உங்கள் வாக்கு யாருக்கு?


தமிழ்மணத்துல ஓட்டுப் போடலைன்னா இப்பவே போட்டு நல்ல எழுத்தை ஊக்குவிங்க!
சுட்டி

மின்னஞ்சலில் வந்தது - சென்னைக் காரர்கள் கவனிக்க!

கீழே இருப்பதை சென்னைக் காரர்கள் செய்து பார்க்கலாம், மற்றவர்கள் பரப்பலாம்!

----

அவர்கள் பார்வையற்ற மாணவ சகோதரர்கள். Visually Challenged Students. இவர்கள் தேர்வு எழுத பார்வையுள்ள யாரேனும் படித்துக் காட்ட வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஞாயிறும் டி.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவனில் இவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. சென்ற நவம்பர் ஒன்றாம்தேதி வந்திருந்த 180க்கும் மேற்பட்ட மாணவர்களில் கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்டவர்கள் படித்துக் காட்ட தோழமை இல்லாததால் தேர்வில் கலந்து கொள்ள இயலாமல் வெளியிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.

நீங்களோ, உங்கள் நண்பர்களோ முடிந்தால் உதவலாமே...

Hi all,

Every Sunday at YGP audiotorium of Padma Seshadri Bala Bavan, T Nagar, Chennai, reading session for Visually challenged students is being conducted. All you need to do is, just drop in at the above said venue and read out the study material brought in by the students. Though the major requirement is for the Tamil reader, we do require English readers to an extent.

The session would start exactly at 10.00 am on every Sunday and ends up at 12.30 pm noon.

FAQs:

1. What if I am not familier with Tamil language?
You can still volunteer yourself to assist students on English.

2. Do I need to bring text books along with me?
No, the students will bring their own materials.

3. Do I need to be a member of any Charitable trusts or clubs to volunteer to this activity?
No, not at all required.

4. How many students will be assigned to a reader?
It depends upon the batch those students belong to. It might vary from 1 to 5 or so.

5.If I am a new comer, Do I need to register to volunteer?
No, not necessary.

6. Can I bring my friends along with me who could also volunteer?
Yes, you can bring frines along with you.

7. Will I be paid any sum for this activity?
No, you wont be paid. Its an 100% self volunteers program.

8. Which organisation/ trust actually run this?
Sathya Sai samiti, Nungambakkam, Chennai.

9. Bus route?
Valluvarkottam bus stop. [47,147,17,147, 10,9 bus series]

10. Venue: Padma Seshadri Bala Bavan, YGP Auditorium, Thirumalai Pillai Road, Chennai 17.

11. Landmark: Vidhyodhaya School, Thirumalai Pillai Road

எனதருமை இந்தியாவே, உன்னை ஆளப்போவது யார்?


//bombing of civilian areas cannot be contemplated by any civilised society.// - N. Ram, The Hindu.

மக்கள் வாழும் பகுதிகள் மீது குண்டு வீசுவதை நாகரீகமுள்ள எந்தச் சமூகமும் எண்ணிப் பார்க்கவியலாது - இந்து என். ராம்

இந்துப் பத்திரிகை மீதும், அதன் ஆசிரியர் திரு என். ராம் அவர்கள் மீதும் பல பழிச் சொற்கள் வீசப்படுகின்றன. நேற்று வந்திருக்கும் அவரது தலையங்கத்தைப் படிப்பவர்களுக்கு அவரது மனிதாபிமானமும், சமாதானத்தின் மேலும், துயரப்படும் மக்கள் மற்றும் போராளிகள் மீது அவருக்குள்ள அன்பும் விளங்கும். இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் நக்சலைட்டுகளின் ஆதிக்கமும் வன்முறையும் வளர்ந்து வருகிறது என்பது நாமறிந்தது. சத்திஸ்கரில் வைத்து இந்திய இராணுவ உலங்குவானூர்தி மீது நக்சலைட்டுகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலையடுத்து, இதனைப் போன்ற தாக்குதல் இனி நடந்தால் "தற்காப்புக்காக" எதிர்த் தாக்குதலை நடத்தலாமா என்று கேட்டது வான்படை. இதற்குப் பதிலளிக்கும்விதத்தில் பேசிய ப.சிதம்பரம், அந்த அனுமதி இருக்கிறதா இல்லையா என்பதற்குப் பதில், வான்படை தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்று கூறிவிட்டார். (அப்போது, நக்சலைட்டுகளும் ஏழைகளுக்காகத்தான் பாடுபடுகிறீர்கள், அரசாங்கமும் ஏழைகளுக்காகத்தான் பாடுபடுகிறது, வாருங்கள் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து பாடுபடுவோம் என்று சொல்லியிருப்பது தனி நகைச்சுவை!). நிற்க. இந்த நிலையில்தான் வெளிவந்திருக்கிறது இந்து ராமின் தலையங்கம். அதில் நக்சலைட்டுகளுடன் கடினப் போக்கைக் கடைபிடிக்கக் கூடாதென்றும், அவர்களுடைய சமூகத் தேவைகளை நிவர்த்திப்பது, பேச்சுவார்த்தை நடத்துவது, அவர்களது வன்முறைக்கான காரணங்களை ஆராய்ந்து அவற்றை அரசாங்கம் களைவது போன்ற முயற்சிகளில்தான் ஈடுபடவேண்டுமே தவிர, அவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. அதிலும் குறிப்பாக வான் தாக்குதல் என்பது நாகரீகமுடைய சமூகத்தின் செயலன்று (bombing of civilian areas cannot be contemplated by any civilised society.) என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் ஈழத்தில் நிகழ்ந்த இனப்போராட்டத்துக்கும் இதே அளவுகோலைக் கொண்டுவருவாரா? கண்ணை மூடிக்கொண்டு இலங்கையரசாங்கம் வீசிய குண்டுகளெல்லாம் எங்கே வீழ்ந்து வெடித்தன என்பதை இவர் காணவில்லையா? தமிழர்களின் மீது ஏவப்பட்ட வான் தாக்குதல்களும், அரச வன்முறைகளும் நியாயமாகத் தெரிகின்ற இவருக்கு, நக்சலைட்டுகளின் மீது இரக்கம் கொப்பளிக்கக் காரணம் என்ன என்று யோசிக்கிறீர்களா?

செஞ்சீனத்தின் 60வது பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு தியானென்மென் சதுக்கத்துக்கு அழைக்கப்பட்ட பத்திரிகையாளர்களில் இவரும் ஒருவர். மற்ற பத்திரிகைகள் சீனாவின் மனித உரிமைகளைக் கண்டித்தும், திபெத் மீதான ஆக்கிரமிப்பைக் கண்டித்தும், மாசேதுங்கின் ஆட்சியின்போது கொல்லப்பட்ட பல இலட்சக் கணக்கான மக்களைக் குறித்தும் எழுதிக் கொண்டிருக்க, இந்து ராம் அவர்கள் செஞ்சீனத்தின் அருமைபெருமைகளை எழுதிக் குவித்தார். நக்சலைட்டுகளுக்கும் மாசேதுங்-சீனாவுக்குமிருக்கும் தொடர்புகள் வெள்ளிடைமலை. அதேபோல இலங்கைக்கும், சீனாவுக்கும் இருக்கும் உறவும் நமக்குத் தெரியும். இலங்கையரசாங்கம் அய்யா இராமுக்குத் தரும் ராஜாங்க மரியாதையும், விருதுகளும் நமக்குத் தெரியும். ஆக, அய்யா அவர்கள் செஞ்சீனத்தின் ஒரு சிறப்புப் பிரதிநிதியாக இந்தப் பிராந்தியத்திலே வலம் வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ளக் கடினமாகவா இருக்கிறது? அப்படியென்றால், இந்தியாவுக்குச் சீனாவினால் நிகழ்ந்துவரும் நெருக்கடிகள் (string of pearls முதலானவை) ராமுக்குத் தெரியாமல் இருக்குமா? இந்தியாவில் சீனாவின் முதலீடுகள் உட்பட, இந்தியாவைச் சுற்றியிருக்கும் நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் பரவுதல் வரை எல்லா வகைகளிலும் இந்தியாவானது சீனாவுக்கு மண்டியிடவேண்டிய நிலை வரப்போகிறது என்பது பலரின் கவலையாக இருக்கிறது. இதெல்லாம் ராமுக்குத் தெரியாதா? அப்படித் தெரிந்திருந்தும் இந்தியாவின் நலன்களை சீனாவுக்கு முன்னர் பலியிடத் திட்டமிட்டிருக்கிறாரா? இந்தியர்கள் யோசிக்க வேண்டும். ஈழப் போரினால் பாகிஸ்தானும், சீனாவும் அதிகாரமிக்கவர்களாக ஆகியிருக்கிறார்களே தவிர, இந்தியா தனது மதிப்பை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இழந்திருக்கிறது. இலங்கையே இந்தியாவை மதிப்பதில்லையே. இந்த வெளியுறவுக் குளறுபடிக்கு யார் யாரெல்லாம் காரணமென்று பட்டியலிட்டால் அதில் இந்து ராம் இருப்பாரா மாட்டாரா?

இன்னொருபுறமாகப் பார்த்தால், அண்மையில் அமெரிக்காவின் சில நகர்வுகள் சீனாவுடன் இணக்கப்பாட்டினைக் கடைபிடிக்க விரும்புவதாகத் தெரிகிறது. நியூயார்க்கின் Empire State Building கோபுரமானது சீனாவின் 60வது விழாவுக்கு சிவப்பும், தங்க நிறங்களாலுமான விளக்குகளால் சொலித்தது. இது அமெரிக்காவுக்குப் புதியது. வெளியே திபெத் ஆதரவாளர்கள் போராடினார்கள். நேற்று வானொலியில், மனித உரிமை என்பது அமெரிக்காவுக்கு, பொருளாதாரத்துக்கு அடுத்துதான் என்ற கருத்து உருவாகிவருகிறது என்று ஒருவர் பேசினார். அதனால்தான் சீனாவுடன் கைகோர்க்கத் துணிகிறது அமெரிக்கா. சீனாவின் வளர்ந்துவரும் பொருளாதார பலத்துக்கு முன் அமெரிக்கா மோதலில் இறங்கத் துணியவில்லை என்பது உண்மை. ஆக, சீன-அமெரிக்கக் கூட்டுறவு எந்தெந்த வகைகளிலெல்லாம் தமிழர்களை அணுகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கூட்டணிக்கிடையில் இந்து ராம் போன்றவர்கள் என்ன செய்வார்கள், இலங்கை என்ன செய்யும் என்பதையும் யோசிக்க வேண்டும். இந்தக் குழப்பத்தில் இந்தியாவின் நலன்களை யார் யாரெல்லாம் சூறையாடுவார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும். சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் தன்னைத் திறந்துவிட்டுவிட்டு, நாட்டின் சிறிய விகித மக்களை உயர்த்தி, ஏனையோரை நசுக்கியழிக்குமா என்பதும் கவலைக்குரியது. அப்போது அமெரிக்காவின் மக்களாட்சித் தத்துவங்கள் இந்தியாவுக்குள் மாயமாகிப்போய், சீனாவின் போலி சோசலிசத்தின் முகமூடிகளையணிந்துகொண்டு இங்கே ஆட்சி செய்யப் போவது எது என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியவேண்டுமா?

திசைநாயகம்: இலங்கை அரசின் தண்டனையும், அனைத்துலகத்தின் விருதுகளும்


J.S. திசைநாயகம் ஒரு தமிழ்ப் பத்திரிகையாளர். இலங்கையில் தமிழர்களின் மீது அரசாங்கம் நிகழ்த்திய வன்கொடுமைகளைப் பற்றி எழுதியமைக்காக மார்ச் 2008ல் கைது செய்யப்பட்டார். சுமார் ஆறு மாதங்களுக்கும் மேல் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்படாமல் பயங்கரவாதத் தடை சட்டத்தின் மூலம் கடுமையான சித்திரவதைகளுடன் "விசாரிக்கப்பட்டார்". இனப் பாகுபாட்டை வளர்த்ததற்காகவும், தீவிரவாதக் குழுக்களுக்கு உதவியமைக்காகவும் என்று குற்றம் சுமத்தப்பட்டு ஆகஸ்டு 31, 2009ல் அவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பாகி, தற்போது சிறையில் இருக்கிறார். தமிழர்களின் நியாயமான குறைகளைக் குறித்தும், அந்நாட்டு அரசாங்கத்தின் குற்றங்களைக் குறித்தும் துணிச்சலோடும், ஊடக நெறிகளுக்கு ஏற்பவும் எழுதியமைக்காகவே அவருக்கு இந்தத் தண்டனை. இதற்கும் வ.உ.சிதம்பரனாருக்கு ஆங்கிலேய அரசு கொடுத்த தண்டனைக்கும் அதிக வித்தியாசமில்லை. இந்தத் தண்டனையை எதிர்த்து அனைத்துலகப் பத்திரிகைகளும், ஊடக அமைப்புக்களும் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கின்றன.
"ஒடுக்கப்பட்ட ஊடகத்தின் சின்னம்" என்று ஒபாமாவினால் வர்ணிக்கப்பட்டவர் திசைநாயகம். தமிழர்களை இனப்படுகொலைக்குள்ளாக்கி சர்வதேசத்தின் அதிருப்தியையும், புறக்கணிப்பையும் சம்பாதித்து வைத்திருக்கும் இலங்கை அரசாங்கத்தின் இன்னொரு கோர முகமே திசைநாயகத்துக்கு வழங்கப்பட்ட தண்டனை. இது எக்காலத்திலும் தமிழர்களுக்கான நியாயமான அரசியல், சமூக சுதந்திரத்தை இலங்கை அரசு வழங்கப்போவதில்லை என்பதை இன்னொரு முறை உறுதி செய்கிறது. இவ்வகையான உதாரணங்களைக் கொண்டு அனைத்துலக நாடுகள் இலங்கையைத் தனிமைப்படுத்த முனைகின்றன. இத்தகைய தனிமைப்படுத்தலை ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது தற்போது வெளியாகியிருக்கும் ஒரு விருது அறிவிப்பு.

"துணிச்சலான, நெறியான பத்திரிகையாளரு"க்கான விருதாகிய பீட்டர் மேக்லர் விருதினைப் (Peter Mackler Award for Courageous and Ethical Journalism) பெறும் முதலாவது நபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் திசைநாயகம். பீட்டர் மேக்லர் என்பவர் AFP செய்தி நிறுவனத்தில் கடமையாற்றியவர். அந்நிறுவனத்தின் ஆங்கிலச் செய்திப் பிரிவை உயர்த்தியதில் பெரும்பங்கு வகித்தவர். மேலும் போர்கள், தேர்தல்கள் போன்ற நிகழ்வுகளைக் குறித்த செய்திகளை வெளியிட்டவர். அவரது பெயரால் சென்ற ஆண்டில் Reporters Without Borders (US Branch) மற்றும் Global Media Forum ஆகியவற்றால் நிறுவப்பட்டிருக்கும் இவ்விருதினைப் பெறும் முதலாமவர் திசைநாயகம். அவர் சிறையிலிருப்பதால் அவரது மனைவி நேற்று அமெரிக்கத் தலைநகரில் நடந்த நிகழ்வொன்றில் இவ்விருதைப் பெற்றுக் கொண்டார். திசைநாயகத்துக்கு ஏற்கெனவே 2009ஆம் ஆண்டின் அனைத்துலக ஊடகச் சுதந்திர விருது (2009 International Press Freedom Award) வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இலங்கையில் காலங்காலமாக நிலவிவரும் தமிழர்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளைக் கண்டும் காணாமல் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கு மத்தியில், இலங்கை அரசு விட்டெறியும் விருதுகளுக்கு நாக்கைத் தொங்கப்போட்டிருக்கும் ஊடகங்களுக்கு மத்தியில், இலங்கை அரசாங்கம் தரும் செய்திகளை கர்ம சிரத்தையுடன் அப்படியே வெட்டி ஒட்டி வெளியிடும் ஊடக தர்மகர்த்தாக்களுக்கு மத்தியில், மானத்தோடும், துணிச்சலோடும், நெறியோடும் வாழும் திசைநாயகம் போன்றவர்களைக் கைகூப்பி வணங்குகிறேன். அனைத்துலக அழுத்தங்களுக்குப் பணிந்து இலங்கை அரசு அவரை விடுதலை செய்யும் நாளை எதிர்நோக்குவோம்.

தமிழ்ப் பகுதிகளுக்குள் சிங்களக் கைதிகளை விடுவித்தல்

இலங்கையில் தெற்கிலிருக்கும் சுமார் 30,000 சிறைக்கைதிகளை விடுவித்து, வடக்கில் தமிழர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அனுப்பி அப்பகுதியை "மேம்படுத்த" சிங்கள அரசு திட்டமிட்டிருக்கிறதாம். இச்செய்தியில் வரும் " Most of them are able bodied people with various skills, he added."
1. சிங்களச் சிறைக்கைதிகள் "உடற்கட்டமைப்போடு" இருப்பது சாத்தியமாம். ஆனால் வதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் சத்துணவுக் குறைவால் அவதிப்படலாமாம். இவர்களுள் 5 வயதுக்குட்பட்ட 36,000 குழந்தைகளும் அடக்கம்.

2. சிறைக்கைதிகளும் மனிதர்கள்தாம், அவர்களை விடுவிப்பதிலோ, அவர்களும் திருந்தி வாழவேண்டும் என்பதிலோ மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் சிங்கள அரசின் ஆசிர்வாதத்தோடும், இனவாதக் கற்பிதத்தோடும் தமிழ்ப் பகுதிகளுக்குள் வந்து குடியேறப்போகும் "சிங்கள"க் கைதிகளால் தமிழர்களுக்கு ஆபத்துக்கள் அதிகம். அப்பகுதிகளில் வன்முறைகள் அன்றாடப் பிழைப்பாகிவிடும். சிங்களமயப்படுத்தலும் அரங்கேறும்.

3. தொடர்ந்து சிறையில் அடைபட்டிருக்கும் மக்கள் தம் கைவினைகளை மறந்துபோவார்கள். விவசாயமாகட்டும், வீட்டு வேலைகளாகட்டும், இதர கைத்தொழில்களாகட்டும், அவர்கள் காலங்காலமாக, பரம்பரை பரம்பரையாகக் கற்றுவந்த அத்தனைத் திறன்களும் அடைத்து வைத்தலில் அழிந்து போகும். சிறைக்கைதிகளின் "திறனை"ப் பயன்படுத்தத் துடிக்கும் சிங்கள அரசு, தமிழர்களின் திறன்களை மறக்கடித்து அழிக்க நினைப்பது இன்னொரு இனவதை.

4. வதை முகாம்களில் இருக்கும் 3 லட்சம் தமிழர்களை விடுவித்தால் அவர்களே தம் மீள் கட்டமைப்பைப் பார்த்துக் கொள்வார்கள்.

சிலம்பம் ஜோதி கண்ணன்



சிறிய வயதில் சில வாரங்கள் அறிமுகம் பெற்ற சிலம்பத்தை மீண்டும் ஒரு முறை தொட்டுப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. பேரவையில் திருவிழாவுக்கு வந்திருந்த ஆசான் ஜோதி கண்ணன் அவர்கள் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறார்கள். ஒரு வாரம் அவர்களோடு இருக்கும் வாய்ப்பு எனக்கும் எங்கள் ஊர் நண்பர்களுக்கும் கிடைத்திருக்கிறது.

சிலம்பம் என்ற அரிய கலையின் பெருமையை இன்றளவும் காத்து வருபவர்களில் இவர் முக்கியமானவர். இளைஞராயிருந்தபோதும் முதிர்ச்சியடைந்த கலைஞர் இவர். மிகுந்த நம்பிக்கையுடன் பெருஞ்சாதனைகளை நிகழ்த்தும் ஆர்வத்தோடு இயங்கும் இவரைப் பார்க்கையில் நமக்கும் வேகம் பொங்குகிறது. இவரைப் போன்றவர்களை அமெரிக்க மண்ணுக்கு அறிமுகப்படுத்திய பேரவைக்கு நன்றி!

வன்னி இனவழிப்பில் தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் - சாட்சியின் குறிப்புகள்

தொண்டு நிறுவனமொன்றுக்குப் பணிபுரிந்தவரிடம் கிடைத்த நேரடித் தகவல்களை இச்செய்தியில் காணலாம்.


மீதமிருக்கும் தமிழர்களைக் காக்க உடனே மின்னஞ்சல் அனுப்புங்கள், இங்கே சென்று:

நன்றி!

சாட்சிகளைக் காப்பாற்ற உடனே கையெழுத்துப் போடுங்கள்!

 
இனப்படுகொலையின் கோர முகத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகளாக இருப்பவர்கள் இந்த மூன்று மருத்துவர்களும். பயங்கரவாதச் சட்டத்தில் அவர்களைத் தடுத்து வைத்திருக்கிறது சிறீலங்கா அரசு. அவர்களது பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களை விடுவிக்குமாறு அம்னெஸ்டி இண்டர்நேஷனல் போன்ற அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. கீழுள்ள பக்கத்திற்குச் சென்று "Take Action Now" என்ற பொத்தானை அழுத்தி இந்த மனுவை அனுப்புங்கள். உங்கள் விபரங்களைப் பதிவு செய்தால் போதும், குறிப்பிட்ட அலுவலர்களுக்கு அந்த இணையத் தளமே அனுப்பிவிடும். மிக்க நன்றி!

PEARL ACTION : http://www.pearlaction.org/action-alerts/2009/aa81.php

பதிவர்களின் கவனம் செல்ல வேண்டிய இடங்கள்!

1. வன்னி அவலங்களை வெளியுலகிற்குச் சொன்ன மூன்று மருத்துவர்களை இலங்கையரசு பிடித்து வைத்துள்ளது. இந்த மூவரும் போரின்போது கொல்லப்பட்ட தமிழ்ப் பொதுமக்களின் எண்ணிக்கையைக் குறித்துப் பொய்யான செய்திகளை வெளியிட்டார்கள் என்று கூறி இவர்களைக் கைது செய்து "விசாரித்து" வருகிறது சிறீலங்கா அரசு. எவ்வித வசதிகளும் அற்ற நிலையிலும் இம்மருத்துவர்கள் வன்னியில் நின்று தங்களாலான அளவுக்கு உயிர்களைக் காப்பாற்றியவர்கள். இவர்களைத் தடுத்து வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம். இவர்களை விடுவிக்குமாறு Reporters without Borders கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து மனுக்களை அனுப்பலாம். அல்லது உங்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்களை அழைத்துப் பேசலாம். விபரங்கள் தெரிந்தவுடன் பகிர்கிறேன்.

2. பிரபாகரனின் மரணச் செய்தியினைச் சுற்றியே தமிழர்கள் தம் கவனத்தை வைத்திருக்க வேண்டும் என இலங்கையரசும், அதன் தோழமை நாடுகளும் விரும்புகின்றன. இதன் காரணம், போரில் நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள், போரியல் குற்றங்கள், சிறீலங்கா அரசு இனிமேல் தமிழர்களைக் காட்டி சர்வதேசத்திடம் பிச்சையெடுக்கப் போடவிருக்கும் நாடகங்கள் அனைத்தின் மீதும் மக்களின் கவனம் திரும்பிவிடக் கூடாது என்பதே. இதனைப் பதிவர்கள் உணர்ந்து, மேற்சொன்ன போரியல் குற்றங்கள், சிறீலங்கா அரசுக்கு என்னவிதமான உதவிகளை யார் செய்யப் போகிறார்கள், ஐ.நா அடுத்து என்ன செய்யப் போகிறது, பல்வேறு நாடுகளில் என்னவிதமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்தே கவனத்தைச் செலுத்த வேண்டும். இதுவே மனிதநேயம் கொண்டவர்கள் செய்ய வேண்டியது. புலியெதிர்ப்பையும், தமிழின எதிர்ப்பையுமே கடமையாகக் கொண்ட சில பழங்கொட்டைப் பதிவர்களும், நீதிமான்களும் பொத்திக் கொண்டுவிட்டனர். அவ்வளவுதான் அவர்களது மனிதவுரிமைப் பற்று! ஒருவேளை மகிந்தவின் லட்டு அவர்கள் வாயிலும் இனித்துக் கிடக்கலாம். கவனத்தைத் திருப்பும் பதிவுகளைப் புறக்கணித்தலே இப்போதைய தேவை.

வெள்ளை மாளிகை முன் தொடர் போராட்டம்


இன்றைய போராட்டம் CNN, FOX முதலான பல செய்தி ஊடகங்களையும் வரவழைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து நாளையும், நாளைய மறுநாளும் அதே இடத்தில் போராட்டம் நடைபெறவிருக்கிறது. விபரங்கள் கீழே. இயன்றவர்கள் தவறாது கலந்துகொள்ளவும்! 

05.12.09 and 05.13.09  Rally at Lafayette Park in front of the White House. Please try to gather by 9 A.M. The rally will be over by 4 P.M.

வாய்ப்பிருந்தால் நாளைக்கு வெள்ளை மாளிகைக்குச் செல்லுங்கள்

மிகக் கொடூரமான இனப்படுகொலை நிகழ்கிறது. பொறுத்திருந்து பார்க்கும் அமெரிக்க அரசின் முகம் அசிங்கமாக இருக்கிறது. "போருக்குப் பின்"னான நடவடிக்கைகள் எப்படி இருக்கவேண்டும் என்று ஆலோசிக்கும் அமெரிக்க நடவடிக்கை வன்மம் நிறைந்ததாகத் தெரிகிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன், தீவிரவாதம் வேறு, விடுதலைப் போராட்டம் என்று முழங்கிய ஹிலரி, ஒபாமாவின் வாய்கள், அரியணையேறியபின் மௌனித்திருக்கின்றன. அமெரிக்காவில் நிகழ்ந்த இது, ஜெயலலிதாவின் வாய்க்கும் நடக்கலாம். ஈழத்தில் நேற்று ஓரிரவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தைத் தாண்டும் என்கிறார்கள். அமெரிக்காவில் இருந்துகொண்டு செய்வதற்கு என்ன இருக்கிறது என்று அயர்ந்து போக வேண்டாம். ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதிநிதிகள் மற்றும் செனட் உறுப்பினர் அலுவலகங்களுக்கு முன் திரளுங்கள். வாஷிங்டன் பகுதியிலிருப்பவர்கள் வெள்ளை மாளிகைக்கு முன் நாளை போராடுகிறார்கள். இயன்றவர்கள் செல்லுங்கள்; கீழே விபரமிருக்கிறது. நான் வாழும் காலத்தில் இப்படியொரு இனப்படுகொலை நடக்கும்போது நான் பார்த்துக்கொண்டு சும்மாயிருந்தேன் என்று நாளைக்கு உங்கள் சந்ததியினருக்கு முன்னும், மனசாட்சிக்கு முன்னும் தலைகுனிய நேராதிருக்கும். எதையேனும் செய்யுங்கள்.

There is an emergency rally organized for tomorrow (05.11.09) at the Lafayette Park in front of the White House. Please try to gather by 9 A.M, Monday (05.11.09).

பெரும் அவலம்

ஒலிப் பதிவின் முடிவில் வரும் நன்றி என்ற சொல்லைக் கேட்டுப் பாருங்கள்.
http://tamilnational.com/news-flash/705-the-evil-of-the-war-more-than-1500-died.html

செய்யலாம்:
ஒபாமாவின் அலுவலகத்தை அழைத்துப் பேசலாம்

Direct Number +1 202 456 1111
Reception +1 202 456 1414

தொலைநகல் அனுப்பி நிறுத்தச் சொல்லலாம்.

White House Fax 202 456 2461
Secretary of State 202 736 4333

தமிழர்களை அழிக்கின்ற இந்திய இராணுவம்

2008இல் சிறிலங்கா இராணுவத்தால் உருவாக்கப்பட்ட 58ம் படையணி வலிந்த தாக்குதல் நடாத்துவதில் சிறப்பு பயிற்சி பெற்ற ஒரு படையணி. இந்த படையணியே பூநகரி, ஆனையிறவு, மற்றும் பரந்தன் ஏ35 பாதையில் புதுக்குடியிருப்புவரை தனது தாக்குதலை நடாத்தி வந்தது. இந்த படை அணி புலிகளின் தொடர் தாக்குதலால் தனது படைத்திறனை சிறுது சிறுதாக இழந்து கொண்டிருந்தது.

ஆனால் அண்மையில் நடைபெற்ற புலிகளின் பாரிய தாக்குதல்களால் இந்த படையணி முற்றாகவே சிதைந்து இதன் பல பிரிவுகளை இணைத்தே தனது தாக்குதலை சிறிலங்கா இராணுவம் நடாத்தி வந்தது. தற்போது இதன் செயற்திறன் முற்றாக புலிகளால் அழிக்கப்பட்டதை அடுத்து இந்திய இராணுவத்தின் சிறப்பு தாக்குதல் படை பிரிவை சேர்ந்த பல படையினர் 58ம் படையணியில் முன்னணி தாக்குதலை நடாத்தும் படையணியாக செயற்படுகின்றனர். சிறீ லங்கா இராணுவத்தின் சீருடையில் புதியரக ஆயுதங்களுடன் இவர்கள் தற்போது செயற்படுவதாக விரக்தி அடைந்த சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஒருவர் தனது தமிழ் நண்பருக்கு இந்த செய்தியை வவுனியாவில் வைத்து கூறியுள்ளார்.

58ம் படையணியை சேர்ந்த இந்த சிப்பாய் ஒரு தொற்று நோய்க்காக வவுனியாவில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் இந்த நேரத்திலேயே இந்த தகவல்களை கசிந்துள்ளார். தமது படையணியில் 58ஆம், 59ஆம் படையணி முற்றாகா சேதமாகி விட்டதாகவும் சிறப்பு தாக்குதல் அணியான 58அம் படைபிரிவில் பல டிவிசன்களில் முற்றாக இந்திய கொமாண்டோக்களும் 59ம் படையணியில் ஆட்பலத்தை நிவர்த்தி செய்யும் வகையில் 50சதவீதமான இந்திய சிப்பாய்கள் இருப்பதாகவும் இவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த இராணுவத்தை வழி நடாத்தும் அதிகாரிகளாக இலங்கை இந்திய ஓப்பந்த காலத்தில் இந்திய இராணுவத்தில் படையாற்றி தற்போது பதவி உயர்வு பெற்ற சில அதிகாரிகள் இருப்பதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.
செய்தி:பாரிஸ் தமிழ்

பொம்பளை மாதிரி அடி!


ஒரு பையன் அழுதால் "பொம்பளை மாதிரி" அழாதே என்கிறோம். "பொம்பளை மாதிரி" என்ற அடைமொழி வலிமையின்மைக்கும், அடிபணிதலுக்கும் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. நான் அண்மைய நாட்களில் கண்ட ஒரு சில விளம்பரத் தட்டிகளில் இதே அடைமொழி பெண்களை வலிவு கொள்ளச் செய்யும் விதங்களில் பயன்படுத்தப்படுகிறது. செரினா வில்லியம்ஸ் ஒரு விளம்பரப் படத்தில், பந்தை விளாசியபடி "Yeah, I hit like a girl" என்கிறார். மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக் குழுக்கள் "Fight like a girl" என்று சட்டைகளை அணிந்துகொள்கின்றன. எந்த அடைமொழி அவர்களை இழிக்கப் பயன்பட்டதோ, அந்த அடைமொழியையே அவர்கள் தமக்குச் சாதகமாகத் திருப்பிக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம். Fight like a girl என்பதைப் படித்த போது என் நினைவிற்கு வந்தவர்கள் பெண் புலிகள்தாம். தமிழ்ப் பெண்களின் வீரம் என்றால் புலியை முறத்தால் அடித்து விரட்டிய பொற்காலத்தோடு போயிற்று என நினைக்கும் அவலத்திலிருந்து தமிழினத்தின் வீர மரபைக் காத்துக் கொண்டிருப்பவர்கள் இந்தப் பெண்கள். தடை செய்திருக்கும் உலக நாடுகள் இவர்கள் மீதான தடையை நீக்க வேண்டும். விடுதலையடைந்த தமிழ் நிலத்தில் வீரத்தின் அடையாளமாக இவர்கள் போற்றப்பட வேண்டும்.

"Global War on Terror" முடிவுக்கு வந்தது!

புஷ் அதிகாரத்தினால் பயன்படுத்தப்பட்டு வந்த Global War on Terror என்ற பதம், ஒபாமா அரசாங்கத்தால் நிராகரிக்கப்படுகிறது. இந்த சொற்றொடரைப் பயன்படுத்தித்தான் ஈழத்தில் விடுதலைப் போராட்டத்தை மகிந்த அரசு நசுக்கி, இனவழிப்பை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவைத் தவிர்த்து, பெரும்பாலான நாடுகள் ஈழத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் போருக்கு இலங்கை அரசுடன் உடன்படாத நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், அமெரிக்க அரசின் இந்த முடிவானது இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடியைத் தரும். அமெரிக்கா தனது ஈராக், ஆப்கானிஸ்தான போர் நடவடிக்கைகளை இனி 'Overseas Contingency Operation' என அழைத்துக் கொள்ளும். மகிந்தவின் போருக்கு அமெரிக்காவின் ஆதரவு குறைகிறதெனக் கொள்ளலாம். மேலும், அமெரிக்காவில் தமிழர்களிடையேயும், அமெரிக்கர்களிடையேயும் பெருகி வரும் ஈழம் குறித்த விழிப்புணர்வும், இங்கு நிகழும் தொடர்ந்த போராட்டங்களும், பரப்புரைகளும் அமெரிக்க அரசாங்கத்தின் இலங்கைக்கான கொள்கைகளை மாற்றவும், ஈழத்துக்கான அங்கீகாரத்தை வழங்கவும் வழி செய்யும் எனத் தோன்றுகிறது. நம்புவோம், செயற்படுவோம்!

ஓரிரு நிமிட உழைப்பால் உங்களாலும் ஈழத்துக்கான விடிவை விரைவில் கொண்டுவர முடியும். கீழுள்ள இணைப்புக்குச் சென்று அங்கிருக்கும் மனுக்களில் சில நிமிடங்கள் செலவிட்டுக் கையெழுத்திட்டால் போதும். இத் தளத்தில் புதிய மனுக்கள் அவ்வப்போது சேர்க்கப்படும். நண்பர்களுக்கும் பரிந்துரைக்கவும், மிக்க நன்றி!
மனுக்களுக்கான சுட்டி:
http://www.tamilnational.com/campaign/sendnow.php

ஈழ விடுதலை அமெரிக்காவையும் காப்பாற்றும்

அதிபர் ஒபாமாவுக்கு இன்றைக்கிருக்கும் பிரச்சினைகள் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி, மக்களைப் பீடித்துவரும் நோய்கள், தொய்ந்துபோகும் அமெரிக்க மனோதிடம் இன்ன மாதிரி நிறைய. இவை அமெரிக்காவுக்கு மட்டுமில்லை, உலகநாடுகள் பலவற்றுக்குமான பிரச்சினைகளாகிவிட்டன. இவற்றுக்கெல்லாம் சுலபமான உடனடி மாற்றுக்கள் எதுவும் ஒபாமாவிடமோ அல்லது மற்ற தலைவர்களிடமோ கைவசமில்லை. ஆனால், உலகெங்கும் பரவிக் கிடக்கும் எழுபது மில்லியன் தமிழர்களிடமும், அவர்களது மூதாதையர்களின் ஞானத் திரட்டிலும் அமெரிக்காவையும், உலகையும் மீட்டெடுக்கும் அற்புதங்கள் மறைந்து கிடக்கின்றன என்பது அனைவருக்கும் தெரியுமா?

உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனங்களில் இன்றைக்கு ரணமாகிக் கிடப்பது ஈழத் தமிழரின் இன்றைய நிலை . தமிழறிவுள்ள அத்தனை மக்களின் மனமும், வாக்கும், செயலும் ஈழத்தின் விடுதலைச் சுற்றியே பின்னிக் கிடக்கின்றன. எத்தனையோ மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொறிஞர்கள், கலைஞர்கள், மொழியார்வலர்கள், சமூகப் போராளிகள் இன்னும் இன்னும் எத்தனையோ விற்பன்னர்கள், திறமைசாலிகள், உயர்கல்வி பெற்றவர்களின் நேரமெல்லாம் தம்மினத்தின் விடுதலையைச் சுற்றியே சுழன்றுகொண்டிருக்கின்றது. மொத்தமாகப் பார்த்தால் இது ஒரு பெரும் சக்தி விரயம். அமெரிக்காவுக்கும், மனித இனத்துக்கும் ஒரு பேரிழப்பு. தமிழ் என்ற மரபு தனக்குள்ளே எண்ணற்ற தத்துவங்களையும், நோய்தீர்க்கும் மருத்துவ அறிவையும், உலகை உய்விக்கும் வாழ்வியல் முறைகளையும் கொண்டிருக்கிறது. இவற்றை அள்ளித் தரவும், பிற இனங்களுக்கும் நாடுகளுக்கும் பரப்பவும் தயாராக இருப்பவர்களே மேலே சொன்ன அத்தனை பேரும். ஆனால் இவர்களுக்கோ இன்றைய நிலையில் தம் இனத்தை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டிய கட்டாயம். அவர்களது திறமைகளையும், நேரத்தையும் வீணடிக்காமல் உலகுக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமானால் அவர்களுக்கு விடுதலை அவசியம்.

ஈழ விடுதலை கிடைத்தால் தமிழர்களின் மன வலிமையும், சமூக வலிமையும் கூடும். அவர்களது தொன்மையான இலக்கியங்களும், வாழ்முறை அறிவும் அவர்களால் மீட்டெடுக்கப்படும். இன்றைய சமூகவியலாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களைத் தமிழ் தன்னுள்ளே வைத்திருக்கிறது. இன்றைய நோய்களுக்குச் சிகிச்சை முறைகளைத் தமிழர்களின் மருத்துவ முறை வைத்திருக்கிறது. சித்தர்களின் புதையல்களுக்குள்ளே இன்றைய அனைத்து சமூக, உடல் நோய்களுக்கும் மருந்தைத் தேடிக் கொடுக்கும் பெரும்பணியை ஆற்ற தமிழ்ச் சமூகம் தயாராக இருக்கிறது. தமிழகத்திலும், ஈழத்திலும் இருக்கும் நோய்தீர்க்கும் மூலிகை வளங்களை உலகில் வேறெங்கும் காணவியலாது. தமிழர்களின் உடற்பயிற்சி முறைகளும், யோக முறைகளும் சொல்லற்கரிய ஆற்றலை மனிதர்களுக்குத் தரக்கூடியவை. அவற்றைத் தமிழர்களால் அமெரிக்காவுக்கும் உலகுக்கும் அள்ளித் தர முடியும்.

ஆனால் அவர்களை இன்று தடுத்து நிற்பது, சிந்தையைச் சிதைத்துக் கொண்டிருப்பது, செல்வங்களை அழித்துக் கொண்டிருப்பது எது? ஈழத்தின் இன்றைய அடிமை நிலை. தமிழரின் இன்றைய துயர்நிலையில் கையறுந்து இருக்கின்றது மொத்தத் தமிழ்ச் சமூகமும். நித்தம் நித்தம் கொல்லப்படும் தமிழர்களின் அவல நிலையால் தமிழர்கள் ஒவ்வொருவரும் புழுங்கித் துடிக்கிறோம். ஒரு திறனுள்ள சமூகத்தின் விடுதலையை முன்னெடுப்பதன் மூலம், அமெரிக்கா தனது சுய மேம்பாட்டுக்கான கதவுகளைத் திறந்துகொள்ள வேண்டும். அமெரிக்கா உடனடியாக, இந்த எழுபது மில்லியன் மக்களின் அறிவையும், உடலூக்கத்தையும், நில வளத்தையும் காப்பாற்ற வேண்டும். தமிழர்களிடம் உலகம் எதையும் கேட்க வேண்டியதே இல்லை. கேளாது வாரி வழங்கும் மேன்மையினர் அவர்கள். ஈத்துவக்கும் இன்பமே இன்பம் என்றுதான் அவர்களது மரபு அவர்களுக்குக் கற்றுத் தந்திருக்கிறது.

எங்களைக் காப்பாற்றுங்கள், எங்களது விடுதலைக்கு வழியினைக் காட்டுங்கள், உங்களுக்கு நாங்கள் எல்லாவற்றியும் அள்ளித் தருகிறோம் என்றுதான் தமிழர்கள் சொல்கிறார்கள். அமெரிக்காவினைப் போலவே உலகின் மற்ற நாடுகளும் எங்கள் கருவூலத்தினைப் பயன்படுத்தலாம். எனவே அதிபர் ஒபாமா விரைந்து செய்ய வேண்டியது தமிழீழத்தை விடுதலையடையச் செய்வது. தமிழின விடுதலை உலகின் மாற்றத்துக்கோர் திறவுகோல். அதன் மூலம் அமெரிக்காவுக்கான விடியலையும் ஏற்படுத்திக் கொள்ளலாம். மாற்றங்களைக் கொண்டு வருவேன் என்று வந்திருக்கும் ஒபாமா, தமிழர்களின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் உலகையே மாற்றும் அற்புத மாற்றத்தை நிகழ்த்துவாரா?

உலகத்தோர் இன்ப நிலை எய்தும் நன்முறையைத் தமிழர்கள் உலகிற்கு அளிப்பர்! ஆமாம்! தமிழர்கள் உலகிற்கு அளிப்பர்!

'கருணா'நிதி தமிழினத்துக்குச் செய்யும் துரோகம்

குலத்தைக் கெடுக்கும் கோடாரிக் காம்புக்கு இன்னொரு உதாரணமாகப் பரிணமித்திருக்கிறார்'கலைஞர்' கருணாநிதி. ராஜபக்சே, பொன்சேகா, பிரணாப் முகர்ஜி, சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோருக்கு உடன்பிறப்பாகவும், தமிழர்களுக்கு அந்நியனாகவும் ஆகியிருக்கிறார். இவருக்கு ஒத்து ஊதிய கனிமொழி அவர்களையும், வரும் காலங்களில் இன்னொரு கோடாரிக் காம்பாகத்தான் பார்க்க வேண்டும். கருணாநிதியின் கபடத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கும் வைகோவின் கடிதம் கீழே:

ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசாங்கத்தின் அனைத்து துரோகத்துக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி கூட்டுப்பங்காளியாக உள்ளார் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

பாளையங்கோட்டைச் சிறைச்சாலை நேர்காணலின்போது 02.03.2009 காலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ, கட்சியின் கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத்திடம் சொல்லச் சொல்ல எழுதி வெளியிடப்பட்ட வைகோ அறிக்கை:

இரண்டாம் உலகப் போரின் போது, யூத இனத்தையே பூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு, படுகொலைகள் நடத்தியதுபோல், இலங்கையில் சிங்கள இனவாத அரசின் கொலைகார அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, தமிழ் இனத்தையே கருவறுக்க முனைந்து, இராணுவத்தின் மூலம் தமிழர்களைக் கொன்று குவிக்கிறான். இந்த தமிழர் இன அழிப்பு இராணுவத் தாக்குதலுக்கு முழுக்க, முழுக்க ஆயுத உதவி செய்தது இந்திய அரசுதான்.

1998 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள், டெல்லியில் தான் கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் தமிழின கொலை நடத்தும் சிங்கள அரசுக்கு இந்தியா எவ்விதமான உதவியும் செய்யாது என்றும், ஆயுதங்களை கொடுக்காது என்றும், ஆயுதங்களை சிறிலங்காவுக்கு விற்பனை செய்வதில்லை என்றும் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தார்.

2004 ஆம் ஆண்டுவரை இந்திய அரசு அதனைக் கடைப்பிடித்தது.

சோனியா காந்தியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, மத்தியில் மன்மோகன் சிங் அவர்களை பிரதமராகக் கொண்டு அரசு அமைத்த பின், வாஜ்பாய் அரசு எடுத்த முடிவை காற்றில் பறக்கவிட்டு சிறிலங்கா அரசோடு, இந்திய-சிறிலங்கா கூட்டு இராணுவ ஒப்பந்தம் செய்ய முடிவு எடுத்தது.

2004 ஆம் ஆண்டு நவம்பரில் இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த நிலையில், அப்போது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற்றிருந்த சூழலில், பிரதமரையும், சோனியா காந்தியையும், சரத் பவார், லாலு பிரசாத் யாதவ், பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்றைய பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன், அதன் தேசியச் செயலாளர் ராஜா அவர்களையும் மூன்று முறை சந்தித்து எடுத்துக்கொண்ட கடும் முயற்சிகளின் விளைவாக, இந்திய-சிறிலங்கா இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.

ஆனால், ஒரு மாதம் கழித்து கொழும்பு சென்ற அன்றைய வெளிவிவகார அமைச்சர் நட்வர்சிங் இராணுவ ஒப்பந்தம் செய்யப்படாவிடினும், ஒப்பந்தச் சரத்துகள் நிறைவேற்றப்படும் என்று 2005 ஆம் ஆண்டு ஜனவரி 9 இல் கொழும்பில் அறிவித்தார்.

நான் மறுநாள் டெல்லிக்குச் சென்று பிரதமரிடம் என் எதிர்ப்பைத் தெரிவித்தபோது, நட்வர்சிங் சொன்னது அவரது தனிப்பட்ட கருத்து என்று பிரதமர் கூறியது ஏமாற்று வேலை என்பதைப் பின்னர்தான் தெரிந்து கொண்டேன். தமிழர் பகுதிகளின் மீது குண்டு வீச்சு நடத்தும் வானூர்திகள் இயங்குவதற்கு, பலாலி வானூர்தி தளத்தை இந்திய அரசு பழுது பார்த்துக் கொடுக்க முதலில் உத்தேசிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் முடிவாகியிருந்ததனால், அப்படிச் செய்வது தமிழ் இனத்திற்கே செய்கின்ற துரோகம் என்று, அப்போது இராணுவ அமைச்சர் பொறுப்பில் இருந்த பிரணாப் முகர்ஜியிடமும், சோனியா காந்தியிடமும், மன்மோகன் சிங்கிடமும் விளக்கமாகச் சொல்லி, அத்திட்டத்தைக் கைவிடுமாறு வற்புறுத்தினேன்.

பலாலி வானூர்தி தளத்தில் இருந்து ஏவப்பட்ட வான் குண்டு வீச்சில்தான் 1995 ஆம் ஆண்டில் ஏராளமான தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்தில் கொல்லப்படுவதையும், குறிப்பாக, நவாலி புனித பீற்றர் தேவாலயத்தில் இருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 168 பேர் இக்குண்டு வீச்சால் படுகொலை செய்யப்பட்டதையும் எடுத்துச் சொன்னேன்.

ஆனால், அதைச் செய்யப் போவதில்லை என்று பிரணாப் முகர்ஜி உறுதி அளித்து ஏமாற்றிவிட்டு, இந்திய வான்படை நிபுணர்களை அனுப்பி வைத்து, இந்திய அரசின் செலவிலேயே பலாலி வானூர்தி தளத்தை பழுது பார்த்துக் கொடுத்தனர் என்ற உண்மையை சிறிலங்காவின் வான்படை துணைத் தளபதி டொமினிக் பெரேரா, 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் நாள், பகிரங்கமாக அறிவித்தார்.

2005 ஆம் ஆண்டு தொடக்கத்தில், சிறிலங்கா வான் படைக்கு இந்திய அரசு கதுவீகளை கொடுக்கப் போகிறது என்ற செய்தியை அறிந்து, டெல்லியில் பிரதமரை நேரில் சந்தித்து, கதுவீகளை கொடுக்காதீர்கள் என்று மன்றாடினேன்.

முதல் தடவை நான் சந்தித்தபோது, கொடுக்க மாட்டேன் என்று பிரதமர் சொன்னார். ஆனால், கதுவீகளை கொடுத்து விட்டார்கள் என்று அறிவித்தவுடன் இரண்டாவது தடவை நான் சந்தித்தபோது, இந்திய அரசு கொடுக்காவிட்டால் பாகிஸ்தான், சீனா கொடுக்கும் என்பதால் நாங்கள் கொடுத்தோம் என்றார். அந்தச் சொத்தை வாதத்தை எதிர்த்து நான் வாதாடினேன். அங்கே பாகிஸ்தான், சீனா வம்சாவழியினரோ அவர்களின் தொப்புள் கொடி உறவுகளோ இல்லை என்பதையும் இந்தியா தந்த கதுவீகளின் உதவியால் சிங்கள வான்படை நடத்தும் குண்டுவீச்சால் தமிழ் மக்கள் கொல்லப்படுவார்கள் என்று வாதிட்டேன். அதற்கு பிரதமர் அப்படி போர் மூளும் பட்சத்தில் இந்தியா கொடுத்த கதுவீகளை திரும்பப் பெற்றுக்கொள்வோம் என்று என்னிடம் கூறியதை, அப்போதே ஏடுகளில் செய்தியாக வெளியிட்டேன்.

இந்திய கதுவீகளின் உதவியோடுதான், சிங்கள வான்படை, தமிழர் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அப்படிப்பட்ட குண்டு வீச்சில் தான், செஞ்சோலையில் 61 தமிழ்ச் சிறுமிகள் துடிக்கத் துடிக்கக் கொல்லப்பட்டனர்.

இந்திய அரசு இதற்கு எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை.

கடந்த 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் 8 ஆம் நாள் இரவு, விடுதலைப் புலிகளின் வான்படை வான் தாக்குதல் சிங்கள இராணுவ முகாம்மீது நடத்தப்பட்டபோது, இந்திய கதுவீகளை இயக்கிய இந்தியர்களான ஏ.கே.தாகூர், சிந்தாமணி ரமட் எனும் இரண்டுபேர் படுகாயமுற்ற செய்தி வந்தவுடன், இந்தியப் பிரதமருக்கு இந்தியாவின் துரோகத்தைக் கண்டித்து, மறுநாள் செப்ரெம்பர் மாதம் 9 ஆம் நாள் கடிதம் எழுதினேன்.

அதற்கு 2008 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 2 ஆம் நாள் பிரதமர் மன்மோகன் சிங் எனக்கு எழுதிய பதில் கடிதத்தில், இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க இந்தியா இராணுவ உதவி செய்துள்ளது என்று ஒப்புக்கொண்டு, கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையில் இந்திய - சிறிலங்கா கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் 2007 ஆம் ஆண்டிலேயே செய்யப்பட்டது. இந்திய கடற்படை இலங்கையில் நடைபெறும் போரில் விடுதலைப் புலிகளின் படகுகளையும் கப்பல்களையும் மூழ்கடிப்பதில் நேரடியாகவே ஈடுபட்டது.

இந்திய வான்படை நிபுணர்கள், சக்தி வாய்ந்த செய்மதி படப்பிடிப்பு கருவிகள் மூலம், புலிகளின் நடமாட்டத்தை சிங்கள வான்படைக்கு தெரிவித்ததன் விளைவாகவே புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்.

2004 ஆம் ஆண்டில் இருந்து இந்திய அரசு சிறிலங்காவுக்கு ஆயுதங்கள் கொடுத்தும், வட்டியில்லாக் கடனாக 1,000 கோடி ரூபாய் கொடுத்தும் உதவியதன் மூலம் பாகிஸ்தான், சீனாவில் இருந்து ஏராளமான ஆயுதங்களை சிங்கள அரசு வாங்குவதற்கு வழிவகுத்துக் கொடுத்து, தமிழர்களுக்கு செய்த துரோகம் அனைத்தையும் நன்றாக அறிந்திருந்த கலைஞர் கருணாநிதி, இதற்கு எந்தக் கட்டத்திலும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஆட்சேபணை சொல்லவில்லை.

இந்திய - சிங்கள அரசுகளின் கூட்டுச் சதிக்கு கலைஞர் கருணாநிதியும் ஒரு பொறுப்பாளி ஆவார்.

பின்னாளில் தன் மேல் வரும் பழியில் இருந்து தப்பிப்பதற்காக தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதினார். கடந்த சில மாதங்களாக சிங்கள அரசு - இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், இஸ்ரேல், ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து வாங்கிக்குவித்துள்ள சக்தி வாய்ந்த நவீன ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிடத் திட்டமிட்டு போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தானாக முறித்தது; இராணுவத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

இதில், தமிழ்மக்கள் லட்சக்கணக்கில் சொல்லப்படுவதைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் தமிழ் இனத்தையே அங்கே கருவறுத்துவிட்டு, மிஞ்சுகிற தமிழர்களை நிரந்தரமாக அடிமை இருளில் தள்ளத் திட்டமிட்டவாறு புலிகளை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் திட்டமும் ஆகும்.

அதனால்தான் தமிழ்நாடு சட்டமன்றம் போர் நிறுத்தம் வேண்டும் என ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தைக் காலில் போட்டு மிதித்துவிட்டு இன்று கலைஞர் கருணாநிதியால் தூயவர் என்று புகழப்படும் பிரணாப் முகர்ஜி, சென்னையில் முதலமைச்சரின் வீட்டு வாசலில் நின்று, போர் நிறுத்தம் கேட்பது எங்கள் வேலை அல்ல என்று திமிராகச் சொன்னார்.

கொழும்புக்குச் சென்ற பிரணாப் முகர்ஜி, போர் நிறுத்தம் கேட்கவேயில்லை என்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பட்டவர்த்தனமாகச் சொல்லிவிட்டான். 48 மணி நேரம் நாங்கள் தமிழர்கள் முல்லைத்தீவில் இருந்து வெளியேறக் கெடு விதித்தோமே தவிர, அது போர் நிறுத்தமல்ல என்றும், இந்திய அரசு சொன்னது உண்மை அல்ல என்றும், தமது அமைச்சர் மகிந்த சமரசிங்க மூலம் உலகத்துக்கு அறிவித்தார்.

பெப்ரவரி மாதம் 18 ஆம் நாள் அன்று இந்திய நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி கொடுத்த அறிக்கை பாம்பின் விசத்தை விட நச்சுத்தன்மை நிறைந்ததாகும். அதில் போரில் சிங்கள இராணுவம் வெற்றிமேல் வெற்றி பெறுவதாகவும் கிளிநொச்சி வீழ்ந்தது என்றும், ஆனையிறவு வீழ்ந்தது என்றும், முல்லைத்தீவு கைப்பற்றப்படும் என்றும், போரின் இறுதிக்கட்டம் விரைவில் நிறைவேறிவிடும் என்றும் அறிவித்தார்.

இதற்கு சில நாட்களுக்கு முன்பு, ராஜபக்ச, விடுதலைப் புலிகளின் கடைசி மூச்சு அணையப் போகிறது என்று சொன்னதையே பிரணாப் முகர்ஜியும், இங்கே கூறினார்.

முல்லைத்தீவில் வெளியேறிச் செல்லும் தமிழர்களை விடுதலைப் புலிகள் படுகொலை செய்வதாக ராஜபக்ச சொன்னதையே, பிரணாப் முகர்ஜியும் தன்னுடைய குற்றச்சாட்டாக அந்த அறிக்கையில் சொன்னார்.

எல்லாவற்றையும் விடக் கொடுமை என்னவென்றால் முல்லைத்தீவில் 70 ஆயிரம் பேர் இருப்பதாகச் சொன்னதுதான். மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை நெருப்பு மண்டலக் குண்டு வீச்சில் கொன்றுவிட்டு கொல்லப்பட்டவர்கள் எல்லோரும் விடுதலைப் புலிகள் தான் என்று சிங்கள அரசு அறிவிக்கத் திட்டமிட்டு உள்ளது. அதனால்தான் 35 ஆயிரம் தமிழர்கள் வெளியேறிவிட்டார்கள் என்று ராஜபக்சவும், பிரணாப் முகர்ஜியும் சொன்னார்கள். அதனையே கலைஞர் கருணாநிதியும் அவர்களின் ஊதுகுழலாக மாறி 35 ஆயிரம் தமிழர்கள் வெளியேறி வந்ததாகவும் அவர்களில் காயம்பட்டவர்களுக்கு மருந்துகளும், மருத்துவர்களும் அனுப்பத் தயார் என்று அறிவித்தார்.

கழுத்தை அறுத்துவிட்டு கை காயத்துக்கு முதல் உதவி செய்யும் அயோக்கியத்தனம் தான் இந்த அறிவிப்பு ஆகும்.

மத்திய அரசு துரோகத்தின் உச்சகட்டமாக பெப்ரவரி மாதம் 28 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் பிரணாப் முகர்ஜி ஒரு ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யைச் சொன்னார். அதில் தமிழ் மக்களை முல்லைத்தீவில் இருந்து வெளியேற்றுவதற்கு விடுதலைப் புலிகள் முன்வந்திருப்பதாகவும், சிங்கள அரசு தமிழர்களைப் பாதுகாப்பாக அனுப்ப வேண்டும் என்றும் கூறினார். இது பச்சைப் பொய்யாகும்.

விடுதலைப் புலிகள், ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கும், இணைத் தலைமை நாடுகளுக்கும் அனுப்பிய அறிக்கையில், சிங்கள அரசு தமிழ் மக்களைக் கொன்று குவிக்கிறது என்றும், அந்த அரசின் அறிவிப்பை நம்பி, பாதுகாப்பு வலயத்துக்குள் சிக்கி, 2,000 தமிழர்கள் கொல்லப்பட்டதையும், 3,000 பேர் காயம் அடைந்ததையும் சுட்டிக் காட்டியதோடு, உணவும், மருந்தும் இன்றி லட்சக்கணக்கான தமிழ் மக்கள் மரணத்தின் பிடியில் தவிப்பதாகவும், தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் விடியலுக்கு அனைத்துலக நாடுகளின் துணையோடு கூடிய உத்தரவாதம் கிடைக்கும் வரை தங்களின் ஆயுதப் போராட்டம் நிற்காது என்றும், உண்மை நிலையைக் கண்டறிய அனைத்துலக ஊடகவியலாளர்களும், மனித உரிமைக் காவலர்களும் தங்கு தடையின்றி முல்லைத்தீவில் நேரில் உண்மையைக் கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளனர்.

2001 ஆம் ஆண்டு இறுதியில் போர் நிறுத்தம் செய்தது விடுதலைப் புலிகள்தான். அதன் பின்னர்தான் சிங்கள அரசு போர் நிறுத்தம் அறிவித்தது. அதனை முறித்ததும் சிங்கள அரசுதான்.

கடந்த நான்கு மாதத்துக்கு முன்பே விடுதலைப் புலிகள் போர் நிறுத்தத்துக்குத் தாங்கள் தயார் என்று அறிவித்ததை சிங்கள அரசு ஏற்கவே இல்லை. உண்மை இவ்வாறு இருக்க, பிரணாப் முகர்ஜி தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, தூத்துக்குடி வந்து போர் நிறுத்தம் பற்றி மோசடியான வார்த்தைகளை உதிர்த்துவிட்டுப் போனார். கலைஞர் கருணாநிதி அதற்குப் பாராட்டுப் பத்திரம் வாசித்துவிட்டு, என் மீது வேறு எவரும் சொல்லத் துணியாத களங்கத்தைச் சுமத்த முற்பட்டு, புலிகள் பிரச்சினையை மாசாக்கி, மண்ணாக்கி, காசாக்கிவிட்டேன் என்றும், அரசியல் நாணயத்தை நாசப்படுத்தி விட்டேன் என்றும் புழுதிவாரித் தூற்றியுள்ளார்.

நான் கைது செய்யப்பட்ட மறுநாள் மார்ச் மாதம் 1 ஆம் நாள் சிறிலங்கா வெளிவிவகாரச் செயலாளர் பலித கோகன்ன, போர் நிறுத்தம் செய்யுமாறு எங்களை இந்த நிமிடம் வரை இந்திய அரசு கேட்கவில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டான்.

பிரணாப் முகர்ஜியின் பொய்யும், பித்தலாட்டமும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. பிரணாப் முகர்ஜிக்கு பல்லாண்டு பாடி வரவேற்கும் முதல் மந்திரி இந்திய அரசின் அனைத்துத் துரோகத்துக்கும் கூட்டுப் பங்காளி என்பதால், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் நயவஞ்சகமான அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார்.

துரோகி கருணாவும், கொலைகாரன் சரத் பொன்சேகாவும், புலிகளிடம் நானும், அண்ணன் நெடுமாறனும் பணம் பெறுகிறோம் என்று வீசிய கொடும்பழியைத்தான் கலைஞர் கருணாநிதியும் கூறுகிறார். அதனால்தான் அண்ணன் நெடுமாறன் குறித்து புலிகளிடம் பணம் பறிக்கும் இனத் துரோகி என்று மூன்று மாதங்களுக்கு முன்பு எழுதினார். இப்போது என்மீது களங்கச் சேற்றை வீசுகிறார். கலைஞர் கருணாநிதியின் முகத்திரையை வீரத்தியாகி முத்துக்குமார் கிழித்து எறிந்த பின்பு என்னை முதலமைச்சர் பழித்ததன் மூலம் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டிவிட்டார்.

சில நாட்களுக்கு முன்பு தமிழக அமைச்சர் ஒருவரின் பெயரால் என்னைக் கீழ்த்தரமாக வசைபாடி அறிக்கை தந்ததை அப்போதே கழகக் கண்மணிகள் உணர்ந்துவிட்டனர். பாதுகாப்பு என்றும் சட்டம் என்றும் முதலமைச்சர் காட்டும் பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சுகிறவன் அல்ல இந்த வைகோ என்றார் அவர்.

(நன்றி - புதினம்)

வெள்ளை மாளிகைக்கு முன் அணி திரள்வோம்!



இலங்கை அரசினால் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் இனப்படுகொலையினைக் கண்டித்து, அமெரிக்க அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கனேடிய மற்றும் அமெரிக்கத் தமிழர்கள் இணைந்து, அமெரிக்க வெள்ளை மாளிகையின் முன் நடத்தும் மாபெரும் பேரணி!

பிப்ரவரி 20ஆம் தேதி, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரையில்!

அமெரிக்கா, கனடாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தமிழர்கள் வந்து குவிய ஆயத்தம்!

வந்து கலந்து கொள்வீர்!

இனத்தைக் காக்கும் உரிமைப் போராட்டத்தில் உங்களையும் இணைத்துக் கொள்வீர்!

விபரங்களுக்குப் படத்தைப் பார்க்கவும்!

இத்தகவலை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தயவு செய்து அனுப்புங்கள்!

தமிழினத்துக்கு நீங்கள் செய்ய வேண்டிய காரியம் ஒன்று !

சமூக உணர்வுள்ள உலகத் தமிழர்களின் மனங்களெல்லாம் சொல்லவொணாத் துயரிலும், ஆற்றாமையிலும் வெம்பி வாடுகின்றன. தமது பூர்விக நிலத்திலிருந்து தமிழினத்தைத் துடைத்தழிக்கும் பாதகச் செயலை இலங்கை அரசாங்கம் செய்யவும், அதற்கு முட்டுக் கொடுத்துக் கொண்டு இந்தியாவும், இந்த அநீதியைக் கண்டும் காணாமல் இருக்கும் உலக நாடுகளும் தமிழர்களைக் காயப்படுத்துகின்றன. முருகதாசன் என்ற இளைஞன் இன்று ஐ.நா சபைக்கு முன்னே தன்னை எரித்துக் கொண்டு உலகின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறான். சுரணையற்ற சமூகம் இனியேனும் விழித்துக் கொள்ளுமா? இல்லையென்றால் அதனை உலுக்கியெடுக்கவேண்டிய கடமை நமக்கிருக்கிறது. சமநீதியையும், சுயமரியாதையையும் விரும்பும் எந்தவொரு மனிதனும் செய்யவேண்டிய காரியத்தைத்தான் தமிழீழ மக்கள் செய்தார்கள். அரசியல் அநீதிக்கெதிராகச் சுய நிர்ணய உரிமையைக் கேட்டுத்தான் அவர்கள் போராடுகிறார்கள். அதற்கான தண்டனை? அந்த இனமே அழிக்கப்பட வேண்டும் என்ற அரச பயங்கரவாதமா? இதற்கு விடிவு காண உங்களால் உதவ முடியும்.

உலகெங்கும் ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்தப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவின் குடிமகன்தான் கோத்தபாய ராஜபக்ச என்ற இலங்கை பயங்கரவாத அரசின் பாதுகாப்புச் செயலாளர். அந்த பயங்கரவாதத்தை நடைமுறைப் படுத்துவது அமெரிக்காவில் நிரந்தர வசிப்புரிமை பெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகா. இவர்கள் இருவர் மீதும், ஒரு குற்றப் பத்திரிகையை, அமெரிக்கத் தலைமை நீதிபதியிடம் "இனப்படுகொலைக்கெதிரான தமிழர்கள்"(Tamils Against Genocide, TAG) என்ற அமைப்பு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கை உடனடியாக எடுத்துக் கொள்ளுமாறு தலைமை நீதிபதியை, இந்த அமைப்பின் வழக்கறிஞரும், அமெரிக்காவின் புகழ்பெற்ற வழக்கறிஞருமான புரூஸ் பெயின் கேட்டுக் கொண்டுள்ளார்.

நம்மில் எத்தனையோ பேர் இந்தப் போராட்டத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம். முத்துக்குமார் தன்னையே எரித்துக் கொண்டபோதும், அதன் பின்னர் நிகழ்ந்த சுயஎரிப்புக்களின்போதும் அவை நேராமலிருக்க நாம் கடமையாற்றுவது அவசியம் என்ற உணர்வு எல்லோருக்குள்ளும் உந்துவதை உணரமுடிகிறது. நமக்கொரு வாய்ப்பு, மேற்கண்ட இன அழிப்பு வழக்கை நடத்துவதற்கு நிதி உதவி செய்வது. உங்களால் முடிந்த எந்தத் தொகையாக இருந்தாலும் தயவு செய்து கொடுங்கள். நீதிக்கான குரலை பலப்படுத்துங்கள். உங்களுக்குள்ளே இருக்கும் மன சாட்சிக்காகவும், விடுதலைக்கான ஏக்கத்துக்காகவும், தமிழினத்தின் விடியலுக்காகவும் கொடுங்கள். இந்தச் சிறிய கடமையையாவது செய்து போராட்டத்திற்கான நம் பங்கைச் செலுத்துவோம். கொடுப்பது சுலபம், ஒரு சில நிமிடங்கள் போதும். தயவுசெய்து இதனை நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும் பரப்புங்கள். பாஸ்டனில் ஒரு சின்னஞ்சிறு பிள்ளை 11 நாட்களாகச் சாப்பிடாமல் கிடக்கிறாள். அவளோடு சேர்ந்து ஒரு வேளை சோற்றையாவது துறந்து அவளுக்குத் துணையிருப்போம். உங்களுக்கு முடிந்த எதையாவது செய்துகொண்டேயிருங்கள். துவண்டுபோகாதீர்கள். வெல்வோம், நம்பிக்கை கொள்ளுங்கள்!

குடிமக்களைக் கொலை செய்யும் இலங்கை அரசு.

சி.மகேந்திரன் எழுதியிருக்கும் இந்தப் பத்தி ஈழப் பிரச்சினையை இதுவரையில் பெரிதும் தொடர்ந்து வாசிக்காதவர்களுக்கு, தற்போதைய நிலையை எடுத்துச் சொல்லும்.

ஓரிரு மாதங்களுக்குள்ளாகவே இலங்கை உள்நாட்டு போல் கொல்லப்பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டனர். இதுநாள் வரை கிளஸ்டர் என்னும் மனிதவிரோத குண்டுகளை வானத்திலிருந்து போட்டவர்கள், இப்பொழுது வெள்ளை பாஸ்பரஸ் கலந்த குண்டுகளைப், பீரங்கிகளின் மூலம் பொதுமக்களைக் குறிபார்த்து ஏவுகிறார்கள். இது மனிதன் உட்பட மரஞ்செடிகள் அனைத்தையும் எத்து சாம்பலாக்கிவிடும். இதனால் தமிழ்மக்கள் எத்தனை பேர் இறந்தார்கள் என்பதை கணக்கிட்டுப் பார்க்க முடியாது. சாம்பல் மட்டுமே தான் மிச்சமாய் கிடைக்கும்.

இதற்கு முன்னர் மருத்துவமனைகளில் குண்டுகள் விழுந்து போது உலகத்தின் மனிதநேய சமூகம் இதனை கண்டித்து, இது போன்றவை, இனிமேல் நடக்காத உறுதியை இலங்கை அரசிடம் கேட்டிருந்தன. இந்தியாவும் அமைதி வேடமணிந்து பொது மக்களில் ஒருவரைக்கூட கொல்லாத போரை நடத்துமாறு கோரிக்கை விட்டது. உண்மை என்னவெனில் பொதுமக்களை மட்டும் கொலை செய்யும் போரைத்தான் இப்பொழுது இவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
குண்டு மழையிலிருந்து காயங்களுடன் சிலரால் மட்டுமே உயிர் தப்பித்துக் கொள்ள முடிந்திருக்கிறது. இவர்களில், குழந்தைகள் மட்டும் மருந்தும், மருவத்துவ வசதிகளுமற்ற மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிகிறார்கள். மற்றவர்கள் பரிசோதனை என்ற பெயல் சித்ரவதை முகாம்களுக்கு இழுத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கு இளைஞர்கள், காணாமல் போய்விட்டார்கள் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்படலாம். கடந்த சில நாட்களில் மட்டும் அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் சென்றவர்களில் 500 பேரைக் காணவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பெண்கள் பாலியல் சித்ரவதை செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்படுகிறார்கள். மருத்துவமனைகளில் குழந்தைகள் தங்கள் இறுதி மூச்சை விடுவதற்காகப் போராடுகின்றன. உயிர் பிரிவதற்கு முன், தங்கள் கண் முன்னாலேயே குண்டு வெடிப்புகளில் சிதறிப்போன தங்கள் தம்பி தங்கை பற்றிய பாசத்தால் இரண்டு துளி கண்ணீர் சிந்திக்கொள்கிறார்கள். கண்ணீர்த் துளிகளோடு உயிர் பிரிந்து உலக வாழ்விலிருந்து விடுதலை பெற்றுக் கொள்கிறார்கள். குழந்தைகளின் படுகொலையைப் பார்ப்பதைப் போலக் கொடுமையானது வேறு எதுவும் இருக்க முடியாது. மரங்களுக்கு அடியில் பூக்கள் உதிர்ந்து கொட்டிக் கிடப்பதைப் போல, குழந்தைப் பிணங்கள் வன்னிப்பிரதேசம் எங்கும் சிதறிக்கிடக்கின்றன. இவர்களுக்காக கண்ணீர் விடவோ, கதறி ஒப்பாரி சொல்லி அழுவதற்கோ யாரும் மிச்சமாய் இல்லை. யாருக்கும் நேரக்கூடாத இந்த வாழ்க்கை இலங்கைத் தமிழ் மக்களுக்கு மட்டும் எப்படி நேர்ந்தது?

தமிழ் மக்கள் கொலை செய்வதையே இலங்கை அரசு ஒரு தொழிலாக வளர்த்து வந்திருப்பதை ஆழ்ந்து யோசித்தால் புரிந்து கொள்ள முடியும். சுதந்திரம் பெற்ற பின்னர், இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக, தொடர்ந்து நடத்தி வரும் இந்தக் கொடுஞ் செயலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளாக தமிழகத்திலும், இந்தியாவிலும் எழுப்பப்படாமல் இல்லை. இலங்கைத் தமிழ் மக்களும் காந்திய வழியிலும், ஆயுதம் தூக்கியும் போராடிப் பார்த்துவிட்டார்கள். கடைசியாக இலங்கையின் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நார்வே அரசு பெரிதும் முயற்சி செய்தது. 2002 ஏற்பட்ட போர்நிறுத்தம் 2006 ஆம் ஆண்டில் முறிந்து போனது. முறித்தவர்கள் யார்? இலங்கை அரசு தான் என்பதை, எளிதில் புந்து கொள்ள இயலும்.

மக்கள் தரும் அதிகாரத்தை ராணுவ அதிகாரமாக மாற்றிக் கொண்டவர்கள், ஹிட்லரை போன்ற கொடுமைக்காரர்களாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. மகிந்த ராஜபக்சேவின் குடும்பம் ராணுவத்தைச் சுவராக அமைத்துக்கொண்டு தங்கள் சுயநலவேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது. தேசப்பாதுகாப்பு என்ற சொல், இவர்களுக்கு எல்லையற்ற பணத்தை திருடிச் செல்லவே பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. ராணுவத்தைப் போல, இவ்வாறு கொள்ளை அடிப்பதற்குப் பாதை அமைத்துக் கொடுப்பது வேறு எந்தத்துறையும் இல்லை. யாராலும் கண்டுபிடிக்க முடியாத உயரத்தில் இந்த ஊழலுக்கான மர்மக் கட்டுமானம் உருவாக்கப்பட்டுள்ளது. யாராலும் இந்தக் குறைபாட்டைப் போக்க முடியவில்லை. இதனைக் கண்டறியும் வல்லமையைப் பெற்ற மாவீரர்கள் தோன்றினால் அவர்கள் சண்டே லீடர் பத்திக்கையின் ஆசியர் லசந்த விக்கரமதுங்க கொல்லப்பட்டதைப் போலக் கொலை செய்யப்படுகிறார்கள். ராணுவ விமானம் வாங்கியதில் ராணுவ செயலாளர் கோத்தபாய ராஜபக்சே செய்த பெரும் ஊழலை அம்பலபடுத்திற்காகவே லசந்த கொலை செய்யப்பட்டார்.

ராணுவத்தின் வழியே நடந்து செல்லும் இவர்களால் தமிழ் மக்களின் போராட்டத்தை அழிப்பதற்கான போரை நடத்தியே தீர வேண்டும் என்ற போதையில் மூழ்கிப் போய்விட்டார்கள். உள்நாட்டுப் போரை நடத்தும் வலிமை இலங்கை அரசாங்கத்திடம் இல்லை என்பது அனைவரும் அறிந்தது. பாக்கிஸ்தான், சீனா, இஸ்ரேல், ஈரான் முதலிய நாடுகளிடம் தங்கள் நாட்டின் கடல் வளம், நிலம் தரும் கனிம வளங்கள் ஆகிய அனைத்தையும் நூற்றாண்டு கால குத்தகைக்கு இலங்கை அரசு அடகு வைத்துவிட்டது. இந்தப் பணத்தில் ஆயுதம் வாங்கி ராணுவ போதையில் தமிழ் மக்களைக் கொன்றுகுவித்துக் கொண்டிருக்கிறது. ராணுவத்தின் குண்டு வீச்சால் தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், யுத்தப் பொருளாதார பேரழிவால், சிங்கள மக்களின் வாழ்க்கையும் அழிக்கப்படுகிறது.

தமிழ் பேசும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நான்கு பேர் அண்மைக் காலத்தில் கொல்லப்பட்டுள்ளார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராஜசிங்கம் மட்டக்களப்பிலுள்ள புனித மேரி தேவாலயத்தில் கிருஸ்துமஸ் வழிபாட்டில் பங்கேற்றிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டார். அம்பாறையிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர், அயநாயகம் சந்திர நேரு சுட்டுக் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் ராணுவம் செயற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டைப் பலமாக எழுப்பியிருக்கிறார்கள். இதைப் போல, சென்ற ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் ராணுவத்தின் கிளைமோர் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மகேஸ்வரன் சிவன் கோயிலுக்கு வழிபாட்டிற்கு சென்ற இடத்தில் அங்கேயே கொல்லப்பட்டார். ராணுவத்தின் பலத்தால் விடுதலைப்புலிகளை அழிப்பதன் மூலம் பிரச்சனையைத் தீர்த்துவிடுவேன் என்று கூறும் இலங்கை அரசுக்கு, தமிழ் மக்களின் வலிமை பொருந்திய அரசியல் கருத்துகளை முன் வைக்கும் திறன்படைத்த இந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொலை செய்ய வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

ஊடகங்கள் அனைத்தையும் இலங்கையின் ராணுவம், சிறை வைத்துள்ளது என்று தான் கூற வேண்டும். உலகத்தின் எந்த நாட்டின் ஊடகமும் வன்னிப் பகுதிக்குச் செல்ல முடியாது. அப்படிச் சென்றவர்களில் யாரும் உயிருடன் திரும்பியதில்லை. அரச பயங்கரவாதத்தால் அண்மையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கை பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை 14 என்று ஊடகங்களின் அமைப்புகள் அறிவித்துள்ளன. 20 க்கும் அதிகமானவர்கள் கொலைப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உலகின் பல நாடுகளுக்குத் தப்பி சென்றவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம். தமிழகத்தில் சிங்களப் பத்திரிக்கைளில் சிலர் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.
அமெரிக்கா முதலான உலகத்தை ஆதிக்கப்படுத்தும் நாடுகளிடம் இலங்கை அரசு மண்டியிட்டு அடிபணிந்து நிற்கிறது. ஆனால் அதே சமயம், இந்த நாட்டின் ஊடகங்கள் உள்நாட்டுப் போர்ப் பிரதேசங்களுக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கிறது. பிரிட்டனின் பிபிசி, அமெரிக்காவின் சி.என்.என் முதலான தொலைக்காட்சிகளை, எங்கள் விருப்பத்திற்கு மாறாகச் செய்திகளை வெளியிட்டால் அடித்துத் துரத்துவோம் என்று இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் கோத்தப்பாய ராஜபக்சே எச்சரிக்கை விடுத்துள்ளார். உள்நாட்டு ஊடகங்களின் மூலமாகவோ அல்லது வெளிநாட்டு ஊடகங்களின் மூலமாகவோ எந்தச் செய்திகளும் செல்லக் கூடாது என்பது இலங்கை அரசாங்கம் விதித்துள்ள சட்டம். ராணுவம் எந்தச் செய்தியை எப்படி வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கிறதோ, அதை அப்படியே வெளியிட வேண்டும். ஊடகச் சுதந்திரம் இந்த எல்லையோடு நின்றுவிடுகிறது.
பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு அரச பயங்கரவாதத்தின் துணைகொண்டு சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு போடுவதில் தனியான திட்டத்தை வகுத்து வைத்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே தன் ஆட்சி அதிகாரத்தை காப்பாற்றிக் கொள்வதற்குத் தான் இந்தப் போரை நடத்திக் கொண்டிருக்கிறார் என்று உலகின் மனிதநேய கொண்ட சக்திகள் முடிவுக்கு வந்துவிட்டார்கள். அமெக்காவின் புகழ்மிக்க அரசு தலைமை துணை வழக்கறிஞராகச் செயல்பட்டவர் புரூஸ்பெயின். போர்க் குற்றவாளிகள் என்று அமெரிக்கக் குடிமக்கள் இவருவரை இவர் குற்றம் சாட்டியிருக்கிறார். இதில் ஒருவர் இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியான ராணுவச் செயலாளர் கோத்தப்பாய ராஜபக்சே. மற்றொருவர் இலங்கையின் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா. இருவரும் அமெரிக்க நாட்டின் குடிமக்கள். இலங்கையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காகத் தான், உள்நாட்டைப் போரை உயிரைப் பணயம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று அறிவித்துள்ள இவர்கள் இருவரும் அமெரிக்க குடிமக்கள். இவர்களின் தேசபக்தி லட்சணம் இவ்வளவு தான். தண்டிக்கப்பட வேண்டிய போர்க் குற்றவாளிகள் இவர்கள் என்பதற்கான ஆதாரங்களை ஆயிரம் பக்கங்களில் தயாரித்து அமெரிக்க நீதிமன்றத்தில் புரூஸ்பெயின் வழக்குத் தொடர இருக்கிறார்.
எப்படிப் பார்த்தாலும், தனது குடிமக்களையே இனஅழிப்புக் கொள்கைக்காக படுகொலை செய்து கொண்டிருக்கிருக்கும் யாரும் போர்க் குற்றவாளியாகத்தான் இருக்கமுடியும். அமெரிக்க நீதிமன்றத்தில் கோத்தபாயவும், பொன்சேகாவும் தண்டிக்கப்படவேண்டும் என்ற புரூஸ் பெயின் விருப்பத்தைப் போலவே, உலகநீதிமன்றத்தில் ராஜபக்சேவும் போர்க் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகத்திலுள்ள ஜனநாயக சக்திகளின் விருப்பமாகும்.

அட்லாண்டாவில் நடந்த பேரணி !

நேற்று அட்லாண்டாவில் நடந்த பேரணிக்குப் போயிருந்தோம். இங்கிருந்து சுமார் 300 மைல்கள். எங்கள் ஊரிலிருந்து 14 பேர் கிளம்பிப் போனோம். பேரணி பற்றிய அறிவிப்பு இரண்டு நாட்களுக்கு முன்புதான் கிடைத்தது. இன்னும் சில நாட்கள் அவகாசமிருந்திருந்தால் மேலும் பலர் வந்திருக்கக் கூடும். சனிக்கிழமை காலை 11லிருந்து 1 மணி வரையில் சி.என்.என் நிறுவனத்தின் முன்னுள்ள நாற்சந்தியில் அமைதியான முறையில் இந்தப் பேரணி நடந்தது. இலங்கை அரசின் தமிழினப் படுகொலைகளைக் கண்டிக்கும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கி சாலையோரங்களில் நின்றிருந்தோம். ஏறக்குறைய கலந்துகொண்ட அனைவரும் கருஞ்சட்டையணிந்திருந்தார்கள். நடந்து சென்றோரும், வாகனங்களில் சென்றோரும் பார்த்துவிட்டும், கையசைத்தும், வாகனங்களில் ஒலிப்பானை அழுத்தியும் ஆதரவினைத் தெரிவித்துப் போயினர். வாடகை வாகனவோட்டிகள் கிட்டத்தட்ட அனைவருமே கையசைத்துச் சென்றார்கள். நான் முன்பு கலந்துகொண்ட வாஷிங்டன் பேரணி, மேடைகளை அமைத்து, ஒலிபெருக்கிகள், பெரும் படத் தட்டிகள் போன்றவற்றை வைத்து, உரைகள் நிகழ்த்தி, குரலெழுப்பியவாறு அமைந்திருந்தது. அதைப் போலக் குரலெழுப்பலாமா என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரைக் கேட்டபோது, இதனை மௌனப் பேரணியாகவே அமைத்திருக்கிறோம் என்றார். தட்டிகளையும் இரண்டடிக்கு இரண்டடி என்ற அளவிலேயே வைத்திருக்க வேண்டும் என்பதுதான் உள்ளூர்க் காவலர்களின் விதியும்கூட. சிறுவர்கள் பலரும் பதாகைகளைத் தாங்கியிருந்ததும், பெற்றோர்கள் அவர்களிடம் அப்பதாகைகளைப் படித்து அதுகுறித்துப் பேசிக் கொண்டிருந்ததும் காணக்கூடியதாக இருந்தது.

பல நண்பர்களைச் சந்தித்தேன். புதிய நண்பர்களும் கிடைத்தார்கள். தமிழர்களிடையே பிளவு இருக்கிறது இருக்கிறது என மீண்டும் மீண்டும் கூறியே நம்மைப் பிளவு கொள்ள வைக்கும் அரசியல்வாதிகளுக்கும், சதிகாரப் பத்திரிகைகளுக்கும் நடுவில், ஒற்றுமையாகத்தான் தமிழினம் இருக்கிறது என்பதைத் திரும்பத் திரும்ப நிலைநாட்டுகின்றன இத்தகைய நிகழ்வுகள். எத்தனையோ மாறுபட்ட கருத்துள்ளவர்களை நான் நேற்று கண்டேன். இந்தியா, ஈழம், தீவிரவாதம், மதம், கட்சிகள் என்ற கருத்துக்களில் அவர்கள் மாறுபட்டிருந்தாலும், அந்த இயல்பான தனிமனித மாறுபாடுகளைக் கடந்து, அவர்களை ஒன்றிணைத்திருப்பது, மனித நேயமும், தமிழினத்தின் மீதுள்ள அன்பும், நம் அண்டையில் ஒரு கொடூர மனிதவுரிமை மீறல் நடக்கும்போது அதனைத் தட்டிக் கேட்க வேண்டும் என்ற தர்ம சிந்தனையுமே ஆகும். அச்சிந்தையும், தமிழுணர்வுமே வாண்டர்பில்ட் பல்கலையிலிருந்து ஒரு மாணவனைத் தன்னந்தனியனாய் 4 மணிநேரம் ஓட்டிக் கொண்டு வந்து கலந்துகொண்டுவிட்டுப் போக வைத்தது.  எத்தனையோ நண்பர்களுக்கு வர விருப்பமிருந்தும் பல்வேறு சூழல்களால் உடனடியாகக் கிளம்ப முடியாத நிலையிருந்தது. அவர்களுக்காகவே சார்லஸ்டன் நகரிலும் ஒரு பேரணியை நடத்துவதென்று முடிவு செய்துள்ளோம். இதைப் படிக்கும் அண்டை மாநிலத்தவர்கள் மற்றும் வாய்ப்புள்ளவர்கள் வந்து கலந்துகொள்ள வேண்டும். ஈழப் போராட்டத்தின் இந்தக் கட்டமானது மிகவும் உணர்வு பூர்வமாகவும் தமிழர்களை ஒன்றிணைப்பதாகவும் இருப்பதைக் காண்பது, ஈழத்தில் ஏற்படும் காயங்களுக்கு மருந்தென ஆறுதலளிக்கிறது. எங்கும் ஓங்குக தமிழர் ஒற்றுமை!

வாரீர் ! நாளை அட்லாண்டா மாநகரில் பேரணி !

ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்திலுள்ள அட்லாண்டா தமிழ்ச் சங்கம் ஒரு பேரணியை ஏற்பாடு செய்திருக்கிறது. அருகாமையில் வசிக்கும் அனைவரும் வந்து கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

இடம்: சி.என்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்பு
நாள், நேரம்: பிப்ரவரி 7ம் தேதி, சனிக்கிழமை, காலை சரியாக 11 முதல் 1 மணி வரை

நன்றி!

தமிழ்ச் சங்கத்தின் செய்தி:
Greater Atlanta Tamil Sangamʼs (GATS) unanimous resolution on February 3rd/2009 condemns the genocide on the Tamil civilians by Sri Lankan army.

GATS unequivocally condemn mounting civilian casualty in Sri Lanka due to intensified fighting by the Sri Lankan government forces. The humanitarian condition for over 250,000 Tamil people has reached crisis level.

GATS urges the International community to join the governments of Britain and Germany in seeking an immediate ceasefire so the humanitarian condition can be addressed.

GATS has formed an ad hoc committee to analyze the situation and bring recommendations to the EC and BOD how GATS can help acting strictly within the by-laws.

Tamil community volunteers Subathra, Keetha Mohan and Ilangovan are organizing a rally in support of Tamils

Date: Feb 7th, Saturday 2009

Time: 11am - 1pm

Place: Opposite to CNN, Atlanta

Please note that preferred dress code is Black

GATS encourages members and all community to participate in this rally and show our support to Tamils.

அனைத்துலகத் தொண்டு நிறுவனங்களின் மீது தாக்குதல்


எண்ணிலாத போர்க்குற்றங்களைச் செய்துவரும் இலங்கை அரச படையினர், இதுவரை கணக்கிலடங்காத தொண்டுநிறுவனங்களின் மேல் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதன் இன்னொரு சேர்க்கையாக நேற்றும் சர்வதேசத் தொண்டு நிறுவனங்களின் மேல் எறிகணைகளை வீசியிருக்கிறார்கள். இவற்றை மனிதாபிமானமுள்ள எவரும் கண்டிப்பார்கள். 

செய்தி: 
சிறிலங்கா அரசாங்கத்தால் "மக்கள் பாதுகாப்பு வலயம்" என அறிவிக்கப்பட்ட பகுதியான உடையார்கட்டில் அமைந்திருந்த அனைத்துலக தொண்டர் நிறுவனங்களான வன்னி மறைக்கோட்டம், கியூடெக், கரித்தாஸ் ஆகிய நிறுவனங்கள் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் அவை முற்றாக அழிந்துள்ளன.

இவற்றின் மீது நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். 48 மணி நேரக் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதனைத்தான் இந்தியா சிறிலங்காவின் யுத்த நிறுத்த அறிவிப்பு என்று கூறிவருகின்றது.

இதேவேளை, படையினரின் இந்தத் தாக்குதலில் கியூடெக், கரித்தாஸ் நிறுவனங்களின் ஆவணங்கள், வன்னிமறைக்கோட்ட ஆவணங்கள் யாவும் முற்றாக அழிந்துள்ளதுடன் அங்கிருந்த சகல கட்டடங்களும் ஊர்திகளும் அழிந்துள்ளன.

மேலும் சிறிலங்கா படையினரின் தாக்குதலால் கியூடெக் நிறுவனம், வன்னிமறைக் கோட்டம் என்பன இயங்கிய தூய யூதா கோவிலும் சேதங்களுக்குள்ளாகியது. கியூடெக், கரித்தாஸ், வன்னிமறைக் கோட்டத்தின் சகல ஆவணங்கள் உடமைகளும் இதில் எரிந்து அழிந்துள்ளன. மூன்று நாட்களுக்கு முன்னர் இதன் மீது சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. நேற்று இதனை அழிக்கும் தாக்குதல் தீவிரமாக சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டுள்ளது.

இந்தியா என் தாய்நாடு !


ஈழத்தில் இத்தனை உயிர்களைக் கொன்று குவிக்கும் ஒரு இனப்படுகொலையைச் செய்யும் சிங்கள் அரசுக்கு நான் பிறந்த இந்தியத் திருநாடு பின்னிருந்து உதவி செய்கிறது. இந்தியச் சார்பு ஊடகங்கள் இதனை ஒரு இனப்படுகொலையாகப் பார்க்காமல், ஒரு இராணுவச் சண்டையாகப் பார்த்துக்கொண்டே வருவதன் பின்னணி, இந்தப் போரை இயக்குவது இந்தியா என்பதால் விளைந்த ஆதரவுதான். பின்னாலிருந்து ரணிலையும், மகிந்தவையும் இயக்குவது இந்தியாதான். இலங்கைப் போர்க்களத்தில் இந்திய இராணுவ வீரர்கள் அடிபடுவது, இலங்கைக்கு ஆயுதங்களையும், இராணுவத் தளவாடங்களையும் அனுப்புவது எல்லாம் இந்தியா இப்போரில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. தமிழர்களின் போராட்டம் இனி சிங்கள அரசை எதிர்த்து மகிந்தவின் கொடும்பாவியை எரிப்பதோ, அல்லது அரசியலடிமை கருணாநிதியிடம் மண்டியிட்டுப் பிச்சை கேட்பதோ அல்ல. இந்திய அரசின் இந்த நியாயமற்ற நிலைப்பாட்டை எதிர்த்துப் போராடுவதுதான். இந்தியாவை மீறி வேறெந்த நாட்டுக்கும் இலங்கை விவகாரத்தில் தலையிடும் ஆர்வமோ, தேவையோ, துணிச்சலோ கிடையாது. மனிதவுரிமை மீறலை இந்தியா நிகழ்த்தும்போது அதனைக் கண்டும் காணாமலும் சர்வதேசம் இருப்பதுபோல, சக மனிதன் இருக்கலாகாது. இந்தியா தன்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். 

தமிழகத் தலைவர் கருணாநிதி என்ன காரணத்தாலோ காங்கிரசாரிடம் கட்டுண்டு கிடக்கிறார். இன்னும் அவர் காங்கிரசிடம் அடிமைப்பட்டு எதனைக் காத்துக் கொள்ளவேண்டும்? அய்யா, இனி நீங்கள் பதவியில் இருப்பதே உங்களுக்கு அவமானம்! புஷ் எப்படி அமெரிக்க மக்களின் மனங்களிலிருந்து வீசி எறியப்பட்டாரோ அவ்வாறே நீங்களும், உங்கள் கட்சியும், உங்கள் பிள்ளைகளும் மக்கள் மனங்களிலிருந்து வீசி எறியப்பட்டுவிட்டீர்கள். உங்களுக்கு வேண்டுமானால் காங்கிரசுக்கு அடிமைப்பட்டு சொத்தைக் காத்துக் கொள்ளும் அவசியம் இருக்கலாம், ஆனால் மக்களுக்கு உங்களிடம் அடிமைப்பட்டு சுயமரியாதையையும், உயிரையும் விட்டுவிடும் அவசியம் இல்லை. எந்த மாணவர்களையும், தமிழுணர்வையும் பயன்படுத்தி ஆட்சிக் கட்டிலிலும், ஒரு திராவிடக் கட்சியின் தலைமைப் பதவியிலும் அமர்ந்திருக்கின்றீர்களோ அவர்களையும் அவர்தம் உணர்வுகளையும் நசுக்கும் கொடும்பாதகச் செயலுக்கு நீங்கள்  உடந்தையாக இருப்பது தகுமா? உடனே ஏதேனும் செய்யுங்கள் அல்லது...

அரசு முறையைக் காத்தால், முறையே அரசைக் காக்கும் என்பது வள்ளுவம். என் இந்தியத் தாய்த் திருநாடு முறையைக் காக்கின்றதா? மனிதவுரிமையைக் காக்கின்றதா? அது இலங்கையின் உள்நாட்டு விவகாரம், அதில் தலையிட மாட்டோம், பேச்சு வார்த்தையின் மூலம் தீர்வு காணுங்கள், என்று வெளியில் சொல்லிக்கொண்டே இருந்த, உள்ளுக்குள்ளே நயவஞ்சகமாக அற முறைகளைக் கைகழுவிவிட்டு தமிழ் உயிர்களைப் பலியெடுக்கிறது. இந்தியா ஏன் இந்தத் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்த உதவி செய்ய வேண்டும்? நானறிந்த காரணங்களும், அவற்றுக்கான விளக்கங்களும்:

1. இந்திய அமைதிப்படையைப் புலிகள் தோற்கடித்தது இந்தியாவுக்கு மாறாத வடு. அதற்கு வஞ்சம் தீர்த்துக் கொள்கிறது. தன் பிராந்தியத்தில் தானே பெரும்பலசாலி என்பதை நிலைநாட்ட முயல்கிறது. (ஏனய்யா, அதற்கு அப்பாவி மக்களின் உயிரை எடுத்துதான் உங்களது வீரத்தை நிலைநாட்ட வேண்டுமா? மனிதவுரிமையை அழிப்பதன் மூலம்தான் புலிகளின் மீதான உங்களது வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டுமா? புலிகளின் மீது பிரச்சினை என்றால் புலிகளோடு மட்டும் பொருதுங்கள். ஏன் மக்களை அழிக்கின்றீர்கள்? முதலில், நீங்கள் ஊதி வளர்த்துவிட்டதுதானே இலங்கையின் ஆயுதப் போராட்டம்? பேச்சு வார்த்தையையும், அகிம்சையையும் போதிக்கும் நீங்கள் ஏன் அன்றே உங்களது நல்லெண்ணத்தைக் காட்டியிருக்கக் கூடாது? புலிகளுக்கும், மற்ற இயக்கங்களுக்கும் ஆயுதப் பயிற்சி கொடுப்பதற்கு முன்னமேயே அவர்களுக்கு உங்களது அகிம்சை ஞானத்தைப் போதித்து நல்வழிப்படுத்தியிருக்கக் கூடாதா? அல்லது, ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்று சண்டை போடுகிறீர்களா? அவரது கொலைக்குப் பின் அவிழாத பல புதிர்கள் இருக்கின்றனவே, அவற்றை அவிழ்த்து உங்களது நீதியை நிலைநாட்டிக் கொள்ளலாமே. சர்வதேச சட்ட முறைகள் இப்படித்தான் ஒரு கொலைவழக்கை விசாரிக்கச் சொல்கின்றனவா? சுப்ரமணிய சுவாமிக்கும், சந்திரா சாமிக்கும், காங்கிரஸ், அ.தி.மு.க தலைவர்களுக்கும் இந்தக் கொலையிலிருக்கும் தொடர்புகளை ஆராயலாமே? அதை விடுத்து ஒரு உயிர் போனதற்காக, இத்தனை அப்பாவி உயிர்களைப் பலியெடுக்கிறீர்களே இதுதான் அரசியல் அறமா? இதைத்தான் அசோகரின் தர்மச் சக்கரம் உங்களுக்குச் சொல்லித் தருகிறதா?)


2. இந்திய முதலாளிகளின் முதலீடுகள் இலங்கை முழுவதும் இருக்கின்றன. அவற்றைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து முதலாளிகள் இந்தப் போரை நடத்துகிறார்கள். (தொழிலைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தமது நாட்டின் செல்வந்தர்களின் பணத்தைப் பெருக்குவதற்காக, இன்னொரு நாட்டினுள் புகுந்து, அந்த நாட்டின் சொந்த மக்களைக் கொலை செய்து...இதுதான் நீதியா? இன்றைக்கு நீங்கள் உங்களைவிடச் சிறிய நாட்டின் இனத்தை அழிக்கும்போது, உங்களை விடப் பெரிய நாடு ஒன்று உங்கள் நாட்டையும், இனத்தையும் அழிக்கும் என்பது உலக நியதி. இந்தியப் பேரினம் அழியாது காக்கப்பட வேண்டுமென்றால், நீங்கள் எந்த இனத்தையும் அழியாதிருங்கள். செல்வத்தின் பொருட்டு இந்த அநீதியை நிகழ்த்துபவர்களுக்கு அந்தச் செல்வத்தால் எந்தவொரு நலனும் இராது. அதற்கு நீங்கள் துணை போகாதீர்கள். எப்போதும் உழைப்பின் பக்கம் நில்லுங்கள். சுரண்டல்காரர்களோடு நில்லாதீர்கள்.) 


3. இலங்கையில் எவ்வாறு பௌத்த தீவிரவாதம், தமிழர்களோடு வரலாற்று ரீதியாக மோதுகின்றதோ, அதே ரீதியில் இந்தியாவில் ஆரிய-திராவிட வரலாற்று மோதல் இருந்து வருகிறது. அதிகார வர்க்கத்துக்குள் நிலவிவரும் இந்த வர்க்க மோதல் மனப்பான்மை, திராவிட இனத்தை அழிக்கும் நடவடிக்கைகளை முடுக்கி இயக்கி வருகிறது. (ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் சென்று வைத்தால் இதுவொரு இனவாதம். தண்டனைக்குரிய குற்றம். யூதர்களைக் கொன்று ஹிட்லர் தேடிக் கொண்டது இந்தப் பழியைத்தான். இனப்படுகொலையைச் செய்யாதீர்கள். இந்தியா ஒரு பல்லின நாடு. அனைத்து இனங்களுக்கும் சொந்தமான மொழியும், கலையும் இருக்கின்றன. அவற்றை எந்த மொழியையும், இனத்தையும், கலையையும் கொண்டு அழிக்காதீர்கள். உங்களுக்கு உங்கள் இனமும், மொழியும் எவ்வாறு முக்கியமோ அதைப் போலவே ஒவ்வொரு இனத்தாருக்கும் அவரது மொழியும், கலையும் முக்கியம். திராவிட-ஆரிய வேறுபாடுகள் வெறும் கற்பிதம் என்று கதையளக்கும் நாகரீகக் கோமான்கள், இன்று ஒரு இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருப்பது இந்த ஆரிய-திராவிட மோதல்தான் என்பதை உணர்ந்துகொள்ளட்டும். நாகரீகமடைந்த சமூகத்தில் பிறப்பினால் இன்னொரு பிறவியின் மீது வேற்றுமை பாராட்டுவதும், இனவழிப்புக் குரோதம் கொள்வதும் அநாகரீகம் மட்டுமல்ல, தண்டனைக்குரிய சர்வதேசக் குற்றம். இதனை நாம் செய்யலாமா, என் இந்தியத் தாய்நாடே?)

4. இலங்கையில் ஈழம் பிறந்தால், அது இந்தியாவுக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்தும் என்ற கற்பிதம். (இது ஒன்றுக்கும் உதவாத வாதம். இன்றைக்குத் தமிழ்நாட்டில் எந்தவொரு தமிழனும் தன்னை "நான் முதலில் இந்தியன், பிறகுதான் தமிழன்" என்று சொல்லிக் கொள்வதில் இறுமாந்து களிப்பெய்திக் கிடக்கிறான். அவனைப் புரட்டிப் போடுவது நடவாத காரியம். 1960களில் தனித்தமிழ்நாடு போராட்டத்தில் சிறைக்குப் போன மாணவர்கள் எல்லாம் கிழவராகிப் போய் அவர்தம் பேரப்பிள்ளைகளுக்கு இந்தியும், ஆங்கிலமும் கற்றுக் கொடுக்கும் காலத்தில் வாழ்கிறோம். அந்தப் பேரப் பிள்ளைகள் இந்தி படிப்போமா அல்லது ஆங்கிலம் படித்து அமெரிக்காவுக்குப் போவோமா என்றிருக்கின்றன. இந்த நிலையில் எங்களுக்குத் தனித் தமிழ்நாடு ஏன்? தனியாக ஒரு தமிழ்நாடு தந்தாலும் நாங்கள் ஒன்றாக இருந்துவிடத்தான் போகிறோமா, நாலே நாளில் எங்கள் அரசியல்வாதிகள் (கோமாளிகள் என்று சரத் பொன்சேகா சொன்னானே, அதே ஆட்கள்தான்) இலங்கைக்கோ, இந்தியாவுக்கோ, அல்லது சீனாவுக்கோ தமிழ்நாட்டைத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, குடும்பமும் குட்டியுமாக அமெரிக்காவில் வந்து செட்டிலாகிவிடுவோம். அதனால் தனித்தமிழ்நாடெல்லாம் நீங்கள் கொடுத்தாலும் நாங்கள் வாங்கும் நிலையிலில்லை. எங்களுக்கு உங்கள் ஆதங்கம் புரிகிறது, இந்தியாவிலேயே புத்திசாலியான கூட்டம், சொன்னால் சொன்ன வேலையைச் செய்யும் அடிமைக் கூட்டம், ஒருவனையொருவன் காட்டிக் கொடுக்கும் கூட்டம், எங்களைப்போல, ஒரு நாட்டுத் தலைமைக்குக் கிடைப்பது அரிதுதான். எங்களை விட்டுவிட உங்களுக்கு எப்படி மனம் வரும்? அப்படியே நீங்கள் விட்டாலும், நாங்கள் இந்தியாவை விடுவதாக இல்லை. ஆகவே நீங்கள் தயவு செய்து, எங்களை மாதிரி செம்மறியாடுகள் உங்களோடு நிரந்தரமாக இருக்க வேண்டுமே என்ற ஆதங்கத்தில், ஈழத்திலிருக்கின்ற மக்களைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கு வேண்டியது தனி ஈழமோ, இலங்கையினுள்ளேயே தீர்வோ, அதை அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும், நீங்கள் உங்களது அதீத கற்பனையினாலும், எங்கள் மேல் கொண்ட காதலாலும் இன்னொரு நாட்டின் இனத்தை அழிக்காதீர்கள்.) 


அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதும்...என்பது சிலப்பதிகாரம். எழுதிவைத்தவன் ஒரு முனி. நாம் முனிகளை மதிக்கும் சமூகம். மெய்ஞானத்தைப் போற்றும் சமூகம். அறம் மட்டுமே நிலைக்கும் என்ற மாறாத நம்பிக்கையுடையவர்கள். பிறர்க்கின்னா செய்தால் தமக்கின்னா தானே வரும் என்று படிக்கிறவர்கள். அதற்குத்தான் தர்மச் சக்கரம், ஒன்வேயில் இல்லாமல் சக்கரமாக இருக்கிறது. இன்று அறத்தை நாம் கொன்றால், நாளை அறம் நம்மைக் கொல்லும். குடிமக்கள், அரசு இவை இரண்டையும் பார்த்தால், அரசுக்குத்தான் பொறுப்பு அதிகம். குடிகள் செய்யும் தவறுகளுக்கு அரசே பொறுப்பு. குடிகுணங்காக்க வேண்டியது அரசின் கடமை. அதனை ஒரு அரசு செய்யாது விட்டுவிட்டு, குடிகள் குணங்கெட்டுப் போனபிறகு அவர்களைத் தகாக வழிகளில் தண்டிப்பதன் மூலம் அரசே குணங்கெட்டுப் போகிறதென்றால்....ஒரே குணக்கேடும், பிணக்காடும்தான். தவறு நம் பக்கம் இருக்கிறது. இந்தியாவே, என் தாய்நாடே, நாம் தவறு செய்கிறோம். நிறுத்து. நிறுத்து. நிறுத்து. இனியும் தாமதமில்லை. தவறுக்கு மேல் தவறு செய்யாதே, அறம் உன்னைக் கொல்லும். உனக்கு என் NRI பணத்தைக் கொடுத்ததற்காக என்னையும் கொல்லும். அறம் நம்மைக் கொல்லும். எனவே என் இந்திய அரசே, முறையைக் காப்பாற்று. கொலை செய்யாதே, கொடுமை செய்யாதே!

தி இந்துவின் பத்திரிகா தர்மம்!

ஒரு பத்திரிகையாளனின் தற்கொலையைப் பற்றிய செய்தியை வெளியிடும் இந்தப் பத்திரிகை, அவனொரு பத்திரிகையாளன் என்பதை அடியோடு மறைத்து 


 என்று செய்தியை வெளியிட்டிருக்கிறது. அவன் மனிதன் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஆனால் தி இந்துவுக்கு மனிதத்தன்மை இருக்கிறதா என்பதைத்தான் சந்தேகிக்கிறேன். 


இவர்கள்

இவர்கள் என் தாயையும் மகளையும் போலிருக்கிறார்கள்.