பழைய பறை

"22, நவம்பர், 1998
ராவ ஒரு மணி.

ட்டணா டன்ட்டனா ட்டணா டன்ட்டனா
அடிச்சு மொளக்கேய், ஹோய்
டோய் இன்னொரு காவடி வருதுடோய்
உடியா உடியா;

டன்டனக்கா டன்டனக்கா டன்டனக்கடி டன்டனக்கா
என்னாத்தா கோயிலுக்குக் கெளம்பிட்டாகலா?
ஏ தம்பி, இங்கெர்றா செத்த ஓடிப் போயி
தேங்காயும், ஊதுவத்தியும் வாங்கியாடா.
ந்தாடா, பாத்தியலா இந்தப் பய பரிஞ்சு ஓடுறத;

டனக்டனக்டனக் டன்டன்டன்டன்டன்
எட்டிக்கங்கடா, தும்பத் தறிச்சதுக்கப்பறந்தான்
மாலையில கைய வக்யனும்,
டாய் எர்றா கவட்டய, மாடு புடிக்கிற ஆளப் பாரு
தம்பி, சீக்கெரமா சரத்தக் கொலுத்து
யோவ், இன்னொரு மொளக்கு போடுங்கய்யா செத்த;

டன் டன்டன் டன் டன்டன் டன் டன்டன்
ஞ்சரே வடக்கி வூட்டக்கா போறத்த, கேளு,
ஏக்கா, எப்பவாங்க்கா?
அது ராத்திரியே முடிஞ்சிருக்கும்போலருக்கு
அவுகல்லாம் காலயிலதாம் பாத்துருக்காக.
ஆயாயே, முந்தாநாலுதாங்குறேன்
இப்புடியே போனாரு, நாம் புளி குத்திக்கிட்டுருந்தேன்.
எப்ப தூக்குறாகலாம்?

-அட நா யாரா வேண்ணாலும் இருக்கட்டுமுய்யா. எங்க வேண்ணாலும் இருக்கட்டுமுய்யா. எந்தப் பாட்டு வேண்ணாலும் கேக்கட்டுமுய்யா ஆனா அந்த சத்தம், அந்த இலுத்துக் கட்டுன மாட்டுத் தோலு சத்தந்தாய்யா என் சத்தம், எங்கவூரு சத்தம், உசுரோட சத்தம்.
இதுக்கு மூலம்: இன்னிக்கு தில்லித் தமிழ்ச்சங்கத்துல நடந்த கலைவிழா. தப்பாட்டம். அங்க அடிச்ச தப்பு இங்க வந்து விளுந்திருக்கு".

-------------------------------------------------------------------------

23/11/98

"இன்னொரு தப்புக் கதை

அப்பவெல்லாம் கண்ணாடி போட்ட ராமனும், வெளிச்சியனும் எப்பவும் வேட்டி துண்டுதான். முந்தி ஒருக்க ஊருக்குப் போயிருந்தப்ப, எப்ப ஆறேழு வருசத்துக்கு முந்தி, அப்பதாம் பாத்தேன், எங்க ஊரு ஆலுக கொலாய் போட்டுக்கிட்டு தப்பு கொட்றதை. காவடிக்கு முன்னாடி தாளத்தோட அடியெடுத்து வச்சி தப்பு கொட்டிக்கிட்டு போனாக. அதுக்கப்புறம் நேத்துதான் மறுதிரியும் பாத்தேன். நம்ம சனமென்ன, டெல்லி சனமென்ன எல்லாம் வாயப் பொளந்துகிட்டு பாத்துச்சுவ. தப்பு சத்தங் கேக்கயிலதான் டெல்லி தெருவுல நடந்த ஆளுக்கெல்லாம் உசுரு வந்த மாதிரி இருந்துச்சு எனக்கு. மனசுக்குள்ள எந்திரிச்சு நின்னு கத்துனேன், "அப்புடித்தான் அப்புடித்தான் அடிங்க அடிங்க நல்லா அடிங்க"ன்னு. எங்க ஊருக்காரங்ய குடுத்து வச்சவங்ய, போவயிலகூட இந்த சத்தத்தோடதான் போவாங்ய".

--------------------------------------------------------------------------

1 comments:

said...

யப்பா, ஆட்டம் நல்லா இருந்துச்சு.