கரைந்து கரைந்து

புதுக்கோட்டை என்னோட மாவட்டம். குளத்தைக் காணோம், ஆத்தைக் காணோம், ஏரி இருந்த எடத்துல வீடு இந்த மாதிரி 'சாதாரண' பிரச்சினைகள் எங்க மாவட்டத்துலயும் உண்டு. தப்பிப் பிழைச்ச குளம் குட்டைகளும் உண்டு. மழை வந்தால் சில மாதங்களுக்கு இதுகளிலே தண்ணீரைப் பார்க்கலாம். தலையில் சுமந்தும், சைக்கிளில் குடத்தைக் கட்டியும் தண்ணியடித்த அனுபவம் நிறைய எனக்குண்டு. காவிரிப்பாசனக்காரியான எங்கம்மா, தாங்க முடியாதப்ப "இந்தக் காஞ்ச பய ஊர்ல"ன்னு திட்டும். எங்க மாவட்டத்தை வறட்சி மாவட்டம்னு அரசாங்கம் சொல்லுதோ இல்லையோ நாங்க அப்படித்தான் நெனக்கிறோம்.

தப்பித் தவறிப் பெய்யுற மழையில சேர்ந்து கெடக்குற கொஞ்சந் தண்ணியக் கூடப் பயன்படுத்தவிடாம அடிக்கனுமா? நாங்கூட இந்தக் கடல் இருக்கப் பெரிய ஊர்கள்ல இருக்கவங்கதான் இப்படின்னு நெனச்சேன். இப்ப வறண்டு போன எங்க மாவட்டத்துக் காரங்களுக்குக் கூடத் தண்ணியோட அருமை தெரியாமப் போச்சேன்னு நெனக்கிறப்ப...ங்கொப்புறான...நாம எங்க போறோம்?

புரியலயா? எனக்குந்தான். அந்தச் சேதியப் படிச்சதுக்கப்புறம் ஒன்னுமே புரியல. புத்து நோய் மாதிரிப் புரையோடுற இந்த வெறி எனக்குப் புரியல. போபால் நச்சுக் காத்தா ஊர் ஊராப் பரவுற இந்த மதிகெட்டதனம் எனக்குப் புரியல. இதுக்கு வழியென்ன இருக்குன்னும் புரியல. ஊர்ல ஒருத்தருமே ஏன்னு கேக்க மாட்டாங்களா? ஊர்த்தலைவனுங்க/கவுன்சிலனுங்க எல்லாருமாக் கூடி நின்னு செஞ்சா யாருகிட்ட போயி சொல்றது?

உழவாரத் திருப்பணின்னு ஊர் ஊரா அலைஞ்ச அப்பருக்கு இருந்தது சமூக அக்கறை. நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சன நீருன்னு இருந்த தாயுமானவனுக்கு இருந்தது அறிவு. அறிவியல் பூர்வமான மதமென்று தம்பட்டங்கொட்டி ஊர்களைச் சாக்கடையாக்கும் இந்த மத நம்பிக்கை அவசியமா?

தண்ணிய நாசமாக்குற இந்தப் புது வழக்கம் நாசமாப் போவனும்!

செய்தி

0 comments: