போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 1

சென்ற மாதம் சான்பிரான்சிஸ்கோவில் அருந்ததி ராய் உரையாற்றியிருக்கிறார். அதிலிருந்து சில பகுதிகளை தமிழில் தர முயன்றிருக்கிறேன். மொழி மாற்றத்தில் ஆலோசனைகளை வரவேற்கிறேன்.

ஆதிக்கங்களை எதிர்த்து, தம் உரிமைகளுக்காக மக்கள் தம் அரசுடனோ அல்லது ஒரு மாற்று நாட்டு அரசுடனோ போராடிய வண்ணம் இருக்கிறார்கள். இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் சந்திக்கும் முக்கியமான மூன்று சவால்கள் என்ன?

1. போராட்ட இயக்கங்களும் ஊடகங்களும்
போராட்டக்காரர்களும், ஊடகங்களும் சந்தித்துக் கொள்வது ஒரு சிக்கலான இடம். ஒரே இடத்தில் காலத்தைச் செலவிட செய்தித்தாகம் கொண்ட ஊடகங்களுக்குக் கட்டுப்படியாகாது என்பதை அரசு கற்றிருக்கிறது. வியாபாரத்தில் பணம் புழங்குவது போல ஊடகத்தில் பிரச்சினைகள் புழங்க வேண்டும். நாடுகள் முழுவதும் பழஞ்செய்திகளான வண்ணம் இருக்கின்றன. ஒரு போராட்டத்தின் மேல் சிறு நேரத்துக்கு ஒளியைப் பாய்ச்சிச் சடாரென்று விலகி முன்பை விட இருளில் தள்ளிவிடுகின்றன இந்த ஊடகங்கள். சோவியத் தன் படைகளை ஆப்கானிஸ்தானத்திலிருந்து மீளப்பெற்றபோது இதுதான் நடந்தது. இப்போது சி.ஐ.ஏவின் ஹமீத் கர்ஸாயை உட்கார வைத்து மீண்டுமொருமுறை ஆப்கானிஸ்தானைப் போரில் தள்ளியிருக்கிறது. இதே மாதிரித்தான் இன்னொரு சி.ஐ.ஏ இயத் அல்லாவியை ஈராக்கிலே நிறுத்தி, இப்போது கிட்டத்தட்ட ஊடகங்கள் இங்கிருந்தும் கிளம்பிவிடும்.

அரசுகள் "பொறுத்திருந்து பார்க்கும்" உத்தி மூலம் போராட்டங்களை வலுவிழக்கச் செய்வதில் தேர்ச்சியடைந்து வருகின்றன. அதே நேரத்தில் போராட்ட இயக்கங்கள் கண்ணைக் கவரும் விதத்திலும், சுலபமாய்க் கொள்ளப் படும் விதத்திலும் புதுப் புதுப் பிரச்சினைகளை உற்பத்தி செய்தவண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு சுய மரியாதையான மக்களின் இயக்கமும், ஒவ்வொரு பிரச்சினையும் தனக்கென ஒரு விளம்பர பலூனை வானிலே பறக்க விட்டிருக்கின்றன. இதே காரணத்தினால்தான் ஊட்டச்சத்து குறைவுப் பிரச்சினையை விட பட்டினிச் சாவு பிரச்சினை/விளம்பரம் அதிகக் கவனத்தைப் பெறுகிறது. தொலைக்காட்சிக்கு உகந்த வகையில், உடைந்து சீரழிக்கும் காட்சி தெரியும் வரை அணைகள் பெருஞ்செய்தியாவதில்லை. ஆனால் அப்போது செயலுக்குக் காலம் கடந்துவிட்டிருக்கும். மேலேறும் தண்ணீருக்குள் நின்று உன் வீடும் உடைமைகளும் மூழ்குவதைப் பார்த்துப் போராடுவது பழைய உத்தி. தொலைக்காட்சிகளுக்கு அது சலித்துவிட்டது. எனவே அணைகளால் இடம் பெயர்க்கப் பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் புது மாயங்களைக் காட்டிப் போராட வேண்டியிருக்கிறது அல்லது போராட்டத்தை விட்டுவிட வேண்டியிருக்கிறது.

வண்ணமயமான ஆர்ப்பாட்டங்களும், வாரக்கடைசி ஊர்வலங்களும் முக்கியமானவைதான், ஆனால் போர்களை நிறுத்துவதற்கு அவை வலிமையற்றவை. போர்வீரர்கள் சண்டையிடுவதையும், ஆயுதங்களைக் கப்பல்,விமானங்களில் ஏற்றுவதையும், ஆதிக்கங்கள் உலகெங்கும் திறந்திருக்கும் பொருளாதாரக் கதவுகளைப் புறக்கணிப்பதையும் செய்யும்போதே போர்கள் நிற்கும். குடிகளின் கீழ்ப்படியாமை மூலம் நாம் ஒரு சேதியைச் சொல்ல விரும்பினால், முதலில் இந்த ஊடகங்களின் பிரச்சினை சார்ந்த தனம், சாதாரணமானவற்றை விலக்கும் தனம் ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுபடவேண்டும். இயல்பு என்று அரசுகள் அழைப்பதை (உண்மையில் கொடூரம், அநீதி, ஒத்துக்கொள்ளப் படமுடியாதது) விசாரணை செய்ய நாம் நம் அனுபவத்திலிருந்தும், கற்பனையிலிருந்தும் புதிய உத்திகளை உண்டாக்க வேண்டும். உணவு, தண்ணீர், இருப்பிடம், சுயமரியாதை போன்ற சாதாரணத் தேவைகளைக்கூட ஒரு தொலைதூரக் கனவாக்கி விட்ட திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளின் நிலையை நாம் தோலுரிக்க வேண்டும். உண்மையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது, போர் என்றால் பிழையான/ நீதியற்ற அமைதியின் விளைவே என்று உணர்தலாகும். போராட்ட இயக்கங்களைப் பொறுத்தவரையில், அவர்களுடைய மக்கள் கூட்டத்துக்கு இணையாக வேறெந்தப் பலமும் கிடையாது. பலமான இந்தக் கூட்டத்துக்கு எந்த (அரசுகளிடம்) மாற்றும் கிடையாது.

நிறுவனங்களை உலகமயப்படுத்தலினால், முடிவு செய்வோருக்கும் அந்த முடிவுகளினால் பாதிக்கப் படுவோருக்குமான தூரம் பெருகிவிட்டது. World Social Forum போன்ற மன்றங்களால் இத் தொலைவு குறைக்கப் பட்டிருக்கிறது. பல நாட்டு மன்றங்களுக்கிடையேயான தொடர்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. இந்தக் கூட்டு முக்கியமானதும் பாதுகாப்பானதுமாகும். உதாரணமாக, இந்தியாவின் முதல் தனியார் அணை, மகேஷ்வர் அணை, கட்டப்பட்ட போது நர்மதா பச்சாவொ அண்டோலன் (NBA), ஜெர்மானி, சுவிட்சர்லாந்து இயக்கங்களும், பெர்க்லியின் பன்னாட்டு நதிகளின் கூட்டமைப்பு ஆகியவையும் இணைந்து செயலாற்றி அத்திட்டத்திலிருந்து பன்னாட்டு வங்கிகள் மற்றும் நிறுவனங்களை விலகிக் கொள்ளச் செய்தது. மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடாமலிருந்திருந்தால் இது சாத்தியமாகியிருக்காது. இந்த உள்ளூர் இயக்கங்களின் போராட்டமே வெளியுலகில் இருக்கும் ஆதரவாளர்களால் உலகளவில் பெரிதொலிக்கப் பட்டு அந்த அணைத்திட்ட முதலீட்டாளர்களைப் பின்வாங்கச் செய்தது. குறிப்பிட்ட திட்டங்கள், குறிப்பிட்ட நிறுவனங்களைக் குறிவைத்த எண்ணிலடங்கா இத்தகைய கூட்டு முயற்சிகள், இன்னொரு உலகைப் படைக்க உதவும். முதலில் நாம் ஆரம்பிக்க வேண்டிய நிறுவனங்கள் யாரெல்லாம் சதாம் உசேனுடன் கூட்டுச் சேர்ந்து வியாபாரம் செய்தார்களோ அவர்களும், இப்போதைய ஈராக்கிய சீரழிவால் யாரெல்லாம் லாபம் அடைகிறார்களோ அவர்களும்.

(தொடரலாம்)

0 comments: