சந்தனாட்டம்

வெயிலடிக்குதுன்னு அன்றைக்கே சொன்னேனில்ல, நல்லாவே அடிக்குது. அன்றைக்கு வேலையிலேருந்து வந்ததுக்கப்புறம் ஒரு கிண்ணத்த எடுத்தேன். சந்தனத்தூளக் கொட்டுனேன். குழப்புனேன். சந்தனம் குளுமை, வெயில்ல உடம்புக்கு நல்லது. மேலெல்லாம் பூசிக்கிட்டேன். பக்கத்துல மாசிலன் நின்னான். அவனுக்கும் மேலெல்லாம். காவடிச் சிந்துல "வில்லினையொத்தபு ருவம்வ ளைத்தனை வேலவாவடி வேலஅவா" பாட்டு பாடுறப்போ சும்மாவா சந்தனம் பூசிக்கிறது, ஆட்டம் போட்டுப் போட்டுப் பூசிக்கிட்டோம். பக்கத்துல ஒரு சின்ன மோளம் கெடந்துச்சு. நான் அடிச்சேன். இன்னொரு டிங்டிங் கருவி கெடந்துச்சு, மாசிலன் எடுத்துக்கிட்டு அடிச்சான். சுத்தினோம். சிரிச்சு சிரிச்சு மோளத்துக்கொரு அடி. ஒரு துள்ளல் ஒரு சுத்தல். தம்பியளா, யாருப்பாது குறுக்க வந்தது!

அட. எழுதுறதுக்கு என்ன தெரியுமா வேணும். ஒன்னுமே இல்ல. எழுதுறதுக்கு முக்கியமானது வெற்றிடம். அங்க யாரும் இருக்கப் படாது. நாமளும் நம்ம எழுத்தும் மட்டுந்தான் இருக்கணும். அது ரெண்டையும் தனியா விட்றணும். ஒரு பய புள்ள இருக்கப்புடாது. இருந்தாலும் தள்ளி ஒரு ஓரமா நிக்கனும். ஏன்னா சாமி ஓடும், ஆடும், பாடும், துள்ளும், பாயும். யாராச்சும் குறுக்க வந்தா சாமிக்குப் புடிக்காது. புடிக்காதுன்னா என்ன, சாமி ஆட முடியாது. அததுக்குண்டான எடம் வேணுமில்லையா? சாமி சில நேரம் கொள்ளிக்கட்டயத் தூக்கிட்டு ஓடும், வெட்டுன கிடா இழுபட்டுப் போவும். யாரும் குறுக்க வரப்புடாது. அப்புடி உக்காந்து எழுதனும். இதோ நான் எழுதுறேன். உங்களுக்காக எழுதுறேன்னு என் கை சொல்லுது. மனசு சொல்லுது. அதனால உங்களையெல்லாம் அந்தக் குளத்துல பாசிய அரிச்சு எடுத்து வீசுற மாதிரி வீசணும். நீங்களும் இப்படித்தான் என்னையும் வீசணும். அப்புறம் ஒவ்வொன்னாதான் வரணும் அப்படின்னு நெனப்புக் கூட்டத்துக்குச் சொல்லணும். சும்மா எல்லாரும் ஒட்டு மொத்தமா வந்து குதிக்கப் புடாது. எதன்னு கண்டுக்கறது? என்னோட ஒருத்தரு படிச்சாரு. பாண்டியன். அண்ணாச்சின்னு சொல்லுவோம். திருநெல்வேலிக்காரரு. நல்லாத் தமாசாப் பேசுவாரு. யாராச்சும் பேசுறப்போ எல்லா வார்த்தையும் ஒன்னா வந்து குமிஞ்சுகிட்டு என்னத்தப் பேசுறதுன்னு தெரியாம திக்குறப்போ "ஏமுல சிக்குன டைப் மிசினு மாதிரி நிக்கான்?"னு கேப்பாரு. டைப் மிஷின்ல சில நேரம் அடிக்கிறப்போ நாலஞ்சு கீ ஒன்னா வந்து சிக்கிக்கும் தெரியுமா, அப்போ எந்த எழுத்தும் பதியாது. புடிச்சு இழுத்துப் பிச்சு விடணும். அந்த மாதிரி சிக்கப்புடாது நம்ம கதை. இதெல்லாம் எழுத எழுத சாத்தியப்படும். ஹ... எழுத்தே, அதுக்கு வலை விரித்து வைத்திருக்கும் வலை நண்பர்களே! நீங்களெல்லாம் எப்படிச் சமாளிக்கிறீங்க?! பெருமூச்சுடன்.

விளம்பர இடைஞ்சலுக்குப் பின் ஆட்டம் தொடர்கிறது...

சந்தன ஆட்டம். ஆமாம் அது உற்சாகமானது. நீங்களும் ஒரு நாள் ஆடிப்பாருங்கள். கூச்சமாயிருந்தால் தனியாகவும் ஆடலாம். ஒரு காலைத் தூக்கிக் கொண்டு மற்றக் காலால் சுற்ற வேண்டும். நாட்டியமெல்லாம் கற்றிருக்க வேண்டியதில்லை. கைகளைத் தூக்கி, விரித்து மனம் போல், லயம் போல் வீச வேண்டும். லேசாய்ச் சிரிப்பு வரும். அப்போது நன்றாய்ச் சிரிக்க வேண்டும். அதைப் பார்த்து இன்னும் கொஞ்சம் சிரிக்க வேண்டும். அதைப் பார்த்து உங்களோடு இருப்பவரும் விபரம் புரிந்தோ புரியாமலோ சிரிப்பார். ஆட்டத்திற் களியேறும். வேகம் கூடும். நல்ல பாட்டுக்கள் பின்புலத்தில் இருப்பது நன்று. எனக்குக் காவடிச் சிந்து, நாட்டுப்புறப் பாட்டாயிருந்தால் குதியாட்டம் வரும். இந்த மாதிரிக் கூத்துக்களைத் திருவிழாக்களிலும், வீட்டு விசேடங்களிலும் அதிகம் பார்க்க முடிவதில்லை. எல்லோரும் உட்கார்ந்து கச்சேரி பார்க்கிறோம். சாப்பிடுகிறோம். வருகிறோம். மதச் சடங்குகள் சுவீகரித்துக் கொண்டதிலிருந்தே கூத்தும் ஆட்டமும் தங்களது ஆனந்தத்தையும், உடம்பு தன் பெருமையையும் இழந்துவிட்டன என்று தோன்றுகிறது. உடம்பை மறந்து விட்டோம். உடம்பைப் போற்றுவதில்லை. உடம்பைக் கொண்டே மனசைக் கடக்கலாம்கறதையும் விட்டுட்டோம். மூளை, ஆம், அதை மட்டுமே அறிவென்றும் வலிமையென்றும் நினைத்துக் கொள்கிறோம். எங்கு போய் நிற்போமோ! என்ன செய்யலாம்? நாமெல்லாம் நன்றாய் ஆட வேண்டும். துள்ளிக் குதிக்க வேண்டும். உடம்பை வைத்து ஆனந்தங்கொள்ள, வீறு கொள்ள ஏதாவது செய்து கொண்டேயிருக்க வேண்டும்.

1 comments:

said...

"ஏ கொலுசுக் கடை ஓரத்திலேஏஏஏஏஏ"-ன்னு ஒரு பாட்டப் போட்டா எங்கெ காலு தரையில இருக்குமா? :-))