தென்னிந்தியாவில் எயிட்ஸைத் தடுக்க Yale & Gates

2003ம் ஆண்டின் புள்ளி விபரப்படி இந்தியாவில் இருக்கும் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 5.1 மில்லியன்கள். 2015 வாக்கில் நாம் ஆப்பிரிக்காவின் மொத்த நோயாளிக் கணக்கை மிஞ்சுவோம். ஏனெனில் நாளொன்றுக்கு மும்பையில் மட்டுமே 1000 புதிய நோயாளிகள் உருவாக்கப் படுகிறார்கள். நம் நாட்டில் நோயாளிகளில் பெரும்பாலானோர் வறுமையிலும், போதுமான சுகாதார வசதி, கல்விக் குறைவு போன்ற நிலைகளில் வாழ்பவர்கள் என்பது யாவரும் அறிந்ததே.

பில் கேட்ஸின் அறக்கட்டளையான பில்&மெலிண்டா கேட்ஸின் நிதியுதவியோடு ($2.1 மில்லியன்கள்) ஏல் பல்கலைக் கழகம் தற்போது ஒரு ஆராய்ச்சியைத் துவக்கியுள்ளது. இவ்வாராய்ச்சியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற எயிட்ஸால் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கின்றன. இவ்வாராய்ச்சியாளர்கள் கேர் எனப்படும் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட இருக்கின்றனர். இவ்வாராய்ச்சியின் நோக்கமானது அமைப்புத் தலையீட்டின் (structural intervention) மூலம் நோய்ப் பரவலைத் தடுப்பது. பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கும் ஒவ்வொருவரும் (பாலியல் தொழில் புரிவோர், அவர்களது வாடிக்கையாளர்கள், ஊசி மூலம் போதைப் பொருட்களை உட்கொள்வோர்) ஒரு வகையில் அந்த அமைப்பில்/சுழற்சியிலிருந்து விடுபட இயல்வதில்லை, அவ்வமைப்பிலிருந்தபடி பாதுகாப்பான முறைகளைக் கடைபிடிக்க முடிவதில்லை. இதனால் தன்னையும் தன்னோடு உறவு கொள்வோரையும் பாதிப்புக்கு உட்படுத்துகிறார்கள். அமைப்புத் தலையீட்டு முறையானது இவ்வகைக் கட்டமைப்பில் குறுக்கிட்டுப் பாதுகாப்பான முறைகளைக் கற்பிக்கிறது, அவற்றைப் பயன்படுத்துவதற்கு ஊக்கத்தையும் அளிக்கிறது. (தாய்லாந்து விபச்சார விடுதிகளில் ஆணுறைகள் கட்டாயமாக்கப் பட்டதும், அமெரிக்காவின் கனெக்டிகட் மாநிலத்தில் மருத்துவரின் ஒப்பமின்றிக் கடையிலிருந்து ஊசிகளை வாங்கிக் கொள்ளும் விதிகளைத் தளர்த்தியதும் எயிட்ஸ் பரவலைக் குறைத்ததாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.)

அமைப்புத் தலையீட்டு முறையின் குறிக்கோள்களாகப் பின்வருவனவற்றைச் சொல்லலாம்: (1)ஆணுறைப் பயன்பாட்டை அதிகரித்தல்; (2)பாலுறவுத் தொற்று நோய்களின் பரவலைக் குறைத்தல்; (3)பாலியல் தொழிலாளர்களின் சுயமரியாதையையும், அதிகாரங்களையும் மேம்படுத்தல்; மற்றும், (4) "முதலாளிகள்", இடைத்தரகர்கள், காவல்துறையினர் போன்றவர்களிடையே பாலுறவுத் தொழிலாளர்களைக் குறித்த போக்கு, நடைமுறை, திட்டங்கள் ஆகியவற்றை மேம்படுத்தல்.

ஏல் பல்கலையிலிருக்கும் இத்திட்டத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் கிம் ப்ளாங்கன்ஷிப்புடன் தொடர்பு கொண்டு மேலும் விபரங்களறிந்து எழுத விருப்பம். இது குறித்து அவரை இரண்டு வாரங்களுக்கு முன் தொடர்பு கொண்டேன். வெளிநாட்டுப் பயணத்திலிருப்பதாகச் செய்தி. வந்ததும் முயல்கிறேன்.

இதைப் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு:
1. ஏல் கையேடு
2. 2001ம் ஆண்டின் புள்ளி விபரங்கள் (தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மணிப்பூர் ஆகியவை அதிகமாகப் பாதிக்கப் பட்டுள்ளதைக் கவனிக்கவும்).
3. கவலைக்கிடமான நம் சுகாதார நிலையில், தனது குறைந்தபட்சப் பொதுத்திட்டத்தில் காங்கிரஸ் அரசு முதன் முறையாக எயிட்ஸ் நோய்த் தடுப்பு வழிமுறைகளுக்குத் தலைமையேற்கும் எனத் தெரிவித்திருப்பது ஒரு ஆறுதல்.

0 comments: