ஒரு சந்திப்பு

முன்பொரு பதிவில் ஏல் பல்கலையில் ஒரு ஆராய்ச்சிக் குழு எயிட்ஸ் பரவலைத் தடுக்கும் ஆராய்ச்சியொன்றை மேற்கொள்வதாக எழுதியிருந்தேன். அதன் முதன்மை ஆராய்ச்சியாளரான கிம் ப்ளாங்கென்ஷிப்பை நேற்று சந்தித்தேன். உங்க வலைப்பதிவைப் படிக்க மொழி தெரியவில்லையே என்று புன்னகைத்தார். அவர் தனது திட்டத்தைப் பற்றிச் சொன்னதைச் சுருக்கமாகக் கீழே தந்திருக்கிறேன்.

"ஜூன் மாசந்தான் ஆரம்பிச்சிருக்கோம். இந்தத் திட்டத்துல ரெண்டு பிரிவுகள் இருக்கு. ஒன்னு கேர் செய்யுற வேலைகளுக்கு ஆதரவு குடுக்குறோம். கேர்தான் களமிறங்கி வேலை செய்யும். இன்னொன்னு கேர்லேருந்து வர்ற தகவல்களை ஆராயப் போறோம். இதுக்காக ஆவாஹன் அப்படிங்கற ஒரு அமைப்புல இணைந்திருக்கோம். இது கேட்ஸ் அறக்கட்டளையின் கீழ் இயங்குறது. ஒரு பத்து, பதினைந்து அவஹன் குழுக்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் வெவ்வேறு இடங்களில் அமைப்புக் குறுக்கீட்டு (structural intervention) முறையினை ஆராய்ச்சி செய்பவை.

அமைப்புக் குறுக்கீட்டு முறையானது தனியாட்களுக்குக் கற்பிப்பதை முக்கியமான நோக்காகக் கொள்வதில்லை. அது, இருக்கின்ற அமைப்பைச் சரி செய்ய முற்படுகிறது. உதாரணமாக ஆணுறையைப் பயன்படுத்தனும்னு எல்லா விலைமாதுக்கும் தெரியும். இதைச் சொல்லித்தரத் தேவையில்லை. ஆனா ஆணுறையைப் பயன்படுத்த விடாம தடுக்குற அமைப்பை நாங்க ஆராயுறோம். அதாவது ஆணுறையை அணியச் சொன்னால் மறுக்கும்/அச்சுறுத்தும்/வேறிடத்துக்குச் சென்றுவிடும் வாடிக்கையாளர்கள், ஆணுறை வைத்திருப்பதாலேயே சிறைபிடிக்கப்படும் விலைமாதர்கள், இவர்களிடையே அமைப்புக் குறுக்கீட்டு முறை மூலம் எல்லா விலைமாதர்களையும் திரட்டி ஆணுறையில்லையென்றால் கலவியில்லை என்று தீர்மானிக்கலாம். காவல்துறையினரோடு கலந்து பேசி இத்தகைய கைதுகளை/பின் தொடரும் சித்திரவதைகளைக் குறைக்கலாம். இம்முறை ஏற்கெனவே கல்கத்தாவில் கேரினால் நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறது. இதனைச் சமுதாய அமைப்புக்கேற்ற சிறிய மாற்றங்களுடன் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் செயல்படுத்த உள்ளோம்.

இத்திட்டத்தில் குழுக்களுக்கிடையேயான பரிமாற்றங்கள் நிகழும். அமெரிக்கக் குழுக்கள் இந்தியாவுக்கும், இந்தியக் குழுக்கள் அமெரிக்காவுக்கும் வந்து கற்கும். இதற்காக கேர், சிரா முதலியவற்றில் வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளோம்.

ஆப்பிரிக்காவில் சில ஆராய்ச்சி முடிவுகளின்படி பெண்களின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளும் வழிவகைகளைச் செய்த பின்னர் அங்கு விபச்சாரத்தின் அளவு குறைந்துவிட்டது. கல்கத்தாவில் விலைமாதர்கள் வங்கிக் கடன் கேட்டபோது அங்கே ஒழுக்கமில்லாதவர்களுக்கு (low morale) கடன் கொடுப்பதில்லையென்றொரு சட்டமிருந்ததாம். அதனைத் திருத்திய பின்னரே அவர்களுக்குக் கடன் கிடைத்ததாம். கேரளத்தில் எப்படி எயிட்ஸ் கட்டுக்குள் இருக்கிறதென்று தெரியவில்லை. அங்கே விபச்சாரம் இருந்தாலும் எயிட்ஸ் பரவும் வீதம் குறைவு. கல்விக்கும் இதற்கும் சம்பந்தமிருக்கலாம், தெரியவில்லை.

விபச்சாரம் என்பதை சட்டபூர்வமாக்குவதா (legalization) அல்லது அதற்கான விதிகளைத் தளர்த்துவதா (deregulation) என்ற குழப்பந்தான் நிறைய நாடுகளில் நிலவுகிறது. சட்டம், சமயம் போன்றவை எந்தளவுக்கு இதனை அமுக்கி வைத்திருக்கின்றனவோ அந்தளவுக்கு இவை வேறு வழிகளில் விரிவடையவும், குடிமக்களுக்கு ஆபத்தானதாகவும் மாற சாத்தியங்கள் அதிகம். நோய் பரவலுக்கான முக்கிய காரணம் இவ்விலைமாதருக்குப் போதிய பாதுகாப்பில்லை. இவர்கள் தாக்குதலுக்குள்ளாவதற்குக் காரணம் இவர்களிடம் போதிய வலிமை (மனோ, குழு, சட்டரீதியான) இல்லாமையே. பெண்களை மேலும் வலிமை படைத்தோராக்குவதன் மூலம் நோய்ப்பரவலைத் தடுக்க முடியும். இவர்கள் தங்களுக்குள்ளாகவே ஒரு குழுவாகச் செயல்படவும், தமக்கான ஒழுக்க விதிகளை ஏற்படுத்திக் கொள்ளவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும் அனுமதிக்கப் படவேண்டும்.

தேவை இருக்கும் வரை இத்தொழில் இருக்கவே செய்யும். சமயங்களோ அல்லது சட்டமோ இதனை ஒழிக்க முடியாது. ஆனால் மக்களிடையே நோய் பரவாமல் காக்கப் படவேண்டியது அவசியம். அதற்கு இந்தத் திட்டம் உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்."

இவ்வாறு முடிந்தது அவருடனான சந்திப்பு. மக்களின் பங்களிப்பு நிறைய இருக்கும் என எதிர்பார்க்கிறார். தற்போதைக்குத் தமிழ்நாட்டில் ஏதும் செய்வதாகத் திட்டமில்லையாம். முதல் கட்டமாக ராஜமுந்திரியில் தொடங்கப்படும் திட்டந்தான் இதுவரைக்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். அவரது துறையில் இது சம்பந்தமான கூட்டங்களில் வந்து கலந்து கொள்ள வரவேற்றார். நன்றியுடன் விடை பெற்றேன்.

0 comments: