உண்மை நின்றிட வேண்டும்!

மூடுன ஓட்டுக்குள்ள இருக்கது கதகதப்பாத்தான் இருக்கு. வெளியில நடக்குறது தெரியாம வேலை வேலைன்னு திரியறதும் ஒரு ஓடுதான். அப்புடித்தான் ஓடுது ஓட்டு வாழ்க்கை.

அப்படியிருந்தப்பதான் நேத்து மேடத்தோட செவ்வியை பிபிசில பாத்தேன்.

அம்மா, அய்யா, இத்யாதிகள் எல்லாரும் தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் இருக்கு. ஒலகம்ங்கறது உங்ககிட்ட வேட்டியும் சேலையும் இலவசமா வாங்கிக்கறவங்க மட்டுமில்ல. ஒங்ககிட்ட அரிசிக்குக் கையேந்திக்கிட்டும், ஒங்க தப்பால எரிஞ்சு சாம்பலாப் போன உயிர்களுக்கு நீங்க எறியற தயவுப் பண நன்றிக்குக் கட்டுப்பட்டு அமைதியாப் போற மானஸ்தனுங்க மட்டுமில்ல. ஓட்டு அவங்ககிட்ட இருந்தாலும் ஒலகம் வெளியிலயும் இருக்கு. வீட்டுக் கூரை மேல இருந்த மல்லாத்தி வச்ச கொடை வழியா வந்த 48 சேனல் காட்சி ஒங்களுக்கு மட்டுமிருந்தது அந்தக் காலம். திரைகடலோடுவது மேட்டுக்குடி என்பதும் அந்தக் காலம். இன்றைக்கு எங்களுக்கும் தெரியும். கேக்குறதுக்கெல்லாம் not at all அப்படின்னு யாரு சொல்லுவா, you must remember, you did not read அப்படின்னு எப்படியாபட்ட மனசுலேருந்து வருமின்னு எங்களுக்கும் தெரியும்.

அரசியல்வாதி, முதல்வர், பிரதமர்...நீங்க எல்லாரும் எங்கள் எஜமானர்கள் இல்லை. எங்களுக்குத் தொண்டு செய்றவங்கன்னு தெரிஞ்சுக்கங்க. நாங்க கேள்வி கேட்டா நீங்க பதில் சொல்லணும். புஷ்ஷும் கெர்ரியும் சொல்றாங்க, ப்ளேயர் சொல்றாரு. பொய்யா மெய்யான்னு ஒங்க அகத்தின் அழகை முகத்திலும், உங்க வெத்து வார்த்தையைத் தாண்டி உண்மையையும் எங்க அறிவைக் கொண்டு நாங்க கண்டுக்குவோம். நீங்க ஒவ்வொருத்தரா வந்து பதில் சொல்லணும். அமெரிக்கத் தேர்தல் ரெண்டாம் கட்ட விவாதத்துல மக்கள் உக்காந்து கேட்ட மாதிரி எல்லாக் கட்சி/கட்சியில்லாத மக்களெல்லாம் ஒக்காந்து, ஒங்கள நடுவுல நிக்க வச்சு கேள்வி கேக்கணும். இது அரசியல்வாதிங்க மட்டுமில்ல, மக்கள் பணம் எங்கெல்லாம் புரளுதோ டாக்டரு, ஆராச்சிக்காரரு, எஞ்சினியரு, போலீசு, கலெக்டராபீஸ் கிளார்க்கு, தனியாரு, கெவுர்மண்டு எல்லாருக்கும் பொருந்தணும். ஒவ்வொரு டிவிகாரங்களும் வாராவாரம் இந்த மாதிரி ஆட்களை, ஒரு எம்.எல்.ஏ, எம்.பியை மக்கள் கேள்வி கேக்குறதைக் காட்டணும். சினிமாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் ஒதுக்குற நேரத்தை இதுக்கு ஒதுக்கணும். டிவி ஸ்டேஷனுக்குள்ள ஒரு ரூமுக்குள்ள ஒக்கார வச்சு ஒண்டிக்கு ஒண்டி கேக்கக் கூடாது, பொது எடத்துல பொது மக்களுக்கு முன்னாடி ஒக்கார வச்சுக் கேக்கணும். அப்பதான் ஒரு பொறுப்பான, வெளிப்படையான, நேர்மைக்குக் கட்டுப்பட்ட அமைப்பை மீட்டெடுக்க முடியும்.

இப்படிப்பட்ட வெளிப்படையான ஜனநாயக அமைப்பு புடிக்கலை, வசதியான இருட்டடிப்பு ஜனநாயகந்தான் புடிச்சிருக்கு அப்படிங்கறவங்கதான் இந்த மாதிரிப் பேட்டிகளுக்கெல்லாம் பயப்படணும், அய்யோ என்னமா கொடையுறான்னு பாவப் படணும். யாரும் மகானில்லை. மாசுள்ளவர்கள்தான். அதைப் பரிசீலிக்கறதுலயும் திருத்திக்கிறதுலயுந்தான் அகவளர்ச்சி இருக்கே தவிர, நான் இரும்புக்கழியை நட்டு வச்சிருக்கேன் அது வேர்விட்டு வளர்ந்து பூப்பூக்கும்னா, இதுக்கு மேலயும் நாங்க நம்பத் தயாரில்லை.

0 comments: