அதுவும் நானும்

நம்ம பாலாஜி-பாரியின் நிலாக்கதையைப் படிச்சதுக்கப்புறம் அந்த நடை பிடிச்சுப் போயி எழுதினது இது:

நான்: ஊர் உறங்கும் வேளையில், வெளிறும் இந்த சனிக்கிழமையின் அதிகாலையில் ஆய்வகத்துக்குச் செல்ல என் காரை எடுக்கிறேன். சில மணிகளில் திரும்பி விடுவேன். தாளில் சுற்றிய இரண்டு துண்டு ரொட்டியும் ஒரு வாழைப்பழமும் போதும்.

அது: என்ன காரோட்டி நீ, முன்னாலிருப்பதை, அதுதான் என்னை, நீ என்னை இன்னும் பார்க்கவில்லையா?

நான்: நேற்று வாத்தியார் நன்றாயிருப்பதாய்ச் சொன்னாரல்லவா, அதை இன்னுங்கொஞ்சம் செம்மைப் படுத்துவேன், அவன் வந்துட்டான், அவர்கள் வந்துவிட்டார்கள், இன்றைக்கு எங்கேனும் செல்வேன். இங்கினதான் ஒரு நாள் ரெண்டு கார்கள் மோதிக்கிட்டது.

அது: அடேய் மெதுவா, என் கால்கள். என்ன மனுஷன் நீ? பார்த்துத் தொலையேன்.

நான்: சாலை விதிகளை வைத்துக் கொள்வது நல்லதுதான். முக்கியமாய் இந்த விளக்குகள். அ...இது என்ன, நீ என்ன செய்கிறாய் என் துடைப்பான் (wiper) மீது உட்கார்ந்து?!

அது: இப்போதாவது பார்த்துத் தொலைத்தாயே.

நான்: இங்கு என்ன செய்கிறாய், எழுந்து பறந்து போவேன், பெரிய ரோட்டுப் பக்கம் போனால் உன்னைச் சக்கரங்கள் நசுக்கிவிடும்.

அது: நீ எதுவுமே புரியாதவனாக இருக்கிறாய் என்று உன் பெண்டாட்டி சொல்வது சரிதான் போலிருக்கு.

நான்: சரி இதோ ஒரு சீமெண்ணெய்க் கடையில் நிறுத்துகிறேன், நீ அப்போதேனும் பறக்கிறாயா என்று பார்ப்போம்.

அது: இல்லையடா, மாட்டேன்.

நான்: ஏனாம், இறங்கி வந்து மெல்ல உன் மேல் ஊதுகிறேனே, அப்போது பறப்பாயல்லவா?

அது: முடியாதடா.

நான்: சொல்வதைக் கேள், அழிச்சாட்டியம் செய்யாதே. அந்த ரோடு உனக்கு ஆபத்து. சரி, உன்னை என் கைகளாற் பிடித்துக் கீழே விடுவேன்.

அது: ஆ, நாந்தான் சொல்கிறேனே, என்னை விடேன் சைத்தானே.

நான்: அடடா, என்ன நீ, பறக்க முடியாமலா இருக்கிறாய்? உனக்கு உடம்புக்கு ஏதாவது?

அது: பறக்கமுடிந்தால் பறந்திருக்க மாட்டேனா?

நான்: மன்னித்துக்கொள், இந்த இடத்தில் உன்னை விடுவதும் ஆபத்துதான், சீமெண்ணெய் ஊற்றிக் கொள்ள வண்டிகள் வரும், உன்மேல் சக்கரங்களை ஏற்றிப் போய்விடும். உன்னை என்ன செய்வதென்று எனக்குத் தெரியவில்லை உயிரே. இந்த ஊரில் உங்களுக்கு ஆஸ்பத்திரியோ டாக்டரோ இல்லை. ஆம்புலன்ஸும் இல்லை.

அது: நாய்களுக்கொன்று அன்றைக்குப் பார்த்தேனே.

நான்: எனக்கும் இது புரிவதில்லை, ஆம்புலன்ஸ் படுக்கையில் வைத்துக் கட்டும் வார் ரொம்பப் பெரிதாயிருப்பது ஒரு காரணமாயிருக்கலாம். அல்லது 911 மாதிரி உங்களுக்கு அவசர அழைப்புக்கொரு எண் இல்லாததாகவுமிருக்கலாம்.

அது: நான் என்ன செய்வது?

நான்: தெரியவில்லை. இப்போது என்னால் முடிந்தது, என்னுடன் காரில் வா. இதோ என்னருகில், காகிதம் சுற்றிய இந்த ரொட்டித் துண்டின் மேல் உட்கார்ந்து கொள். உன் மேல் வண்ணப் புள்ளிகளும் கோடுகளுமாய் இருக்கின்றன. ஆயிற்று இதோ வந்துவிட்டது, இறங்குவோமா?

அது: எங்கு செல்கிறோம்?

நான்: இல்லை, நீ மட்டுந்தான். உன்னை இந்த ஆற்றங்கரைப் புல்வெளியில் விடுவேன். ஒரு நாள் என்னை வந்து கொண்டு செல்லும் மரணம் உன்னையும் கொண்டு செல்லும். அதுவரை இங்கே இந்தப் புற்களுக்கிடையிலும் செடிகளுக்கிடையிலும் நீ இரு. தெரியாது, ஒரு வேளை உனக்குக் குணமாகலாம். அப்போது வண்ணத்துப்பூச்சியான நீ மறுபடியும் பறக்கலாம். இப்போது நான் கிளம்புகிறேன்.

செல்மாவிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது; எங்கோ படித்தாளாம் "வண்ணத்துப் பூச்சிகளைப் பார்ப்பது நல்ல சகுனம்" என்று.

0 comments: