உலகே மாயம், வாழ்வே மாயம்

நானும் தெனமும் குந்திப் பாக்குறேன். நாலு வரி எழுதுறதும், பின்னோக்கித் தட்டித்தட்டி, இல்லன்னா ஒன்னா சேத்து இழுத்து ஒரே அமுக்குல அழிச்சுத் தள்ளிப்புட்டு "ஹ போயி எதயாச்சும் படிக்கலாம்"னு தாவித்தாவி மணியக் கரைச்சு, வேலைக்கிப் போயி, ஆடிக் களைக்கிறதும். இதே சக்கரந்தான். இதுக்குக் காரணம் இல்லாம இல்ல.

ஊர்லயெல்லாம் நெடுஞ்சாலையில சில இடங்கள்ல விபத்துப் பகுதின்னு போட்டிருப்பாங்கள்ல, அந்தமாதிரி ஆகிப்போச்சு நம்ம வலைச்சாலை. வண்டியை எடுத்தாலே மோதல், அடிதடி, வெட்டுக் குத்து, நீயா நானா. சண்டை ஒரு வாரம், கிளைச் சண்டை மறு வாரம், கிளை மெயினாகி அதற்கடுத்து, போஸ்ட் ட்ரமாட்டிக் டிஸார்டர், சாம்பல், புகை, உள்நெருப்பு விவகாரம் தொடர்கதை. இத்தனைக்கும் சண்டைக்காரனாகவா பெத்துப் போட்டிருக்காங்க என் அப்பனாத்தா? "அன்பைப் பெருக்கி எனதாருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே இறையேன்னும், அப்பா நான் வேண்டுதல் கேட்டருள்புரிய வேண்டும் ஆருயிர்கட்கெலாம் நான் அன்பு செயல் வேண்டும்" அப்படின்னும் கருப்பையா கோயில் கொளத்துல குளிச்சுப்புட்டு காலையில காலையில அப்பாவோட சேர்ந்து பாடிப் பாடித்தான் வளர்ந்தேன். ஆனாலும் பாருங்க வலைப்பூக்கள்ல சண்டைன்னு வந்தா அதுல எங்கேயாச்சும் ஒரு எடத்துலயாவது எம்பூ பூத்திருக்கும் 'நல்ல' பாக்கியம். இப்படியொரு ஒருமைப்பாட்டுக் குழப்பியா இருக்கது தேவையான்னு ஒரு எண்ணம்.

அப்புறம் செய்தி சார்ந்து எழுத முடியாத ஒரு மனோநிலை. அதான் கூகிள்ல தட்டுனா போன நிமிஷத்துல யாரு முக்குனா மொதக்கொண்டு என்னத்தப் பத்தித் தெரியனுமோ அத்தனையும் வருது, இதுல என்னத்துக்கு நான் வேற தினசரி மாதிரி வேலை பாக்கனும். ஜெயலலிதாவும் வைக்கோவும் அடிச்சுக்கிட்டதை நான் எழுதி என்னாவப் போவுதுங்கறேன். செய்தி பாதிக்கிதாம், அந்தப் பாதிப்புதான் இன்றைய நானாம். என்ன, நியூஸ்பேப்பரே பாக்காதவங்க என்னோட வலைப்பூவுக்கு வாராங்களா என்ன? Xinhua, News Today, Reuters, தினமணி, தினமலர் (கடைசிச் செய்திகள்), தினத்தந்தி அல்லாரும் பாடுறதை நானும் ஒருக்கப் பாடணுமா? வேணுமின்னா அதுலயே யாரும் எழுதாமக் கெடக்குறதைப் புடிச்சாந்து போடலாம், இந்த வார தலித் கொடுமைகள், அருந்ததி ராயின் ஆகஸ்டு பேச்சு, ஆணுறை விநியோகிக்க விடாமத் தடுக்கும் தமிழகப் போலீஸ் இப்படியாக. ஆனா இதுலயும் சிக்கல். ஏன்னா இதெல்லாம் பெரச்சனை புடிச்சது. அதாவது தாய்நாட்டுல இருக்க பெரச்சனைகளைப் பேசக் கூடாதுங்கற ஒரு சங்கடமான நெலம. (பெரச்சனை மட்டுந்தான் கண்ணுல படுதா, நல்லதே படாதான்னு கேக்குறீங்களா? பஞ்சர் ஒட்றவரு முள்ளுக் குத்துன ஓட்டையத் தான் தேடுவாரு, அவரப் போயி நீங்க ஆப்டிமிஸ்டிக்கா இருக்கணும் இதோ பாருங்க இம்பூட்டு ட்யூபு நல்லாருக்கேன்னு கேக்க முடியாது). ஆனா இதையெல்லாம் எழுதப் போனா வம்பு வரும். இதையும் தாண்டி நடுநிலை யோக்கியர்களின் you peopleதனமான ஆதிக்கப் பேச்சுக்கள். இதெல்லாம் எனக்குத் தேவையா? மேலும் சண்டை போட்டுப் போட்டு அன்பு சுண்டி வத்தி எனக்கு மனுசத் தன்மை போயி சிடுமூஞ்சி ஆயிருவேனோன்னு உளவியல் பயம் வர ஆரம்பிச்சிடுச்சு.

ஆக, இவருக்கொரு மழை, அவருக்கொன்னு, ந்தோ அவருக்கொன்னுன்னு மாசம் மும்மாரிப் பொழியற கதை மாதிரி, நல்ல சேதி சொன்ன நண்பருக்கொரு முழுக்கு, நடுவுல நின்னு அமைதியாப் பாத்த அத்தனை பேருக்கும் ஒரு முழுக்கு, சண்டையிலே என்னோடு புரண்டோருக்கொரு முழுக்குன்னு முத்திருமுழுக்குப் போட்டுவிடலாமா என்றுகூட இருந்தது. சண்டை போட்டுப்புட்டு வீட்டுக்கு வந்தா ஏன் அங்க போறன்னுதான் அம்மாப்பா மொத கேள்வி. இந்த மாதிரி "தள்ளியிரு" அப்படின்னு சொல்லிச் சொல்லியே நம்மளை இப்புடி ஆக்கிட்டாங்கன்னு நெனக்கிறேன். எனக்குத் தெரிஞ்ச ஒரு இந்தியன் இருக்கான், மணிப்பூர்ல என்ன ஆனா எனக்கு என்ன மேன், என்னைப் பாதிக்காத வரைக்கும் நான் அதைப்பத்திக் கவலைப்படப் போறதில்ல, எனக்கு வேலைத் தலைக்கு மேலன்னு போறான். இந்த மாதிரி "யானை வாழ்ந்தா என்ன பூனை தாலிய அறுத்தா என்ன" வாழ்க்கைக்குப் பழக்கப் பட்டுப் போயிட்டம். புளியமரத்துல போயி ஆடுனா வம்பு வருதேன்னு அங்க போவாம இருக்க முடியுதா, ஆடாம இருக்க முடியுதா? அந்தந்த நேரத்துல அததைச் செஞ்சுப்புடணும். அதான் வந்துட்டேன். நீங்க அணைச்சாலும் சரி, அடிதடிக்கு வந்தாலும் சரியே. தீர்மானம் பண்ணிக்கிட்டு எழுத முடியாது, காதலிக்க முடியாது. இன்றைக்கு இந்தப் பினாத்தல், நாளைக்கு என்னவோ.

0 comments: