குசேலனைப் பற்றி தந்தை பெரியார்

அவசியம் பார்க்க வேண்டிய படம்!

குசேலன் - பாகம் 1
குசேலன் - பாகம் 2

வாஷிங்டனில் நாங்கள் கண்ட கறுப்பு ஜூலை பேரணி

கறுப்பு ஜூலை பேரணி அறிவிப்பைக் கண்டதும் போக வேண்டுமென நினைத்தேன். இங்கிருந்து வாஷிங்டன் சுமார் 500 மைல்கள். ஒரு நாள் விடுப்பில் எட்டு மணி நேரங்கள் ஓட்டிக் கொண்டு போய், திரும்பி வந்து அடுத்த நாள் வேலைக்குப் போவது சற்றே கடினம்தான் என நினைத்துத் தயங்கியபோது நண்பர் ஒருவர் சொன்னார், ராலே (வட கரோலினா)யிலிருந்து பேருந்து கிளம்புகிறது. ராலே நாலைந்து மணி நேரப் பயணந்தான். கிளம்பினேன். மகன் நானும் என்றார். ஆறு வயதாகிவிட்டதே, இனி இதற்கெல்லாம் தயாராகத்தான் இருக்க வேண்டும், அதோடு விடுமுறைதானே, சரி கிளம்புங்கள் என்றுவிட்டேன். நாங்கள் இருவர் மட்டும் தொலைதூரம் காரோட்டுவது இதுவே முதன்முறை. வழியில் பேச்சும் சிரிப்புமாகச் சில நேரம் இருந்துவிட்டுத் தூங்கிப் போனார். இரவில் மழையும் இடியும் மின்னலுமாக, அதுவொரு அனுபவம். இரவு 12 மணி வாக்கில் ராலே போய்ச் சேர்ந்தோம். காலை மூன்றறைக்கு எழுந்து தயாராகிப் பேருந்திற்குச் சென்றோம். சுமார் 45 பேர்களுடன் பேருந்து கிளம்பியது.

தூங்கி வழிந்து அதற்கு நடுவில் காலைச் சாப்பாடும் சாப்பிட்டு ஒரு வழியாய் முழித்த போது கிட்டத்தட்ட பத்து மணியாகியிருந்தது, பேருந்தும் வாஷிங்டனில் இருந்தது. குழந்தைகள் அவர்களுக்கான தோழமைகளை விரைவிலேயே கண்டுகொள்கிறார்கள். அவர்கள் ஆடித் திரிந்தார்கள். பேரணியை ஒழுங்கு செய்திருப்பது PEARL என்ற இளைஞரமைப்பு. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்திருக்கும் பிள்ளைகளால் ஆரம்பிக்கப்பட்டு சுமார் மூன்றாண்டுகளாக இயங்குவது இது. இவ்வமைப்பின் முக்கிய நோக்கம், ஆட்சியாளர்களுக்கு, ஈழத்தில் மக்கள் படும் அவலங்களைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருத்தல், அதற்காக அமெரிக்க மக்களைத் திரட்டுதல். இவ்வாண்டு பேரணியில் பர்மாவின் விடுதலைப் போராட்டத்தினரும் இணைந்து கொண்டனர். 8.8.88 அன்று நடைபெற்ற எழுச்சியில் 3000 பர்மியர்கள் கொல்லப்பட்டதை அவர்களும் நினைவு கூர்ந்தார்கள். இந்த இரண்டு நாடுகளிலும் சீனாவின் பங்கு முக்கியமானது. சூடானுக்கு மட்டுமல்லாது இலங்கைக்கும் பர்மாவுக்கும் ஆயுதங்களையும், நிதியையும் வழங்கி, அங்கு ஒரு பெரிய போரைத் திணிப்பதில் சீனாவின் கை இருக்கிறது. எனவே சீனாவை இதை நிறுத்துமாறு கோருவதும் இப்பேரணியின் நோக்கம்.

வெள்ளை மாளிகையை ஒட்டிய செனட் மாளிகையின் வெளியில் இப்பேரணி நடந்தது. ஒரு அம்மா ஒலிபெருக்கியின் மூலம் குரல் எழுப்ப, பேரணிக்கு வந்திருந்தோர் வலமாக வந்து அவருடன் இணைந்து ஒலித்தோம். இவரைப் பின்புதான் Dr. Ellyn Shander என்று அறிந்தேன். சுனாமிக்குப் பின் பணிக்கு ஈழத்திற்குச் சென்று வந்ததன் பின்னர் அமெரிக்காவில் போராட்டங்களுக்குத் தனது ஆதரவினைத் தெரிவித்து வருகிறார். சுமார் இரண்டாண்டுகளுக்கு முன்னர் petitiononlineஇல் இவரது மனு ஒன்றை வாசித்த நினைவு இருக்கிறது. மகனும் நானும் கைகளைக் கோர்த்துக் கொண்டு குரலெழுப்பிக் கொண்டு போனது எனக்கு உணர்வு பூர்வமாக இருந்தது. மனமெங்கும் மக்களின் அவலத்துக்கு ஒரு முடிவு வராதா என்ற ஏக்கம் நிரம்பியிருந்தது. மகனின் ஓங்கிய குரல் என்னுள் நம்பிக்கையையும் எழுச்சியையும் பொங்க வைத்துக் கொண்டிருந்தது. அவரது கைகளை இறுகப் பற்றிக் கொண்டேன். வலத்தின் முடிவில் கூட்டம் ஆரம்பமானது. கொளுத்தும் வெய்யிலுக்குச் சிலர் மர நிழலில் அண்டிக் கொண்டார்கள். இரு செனட் உறுப்பினர்களின் உரைகள் வாசிக்கப்பட்டன. ஒரு மக்களவை உறுப்பினர் வந்து பேசினார். அவர்களின் உரைகள், தற்போதுதான் தாம் இந்நிகழ்வுகளைப் பற்றி அறிவதாகவும், இதுபோன்ற அறிவுறுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்து நிகழ வேண்டும் என்பதாகவும், மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் தாம் துணை நிற்போம் என்பதாகவும் அமைந்திருந்தது.
பர்மிய அமைப்பினர், இனப்படுகொலைக்கு எதிரான மாணவர் அமைப்பினர், ஊடக சுதந்திரத்திற்கான அமைப்பினர் எனப் பலரும் வந்திருந்து தம் ஆதரவினைத் தெரிவித்தது மனதுக்குத் தெம்பை அளித்தது. 1983 கலவரத்தில் தப்பிப் பிழைத்த சிலரின் அனுபவங்கள் சொல்லப்பட்டன. இறுதியில் சிலர் பாடல்களைப் பாடினார்கள். இரு அம்மையார்கள் தமிழில் பாடினார்கள். Ellyn Shander மார்டின் லூதர் கிங்கின் ஒரு பாடலைப் பாடியபோது அவருடன் எல்லோரும் இணைந்து பாடினோம். PEARL இளைஞர்களும் இரு பாடல்களைப் பாடினர். கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு மலர்வணக்கம் செய்யப்பட்டது. சுமார் 5 மணிக்கு நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தன.

ஒரு போராட்டத்துக்குப் பல முகங்களுண்டு. ஒவ்வொரு முகத்திலும் நிற்பவரின் வேலைகளும் வெவ்வேறு மாதிரியானவை. எல்லாமும் சேர்ந்தால்தான் போராட்டம் வெற்ரியடைகிறது. ஈழத்தில் போர்க்களத்திலும், பாராளுமன்றத்திலும், வீதிகளிலும் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வெளி நாடுகளிலே இருப்பவர்கள் அப் போராட்டத்திற்கு என்ன செய்ய முடியும்? மனித உரிமைகள் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக அங்கே தொடர்ந்தும் மீறப்பட்டு வருகிறது. அரசாங்கம், மக்களைக் காப்பதற்குப் பதிலாகக் கொடிய அடக்கு முறையை ஏவியபடி இருக்கிறது. மற்ற நாட்டினர் தத்தமது காரியங்களிலே கண்ணாயிருக்கிறார்கள். இந்நிலையில், நாம் நம் தரப்பின் நியாயங்களை எல்லோருக்கும் சொல்வது அவசியமாகிறது. அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், தமிழ் என்றொரு மொழி இருப்பதையும், இலங்கை என்றொரு நாடு இருப்பதையும் அறியாதவர்கள் அதிகம். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் அடங்குவர். எனவே அமெரிக்கர்களிடம் ஈழத்தைக் குறித்த புரிதல் ஏற்படுத்தப்பட வேண்டும், அங்கு நிகழும் மனிதவுரிமை மீறல்கள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்டதுதான் PEARL. இது மக்களின் கருத்துரிமையின் வழியே சென்று ஈழத் தமிழர்களுக்காகப் பாடுபடும் இது ஒரு சட்டபூர்வமான அமெரிக்க அமைப்பு. வெளிநாடுகளில் இருக்கும் நாம் செய்ய வேண்டியதெல்லாம், PEARL போல அந்தந்த நாடுகளில் இருக்கும் அமைப்புகள் நடத்தும் இது போன்ற நிகழ்வுகளுக்கு ஆதரவளித்தல்.


பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது மகன் கேட்டார், "China China, Shame on You" என்று ஏன் கத்தினோம் என்று. தம்பி, இது உன்னுடைய சீன நண்பர்களுக்கோ, சீன மக்களுக்கோ எதிரானதில்லை. அவர்களுடைய அரசாங்கத்தின் குறிப்பிட்ட ஒரு செயலுக்கு மட்டுமே எதிரானது என்று விளக்கினேன். குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். இப்பேரணியில் கலந்து கொண்டதும், மகனோடு சென்று வந்ததும் மிகுந்த நிறைவையளித்தன. ஈழத்தில் உரிமையோடான வாழ்வொன்று மலரும் என்ற நம்பிக்கை ஓங்குகிறது. பேரணியை ஒழுங்கு செய்த PEARL இளையோர்களுக்கும், பயணத்தில் உதவிய வட கரோலின நண்பர்களுக்கும் எனது நன்றி!

தமிழ் அறிஞர்களா, யார் அவர்கள்?

தமிழ் அறிஞர்கள் என்று சொல்கிறோமே, அவர்களில் சிலர் இங்கே இருக்கிறார்கள். இவர்களில் எத்தனைப் பேரை உங்களுக்குத் தெரியும்? பெயரையாவது கேள்விப்பட்டிருக்கிறோமா என்பதற்கு ஒரு சிறு சுய சோதனை! தொகுக்கும் தமிழத்துக்கு நன்றி!

ஷோபாசக்தி போன்றவர்களெல்லாம் பைத்தியங்கள் - தியாகு

கீற்றில் தியாகுவின் பேட்டியிலிருந்து...

"...சாதி ஒழிப்பு குறித்து தனியான சிந்தனையோ, வேலைத்திட்டமோ சி.பி.எம்மிடம் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை நிலப்பிரபுத்துவ சமூகத்தின் மிச்சசொச்சம் தான் சாதி. வர்க்கப் போராட்டம் நடந்து முடியும்போது சாதி தானாக ஒழிந்து விடும் என்பது தான் அவர்களது கருத்து. இதனால் தான் இடஒதுக்கீட்டில் அவர்களுக்கு ஆர்வம் கிடையாது. இட ஒதுக்கீடு தொழிலாளி வர்க்கத்தைப் பிளவுபடுத்தி, முதலாளித்துவ ஒழிப்பு ஐக்கியத்தை அழித்து விடும் என்பது அவர்கள் கருத்து..."

"...52ல் தி.மு.க. தேர்தலில் போட்டியிடவில்லை. இந்த அதிகாரத்தின் மூலம் திராவிட நாடு சாத்தியமில்லை என்பதால் அவர்கள் போட்டியிடவில்லை. அதே தி.மு.க.தான் 57ல் போட்டியிடுகிறது. இப்போது வரை அது நீடிக்கிறது. இடையில் கட்சிக்குப் புதிதாக வந்தவர்கள் ஆசை காட்டினார்கள்; இவர்கள் பலியானார்கள். தேர்தலில் போட்டியிட்ட போது பதவிகளின் மீது மோகம் வந்தது. அந்தப் பதவிகள் தங்கள் நோக்கங்களுக்கு உதவுமா என்று பார்க்கத் தவறி விட்டார்கள். அப்படியே தங்களது குறிக்கோளையும் இழந்து விட்டார்கள். இலக்கை கைவிட்டு அமைப்பைப் பாதுகாத்தார்கள்..."

"...நக்சலைட்டுகள் இப்போதும் யாரையாவது திட்டுவது, சொன்னதையே சொல்வது என்றுதான் இருக்கிறார்கள். இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவே இல்லை. இன்றுவரை எந்த ஆயுதப் போராட்டமும், புரட்சியும் நடந்து விடவில்லை. அதற்காக அவர்களை நான் குறைகூறவில்லை. நிஜ வாழ்க்கை அதை அங்கீகரிக்காதபோது அதை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள் என்பது தான் என் கேள்வி. சமூகத்தின் உணர்வுநிலையில் அடிப்படை மாற்றம் ஏற்பட்டிருக்கும்போது, அந்த மாற்றத்தை செயல்படுத்த அரசு எந்திரம் தடையாக இருக்கும்போது ஆயுதம் உதவும். ஆனால் சமூகத்தின் உணர்வு நிலையையே மாற்றுவதற்கு ஆயுதம் உதவாது..."

"...சாதி குறித்து தெளிவான பார்வை இருந்தால் அதை ஒரே நாளில் சட்டம் போட்டு தடுத்துவிட முடியாது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அதிகாரத்தை கைப்பற்றிய பின்பு, சாதி ஒழிப்பில் முக்கிய கவனம் செலுத்திய பின்னாலும் அது பண்பாட்டுத் தளத்தில் வெகுகாலம் நீடிக்கும். புலிகள் சாதிமறுப்பை தீவிரமாக கடைப்பிடிக்கிறார்கள். சொந்த சாதிக்குள் திருமணம் செய்வதை அமைப்புக்குள் தடை செய்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை ஷோபாசக்தி போன்றவர்களெல்லாம் பைத்தியங்கள். அவர்கள் மீது எனக்கு எந்த மரியாதையும் கிடையாது. புலிகளுக்கு எதிராக தொடர்ந்து அவதூறு செய்பவர்கள் அரசின் கைக்கூலிகளாக கூட இருக்கலாம்..."

"...சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கம் என்பதே பார்ப்பன எதிர்ப்பும், இந்தி எதிர்ப்பும் தான். கடைசிவரையில் அவர் அதில் உறுதியாக இருந்தார். தமிழ்நாடு தமிழருக்கே என்ற அரசியல் கோரிக்கையை முன்வைத்தாலும் அரசியல் இயக்கம் எதையும் அவர் கட்டவில்லை. அமைப்புக்குள் ஜனநாயகத்தன்மையை கட்டமைக்காதது ஒரு மிகப்பெரிய குறை. தான் சொல்வதைத் தான் கேட்க வேண்டும் என்ற நிலையை அவர் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாகத் தான் வீரமணி போன்றவர்கள் இப்படி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தெளிவான கருத்தியலோ, அறிவியல் கண்ணோட்டமோ பெரியாரிடம் இல்லாததால் தான், அவர் பெயரைச் சொல்லி ஜெயலலிதாவால் அரசியல் நடத்த முடிகிறது..."

பேட்டியை முழுமையாகப் படிக்க இங்கு அழுத்தவும்