மாவு பிசைந்த கதை

ராத்திரி வீட்ல சப்பாத்தி செஞ்சோம். ஒரு சின்ன மாவுருண்டையை அம்மா மகனிடம் கொடுத்தார். அவன் அதை உருட்டினான். பிறகு தரையில் வைத்துத் தட்டினான். இரண்டு விரல்களை அதில் பதித்துவிட்டுக் கண் என்றான். பிறகு பெயரிலி முகம்னான் (பெயரிலியின் இந்த முகங்களை அவன் பார்த்திருக்கிறான்!). இப்படியே உருட்டித் தட்டி நீட்டி பூ, மீசை, மேளம், நாதசுரம், பிட்ஸா, புக்காமணி (லிங்கம், ஆண்குறி) எல்லாம் செஞ்சான். பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். அவனுக்கும் மாவுக்கும் வித்தியாசமில்லை. அவனுக்குள்ள எல்லா உருவங்களும் இருக்கு. எல்லாத்துக்குமான விதையிருக்கு. அந்த சுயம் தன்னை எப்படியெல்லாம் பிசைந்து பிசைந்து உருக்கொடுத்துக்குதோ அப்படியெல்லாம் கொடுத்துக்கட்டும். அம்மாப்பா ஒரு துணையா இருந்தாப் போதும்னு தோணுது. அவனே அவனைப் பிசைந்து கொள்ளட்டும். என் கைகளையும் போட்டுப் பிரட்டி அந்த மாவை அழுக்காக்காம இருந்தாப் போதும்னு நெனச்சுக்கிட்டேன்.

இப்படியே போன மாவுக்கதை மனுசங்ககிட்டயும் போச்சு. நாமளும் இப்படித்தான் மாவா இருக்கோம். எல்லோருக்கும் வேணும்கற ஒரே விஷயம் சுகம். நித்யானந்தம். எங்கேன்னு தெரியல. அல்லது அப்படி ஒன்னு இல்ல. நான் காட்றேன் வான்னு கூப்பிட்டுக் கூப்பிட்டுக் குடுக்குது மடமெல்லாம். மதமெல்லாம். சாமியார்க் கூட்டமெல்லாம். கோயிலெல்லாம். மாவை உருட்டுது. நீட்டுது. பிசையுது. மதவாதியாக்குது. தனக்கான காரியத்தைச் சாதிச்சுக்குது. குலப் படையைக் கொண்டே குலத்தையழித்த ராமகாதை இன்னும் தொடருது. மதவெறிக் கும்பல்களின் இன்றைய நோக்கமென்ன, உங்களையும் என்னையும் பேரானந்தப் பெருவாழ்வுக்குக் கொண்டு போறதா? அப்படியொன்னு இல்லாத போது, அல்லது இருக்கது அதுக்கே தெரியாத போது அது நம்மள எங்க கூட்டிக்கிட்டுப் போகப் போவுது. சும்மா இங்கயும் அங்கயும் இழுத்தடிச்சுப் பம்மாத்துப் பண்ணி, அது நாலு காசையும், பேரையும், அதிகாரத்தையும் சேத்துக்கும். நாம இப்புடியே பரதேசியாத்தான் சாவோம்.

நாத்திகம் பயில்னு பாக்கும் போதும், சங்கர மடத்து வண்டவாளங்களைத் தட்டிக் கேட்கும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தோட பணிகளைப் பாக்கும் போதும், பெரியார் வேணும்கற ஆதங்கத்தைப் பாக்கும்போதும் கொஞ்சம் நிம்மதியாயிருக்கு.

5 comments:

said...

/பெரியார் வேணும்கற ஆதங்கத்தைப் பாக்கும்போதும் கொஞ்சம் நிம்மதியாயிருக்கு./ இவ்வளவு அப்பாவியா நீங்கள்?

said...

ரோசாவசந்த், நான் ரொம்பப் படிக்கிற ரகமில்லை. அதனாலயோ என்னவோ கோவம், அபிமானம் எல்லாம் அப்ஸ்ட்ராக்ட் மாதிரித்தான் வரும். ஆனா அப்பாவின்னு நெனக்காதீங்க ஆமா:)

said...
This comment has been removed by a blog administrator.
said...

தப்பா எடுத்துக்காதீங்க! நான் ரொம்ப பெஸிமிஸ்ட், நம்பிக்கையாளனா மாற முயற்சித்துகொண்டிருக்கிறேன். மற்றபடி படிப்புக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை. நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம் (இது குருட்டு வாசிப்புல, குருட்டு தட்டலில் எழுதியது. விளக்கம் நாளை எனது பிளாக், உதவி விண்ணப்பத்தில்).

said...

தப்பால்லாம் எடுத்துக்கல. நாளக்கி அங்க வாரேன்.