போராட்டங்களை ஒடுக்குவது எப்படி? - 4

அருந்ததி ராய் அடுக்கிய பிரச்சினைகளோடு முடிக்க விருப்பமில்லை. கடைசியில் இதற்கெல்லாம் ஏதாவது தீர்வு வைத்திருக்கிறாரா அல்லது முடிவாக என்ன சொல்லுகிறார் என்று பார்க்கத்தான் இந்தப் பதிவு.

இதன் முந்தைய பதிவுகள் (பாகம் 1, பாகம் 2, பாகம் 3).

இனி அவரது உரையிலிருந்து:
எதிர்ப்புகளுக்கான உத்திகளை வடிவமைத்துக் கொள்ளுவதைப் பற்றிய விவாதங்கள் ஏதும் இன்றைய உலகில் நடைபெறவில்லை. எதிர்ப்புகளைக் எப்படிக் காட்டுவது என்று வழிமுறைகளைத் தேர்ந்தெடுப்பது மக்களின் கையில் மட்டுமில்லை. இது அரசாங்கத்தின் கையிலும் இருக்கிறது. எக்கச்சக்கமான ராணுவ பலத்துடன் அமெரிக்கா, ஈராக்கை ஊடுருவி ஆக்கிரமித்து வைத்திருக்கும்போது, அதற்கான எதிர்ப்பை ஒரு முறையான ராணுவத்திடமிருந்தா எதிர்பார்க்க முடியும்? அப்படியே முறையான ராணுவ எதிர்ப்பாகவே இருந்தாலும் அதுவும் தீவிரவாதம் என்றே அழைக்கப்படும். விந்தை என்னவென்றால், அமெரிக்காவின் ஆயுதங்களும், நிகரில்லா வான்படை மற்றும் சுடுதிறன் ஆகியவையும், பயங்கரவாதத்தை நிர்ப்பந்திக்கின்றன. செல்வமும் வலிமையுமில்லா மக்கள், தம் உத்திகளாலும் திருட்டுத்தனத்தாலும் நிரவுகிறார்கள்.

நம்பிக்கையிழந்தும், முரட்டுத்தனமாக ஒடுக்கப்பட்டும் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அரசாங்கங்கள் வன்முறையற்ற போராட்டங்களை மதிக்கவில்லையென்றால் அது வன்முறைக்கான உரிமையத்தான் வழங்குவதாகும். வன்முறையற்ற வகையில் தெரிவிக்கப்படும் மாற்றுக் கருத்துக்களின்பேரில் மாற்றங்களைக் கொண்டு வராத எந்த அரசும் பயங்கரவாதத்தைக் கண்டிப்பது நம்புதற்குரியதன்று. ஆனால் இத்தகைய வன்முறையற்ற எதிர்ப்பியக்கங்கள் நசுக்கப் படுகின்றன. மக்களை ஒன்று திரட்டுதலோ அல்லது ஒரு நிறுவனமோ எதாயிருந்தாலும் சரி, அவை விலைக்கு வாங்கப்படுகின்றன, உடைக்கப் படுகின்றன அல்லது அலட்சியப்படுத்தப் படுகின்றன. இதே நேரத்தில் அரசுகளும், கூட்டுத்தாபன ஊடகங்களும், திரைப்படங்களும், நேரம், அவர்கள் மேல் குவியும் கவனம், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, பயங்கரவாதத்துக்கெதிரான போரின் மீது கொண்ட மதிப்பு எல்லாவற்றையும் பகட்டாகச் செலவிடுகின்றன. இவையெல்லாம் சேர்ந்து வன்முறையைத் தெய்வீகமாக்கிவிடுகின்றன.

இது நமக்குச் சொல்லும் சேதி நிலைகுலையச் செய்வதும் ஆபத்தானதும் ஆகும். இச்சேதி என்னவென்றால்: நீ பொதுமக்களின் துன்பத்தை வெளியே கொண்டு வர விரும்பினால் வன்முறையே வன்முறையற்ற வழியை விட ஆற்றல் மிக்கது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமிடையேயான பிளவு மேலும் வளரும் இவ்வேளையில், இருக்கின்ற வளங்களைக் கைப்பற்றுவதும் ஆளுவதுமே பெரும் மூலதனக்காரர்களுக்கு மிக முக்கியமானதாகிவிடுகிறது. இது அமைதியின்மையைத்தான் வளர்க்கும்.

பேரரசின் மாற்றுப் பக்கத்திலே இருப்பவர்களுக்கு இந்தச் சிறுமைப்படுத்தப் படுதல் பொறுக்க முடியாததாயிருக்கிறது. அமெரிக்காவால் ஈராக்கில் கொல்லப்படும் ஒவ்வொரு குழந்தையும் நம் குழந்தை. அபு க்ரெய்பிலே சித்ரவதை செய்யப்பட்ட ஒவ்வொருவரும் நம் தோழர். அவர்களுடைய அலறல் நம்முடையது. அவர்கள் சிறுமைப்படுத்தப் பட்டபோது நாமும் சிறுமையடைந்தோம். ஈராக்கிலே போராடும் அமெரிக்கச் சிப்பாய்கள் இருக்கிறார்களே, பெரும்பாலும் ஏழ்மையிலிருந்தும் சிற்றூர்களிலிருந்தும் வந்த தன்னார்வலர்கள், அவர்களும் ஈராக்கியர்களைப் போலவே இக்கொடு நிகழ்வுக்குப் பலியாடுகளே. இப்போர்வீரர்கள் தமக்கென்றில்லாத ஒரு வெற்றிக்காக சாகச் சொல்லப் படுகிறார்கள்.

CEOக்கள், வங்கியாளர்கள், அரசியல்வாதிகள், நீதிபதிகள், தளபதிகள் போன்ற பெரியோர்கள் மேலிருந்தபடி கீழே நம்மைப் பார்த்துத் தலையை முடியாதென ஆட்டுகிறார்கள், "வேறு வழியில்லை" என்கிறார்கள். போர் நாயை அவிழ்த்து ஏவிவிடுகிறார்கள். அப்புறம் என்ன நடக்கிறது, ஆப்கானிஸ்தானின் அழிவுகளிலிருந்தும், ஈராக், செச்னிய இடிபாடுகளிலிருந்தும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன, காஷ்மீர வீதிகளிலிருந்தும், கொலம்பியாவின் மலை, வெளிகளிலிருந்தும், ஆந்திரா, அஸ்ஸாம் காடுகளிலிருந்தும், சிலீரிடும் இந்தப் பதில்தான் வருகிறது, "பயங்கரவாதத்தைத் தவிர வேறு வழியில்லை".

பயங்கரவாதம், கிளர்ச்சி, ஆயுதப் போராட்டம், எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். அது ஆபத்தானது, அசிங்கமானது, கடைபிடிப்போரையும் பலியாடுகளையும் மனிதத்தன்மையற்றவராக்கக் கூடியது. ஆனால் போரும் அப்படித்தான். நீங்கள் பயங்கரவாதம் என்பது தனியாரின் வசப்படுத்தப்பட்ட போர் என்று சொல்லலாம். பயங்கரவாதிகள் போரின் சில்லரை வியாபாரிகள். சட்டபூர்வமான முறையில் வன்முறைகளை நிகழ்த்த அரசாங்கத்துக்கு மட்டுந்தான் ஏகபோக உரிமை இருக்கிறது என்பதைத் தீவிரவாதிகள் நம்புவதில்லை.

மனித சமுதாயம் ஒரு பயங்கரமான இடத்துக்குப் பயணிக்கிறது. நிச்சயமாக பயங்கரவாதத்துக்கு மாற்று உண்டு. அதன் பெயர் நீதி. அணு ஆயுதங்களாலோ, பரந்த மேலாதிக்கத்தாலோ, டெய்சி கட்டர் குண்டுகளாலோ மோசடித்தனமான ஆட்சிக் குழுக்களினாலோ, லோயா ஜிர்காக்களினாலோ நீதியை விலையாகக் கொடுத்து அமைதியை வாங்க முடியாது. ஒரு சிலரின் மேலாதிக்கத்துக்கும் பெரும்பான்மைக்குமான ஆசைக்கு, சுயமரியாதைக்கும் நீதிக்கும் ஏங்குவோரின் விஞ்சும் வலிவினால் பதிலடி கொடுக்கப்படும். அது அழகானதா அல்லது ரத்தம் தோய்ந்ததா, என்ன மாதிரியான போராட்டம் அது என்பதெல்லாம் நம்மைப் பொறுத்துத்தான் இருக்கிறது.
(நிறைவு)

0 comments: