போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 3

போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 1
போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 2

அருந்ததி ராயின் பேச்சிலிருந்து:

3. அடக்குமுறைகள்
மக்களின் உரிமைப் போராட்டங்கள் சந்திக்கும் மூன்றாவது சவாலைப் பற்றி இப்போது பார்ப்போம். அடக்குமுறை அரசாங்கங்களுக்கும் போராட்டக்குழுக்களுக்கும் ஏற்படும் நேரடி மோதல்கள். இவை மக்கள் சக்திக்கும் பேரரசின் சக்திக்குமிடையேயான மோதல்கள். குடிமக்களின் எதிர்ப்புகள் ஒருவேளை (பேரரசுக்கு)ஆபத்தாகலாம் என்ற ஒரு சிறு அறிகுறி தென்பட்டாலும் போதும், அந்தப் போராட்டத்தின் மீதான அடக்குமுறை இரக்கமற்றதாயிருக்கும். சியாட்டில், மயாமி, கோதென்பர்க், ஜெனோவா ஆகிய இடங்களில் நடந்த ஊர்வலங்களிலெல்லாம் இத்தகைய ஒடுக்குமுறையை நாம் கண்டோம். அமெரிக்காவில் நீங்கள் வைத்திருக்கும் அமெரிக்க நாட்டுப்பற்றாளர் சட்டமானது உலக நாடுகளுக்கெல்லாம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கான ஒரு முன்னோடியாக இருக்கிறது. சுதந்திரத்தைக் காக்கின்ற பெயரிலே சுதந்திரம் ஒடுக்கப் படுகிறது. நாம் ஒரு முறை சுதந்திரத்தை ஒப்புவித்துவிட்டால் அதை மீளப் பெறுவதற்கு ஒரு புரட்சி செய்ய வேண்டியிருக்கும்.

சில அரசாங்கங்களுக்குச் சுதந்திரத்தை ஒடுக்குவதில் பெரும் அனுபவங்கள் இருக்கும், இருப்பினும் அவ்வரசுகள் நறுமணத்துடனேயே திகழும். இந்த ஆட்டத்திலே பழங்கையான இந்தியா இவ்வழிக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கடந்த ஆண்டுகளில் அது எக்கச்சக்கமான சட்டங்களை உண்டாக்கி அவற்றின் மூலம் எந்தவொரு ஆளையும் பயங்கரவாதி, கிளர்ச்சிக்காரர், போராளி என்று அழைத்துக்கொள்ள முடியும். இப்போது எங்களிடம் ஆயுதப்படை சிறப்பதிகாரச் சட்டம், பொதுப் பாதுகாப்புச் சட்டம், சிறப்புப் பகுதிகள் பாதுகாப்புச் சட்டம், குழுப்போராளிகள் சட்டம், பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைப் பகுதிகள் சட்டம் (இது ஏற்கெனவே காலாவதியான சட்டமாக இருந்தாலும் இதன்கீழ் மக்கள் இன்னும் வழக்குகளை எதிர்கொள்கிறார்கள்), மற்றும் தற்போது வந்திருக்கும் பொடா சட்டம், ஆகியவை இருக்கின்றன. இவை மாற்றுக் கருத்தைக் கொண்டவர்களுக்கான பல்திற உயிர்க்கொல்லி மருந்துகளைப் போன்றவை.

இதற்கு அப்பாலும் சில முறைகள் இருக்கின்றன. அவை நீதிமன்றங்களிலிருந்து தீர்ப்பாகக் கிடைக்கும். அவையாவன, பேச்சுச் சுதந்திரத்தை, அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை, வாழ்க்கையைப் பிழைப்பை நடத்தும் உரிமையை நறுக்குதலாகும். நீதிமன்றங்கள் எங்கள் வாழ்வை குறுமேலாண்மை செய்துவருகின்றன, அத்தகைய நீதிமன்றங்களை விமர்சிப்பது தண்டனைக்குரிய குற்றம்.

திரும்பவும் இந்த பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு வருவோம். போன பத்தாண்டுகளில் மட்டும் காவல் துறையினராலும், பாதுகாப்புப் படையினராலும் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில். ஆந்திர மாநிலத்தில் (இம்மாநிலம் இந்தியாவில் உலகமயமாக்கலின் கவர்ச்சிக்கன்னி) ஒவ்வோராண்டும் "திடீர்த்தாக்குதல்களில்" சராசரியாக 200 "தீவிரவாதிகள்" கொல்லப் படுகிறார்கள். பம்பாய்க் காவல் துறை "துப்பாக்கிச்சூட்டில்" எத்தனை "குழுப்போராளிகளைக்" கொன்றோம் என்று பெருமை பேசுகிறது. கிட்டத்தட்ட போர்ச்சூழல் நிலவும் காஷ்மீரில் 1989ம் வருடத்திலிருந்து 80,000 பேர் கொல்லப் பட்டிருப்பதாகக் கணக்கு. ஆயிரக்கணக்கில் சும்மா "காணாமல்" போய்விட்டார்கள். வடகிழக்குப் பகுதியிலும் சூழ்நிலை இப்படித்தான். அண்மையக் காலங்களில் இந்தியக் காவல்துறை ஆயுதமேந்தாத பொதுமக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. இம்மக்களில் பெரும்பாலானோர் தலித்துகளும், பழங்குடியினருமாவர். காவலர்களுக்குப் பிடித்தமான முறை என்னவென்றால் முதலில் அவர்களைக் கொன்றுவிட்டுப் பின்னர் அவர்களைத் தீவிரவாதிகள் என்று அழைப்பது.

இந்தியா மட்டுந்தான் இப்படியென்றில்லை. பொலிவியா, சிலி, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் இது நடப்பதைக் காண்கின்றோம். தாராளமய காலத்தில் ஏழ்மை என்பது ஒரு குற்றம். ஏழ்மையை எதிர்த்துப் போராடுவது பயங்கரவாதம் என்று வர்ணிக்கப் படுகிறது. இந்தியாவில் பொடா, சமயங்களில் Production of Terrorism Act என்றுதான் அழைக்கப்படுகிறது. அந்தச் சட்டமானது ஒரு அல் கெய்தா செயலாளியிலிருந்து ஒரு சிடுமூஞ்சி பஸ் கண்டக்டர் வரை அனைவரையும் பிடித்துப் போடுவதற்கான சட்டம். எல்லா பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களையும் போலவே, பொடாவின் மேதைமை என்னவென்றால் இதை அரசாங்கம் விரும்பியபடியெல்லாம் பயன்படுத்திக் கொள்ளலாம். 2002ல் குஜராத்தில் மாநில அரசின் உதவியோடு நிகழ்த்தப்பட்ட திட்டங்களைத் (இத்திட்டத்தின் வாயிலாக இந்துக் காலிகளால் 2000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதும், 150,000 பேர் இல்லங்களைத் துறந்ததும் நிகழ்ந்தது.) தொடர்ந்து 287 பேர் பொடாவின் மூலம் கைது செய்யப் பட்டார்கள். இதில் 286 பேர் முஸ்லிம்கள், ஒருவர் சீக்கியர். பொடாவில் காவல் நிலையத்தில் கறக்கப்படும் வாக்குமூலங்கள் சாட்சியங்களாகக் கொள்ளப்படும். இதன் விளைவாக விசாரணையைச் சித்திரவதை இடப்பெயர்ச்சி செய்தது. இந்தியாவில்தான் உலகிலேயே அதிகமான சித்திரவதையும் சிறைச் சாவுகளும் நிகழ்கின்றன என்று தெற்காசிய மனித உரிமைப் பதிவு மையம் சொல்கிறது. அரசாங்க ஆவணங்கள் 2002ல் மட்டும், நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தோரில் 1307 மரணங்களைப் பதிவு செய்திருக்கிறது.

சில மாதங்களுக்கு முன்னர் பொடா தீர்ப்பாயத்தில் நானொரு உறுப்பினராக இருந்தேன். எங்களது அருமையான மக்களாட்சியில் என்ன நடக்கிறதென்பதை அந்த இரண்டு நாட்களில் கிடைத்த கிளுகிளுப்பூட்டும் வாக்குமூலங்களிலிருந்து தெரிந்து கொண்டேன். அதில் எல்லாமே அடக்கம். அதாவது, சிறுநீரைக் குடிக்கச் சொல்வது, ஆடை களைவது, தாழ்மையடையச் செய்வது, மின்னதிர்ச்சி கொடுப்பது, சிகரெட்டால் சுடுவது, ஆசனவாய்க்குள் இரும்புக்கழிகளை விடுவது, அடித்து உதைத்துக் கொல்வது ஆகியவை அடங்கும். பொடா இல்லையென்றால் மொடா அல்லது இதுமாதிரி ஏதாவது ஒன்று இருக்கும்.

வன்முறையற்ற முறையில் காட்டப்படும் எதிர்ப்புகளுக்கான வாசல் மூடப்பட்டு, மனித உரிமைகளுக்காகப் போராடும் ஒவ்வொருவரும் தீவிரவாதியென அழைக்கப்பட்டு இருக்கும் இந்த நிலையில் யாராவது நாட்டின் பெரும்பகுதியில் ஆயுதந்தாங்கிய போராளிகளின்வசம் இருப்பதையும், நிலைமை அந்தந்த மாநிலங்களின் (காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், மத்தியப் பிரதேசத்தின் பெரும்பகுதி, சத்திஸ்கர், ஜார்கண்ட், ஆந்திரப்பிரதேசம்) கையை விட்டுப் போனதையும் குறித்து ஆச்சரியப்படுவார்களா? காஷ்மீரில் எந்தவொரு நிமிடத்திலும் 3000 முதல் 4000 போராளிகள் இயங்குவதாக இந்திய ராணுவம் கணக்கிடுகிறது. இவர்களை அடக்க இந்திய அரசு 500,000 படைவீரர்களை அனுப்புகிறது. தெளிவாக இது எதைச் சொல்கிறதென்றால், தீவிரவாதிகளை ஒடுக்க மட்டுமே இந்தப் படை செல்லவில்லை. அங்கிருக்கும் தாழ்வுபடுத்தப்பட்ட மக்களை, இந்தியப் படையை ஒரு அந்நியப் படையாக நினைக்கும் மகிழ்ச்சியற்ற மக்களையும் சேர்த்து ஒடுக்கவே செல்கிறது.

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமானது அதிகாரிகளுக்கு மட்டுமின்றி குறைந்த அதிகாரம் கொண்ட ராணுவத்தினருக்கும், பொது விதிகளை மீறுவோரை, தாக்கவும் கொல்லவும் அதிகாரம் கொடுக்கிறது. 1958ல் மணிப்பூரின் சில மாவட்டங்களில் மட்டுமே இருந்த அந்தச் சட்டம் இப்போது மாநில முழுமைக்கும், காஷ்மீருக்கும் செல்லுபடியாகும். சித்திரவதை, காணாமல் போதல், நீதிமன்றக் காவலில் சாதல், வன்புணர்ச்சி மற்றும் கடைசியில் தீர்த்துக்கட்டுதல் ஆகியவை குறித்த பதிவுகள் உங்கள் குடலைப் புரட்டவைக்கப் போதும்.

இந்தியாவின் இதயமான ஆந்திரப் பிரதேசத்தில், வாரங்கலில் ஜூலை 28, 2004ம் தேதி, பல்லாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் (ஆந்திரக் காவல்துறையின் குறியான) மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் மக்கள் போர்க் குழு ஒரு கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பொடாவின் கீழ் இந்த மக்கள் அனைவரும் பயங்கரவாதிகள்தான். இவர்களனைவரும் குவாண்டனாமோ சிறையினை ஒத்ததொரு இந்தியச் சிறையிலே அடைக்கப்படுவார்களா? மொத்த வடகிழக்கும், காஷ்மீரும் நொதிக்கின்றன. அரசாங்கம் இத்தனை லட்சம் மக்களை என்ன செய்யப் போகிறது?

(இதன் இறுதிப் பகுதி நாளை)

0 comments: