கனவொன்று

பகல்ல மட்டுமில்ல, ராத்திரியும் நா நிறையக் கனவு காணுவேன். கண்ணைக் கொண்டு செருகும் போதே கனவு துவங்கிவிடும். சில நேரங்களில், கடந்த ஒரு நிமிடத்தில் கண்ட கனவைத் தூங்கிக்கொண்டோ அல்லது பாதி விழித்துக்கொண்டோ அருகிலிருப்பவரிடம் சொல்லிவிட்டு, சிரிப்பானதென்றால் சிரித்துவிட்டு, மறுபடியும் தூக்கத்துக்குள் செல்வேன். இது கொஞ்சம் ரிஸ்க்கான சமாச்சாரந்தான். ஆனாலும் வீட்டம்மாவிடம் இன்னும் எதற்கும் மாட்டிக்கொண்டு முழித்ததில்லை. தங்கமணி சொல்வான், சினிமாக் கொட்டகையில லைட்ட நிறுத்துறதும் படம் போடுற மாதிரி இவனுக்குக் கண்ணை மூடுனவுடனே கனவுப்படம் ஓட ஆரம்பிச்சுரும்னு. சரி. ராத்திரி கண்ட கனவைச் சுருக்கச் சொல்லிட்டு வேலையைப் பாக்குறேன்.

அது எங்க வீட்டு மொட்டை மாடி. ஊர்ல. படுத்திருக்கேன். வானத்துல பால் வழித்திரள் தெரியுது. கதையிலேருந்து மீண்டு உங்ககிட்ட ஒரேயொரு சேதி, எனக்கு வானம், கோள், அது இதெல்லாம் அப்பப்ப வந்து சுத்திட்டு போகும். கனவு தொடருது. படுத்துக்கிட்டே உத்துப் பாக்குறேன். சில நட்சத்திரங்கள் தெரிகின்றன. அப்புறமா இன்னொரு பக்கம் பாத்தா ஒரு பை (vesicle), குமிழ் என்றுங்கூடச் சொல்லலாம், ஆனால் மிக மிகப் பெரிது, வானத்துல தெரியுதுன்னா பாத்துக்கங்க. அது மாதிரி ஒரு ரெண்டு மூனு. எல்லாக் குமிழும் கொஞ்ச கொஞ்சமா நகருது. அப்புறம் ஒன்னாச் சேருது. பெரூ...சா ஐஸ் கட்டி மாதிரி சேருது. உஷ்...கனவுல குமிழ் சேர்ந்தா ஐஸ் கட்டியென்ன, ஆனைக்குட்டியே வரும், பேசாம கதை கேளுங்க. அந்த ஐஸ் கட்டி மெல்ல இறங்குது. இறங்கி இறங்கி எங்க வீட்டுக்குப் பின்னாடி இருக்க ஒரு திடலுகிட்ட விழுகுது. அது யாருக்கும் தெரியலை போலிருக்கு. விழுந்து கிட்டத்தட்ட புதைஞ்சு போகுதுன்னு நினைக்கிறேன். நான் ஓடிப் போய் அந்த இடத்தில் பார்க்கிறேன். ஒரு இளைஞன், செம்பட்டைச் சுருட்டை மயிர், சிவந்த நிறம். தலையில் இந்த டார்ஜானெல்லாம் என்னமோ கட்டிருப்பானே அது மாதிரி ஒரு பட்டி, அவன் அந்தக் கட்டிக்குள்ளேருந்து வெளியில வந்து வீதியில நடக்கிறான். அவனோடு என்னமோ பேசினேன். தெரியவில்லை. ஒரு கோவிலோ அல்லது சொற்பொழிவோ, அந்தப் பெரியவர் சொல்றார், இப்படித்தான் அந்தக் காலத்தில் எல்லாம் புஷ்பக விமானத்துல பறந்து போவாங்க. ராவணனும் இப்படித்தான் போனான், அவன் போகும்போதே மீனாய்க் குளத்துக்குள் குதித்து மீனுக்குள்ளும், இன்னும் எல்லா இனத்துக்குள்ளும் தன்னைக் கலந்தான். அதான் ராவணன் மாதிரியே நிறைய பேர் இருக்கிறார்கள். நான் நினைத்தபடியே போகிறேன், அப்போ ராமனும் இப்படிச் செய்திருப்பானா? அப்புறம் என்ன நடந்ததென்றோ அந்த இளைஞனை நான் காணவோ இல்லை. நீங்கள் அப்படியொரு ஆளை எங்காவது கண்டீர்களா?

2 comments:

said...

காட்சியும், கனவும், எழுத்தும்
---
இந்தத் தலைப்புக்கு எதாவது பண்ணியே தீரணும்னு முடிவு கட்டிட்டீங்க போலிருக்கு :-)

said...

பரி, என்னா ஒத்துமை, இப்பதான் மெய்கிட்ட இதே பாயிண்ட சொன்னேன், போச்சு ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்க ஆரம்பிச்சுட்டோம் :))