ஈசனின் விதி

தினத்தந்தியில் ஒரு செய்தி. புதுக்கோட்டை மாவட்டம், திருவிடையார்பட்டியில் 800 ஆண்டுகள் பழமையான ஒரு கோயில். போதிய பராமரிப்பின்றிச் சிதிலமடைந்திருக்கிறது. சுத்துப்பட்டி 19 கிராமத்து மக்களும் சேர்ந்து ரூ.40 லட்சம் திரட்டிச் சீர் செய்வோம்னு கிளம்புறாங்க. சரி நல்லதுதான்.

என்னைச் சங்கடப் படுத்திய முரண் என்னன்னா, இந்த இடிபட்டக் கோயிலைப் புதுப்பிக்கிறதை ஆரம்பிக்க ஒரு விழா நடக்குதாம். அந்த விழாவுக்குக் காஞ்சி சங்கராச்சாரியார் வர்றாராம். அவர் காமதேனு பீடாதிபதியாக முடி சூட்டிக் கொண்டு ஐம்பது ஆண்டுகள் ஆயிருச்சாம். இந்த இடிபாட்டுப் புதுப்பிப்பு ஆரம்பிப்பு விழாவின்போது இவரின் 50வது ஆண்டுக்காகச் சிறப்பைச் செய்யப் போகிறார்களாம். எப்படியாம், ஒரு கோடி வண்ண மலர்களாலும், வாச மலர்களாலும் பாத பூசை செய்து.

கோயிலைப் புதுப்பிக்க மக்களிடம் வசூலித்த பணத்தில், இடிபாடுகளுக்கிடையில், தனக்கு ஒரு விழா நடத்த அனுமதிக்க, அதை ஏற்றுக் கொள்ள எப்படி அந்தப் பீடாதிபதிக்கு மனம் வருகிறதோ? ஊர்ப்'பெரியவர்' ஒருவர் துக்க வீட்டில் உட்கார்ந்து இலை போட்டு விருந்து சாப்பிடுவதைப் பார்க்கிறாற் போலிருக்கிறது.

நம்ம ஊர்க்காரங்களுக்கு இந்த முரணெல்லாம் தெரியாது. அவங்களுக்கு அடடா இந்த நாயேன்களையும் மதிச்சு ஒரு பெரிய மகான் நம்ம ஊருக்கு வர்றாரே, நம்ம குடுக்குற மருவாதிய வாங்கிக்கிட்டு நம்மளுக்கு வரம் குடுத்துட்டுப் போறாரேன்னு புல்லரிச்சுப் போயிருக்கும். முற்றுந் துறந்த சாமியும் பூர்ண கும்ப மரியாதையைப் பிச்சையாக வாங்கிக்கிட்டுப் போகும்.

மக்கள் உழைத்துச் சேர்த்த காசு இப்படி அழிய வேண்டுமென்பது ஈசனின் விதி போலும்!

0 comments: