினால் விளைந்த சீரழிவுகளை விட NGOக்களினால் விளையும் சீரழிவு அதிகமானதாக இருக்கும் போலத் தோன்றுகிறது. இந்த NGO விவகாரத்தைச் சுரீரென்று சொல்வதற்கு ஒரு உதாரணம் என்னவென்றால், ஈராக்கின் மேல் அமெரிக்கா படையெடுத்தவுடன், பின்னாலேயே NGOக்களை அனுப்பி அந்தச் சீரழிவுகளைச் சுத்தம் செய்யச் சொன்னது. இந்த NGOக்களுக்குப் பணம் சரியானபடி கிடைக்கவும், இவை அந்தந்த நாடுகளில் வேலை செய்ய அனுமதிக்கப்படவும், இவை மேம்போக்கான ஒரு அரசியல் அல்லது வரலாற்றுக் காரணத்தைக் வடிவமைத்துக் கொள்கின்றன. எப்படியாயினும், ஒரு சங்கடமான வரலாற்று அல்லது அரசியல் காரணம், ஏழை நாடுகளிலிருந்து வரும் அரசியலல்லாத (அப்படியென்றால் மிகவும் அரசியலானது என அர்த்தம்) துயரச் செய்திகள் இவையெல்லாம் அந்த (இருளடைந்த) நாடுகளிலிருக்கும் (இருளடைந்த) மக்களைப் பாதிக்கப் பட்டோராய்க் காட்டுகின்றன. இன்னொரு ஊட்டச்சத்து குறைந்த இந்தியன், இன்னொரு பசியான எத்தியோப்பியன், இன்னொரு ஆப்கன் அகதி முகாம், இன்னொரு சிதைக்கப்பட்ட சூடானியன்...இவர்களுக்கெல்லாம் ஒரு வெள்ளைக் காரனின் உதவி அவசியப்படுகிறது. இவ்வகையில் (NGOக்கள்) அறியாமலேயே மாறாத நிறவெறியையும், மேற்கத்திய நாகரீகத்தின் கருணையையும் (கடுமையான அன்பு) மறுவுறுதி செய்கிறார்கள். அவர்கள்தான் இந்நவீனவுலகின் மதச்சார்பற்ற சமயச் சங்கத்தார்கள்.

கடைசியில், சிறிய அளவில், ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக, NGOக்களுக்குக் கிடைக்கும் பொருளானது, ஏழை நாட்டுப் பொருளாதாரத்தில் நிகழும் நிழலான அரசியல் கொடுக்கல் வாங்கலைப் போலவே ஆகிவிடும். இது இன்னதைச் செய் என்று கட்டளையிட ஆரம்பிக்கும். இது மோதலைப் பேச்சுவார்த்தையாக்கும். இது எதிர்ப்பை அரசியலற்றதாக்கிவிடும். உள்ளூர்க் குடிகளின் தன்னம்பிக்கை மிக்க எதிர்ப்புப் போராட்டங்களில் குறுக்கிடும். NGOக்களிடம் பணமிருக்கிறது, இந்தப் பணத்தைக் கொண்டு, ஒரு போராட்டக்காரனுக்கு வேலை கொடுக்க முடியும், இதன் மூலம் அவர்களை அந்த நேரத்துக்கு ஏதோ நல்லது செய்வதாக (பொருளீட்டுவதாக) நினைக்க வைக்க முடியும். உண்மையான அரசியல் எதிர்ப்புகள் இந்தக் குறுக்குப் பாதைகளையெல்லாம் காட்டாது. அரசியலை NGO-ஆக்கம் செய்வது போராட்டங்களை ஒரு நற்பாங்கான, அறிவார்ந்த, சம்பாத்தியத்துடனான, 9 மணியிலிருந்து 5 மணிவரைக்குமான ஒரு வேலையாக மாற்றுகின்ற ஆபத்தாகிறது. அத்தனையையும் ஒரு சில நாணயங்களை விட்டெறிந்து. உண்மையான எதிர்ப்புக்கு உண்மையான விளைவுகளிருக்கும். சம்பளமிருக்காது.

(இன்னும் ஒன்னு இருக்கு)

போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 1

சென்ற மாதம் சான்பிரான்சிஸ்கோவில் அருந்ததி ராய் உரையாற்றியிருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகளை தமிழில் தர முயன்றிருக்கிறேன். மொழி மாற்றத்தில் ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

ஆதிக்கங்களை எதிர்த்து, தம் உரிமைகளுக்காக மக்கள் தம் அரசுடனோ அல்லது ஒரு மாற்று நாட்டு அரசுடனோ போராடிய வண்ணம் இருக்கிறார்கள். இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் சந்திக்கும் முக்கியமான மூன்று சவால்கள் என்ன?

1. போராட்ட இயக்கங்களும் ஊடகங்களும்
போராட்டக்காரர்களும், ஊடகங்களும் சந்தித்துக் கொள்வது ஒரு சிக்கலான இடம். ஒரே இடத்தில் காலத்தைச் செலவிட செய்தித்தாகம் கொண்ட ஊடகங்களுக்குக் கட்டுப்படியாகாது என்பதை அரசு கற்றிருக்கிறது. வியாபாரத்தில் பணம் புழங்குவது போல ஊடகத்தில் பிரச்சினைகள் புழங்க வேண்டும். நாடுகள் முழுவதும் பழஞ்செய்திகளான வண்ணம் இருக்கின்றன. ஒரு போராட்டத்தின் மேல் சிறு நேரத்துக்கு ஒளியைப் பாய்ச்சிச் சடாரென்று விலகி முன்பை விட இருளில் தள்ளிவிடுகின்றன இந்த ஊடகங்கள். சோவியத் தன் படைகளை ஆப்கானிஸ்தானத்திலிருந்து மீளப்பெற்றபோது இதுதான் நடந்தது. இப்போது சி.ஐ.ஏவின் ஹமீத் கர்ஸாயை உட்கார வைத்து மீண்டுமொருமுறை ஆப்கானிஸ்தானைப் போரில் தள்ளியிருக்கிறது. இதே மாதிரித்தான் இன்னொரு சி.ஐ.ஏ இயத் அல்லாவியை ஈராக்கிலே நிறுத்தி, இப்போது கிட்டத்தட்ட ஊடகங்கள் இங்கிருந்தும் கிளம்பிவிடும்.

அரசுகள் "பொறுத்திருந்து பார்க்கும்" உத்தி மூலம் போராட்டங்களை வலுவிழக்கச் செய்வதில் தேர்ச்சியடைந்து வருகின்றன. அதே நேரத்தில் போராட்ட இயக்கங்கள் கண்ணைக் கவரும் விதத்திலும், சுலபமாய்க் கொள்ளப் படும் விதத்திலும் புதுப் புதுப் பிரச்சினைகளை உற்பத்தி செய்தவண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு சுய மரியாதையான மக்களின் இயக்கமும், ஒவ்வொரு பிரச்சினையும் தனக்கென ஒரு விளம்பர பலூனை வானிலே பறக்க விட்டிருக்கின்றன. இதே காரணத்தினால்தான் ஊட்டச்சத்து குறைவுப் பிரச்சினையை விட பட்டினிச் சாவு பிரச்சினை/விளம்பரம் அதிகக் கவனத்தைப் பெறுகிறது. தொலைக்காட்சிக்கு உகந்த வகையில், உடைந்து சீரழிக்கும் காட்சி தெரியும் வரை அணைகள் பெருஞ்செய்தியாவதில்லை. ஆனால் அப்போது செயலுக்குக் காலம் கடந்துவிட்டிருக்கும். மேலேறும் தண்ணீருக்குள் நின்று உன் வீடும் உடைமைகளும் மூழ்குவதைப் பார்த்துப் போராடுவது பழைய உத்தி. தொலைக்காட்சிகளுக்கு அது சலித்துவிட்டது. எனவே அணைகளால் இடம் பெயர்க்கப் பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் புது மாயங்களைக் காட்டிப் போராட வேண்டியிருக்கிறது அல்லது போராட்டத்தை விட்டுவிட வேண்டியிருக்கிறது.

வண்ணமயமான ஆர்ப்பாட்டங்களும், வாரக்கடைசி ஊர்வலங்களும் முக்கியமானவைதான், ஆனால் போர்களை நிறுத்துவதற்கு அவை வலிமையற்றவை. போர்வீரர்கள் சண்டையிடுவதையும், ஆயுதங்களைக் கப்பல்,விமானங்களில் ஏற்றுவதையும், ஆதிக்கங்கள் உலகெங்கும் திறந்திருக்கும் பொருளாதாரக் கதவுகளைப் புறக்கணிப்பதையும் செய்யும்போதே போர்கள் நிற்கும். குடிகளின் கீழ்ப்படியாமை மூலம் நாம் ஒரு சேதியைச் சொல்ல விரும்பினால், முதலில் இந்த ஊடகங்களின் பிரச்சினை சார்ந்த தனம், சாதாரணமானவற்றை விலக்கும் தனம் ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுபடவேண்டும். இயல்பு என்று அரசுகள் அழைப்பதை (உண்மையில் கொடூரம், அநீதி, ஒத்துக்கொள்ளப் படமுடியாதது) விசாரணை செய்ய நாம் நம் அனுபவத்திலிருந்தும், கற்பனையிலிருந்தும் புதிய உத்திகளை உண்டாக்க வேண்டும். உணவு, தண்ணீர், இருப்பிடம், சுயமரியாதை போன்ற சாதாரணத் தேவைகளைக்கூட ஒரு தொலைதூரக் கனவாக்கி விட்ட திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் நிலையை நாம் தோலுரிக்க வேண்டும். உண்மையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது, போர் என்றால் பிழையான/ நீதியற்ற அமைதியின் விளைவே என்று உணர்தலாகும். போராட்ட இயக்கங்களைப் பொறுத்தவரையில், அவர்களுடைய மக்கள் கூட்டத்துக்கு இணையாக வேறெந்தப் பலமும் கிடையாது. பலமான இந்தக் கூட்டத்துக்கு எந்த (அரசுகளிடம்) மாற்றும் கிடையாது.

நிறுவனங்களை உலகமயப்படுத்தலினால், முடிவு செய்வோருக்கும் அந்த முடிவுகளினால் பாதிக்கப் படுவோருக்குமான தூரம் பெருகிவிட்டது. World Social Forum போன்ற மன்றங்களால் இத் தொலைவு குறைக்கப் பட்டிருக்கிறது. பல நாட்டு மன்றங்களுக்கிடையேயான தொடர்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. இந்தக் கூட்டு முக்கியமானதும் பாதுகாப்பானதுமாகும். உதாரணமாக, இந்தியாவின் முதல் தனியார் அணை, மகேஷ்வர் அணை, கட்டப்பட்ட போது நர்மதா பச்சாவொ அண்டோலன் (NBA), ஜெர்மானி, சுவிட்சர்லாந்து இயக்கங்களும், பெர்க்லியின் பன்னாட்டு நதிகளின் கூட்டமைப்பு ஆகியவையும் இணைந்து செயலாற்றி அத்திட்டத்திலிருந்து பன்னாட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்களை விலகிக் கொள்ளச் செய்தது. மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடாமலிருந்திருந்தால் இது சாத்தியமாகியிருக்காது. இந்த உள்ளூர் இயக்கங்களின் போராட்டமே வெளியுலகில் இருக்கும் ஆதரவாளர்களால் உலகளவில் பெரிதொலிக்கப் பட்டு அந்த அணைத்திட்ட முதலீட்டாளர்களைப் பின்வாங்கச் செய்தது. குறிப்பிட்ட திட்டங்கள், குறிப்பிட்ட நிறுவனங்களைக் குறிவைத்த எண்ணிலடங்கா இத்தகைய கூட்டு முயற்சிகள், இன்னொரு உலகைப் படைக்க உதவும். முதலில் நாம் ஆரம்பிக்க வேண்டிய நிறுவனங்கள் யாரெல்லாம் சதாம் உசேனுடன் கூட்டுச் சேர்ந்து வியாபாரம் செய்தார்களோ அவர்களும், இப்போதைய ஈராக்கிய சீரழிவால் யாரெல்லாம் லாபம் அடைகிறார்களோ அவர்களும்.

(தொடரலாம்)

Old MacDonald-ன் பண்ணை!



சின்னப் பிள்ளைகளுக்குத் தமிழ்ப் புத்தகங்கள் வேண்டும். நிறைய. கண்ணைக் கவரும் ஆங்கிலப் புத்தகங்களைக் கண்டால் ஏழையேக்கம் வந்து கவ்வுகிறது. இதோ இது ஒரு அழகான ஆங்கிலப் பாடல். எங்கள் மகனுக்கு இதை இப்படித் தமிழில் சொல்லிக் கொடுக்கிறோம். அவனுக்கும் பிடித்துப் போயிற்று. எங்களுக்கும்.

இதற்கான சுலபமான மெட்டு இங்கே. அதே மெட்டில் பாடினால் நன்றாயிருக்கும். கற்பனை மற்றும் தொண்டை வளத்துக்கேற்ற மாதிரி ஒலிகளை எழுப்பலாம்! :)

தாத்தா பண்ணை வச்சிருந்தார்
இய்யா இய்யா யோ
அங்கு கோழிக்குஞ்சுகள் இருந்தனவாம்
இய்யா இய்யா யோ
இங்கொரு சிக்சிக்
அங்கொரு சிக்சிக்
எங்கபாத்தாலும் சிக்சிக்-சிக்சிக்
தாத்தா பண்ணை வச்சிருந்தார்
இய்யா இய்யா யோ!

அங்கு குதிரைகள் கொஞ்சம் இருந்தனவாம்
இய்யா இய்யா யோ
இங்கொரு ந்நேய்ய்
அங்கொரு ந்நேய்ய்
எங்கபாத்தாலும் ந்நேய்-ந்நேய்ய்
தாத்தா பண்ணை வச்சிருந்தார்
இய்யா இய்யா யோ!

அங்கு வான்கோ ழிகளும் இருந்தனவாம்
இய்யா இய்யா யோ
இங்கொரு க்காப்ல்
அங்கொரு க்காப்ல்
எங்கபாத்தாலும் க்காப்ல்-க்காப்ல்
தாத்தா பண்ணை வச்சிருந்தார்
இய்யா இய்யா யோ!

அங்கு பன்றிகள் கொஞ்சம் இருந்தனவாம்
இய்யா இய்யா யோ
இங்கொரு ஒய்ங்க்
அங்கொரு ஒய்ங்க்
எங்கபாத்தாலும் ஒய்ங்க்-ஒய்ங்க்
தாத்தா பண்ணை வச்சிருந்தார்
இய்யா இய்யா யோ!

அங்கு மாடுகள் கொஞ்சம் இருந்தனவாம்
இய்யா இய்யா யோ
இங்கொரு மூ
அங்கொரு மூ
எங்கபாத்தாலும் மூ-மூ
தாத்தா பண்ணை வச்சிருந்தார்
இய்யா இய்யா யோ!


அங்கு கழுதைகள் கொஞ்சம் இருந்தனவாம்
இய்யா இய்யா யோ
இங்கொரு ஹீ
அங்கொரு ஹா
எங்கபாத்தாலும் ஹீ-ஹா
தாத்தா பண்ணை வச்சிருந்தார்
இய்யா இய்யா யோ!

அங்கு செம்மறி ஆடுகள் இருந்தனவாம்
இய்யா இய்யா யோ
இங்கொரு பே
அங்கொரு பே
எங்கபாத்தாலும் பே-பே!

இங்கொரு ஹீ-ஹா
அங்கொரு ஹீ-ஹா
இங்கே ஹீ - அங்கே ஹா
எங்கபாத்தாலும் ஹீ-ஹா

இங்கொரு மூ-மூ
அங்கொரு மூ-மூ
இங்கே மூ, அங்கே மூ
எங்கபாத்தாலும் மூ-மூ

இங்கொரு ஒய்ங்க்
அங்கொரு ஒய்ங்க்
இங்கே ஒய்ங்க், அங்கே ஒய்ங்க்
எங்கபாத்தாலும் ஒய்ங்க்-ஒய்ங்க்

இங்கொரு க்காப்ல்
அங்கொரு க்காப்ல்
இங்கே க்காப்ல், அங்கே க்காப்ல்
எங்கபாத்தாலும் க்காப்ல்-க்காப்ல்

இங்கொரு ந்நேய்ய்
அங்கொரு ந்நேய்ய்
இங்கே ந்நேய்ய், அங்கே ந்நேய்ய்
எங்கபாத்தாலும் ந்நேய்-ந்நேய்

இங்கொரு சிக்சிக்
அங்கொரு சிக்சிக்
இங்கே சிக், அங்கே சிக்
எங்கபாத்தாலும் சிக்சிக்-சிக்சிக்

தாத்தா பண்ணை வச்சிருந்தார்
இய்யா இய்யா யோ!

பீபாடி அருங்காட்சியகம்

இப்போ அப்போ என்று இழுத்தடித்துக் கொண்டிருந்து நேற்று ஒருவழியாய்ப் போனோம். இது ஏல் பல்கலையினால் அமைத்துப் பராமரிக்கப் படுகிறது. வரலாறு மற்ற தகவல்களை இங்கே காணலாம்.

3 தளங்கள். தரைத்தளம்: ஆப்பிரிக்கக் குட்டி யானையின் எலும்புக்கூடு வரவேற்றது. பல்லின் கடி/வெட்டுப் பரப்பு ஆப்பிரிக்க யானைக்கும் நம்ம ஊர் யானைக்கும் வேறமாதிரி இருக்குமாம். உள்ளே டைனோசர்களின் மாதிரிகள், புதைபடிவங்கள், அகழ்வாராய்ச்சியில் கிடைத்த எலும்புக்கூடுகள். அதில் ட்ரைசெரடாப்ஸ் என்ற முக்கொம்பரின் மண்டையோட்டைத்தான் பார்க்கிறீர்கள்.



ஓ.சி. மார்ஷ் என்பாரின் பங்களிப்பு 1800ன் பிற்பகுதியில் அறிவியல், இக்காட்சியகம், இப்பல்கலை ஆகியவற்றுக்கு மதிப்புக்குரியது. வயோமிங் மாநிலத்தில் யாரோ தோண்டியெடுத்து இன்னாதுன்னு இவர்கிட்ட அனுப்ப, அதை ஆராய்ந்து டொரொசாரஸ் எனக் கண்டது இவரே. டொரொசாரஸின் பெருஞ்சிலையை (கவனிக்க, மார்ஷின் சிலை அல்ல) அருங்காட்சியக வாசலில் நிறுவ ஏற்பாடு நடக்கிறது. ஒவ்வொரு டினோசர் வகைக்கும் வாழ்ந்த காலம், சாப்பாட்டுப் பழக்கம் இதெல்லாம் சொல்லப் பட்டிருக்கிறது. பக்கச் சுவற்றின் மேற்பகுதியில் 110/16 அடி என்ற அளவில் ஒரு ஓவியம். இது 1942ல் வரையப்பட்டது. 300 மில்லியன் வருடங்களுக்கு முன்னான ஒரு வனக்காட்சி, டினோசர்கள் மேய்கின்றன. அப்புறம் புதைபடிவமான மரங்கள், இலைகள் ஆகியவற்றை வெட்டியெடுத்து வைத்திருக்கிறார்கள். புதைபடிவத்துக்குள் உட்சென்ற மண்ணும் உப்புக்களும் கலந்து வண்ணம் காட்டுவது பிரமிப்பு.



சற்றுத் தள்ளி ஊர்வன, பாலூட்டிகளின் பல்வேறு வகைகள், பரிணாம வளர்ச்சிகள். நிறைய பொருட்களை அமெரிக்காவிலேயே பெற்றிருக்கிறார்கள். மிகுதி உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் கொடுக்கல்/வாங்கல் நடத்தி வைத்திருக்கிறார்கள்.

இரண்டாம் தளம்: விண்கற்கள் (மேலே கருப்பு, உள்ளே வெளுப்பு!). ஒரு கண்டுபிடிப்புக் கூடம். அதிலே பல்வகைத் தாதுக்கள், கடல்வாழ்/செத்த உயிரிகள். சிலதைத் தொட்டு அறியலாம். சிலது ஷ்ஷ்! அப்புறம் பீபாடி, ஓ.சி. மார்ஷ் ஆகியோரின் வாழ்க்கை/பணிகளைப் பற்றிக் கொஞ்சம்.

மூன்றாம் தளம்: கனெக்டிகட்டின் உயிரியல் வளம். பறவைகள், விலங்குகள், நிலப் பரப்பு. தாதுக்கள், உப்புக்களின் வண்ணக் கோலம் கொஞ்சம் தள்ளி. இங்கே பாருங்கள், இந்தக் குருவிகளின் நிறங்களை, கலப்பில் பிறந்தவை. இதெல்லாம் இயற்கையில் சகஜமாம்!



பெரும் வெள்ளை அன்னப் பறவைகள். இவற்றை நீங்கள் இன்றும் காணலாம். அப்புறம் செவ்விந்தியர்களின் வாழ்வைப் பற்றிய சேகரிப்புகள். எகிப்தியரின் பழம்பொருட்கள், இரண்டு மம்மிகளும் அடக்கம்.

எப்போதும் இருக்கும் (தத்துவார்த்தமாகப் படிக்கக் கூடாது) காட்சிப் பொருட்களும், வேறு அருங்காட்சியகங்களிலிருந்து வந்து போகும் காட்சிப் பொருட்களுமாக சுறுசுறுப்பாக இயங்குகிறது இக்காட்சியகம். இந்தப் பக்கம் வருபவர்கள் அவசியம் பார்க்கவும்!

கற்றுக் கொண்ட இன்னொன்று: எல்லாவற்றையும் ஆற அமரப் பார்த்துக் குறிப்பெடுத்து வந்து ஒழுங்காய் எழுதத் தனியாய்ப் போனால் ஆகும், இரண்டு வயதுப் பிள்ளையின் அப்பனாகப் போனால் ஆகாது!

தலித் மூட்டிய அடுப்பு

மத்தியப் பிரதேசத்தில் ஒரு ஆரம்பப் பள்ளி. 'சிவபுரி' மாவட்டத்துல. 150 பிள்ளைகளில் 115 பேர் "மேல்சாதி". மதிய உணவு சமைக்கும் ஒரு சமையற்காரம்மா. அவரொரு தலித். பள்ளிக்கூடத்தில் படிக்கும் மேல்சாதிக் குஞ்சுகள் அந்தம்மா சமைத்ததைச் சாப்பிட மறுத்து விட்டனராம். பிள்ளைகளுக்கு வீட்டில் அப்படிச் சொல்லிக் கொடுக்கப் பட்டிருக்கிறது. தலைமையாசிரியர் மாணவர்களைத் திருத்துவதற்குப் பதில் சாதீயாதிக்கத்துக்கு அடிபணிந்து இன்னொரு மேல்சாதிச் சமையற்காரரைப் பணியமர்த்தினாராம். இப்போ ரெண்டு பேருக்கும் பாதிப்பாதிச் சம்பளம், சமைப்பது மேல்சாதி ஆயா. பிள்ளைகள் தலித்துகளோடு உட்கார மாட்டார்களாம், ஒன்றாயிருந்து சாப்பிட மாட்டார்களாம். ஒரு அரசு அதிகாரி தனக்கு எதுவும் தெரியாது ஆனா தெரிஞ்சா நடவடிக்கை எடுப்போம்னு சொன்னாராம்.

இது மாதிரி நிகழ்ச்சிகளெல்லாம் எங்கோ ஆயிரத்திலொன்றாக நடக்கிறதென்று நான் நினைக்கவில்லை. நாளைய நாட்டை உண்டாக்கும் பள்ளிக்கூடத்தில் இந்த நிலைமை. இந்தப் பிள்ளைகள் வளர்ந்து என்ன செய்யுமென்பதையும் அந்த மேல்சாதீய மனப்பான்மை எப்படிப் பல்கிப் பெருகும் என்பதையும் ஊகிப்பது கடினமில்லை. ஒரு சமையற்காரரின் சுயமரியாதையை அழித்து, அவரது பாதி வயிற்றில் அடித்து இந்தச் சாதீயம் காக்கப் பட்டிருக்கிறது. இவ்வளவு ஆச்சாரம் பார்க்கிற மேல்சாதியெல்லாம் தலித் சாகுபடி செய்கிற நெல்லை, காய்கறியை, வளர்க்கிற ஆட்டை, கோழியைச் சாப்பிட மாட்டோம், அவன் மேய்க்கிற மாட்டுப் பாலைக் குடிக்க மாட்டோம் என்று சொல்லிவிடுமா?

செய்தி

காற்றென வந்தது கூற்றமிங்கே



வெஸ்ட் ஹேவன் கடல், கரையில் இந்த அமைதி நேற்று. முந்தாநாள் இப்படியில்லை. பெருங்காற்று. பேரலைகள். கன்னியாகுமரி பாறையில் மோதித் தெறிக்குமே அப்படியாபட்டவை. கலங்கிய தண்ணீர். கருமை. கடற்பருந்துகள் கடலை விட்டு வெகுதூரப் புல்வெளியில் கூட்டமிட்டுத் திரிந்தன. அந்தக் காற்று Frances புயலின் மிச்ச சொச்சமாயிருந்திருக்கக் கூடும்.

அமெரிக்கத் தென்கிழக்குக் கடற்கரையோரம் புயலுக்குப் பிரபலம். ஒவ்வோராண்டும் கிட்டத்தட்ட ஜூலையிலிருந்து அக்டோபர் வரைக்கும் புயற்காலம். அப்போது கிளம்பும் புயல்கள் ஒவ்வொன்றுக்கும் அகர வரிசையில் பெயர்கள் இருக்கும். வானிலை முன்னறிவிப்புகள் ஓரளவுக்குத் துல்லியமாகவே கிடைக்கும். இங்க, இப்ப, இந்த வேகத்துல வந்து அடிக்கும்னு தெரியும். இந்த அனுமானம் தப்பிப் போகிறதும் உண்டு.

1999ல நான் தென்கரோலினாவில் இருந்தபோது Floyd அப்படின்னு ஒரு புயல் வந்தது. மிகப் பெரும்புயல் என்ற பீதி கிளம்பியது. எல்லோரும் ஊரைவிட்டுக் கிளம்பியோடுங்கள் என்று கண்டிப்பான உத்தரவைக் கொடுத்துவிட்டார்கள். நிறைய நிறுவனங்கள் மூடப் பட்டன. நான் என் பழைய மூத்த ஆய்வாளரோடு கிளம்பி ஒரு 250 மைல் தாண்டி அட்லாண்டா நகருக்குச் சென்றுவிட்டேன். சென்ற பயணம் நெடிது. ஏனெனில் மூன்று தென் மாநிலத்தவர்களை அன்றைக்குத் திடீரெனக் கிளப்பி விட்டு விட்டார்கள். நெடுஞ்சாலையில் நெருக்கடி. புயல் பீதி, சாலை எரிச்சல் எல்லாமாய்ச் சேர்ந்து அந்த இரவைத் தின்றன. எப்படியோ. புயல் வந்தது. நானிருந்த ஊரில் பெரும் அடியில்லை. மேலே போய் வடகரோலினாவைத் தாக்கி, அப்புறம் மேலே மேலே நகர்ந்து வட மாநிலங்களையும் பெருமழையால் குளிப்பாட்டிவிட்டுக் கரைந்து போனது.

பார்த்திருப்பீர்கள், இப்போது ஐவன், ஒரே மாத காலத்தில் மூன்றாவது புயல். க்ரினேடாவைக் கிட்டத்தட்டச் சின்னாபின்னமாக்கிவிட்டு ஜமேய்காவில் இப்போது ஆட்டம். நகர்ந்து புளோரிடாவுக்கு வருமென்று கணிப்பு. நிற்போரும், கிளம்புவோருமாய் அங்கே அமளி. உயிர்களையும் உடைமைகளையும் பெயர்த்தெறிந்துவிட்டு ஒருவாரம் கழித்து இந்தப் பக்கம் வந்து காற்றூதிக் கடல்கலக்கி ஓய்ந்து போகலாம் ஐவன்.
தலைப்பு உபயம்: பாரதியாரின் "புயற் காற்று" கவிதை.

உலகே மாயம், வாழ்வே மாயம்

நானும் தெனமும் குந்திப் பாக்குறேன். நாலு வரி எழுதுறதும், பின்னோக்கித் தட்டித்தட்டி, இல்லன்னா ஒன்னா சேத்து இழுத்து ஒரே அமுக்குல அழிச்சுத் தள்ளிப்புட்டு "ஹ போயி எதயாச்சும் படிக்கலாம்"னு தாவித்தாவி மணியக் கரைச்சு, வேலைக்கிப் போயி, ஆடிக் களைக்கிறதும். இதே சக்கரந்தான். இதுக்குக் காரணம் இல்லாம இல்ல.

ஊர்லயெல்லாம் நெடுஞ்சாலையில சில இடங்கள்ல விபத்துப் பகுதின்னு போட்டிருப்பாங்கள்ல, அந்தமாதிரி ஆகிப்போச்சு நம்ம வலைச்சாலை. வண்டியை எடுத்தாலே மோதல், அடிதடி, வெட்டுக் குத்து, நீயா நானா. சண்டை ஒரு வாரம், கிளைச் சண்டை மறு வாரம், கிளை மெயினாகி அதற்கடுத்து, போஸ்ட் ட்ரமாட்டிக் டிஸார்டர், சாம்பல், புகை, உள்நெருப்பு விவகாரம் தொடர்கதை. இத்தனைக்கும் சண்டைக்காரனாகவா பெத்துப் போட்டிருக்காங்க என் அப்பனாத்தா? "அன்பைப் பெருக்கி எனதாருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே இறையேன்னும், அப்பா நான் வேண்டுதல் கேட்டருள்புரிய வேண்டும் ஆருயிர்கட்கெலாம் நான் அன்பு செயல் வேண்டும்" அப்படின்னும் கருப்பையா கோயில் கொளத்துல குளிச்சுப்புட்டு காலையில காலையில அப்பாவோட சேர்ந்து பாடிப் பாடித்தான் வளர்ந்தேன். ஆனாலும் பாருங்க வலைப்பூக்கள்ல சண்டைன்னு வந்தா அதுல எங்கேயாச்சும் ஒரு எடத்துலயாவது எம்பூ பூத்திருக்கும் 'நல்ல' பாக்கியம். இப்படியொரு ஒருமைப்பாட்டுக் குழப்பியா இருக்கது தேவையான்னு ஒரு எண்ணம்.

அப்புறம் செய்தி சார்ந்து எழுத முடியாத ஒரு மனோநிலை. அதான் கூகிள்ல தட்டுனா போன நிமிஷத்துல யாரு முக்குனா மொதக்கொண்டு என்னத்தப் பத்தித் தெரியனுமோ அத்தனையும் வருது, இதுல என்னத்துக்கு நான் வேற தினசரி மாதிரி வேலை பாக்கனும். ஜெயலலிதாவும் வைக்கோவும் அடிச்சுக்கிட்டதை நான் எழுதி என்னாவப் போவுதுங்கறேன். செய்தி பாதிக்கிதாம், அந்தப் பாதிப்புதான் இன்றைய நானாம். என்ன, நியூஸ்பேப்பரே பாக்காதவங்க என்னோட வலைப்பூவுக்கு வாராங்களா என்ன? Xinhua, News Today, Reuters, தினமணி, தினமலர் (கடைசிச் செய்திகள்), தினத்தந்தி அல்லாரும் பாடுறதை நானும் ஒருக்கப் பாடணுமா? வேணுமின்னா அதுலயே யாரும் எழுதாமக் கெடக்குறதைப் புடிச்சாந்து போடலாம், இந்த வார தலித் கொடுமைகள், அருந்ததி ராயின் ஆகஸ்டு பேச்சு, ஆணுறை விநியோகிக்க விடாமத் தடுக்கும் தமிழகப் போலீஸ் இப்படியாக. ஆனா இதுலயும் சிக்கல். ஏன்னா இதெல்லாம் பெரச்சனை புடிச்சது. அதாவது தாய்நாட்டுல இருக்க பெரச்சனைகளைப் பேசக் கூடாதுங்கற ஒரு சங்கடமான நெலம. (பெரச்சனை மட்டுந்தான் கண்ணுல படுதா, நல்லதே படாதான்னு கேக்குறீங்களா? பஞ்சர் ஒட்றவரு முள்ளுக் குத்துன ஓட்டையத் தான் தேடுவாரு, அவரப் போயி நீங்க ஆப்டிமிஸ்டிக்கா இருக்கணும் இதோ பாருங்க இம்பூட்டு ட்யூபு நல்லாருக்கேன்னு கேக்க முடியாது). ஆனா இதையெல்லாம் எழுதப் போனா வம்பு வரும். இதையும் தாண்டி நடுநிலை யோக்கியர்களின் you peopleதனமான ஆதிக்கப் பேச்சுக்கள். இதெல்லாம் எனக்குத் தேவையா? மேலும் சண்டை போட்டுப் போட்டு அன்பு சுண்டி வத்தி எனக்கு மனுசத் தன்மை போயி சிடுமூஞ்சி ஆயிருவேனோன்னு உளவியல் பயம் வர ஆரம்பிச்சிடுச்சு.

ஆக, இவருக்கொரு மழை, அவருக்கொன்னு, ந்தோ அவருக்கொன்னுன்னு மாசம் மும்மாரிப் பொழியற கதை மாதிரி, நல்ல சேதி சொன்ன நண்பருக்கொரு முழுக்கு, நடுவுல நின்னு அமைதியாப் பாத்த அத்தனை பேருக்கும் ஒரு முழுக்கு, சண்டையிலே என்னோடு புரண்டோருக்கொரு முழுக்குன்னு முத்திருமுழுக்குப் போட்டுவிடலாமா என்றுகூட இருந்தது. சண்டை போட்டுப்புட்டு வீட்டுக்கு வந்தா ஏன் அங்க போறன்னுதான் அம்மாப்பா மொத கேள்வி. இந்த மாதிரி "தள்ளியிரு" அப்படின்னு சொல்லிச் சொல்லியே நம்மளை இப்புடி ஆக்கிட்டாங்கன்னு நெனக்கிறேன். எனக்குத் தெரிஞ்ச ஒரு இந்தியன் இருக்கான், மணிப்பூர்ல என்ன ஆனா எனக்கு என்ன மேன், என்னைப் பாதிக்காத வரைக்கும் நான் அதைப்பத்திக் கவலைப்படப் போறதில்ல, எனக்கு வேலைத் தலைக்கு மேலன்னு போறான். இந்த மாதிரி "யானை வாழ்ந்தா என்ன பூனை தாலிய அறுத்தா என்ன" வாழ்க்கைக்குப் பழக்கப் பட்டுப் போயிட்டம். புளியமரத்துல போயி ஆடுனா வம்பு வருதேன்னு அங்க போவாம இருக்க முடியுதா, ஆடாம இருக்க முடியுதா? அந்தந்த நேரத்துல அததைச் செஞ்சுப்புடணும். அதான் வந்துட்டேன். நீங்க அணைச்சாலும் சரி, அடிதடிக்கு வந்தாலும் சரியே. தீர்மானம் பண்ணிக்கிட்டு எழுத முடியாது, காதலிக்க முடியாது. இன்றைக்கு இந்தப் பினாத்தல், நாளைக்கு என்னவோ.