மறுமொழிக் கவியருவி

மறுமொழிப் பெட்டிக்குள்ள எவ்வளவோ கூத்தெல்லாம் பாத்திருப்பீங்க. இங்க ரெண்டு நாளா நடந்த கூத்தைத் தொகுத்துப் போடுறேன்! அரைச்சு அரைச்சுத் தின்னுத் திகட்டினதை மறுபடியும் ஏண்டான்னு கேக்காதீங்க, படிக்கவும், வேணும்னா வெளியில கொண்டு போகவும் இது சுலபம், அதான். துண்டு துண்டாப் போட்டிருக்கலாம், அட போங்கப்பா எத்தனை நாள் இந்தக் கதைன்னு ஆகிப்போயிரும்கறதால மொத்தமாப் போட்டுட்டேன், மூச்சடக்கிப் படிச்சுக்கங்க!

இந்தக்கதைக்கு மூலம் கேட்டா எந்தச் சித்தருகிட்ட போயி நிக்கிறதுன்னு தெரியாதுங்க. மெய்யப்பன் போட்டதுல ஆரம்பிப்போம். அதைப் பின்தொடர்ந்து நானொன்னு போட்டேன். அந்தப் பதிவுல பாரி வந்து மறுமொழிப் பொட்டியத் தொறந்து ஒன்னு போட்டார், ரமணீதரன் ஒரு கேள்விக் கெக்கலிப்போடயும், பரி ஒரு
அளுவாச்சியோடயும் நிறுத்திக்கிட்டாங்க. நடுவுல வந்த பெருஞ்சித்து மெய்யப்பன் சிரிச்சுட்டு கஞ்சி செய்முறை எதுனா இருக்கான்னு கேக்கப்போக, அப்பதான் ஆரம்பிச்சது வினை. நானொரு பாட்டெடுக்க, எதிர்ப்பாட்டு மெய்யெடுக்க, ஆடிவந்த ரமணி அவருமொரு பாட்டெடுக்க, பாட்டுக்குப் பாட்டெடுக்க, அதுக்கெதிர் பாட்டெடுக்க, வந்த பாலாஜி, கார்த்திக்கு, செல்வராஜு, ஆளுக்கு நாலெடுக்க, நீங்களே பாத்துக்கங்க. ஆனா ஒன்னு சொல்வேன், யப்பா...என்னமா எழுதுறாங்க, முக்கியமா மெய்யப்பனும், ரமணியும். எல்லாருக்கும் மனக்கடல் ஆழமென்றாலும், இவர்கள் முங்கி முத்தெடுக்குற அழகே அழகு. நம்ம வீட்ல வந்து சக்கை போடு போட்டதற்கு கவிஞர்களுக்கோர் நன்றி. கைதட்டின பரி, மதி, சாரா, ஆச்சிமகன் எல்லோருக்கும் நன்றி. முடிந்தவரை நடுநடுவே வந்து விளக்குகிறேன்.

அப்புறம் இன்னொன்னு, இது எல்லாமே அப்பப்ப எழுதினவை, இதிலே இருக்கும் சொற்குற்றம், பொருட்குற்றம், இலக்கணக் குற்றம் அல்லாத்தையும் பின்னாடி போட்டுட்டுப் படிக்கவும். இது ஒரு அழகான புதுமையான அனுபவம்.

மெய்யப்பனின் கஞ்சி செய்முறைக் கேள்விக்கு நான் சொன்ன பதில்,
சு.வ:
மதத்துக் கொன்றாய் முறையொரு நூறிருந்தாலும்
கேளப்பா முக்கண்ணன் தாள்வணங்கிச் சொன்னேன்
கரைத்துக் கொதிப்பது மாவுக்குப்பதமாகும் நன்றே
கொதித்துக் கரைப்பதுவே பயறுக்குப் பதமாகும்
பாரப்பா தயிரும் ஊறுகாயும் உப்புக்குத் தோதாகும்
மெய்யப்பா தேங்காய்ப்பூயேலமுமே குணமாம் சக்கரைக்கு!

இதுக்கு மெய்யப்பனின் பதில்,
மெய்:
அண்டம் மாயமிக் காற்றடைத்த பிண்டம் மாயமென
தோண்டிக் கலயத்தைப் போட்டுடைத்த
ஆண்டிப் பண்டாரம் எல்லாம் மாயமெனப் பேசிவைத்த
தண்டப் பேச்சினிற்கே தக்கதொரு பதிலாய்த்தான்

மண்டி மரக்கறியும் மணமிகுந்த மாமிசமும்
பண்டம் பலகாரம் பக்குவமாய் சமைத்துவைத்து
உண்டிவளர்த்தாலே உயிரும் வளருமப்பா
கண்டே சொன்னது மந்திரத்திரு மூலரப்பா.

மந்திரத்திருமூலன் சொன்னமொழி படித்தேன் யான்
சுந்தர வடிவேலன் நீ சொல்லிவைத்தாய் கஞ்சிவழி.
சொல்லிவைத்த சங்கதியை செய்தே வடித்திடுவேன்
வடித்துவந்த கஞ்சியினைக் குடித்தேமகிழ்ந்திடுவேன்.

சு.வ:
அய்யா! சிரிச்ச சிரிப்புல பக்கத்து சீட்டுக்காரன் வந்துட்டான் :)
கலக்காக் கஞ்சிக் கட்டிக் களி
காக்கா மெய்யு மிடிச்சப் புளி
சீராய்ச் சொன்னாய் பித்துக்குளி-பெருஞ்
சித்தே உன்னால் சிரித்துக் களி.

இப்பதான் நம்ம கதையில சடாரென்ற திருப்பம். தந்தனத்தோம் என்று சொல்லியே...ஒடியற்கூழோடிச்செத்த ரமணி வாரார்.

ரமணி:
சித்தனென்று சொல்லி சிவசிவன்னு எதிர்பார்த்தா
குத்தமென்னு சொல்ல வச்சான் 'அப்பன்' - 'மகன்'
பித்தமென்று பாராமல் உப்புத்தயிரும் உவந்தான்
செத்தனென்று எண்ணிக் கலி/களி/கழி

குளிர் சுட்டுத்தின் வடகிழக்குச்சுப்பனும் அப்பனும்
இத்தனைநாள் உப்பா புளியா உண்ணச் சரியா
குத்தலா அரிசி குழைந்ததா கஞ்சியென்று துளி
துப்பியும் செப்பவில்லை பாரீர் -அருஞ்சூரர்

அத்தனையும் ஒளித்துவிட்டு அடிப்பிடித்த கஞ்சியை
வித்தகமாய் விதவிதமாய் எத்தனை நாழி
விற்றார் சுந்தரமெய்ச்சக்கையாய் இணையம்
விட்டோமா, கஞ்சிப் பக்குவம் விளக்குமென்றே
வேண்டிக் கை வெளித்தது பார் விளக்குமாறு.

கழியும் ஆண்டிப்பண்டாரம் தின்றொழித்த கஞ்சி
கலயம் வேண்டிப்பண்டாரம் விண்டொழித்த கஞ்சி
கலியும் நோண்டிப்பண்டாரம் நோய்ப்படுத்து கஞ்சி
தாண்டிப்பார் குளம் தாவி அருங்கூழுண்டு கலி
கழியும் கூனி இறால் மணக்கக் களி.

நுதல் வதங்க மேல் நொந்து நாள் நீங்க
குடல் முடங்க புத்தி பெயரப் புலம் வேறு
வத்தலுக்குப் போட்ட வாழைக்காயான உடல்
வெத்திலைமேல் வேகெண்ணையாகிச் சோர,
உட்கொண்டு உயிர்பெற்றலுக்குப் பேறாகும்
நொய்நோன்புக்கஞ்சிக்கும் நெய்நோய்க்கஞ்சிக்கும்
நூறுண்டு உண்/ள்நோக்கு வேறு.

இந்தப் போடு போட்டா யாருதான் நிப்பா, என் கஞ்சிக்கலயம் உருண்டோட, அடுத்ததாக அண்ணன் மெய்யப்பனை அழைக்கிறேன் என்று மெல்லப் பதுங்கினேன். இப்போது விளம்பர இடைவேளை மாதிரி மதியும், ரமணியும் கொஞ்சம் உரையாடினார்கள். அப்போது பாரி தன் முதற்கவிதையை நுழைக்கிறார்:

பாரி:
ஓடி ஓடி இங்கு நான் கஞ்சிகுடி காண வந்து
தேடித் தேடிப் போகவில்லை அப்பன் கேட்ட வேலன்சொன்ன
உள் நோக்கி(ய)முன்(ம்) இருந்த கஞ்சிச் சுமை கலம் காணா.
வெஞ்சீராய் ஒடியற்கூழோடு ஓடிச் செத்தானும்
சாகவில்லை கஞ்சிச் சுமை கலம் காண.

மெய்:
களமடித்த நெல்லும் கருத்த மலைமிளகும்
அளமறுத்த உப்பும் அளவான சுக்கும்
துளிர்த்த மல்லியிலையும் துளிகடுகு முளுந்தும்
தாளித்த தயிரும் சேர்த்தாலே தனிச்சுவைதான்

மா(ர்)டி கிராவென்று மதப்பாய் நீஇருக்கையிலே
நாடிவரும் பனி(ணி)யிங் குனக்கே இருக்குதப்பா
குளிர்விட்டுப் போவதற்கே குளிர்சுட்டுத் திங்கனுமே
தளிர்விட்டு வளரயிலே தண்ணி ஊத்தனுமே

மஞ்சம மர்ந்து மதுவருந்தி மயங்கவுமாசை
நெஞ்சமு ணர்ந்து ஞானவழியறிய வுமாசை
கஞ்சியும் கூழுமாசை கடவாய்மீசையுமாசை
இஞ்சி இடித்துத்தின்ன குரங்கெனவே நானிங்ஙே!!

ஒடியங்கூழென்ன ஓட்சுகஞ்சியென்ன
தடியடிப் பாவென்ன தடுத்தாளுந் தகையென்ன
இடியிடிச் சிரிப்பென்ன இரமணியின் பாவென்ன
கடிகார மணியென்ன.. கடந்ததே நாலரெயன்ன..
கட்டுவேன் என் பெட்டிபொட்டியை :)

ரமணிக்கு ஆஹா லட்டு, எசப்பாட்டுக்காளு! என்று வெறிகாண,
ரமணி:
மப்பென்ன? மா(ர்)டிகிராவென்ன?
மதர்த்த மார்பென்ன? மக்காள்!!
மழை தொப்பென்று பெய்யது உளம்
சொக்கச் சொக்க"வெனப் 'பொப்'பிசைத்தால்,
எக்குத்தப்பாகிப் போகும் எதிர்த்தாளம்
எனக்கென்பதனால், காளவாய்ப்பொத்திப்
பக்குவமாய்க் பருவேன் பழங்கூழ்; அடுத்தாற்போல்
ஐயவிழி அடங்கிச் சொருகுவேன் பார் மதியம்;
படிப்பென்ற பழம்போர்வைக்குட்
அடித்தளப்பார்த்ததெல்லாம் பல்லாண்டாய்,
பாடலும் படமும் பருகலும் பின் ஒடுங்கிப் படுத்தலுமே,
வேறென்ன சொல்ல? வெளியிலே வெகுவெயில்!
உள்ளோடும் ஏசி ஓயாதாம்! அருகிலே ரிமோட்டு
மேலே எவனோ நடமாடும் பிளாட்டு!
கீழே கார்ப்பட்டு! கண்முன்னே கார்ப்பார்க்கு!
ஆகாயம் அப்பப்போ தெரியும்! அதன்கீழே ஏதோ புள்!
காலக்குமிழுள்ளே அகப்பட்டுக் கிழப்பட்டு
கடைப்பட்டு கடிகாரமுள்ளேறி நகர,
முனகி முனகி மூச்சடைத்து மொத்துண்ண,
அக நோய்ப்பட்டு நெடுக நான் குடிப்பேன்
கைப்படு'பிழா'விலே பெய்கிறவேளை
நொய்கூழோ நொழுகஞ்சியோ
நீர்மோரோ வேறெதெதுவோ
ஆள்தின்னு ஊழ்வினையிதுவென்றால்,
அடிப்புண்ட பழம்பாண்டத்திலே
ஊத்துண்டதெல்லாம் உணவு;
உண்பதெல்லாம் உகவை;
உவத்தற்கேயாம் இவ்வுலகு.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! :)

சு.வ:
சொல்லுக்கூழைச் சுழற்றிவடித்தோய்
ஒடியக்கூழைவழித்துக் குடித்தொழித்தோய்
படியக்கூழைக் கும்பிட்டனையோ
குடிக்கக்கூழைக் காய்ச்சுமஞ்சட்டிக்கே?

கடலில் விழுகுது பரிதியின் கதிரே
சட்டியில் உறையுது காலைத் தயிரே
குடலில் இறையுது நேற்றைய பயறே
பொட்டியுள் சுருளுது மெய்யன் கயிறே.

ரமணி:
மெய்யன் கயிறென்ன கழுத்துக்கா, வயத்துக்கா?
நல்லரவம் கழுத்தறுத்தும் நஞ்சுண்ட மெய்யப்பன்,
கட்டுவானோ பெட்டி கூழன் பீட்பாக்ஸ் அறுவைக்கு..
வீட்டுக்குப் போவார்! வேகமாய்ச் சாப்பிடுவார்
- வெறுமரிசிநீர்க்கஞ்சி யென நீர் எண்ணிவேண்டா
மாங்காய்த்தொக்கென்ன புதினாத்துவையலென்ன
வந்த அத்தை கைப்பக்குவமே தனியென்று
ஒத்தி ஒத்தி ஒரு வண்டி உணவு மொத்தியபின்
எடுப்பார் கணிப்பெட்டி; ஏறுவார் மேல்மாடி;
படுக்கப்போவாரல்லர்; படிக்கவும் போவாரல்லர்!
மிடுக்காய் நெடுக்கக்கிடத்தி யதன் நெஞ்சைப் பிளந்து
முன் வேலைத்தளம் பொத்திச் சுத்திச்சென்ற பொட்டி
சத்தமின்றிக் கயிறவிழ்ப்பார்; அரவம் படமெடுக்கும்.
அட அங்கே கணணியை மெல்லக் கவனி...
இனி, இங்கிரவு முற்றுமுற்றாய் கொட்டும்
அரிசிக்கஞ்சிமேல் பஞ்சப்பட்டோன் பசிபோல,
முத்துமுத்தாய்ச் சித்தன் சோத்துப்பதிகம்.
பொய்க்கும் விடுவானா மெய்ச்சித்தன்
அகமும் புறமும் தின்/செஞ்சோத்துப்பாட்டு!

சு.வ:
பத்தினிவிட்டுப்போய் பட்டினிச்சாவானுக்குச்
செத்ததாசையெனச் சித்தமடங்கிடுதா
தொக்குந்தொகையலுமாய் வாயமுதூறுதே
வித்தாரமாய்ச்சமைக்க விடுமென்னைவீட்டுக்கே.

இப்ப கொஞ்ச நேரத்துக்கு யாரையும் காணலை, நான் வை ராஜா வைன்னு கூவிப்பாத்தேன். வந்தாரையா கார்த்திக் வந்தாரையா!

கார்த்திக்:
கஞ்சி சுவைத்ததென்ன நெஞ்சு நிறைந்த தென்ன
அஞ்சா மல்சொல்வேன் யான் மிஞ்சுது வாசனைதான்
கெஞ்சிக் கேட்கின்றேன் கொஞ்சம் சொல்வீரோ
கஞ்சிதான் செய்யும் விதம் கரம்பக்குடியாரே?

வாயிலே புகைவிட்டபடி கார்த்திக் தொடருகிறார்:

பத்தினிதான் போனாலும் பட்டினிதான் போகலையே
செத்ததாசை என்றாலே சித்தம் விழித்துளதே
சித்தம் கேட்குது உம்தவறொன்று மிலையே
சித்தக் கவனமுடன் சமைப்பீர் கரம்பக்குடியாரே!

கரம்பக் குடியாரே ஒரு கஞ்சிக் குடிவாரே
விரும்பிக் குடிப்பாரே முகம் அரும்பித் துடைப்பாரே
கிறங்கி களிப்பாரே பின் உறங்கிக் களிப்பாரே !
உறங்கிய பின்னும் கனவில் கஞ்சி குடிப்பாரோ??

நான் தூக்கக் கலக்கத்துல முழிச்சுக்கிட்டு இருக்கப்ப, தூங்கியாச்சான்னு கேட்டுக்கிட்டே கிளம்பப் போனவரைக் கவ்விப் பிடித்தது இது,

ரமணி:
வாய்யா கார்த்திக்குராமாசு - மதுர
வாசனை வீசுதாய்யா? - முன்பூசி
முடித்த சிங்கப்பூர் செண்ட் பாட்டிலா,
இல்லை, முடிந்த பெருங்காயடப்பாவா
பாட்டிலே பீடிங்புட்டியிலேபீல் பண்ணிப்
பீல் பண்ணிப் பாலூட்டிவிட்டோம் நாம்?
வர்ரே வா! வாசனை வீசுதாம் ராமாஸ்வாசத்திலே!

இதைத்தொடர்ந்து கார்த்திக்கு போட்ட சின்னப்பிள்ளை வேடத்தை நீங்களே பார்க்கலாம் :) அவருக்குச் சமையல் சொல்லித்தருகிறார் ரமணி, இப்படி,

ரமணி:
பத்தினி போனது பத்தி பலகதை பேசுவார்
பக்கத்தைப் பார்த்தோமென்றால் ஆள் தனி.
கஞ்சிக்குக் கலயம் வாலாயப்படுத்தல் சுலபம்;

உப்பென்ப தொரு பிடி; உள்ளி கை மறுபிடி
பின் எட்டிப்பிடி அரிசி ஏதோ ஓரிரு ஆழாக்கு
சட்டையைக் கழட்டு; கவிழ்த்த சட்டியைத் திருப்பு
அப்பனே, கொட்டுள்ளே உப்போடு அரிசியும் உள்ளியும்
வெப்பேற்றமுன்னே, வேணும் வெறுந்தண்ணீர் கால்முழம்
மீதி ஒப்பேத்து, தின் நாக்குன்னதில்லையா? உன்னோட
இஷ்டம் கஞ்சிக்கு இஞ்சி சேர்ப்பதும் மஞ்சள் பூப்பதும்.
ஆகி வந்தால் தின்னு, அல்லாங்காட்டி அப்புடியே கொட்டி
அமுக்கு நாலு கருவேப்பிலை சேர்த்து; அடுக்களைக்குக்
காலை விடிந்துபோனால், புளித்ததிலே போட்டுப்பார்
பூக்கப்பூக்க அருந்தோசை. சட்டினி இல்லையென்று
சங்கடப்பட்டுப் பட்டினி கிடக்காமல், எட்டிப்போய்த்
தொட்டுக்க சயாமிய சில்லிஸோர்ஸ்; செமகாரம் பலகாரம் :)

கார்த்திக்:
நன்றா நவின்றீர்கள் கஞ்சிதான் செய்யு விதம்
இன்றிலை என்றாலும் என்றேனும் செய்திடுவேன்
குன்றுடை மேனியனே நன்றி உனக்கு
இன்றியமையாதென நாமிங்கு பகன்றிடுவோம்...
டேங்ஸ் அண்ணாத்தே, சோக்கா சொன்ன போ!

இந்த நேரத்திலே இதற்கு மேல் தாங்காதென்று நான் தூங்கக் கிளம்பியபடிச் சொன்னேன்,
சு.வ:
வெளிருங்காலையில் லிருளும்மாலையே
திறக்கும்மிமையே கிறக்கும்முழியே
ஒருகஞ்சிச்சூடு மறுகஞ்சிக்கோல்டே
சுற்றிச்சுழலுது சொக்கப்பம்பரமே.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஹி!

ஹி ஹி:)

சாந்தி யாரு எவருன்னு கேட்டு ஐம்பது அடிச்சுக் குதிக்கிறாரு கார்த்திக்ராமாஸ். புதுக்கவிதை சொத்தை என்று என்னோடு அன்பாய்ச் சண்டை போடும் நண்பர் ஆச்சிமகன் வந்து, பாரய்யா வடிவேலா மரபிலே துள்ளும் உற்சாகத்தை என்று சொல்லிப் போனார். போனார் என்று நினைத்திருந்த மெய்யப்பன் திரும்பி வந்தார்,

மெய்:
கழுதை கெட்டால் குட்டிச்சுவரய்யா
பொழுதை போக்ககணிப் பொட்டிப் பாக்சய்யா
ஆர்வம் தலைக்கேறத் தேடி ஓடுமய்யா
அரவம் படமெடுத்து ஆடிப் பாடுமய்யா

அத்தை இங்கிருந்தால் அப்போதே வந்திருப்பேன்
மெத்த விரும்பியே உறவினர் அழைத்ததினால்
அத்தை சென்றிட்டார் ஒருவாரப் பயணமுமே.
மொத்தச் சமையலுமே மெய்யன் தலையினிலே

கத்தி கரண்டியுடன் கரிப்பானை நானெடுத்து
கருணைக் கிழங்கெடுத்து, கத்தரிக்காய் காம்பெடுத்து,
முத்திநெருஞ்சியில்லா முருங்கைக் காயெடுத்து
துவரம் பருப்பெடுத்து தோதான பொடியெடுத்து

வீட்டுக்காரியவள் விருப்பக் குறிப்பறிந்து
கூட்டுக்கறிகாயும் குண்டுமல்லி இட்டலியும்
சூட்டுக் குறையாமல் சுவையாகப் பண்ணிவைத்து
ஊட்டி உணவளித்து மாலையே போனதய்யா.

பக்காப் பிரமச்சாரி யானாலும் நம் சமையல்
பக்கத்தில் அமர்ந்தே பார்த்தாலும் நம் சமையல்
பத்தினிமார் பிளைட்டேறி போனாலும் நம் சமையல்
பைத்தியமாய் ஆக்குகின்றார் பாவையவர் பாரினிலே.

இதற்கு நடுவிலே அண்ணாச்சி சொருகினார் தனது மொந்தைப் பழங்கஞ்சியின் சுட்டி. கொடுத்துவிட்டு மெய்யனைக் கண்டு உற்சாகந் தாளாமல்,

ரமணி:
ஆஹா! வாருமய்யா மெய்யா
மெய்யாலுமே உம் அத்தை
அன்புறவு அழைத்துப்போனாரா, அல்லது
உம் தொக்கலும் துவையலும்
விக்கிவிக்கி விழுங்கும் வில்லங்கம் கண்டு
சமைத்துச் செத்த்ய்ஹே போவோமோ என்றெண்ணித்
தப்பிப்போனாரோ தலை பரோலில் ஒரு கிழமை?

உள்ளங்கை உருட்டி உருட்டி
உண்ணத்தெரிந்தவனுக்கும்
உணரவேணும் உண்மையிலே
கறிவெட்டிக்களைத்தார் கலை
என்றே கழன்றுபோனாராக்கும்.

ஆஹா! ஆசைப்படியே ஆழாக்கு அரிசிபோட்டு
ஆக்கித்தின்னும் நீர் அரிசிக்கஞ்சி. அரிச்சுவடி
அதுக்குவேணுமென்றால், மாதம் தனியான யேல்
நவதானியச்சித்தரைக் கேளும் கஞ்சி ரெஸப்பி கெஞ்சி.

மலை மலையாய்க் குவித்து
மாதமெல்லாம் தின்றதுக்கு
மாலை ஒன்று போனாலென்ன
மாய்ந்தா போனாய் நீ - மெய்யாலுமே
கில்லாடிதான் மெய்யா நீ
அமெரிக்கா அத்தை வந்தக்கால் ஐயா
அடுக்களை பொய்யாகவேனும் புகுந்து
காட்டுவாராம் பொறுப்பான ஆளென்று.
அய்யோ! மல்லிகைப்பூவும் மனம்வாட
இட்டலியாய் இட்டு அளிப்பாராம்;
தொட்டுக்கொள்ள என்ன, பொடியா? பொய்யா? :)

இந்தக் கூத்திலே யாருக்காச்சும் தூக்கம் வருமா, அல்லது வந்த தூக்கந்தான் நிற்குமா? தூக்கங் கலைந்து என் சரட்டை விட்டேன்:
சு.வ:
சாந்தியென்றுசொல்லிச் சாயப்போனவேளையிலே
சந்திலோரெலியாச் சிந்தையிலேகுறுகுறுக்க
எட்டிப்பார்த்தேனெம் மெய்யன்றலையினிலே
கொட்டிவிழுந்ததுவாம் மொத்தமுழுச்சமையல்

தள்ளியோரிடத்தே யென்னசெய்யப்போனாரோ
குண்டாய்வெடியாய்க் கரும்புகைகிளப்பிக்
கடைசியிற்கடையிற் தின்கதைசொன்ன
பிரதாபங்கேட்டுயாம் தின்றதுரைப்போம்

சில்லிட்டப் புட்டிப்பீரிரண்டு மெலிசாய்ச்
சீவிவறுத்தக் கொழுப்புருளை யொருகொத்து
நிதானத்துக்குப் பிடித்தொரு இலையுந்தழை
நின்றுதின்று குந்தினேன் பொட்டிக்கடேய்.

ரமணியின் கிண்டலுக்கு மெய்யப்பன் சளைத்தாரா, பதில் சொல்லுகிறார்,
மெய்:
அழைத்துப் போனாரா களைத்துப் போனாரா இல்லை
பிழைத்துப் போனாரா பகுத்து நானறியேன்
கொக்கிப் பட்டனெல்லாம் பட்டென்று தெரித்திடவே
ஆக்கிப் போட்டதனால் அளவின்றிப் பெருத்திட்டேன்

வைப்பில்லை தொடுப்பில்லை வகையறியா மனசில்லை இருந்தாலும்
கைப்பிள்ளைக் குழவியெனல் கணக்காய் கண்ணயர்ந்து
மாப்பிள்ளைப் பண்டாரம் மணியடிச்சா சோறுண்டு
மழையடிச்சு பேய்ஞ்சாலும் நகலாத எருதெனவே

மதுரைமத்தியில ஆனைக்கல்லெனவே மண்
குருதை மேலமர்ந்த அய்யனாரெனவே மெய்யன்
இருந்த விதங்கண்டு அரண்டு போனாரே
தெரிந்த வீட்டிற்கே அத்தை போனாரே.

பொய்யைப் பொடிசெய்து பக்கத்தில் வைத்தாலும்
கைய்யைக் காற்றில் ஆட்டியே கறியமுது என்றாலும் வெறும்
பைய்யைக் காட்டிப் பசியாறு என்றாலும்
தைய்யல் மனைவிவள் தைரியமாய் உண்பாள் - பதிபக்தியது

பாருமய்யா - நீர் இங்குவந்து பாருமய்யா!!!

மேலே சொன்னதிலே ஆனைக்கல்லென்று ஒரு வார்த்தை வந்ததில்லையா, நான் அந்தக் கல்லைப் பிடித்துப் பெயர்த்துப் போட்டேன்,
சு.வ:
ஆனைக்கல்சிம்மக்கல் ஆடுதுபார்குழவிக்கல்
கல்கல்லென்று கற்றுங்கவ்வியும்
அடக்கல்ஒடுக்கல் தடக்கல்முடக்கல்
கல்லாதிருந்தேன் யானோர்குத்துக்கல்.

எனக்கும் மெய்யப்பனுக்கும் சேர்த்தொரு அடி கொடுக்கிறார் ரமணி,
ரமணி:
அவருக்குப் பீர்புட்டி இவருக்குச் சோத்துமணி
போச்சுதடா 'சுப்பர்' 'அப்பர்' வாழ்க்கையெல்லாம்
டெம்பரரியா தேவதாசு பாட்டை, பவ்லோ லைனு.
கஞ்சா குடிச் சித்தரெல்லாம் பஞ்சத்துக்காண்டியென்றால், காண்க
கஞ்சி குடிச்சித்தரெல்லாம் சூழ்பரம்பரையாலானார் பசிக் காண்டி!

ரமணியின் கடைசி வார்த்தையைப் பிடித்துக் கொண்டு ஒரு ஆண்டியாட்டம் போட்டேன்,
சு.வ:
பசிக்காண்டி புசித்தாண்டி
படிசேந்திக் குடித்தாண்டி
நடித்தாண்டி படித்தாண்டி
சித்தாண்டி செத்தாண்டி!

மேலே பீரைப் பற்றிய பேச்சு வந்ததல்லவா உடனே வாயூறிய மெய்யப்பன்,
மெய்:
காரைச் சுண்ணாம்புக் கலர் வெள்ளை மனதெனக்கு
பீரைப்பருகிவிட்டு பெட்டியினைத் தட்டிடவே ஆசைதான் எனக்கும்
நீரைப் பருகிவிட்டு நித்திரையைத் தேடுகிறேன்.
அத்தைமனங்கவர ஆக்கிட்டுக் கொடுக்கிறேனா - பாருமவர்
போனபின்னே பருகிடுவேன் எட்டுப்பெக்கு.

ரமணி (மெய்யின் பதிபக்தி குறித்ததற்கு):
கையைக் காட்டி கறியமுது என்றுரைக்க
சரியென்ற இணை கருத்தை
பதிபக்தியென்று பகர்வீரோ? கேட்டால்,
"விதியென்றுரைக்க வேறு வழியின்றி
இருந்தேன் நான்; விட்டால்,
"விழுந்தாள் கால்; புகழ்ந்தாள்
என்கையூட்டுப்போசனம்" என்றும்
விளக்குவீர் துலக்குவீர்" எனும் சதி
துரித கதியிலே உம்கை குத்தி
சமையற்கத்தி முறிந்தால்,
விதியென்றுரைக்க வேறு வழியின்றி
இருந்தார் ஆரென்று நானுரையேன்.

அப்படியே என் ஆண்டியாட்டத்துக்குமொன்று கொடுக்கிறார் ரமணி,
ரமணி:
பசிச்சாண்டி, புசிச்சாண்டி
பரமக்குடிக் கமலாண்டி
சித்தாண்டி செத்தாண்டி
என்னானான் விருமாண்டி?
ஆனாண்டி அடுத்தாப்பல
வசூல் ராஜா யெம்பிபியெஸ்ஸ¤.

எனக்கு மேலே பேசிக்கிட்ட கத்தி, வெட்டுக் குத்து வெளங்காமப் போயி,
சு.வ:
கத்தியோகையோ முறிந்ததையானறியேன்
வேலுக்குவேல்பறந்து வெற்றிவேல்சுழன்றுவந்து
அடித்துத்தெறிக்கும் நட்டநடுராவினிலே
ஐயாஉம்கவிதையிலே முறிந்ததுபோட்டபெக்கு!

எழுபத்தி அஞ்சுக்கு ஒரு விசிலையடிச்சு ஆட்டம் போட்டது ஒரு விசிலடிச்சாங்குஞ்சு!மெய்யப்பனுக்குத் தூக்கம் வந்துடுச்சு போல, மங்களம் பாடுறார்,
மெய்:
சுவையாöப் பொழுதின்று சிரிப்பாய்ச் சென்றதே
சாந்தி ஓம் சாந்தியென்று உரக்கச் சொல்லிட்ட்டால்
உறக்கத்தில் இருந்தே கண்ணை உருட்டியே எழுந்திடுவாள்.
சாந்தி யாரெனவே சட்டைபிடித்திடுவாள் - கத்திமுனையுடைத்தும்
கற்று உணரலையே கழுத்தைப் பிடிப்பாளே - மெதுவாவே சொல்லுகிறேன்
வணக்கம் வணக்கமப்பா - பார்ப்போம் நாளையப்பா!!

ஆனா விடுமா ரமணியின் மதுவிலக்குப் பிரச்சாரமும், தேத்தண்ணிப் பரிந்துரையும்,
ரமணி:
பெக்கினைத் தேடின் பெறும்பேறில்லை
பீக்கோ டீயினைத் தேடுமின்; பிறப்பது அறுமாம்
எட்டுத்திக்கினைப் பெயர்ந்தும் ஏழு பெக்கினைத் தேடின்
முக்கினும் மோட்ஷம் முன்னே வராது.

பெக்கது விசமாம்; பொக்கென்று போவீர்
பக்கென்று பயந்தால், பக்குவமாய்ச் சொல்வேன்;
எக்குத்தப்பான பெக்கினை அறுமின்; எந்நாளும்
பெருங்கப்(பு) வடிக்கருங்காப்பியினை அறுமின்.
புக்கும் புக்கும் பீக்கோ டீயினைப் புகட்டும்.

(அப்புடியே தாளத்தை மாத்தி பாரதியின் வசன கவிதையடி அடிக்கிறார்)

டீயே என் வாயினைத் திறந்து வைக்கிறேன்!
டீயே என் திறந்த வாயினுள் நுழைந்தொழுகுக!
டீயே துரிதகதிக்குத் துணையான தேவன்!
டீயே மந்தபுத்திக்கு அருமருந்தாவான்!
டீத்தேவனே உன்னை நான் போற்றுகிறேன்!
டீயே என் நெடுவளருதி! டீயே என் பெருவாரிதி!
டீயே என் திவ்யஜோதி! டீயே என் த்ரேஷாப்ராட்டி!

டீயென்ற பெயரிலேயே சுறுசுறுப்பாகி மெய்யப்பன் போகிற போக்கில் தட்டிப் போனார்,
மெய்:
வெறும் டீயே உமக்கெல்லாம் - கொஞ்சம் நீட்டி
முழக்கினால் எமக்கெல்லாமெது வெனத் தெரியும்
கடும்டீயும் அதுதான், சுடும்டீயும் அதுதான் - எதுவெனக்
கேட்டீ ராயின் சொல்வேனே - பெண்டாட்டீ :)

இப்படியாய் ஆட்டம் போட்டு நாளைக்கு வந்து நூறடித்துக் கொள்ளலாமென்று கடையைக் கட்டித் தூங்கப் போனோம். விடிந்து பார்த்தால் கருக்கலோடு கருக்கலாய்ப் பாரி உருட்டிக் கொண்டிருக்கிறார்,
பாரி:
சித்தம் செப்பும் சித்த வரையரையிலியை
சித்தமாக செப்ப வந்தான் யூத சித்தனொருவன்
செப்பினவன் தானும் செப்ப
சித்தனாகி நின்றனன் மீசைமுண்டாசுடனே
எச்சித்தம் உசிதம் என்றறியா இப்பலகாலம்
அச்சித்தம் நோக்குங்கால் இணையத்தில்-நானிடறி
பூவிலே வலையாம் சிக்கியே சீக்கியடித்து
செப்பும் பாம்பே என்றுரை பாமரனே!!

முன்னிருந்த சித்தர் கோடி எண்ணமிங்குலவி
தெளியும் தேரையும், பாம்பும் என உரைக்க
பூஜ்ஜியத்தில் உரையாடி தெளிந்த
நன்நண்ப அழகு வேலே, உறைந்தாள் மாது
உன் உள்ளம் அறிந்தவேளை என்றுரை பாமரனே!!

அண்ணங்கார ஆகார சுகமாய் உள்ளெடுத்து
தின்னுங்கார நானாகி நன்னினேன் நன்றியிலே
நன்றிதனை நுனக்கு நானீந்தேன் தரணியாம்
அடிகொண்ட முடிகொண்ட ரமணி என்றுரை பாமரனே!!

என்னடா என்னமோ பாமரனே, பாமரனேங்கறாரேன்னு நானும் பாமரனேன்னு ஒன்னு போட்டேன்,
சு.வ:
முட்டிமுழிபிதுங்கிக் கொட்டிக்கவிவளர்த்து
முடங்கியுறங்கிக்கனாக்கண்டு விழித்தெழுந்து
பொட்டித்திறந்துபார்த்தேன் - பாரீர்பாரியென்று
வெட்டியடிக்குதுமின்னல் ஓயேன்பாமரனே!

பாரியும் தொடர்ந்து இன்னும் மூனு பாமரனைப் போட்டார்,
பாரி:
கஞ்சிக் கலயந்தொட்டு மணி வேறு பலகொண்டு அப்பனுக்குக்
கஞ்சிக் கலயந்தொட ஆற்றுப்படுத்திய தகப்பன்சாமி
கஞ்சிக் குடி கரம்பக் குடியோன் -அவனுக்
கஞ்சி நிற்பான் வேந்தன் என்றுரை பாமரனே!!

அன்பிற்கு ஆட்பட்டு அத்தை-தனை நாடனுப்பி
செத்தாலும் நா உயிர்க்க கஞ்சிக்குடியோன் கருணையினால்
குருணைக் கஞ்சிக் கஞ்சாமல் ஒடியற்கூழோடி செத்தானை
சங்கமித்து வாழ்வான் என்னப்பன் மெய் என்றுரை பாமரனே!!

அங்கிங்கெணாது எங்கும் இறைத்து இறையே தேடி
இங்குள சித்த புத்தி சத்தி காண சந்த குற்றம்
தான் பொறுத்து இங்கும் உளேன் என்பதறி
எனக்கூறி நிற்கும் கார்-தீ யே என்றுரை பாமரனே!!

பாரிக்கு ஒரு ஷொட்டுக் கொடுக்க நான் இதைச் சொன்னேன்,
சு.வ:
முல்லைக்கீந்தாயுருட்டுந்தேர் குதலைப்
பிள்ளைக்கீந்தாய்த் துடிக்குந்தோள்
கிள்ளைக்கீந்தாய் கனிக்கொவ்வை
இல்லையென்னாது இல்லையென்றோனே.

என் ஆட்டம் முடிந்து நான் கிளம்புகிறேனய்யா, நீங்க பாத்து சதமடிங்கன்னு பாரி கிளம்புறார்,
பாரி:
சதமடிச்சான் அண்ணங்காரன் அன்னைக்கு
சதமடிச்சான் தம்பியென்பேன் இன்னைக்கு
நான் ஆட்டை-யிலயிருந்து ஆகின்றேன் ரிடையர்டு-ஹர்ட்டு
பார்த்து எல்லோரும் அடிச்சிடுங்க ஒரு ஷாட்டு-ஹட்டுக்கு.

வந்துட்டார் வந்துட்டார், மெய்யப்பன் வந்துட்டார், தன் காலைக் கணக்கைத் துவக்குகிறார்,
மெய்:
இங்கே பொறியாளர் இரவிலு றங்கையிலே
அங்கே பெங்களூரில் பொட்டி திறந்திடுவார்
பொட்டிதட்டும் வேலை பொழுதுசாய்ந்திட்டால் - ஆன்
சைட்டுவிட்டு ஆஃப்ஷோரு போவதறிவாய் - அவுட்சோர்சிங்
பட்டியலில் பாட்டையும் சேர்த்திட்டார் பாரியின்றே
கட்டுக்கவியு மிப்போ நூறைத் தொட்டிடுமே.

இதுல வர்ற அவுட்சோர்ஸிங்கைப் போட்டுக் குழப்பியடித்து நானிட்டது இது,
சு.வ:
ஆற்றுக்களி மண்ணெடுத்தும் ஆங்கோர்விலா
வெலும்பெடுத்தும் ஊதியூதியுயி ராக்கேனென்றே
யவன் அவுட்சோர்ஸிங்செய்யப் புளுத்துத்
தள்ளாடிமோடிக் கிறுக்குதே பூமிப்பந்து - அவுட்டுக்
கவியிலேயென் பொட்டிரொம்புதே பாடுசிந்து.

இப்போ 98 மறுமொழியோட திக்கு திக்குன்னு யாருடா அடிப்பான்னு நெனக்கயில, மெய்யப்பன் வந்து, யப்பா யாராச்சும் அடிங்கப்பா, கிளம்புவோம்னு கேக்குறாரு,
மெய்:
தேத்தண்ணி யடித்துவிட்டு தூங்கியவரெங்கே? - ஏசி
காத்தடிச்ச சொகத்தினிலே கட்டிலிலே தூங்குறாரா
நேத்துவடிச்ச சோறில்பூந் தோசைஊத்துறாரா - திருப்பாட்டு
சேத்தடிச்சி ஒருநூறாய்ஆக்குமப்பா - திருநீறைப்பூசி
--மலையேறிப்போவோமப்பா.


இந்த சைக்கிள் கேப்புல பரி குதிரையை டடக் டடக்குன்னு விட்டார், என்னாங்கடா இன்னும் முடிக்கலையா உங்க பாட்டைன்னு கேட்டுட்டு, வந்த வேகத்துல இன்னொன்னு சேத்தடிச்சு நூறாக்கினார். நூத்துக்கு ஒரு வான வேடிக்கையும் காட்டியாச்சு. நூறடிச்சாலும் நான் ஆடியே தீருவேன்னு நேத்து போன ரமணி ஒரு அரசியல் பத்தியத் தூக்கிக்கிட்டுத் திரும்பி வந்தார்,
ரமணி:
வெளிப்போகு வேலைக்காய்க் கவிபடைத்தார்,
சடக்கூடு படபடக்க உயிர்கொடுத்தார் - பார்த்தாரா,
'மிளிர்நாடு' கோஷமெல்லாம் தோஷமாகி
தடங்கேடு தமக்கான என்டிஏ?

கஞ்சிக்காய்க் களமிறங்கினோர் களம் காண்
விஞ்சியதாம் தொகை நூறு வீறில்; நெல்லரிசிக்
கஞ்சிக்கு முந்திய பந்திக்கு வினை நூறென்றால்
பஞ்சப்பாட்டெல்லாம் சொல்வாரார் பஞ்சிப்பாட்டென்று?

இம்மென்னும் முன்னே இருநூறும் முன்னூறும்
அம்மென்றால் ஐநூறும் ஆகாதோ? - பங்குக்குக்
கம்மென்றிருப்பவர் களமிறங்கித் தட்டின், (அரிசிக்)
கஞ்சியும் விஞ்சும் கவி/டி/ளி/லி கோடி

தேத்தண்ணி எங்கே தூங்கியது? தெரியாமல்
நேற்றிரவு எடுத்துப் பார்த்தாரா ஸ்ரோம்பலி
கூத்தாச்சு கதை; ஒரு கோதாரியும் புரியாமல்
போர்த்துப் படுத்தாரா, புழுக்கமில்லைத்தான்,
புரண்டார் புரண்டார் புழுப்போல, இமைமூட
முன்வெளித்து முன்னே இரவி.


இது ஏதடா இருநூறு முன்னூறென்று அடி போடுகிறாரே என்று பயந்த நான், இருநூறாசையெல்லாமில்லைன்னு சொல்லிட்டு ஒன்னைப் போட்டேன்,
சு.வ:
நாளுரெண்டுங் கூட்டியே நூறடித்த பாவலோய்
தூங்கும்மூளைக்கிண்டியே பாவடித்தோ மாவலாய்
ரெண்டுநாலுமெண்ணியே எட்டடிப்போங் காவலாய்
தொல்லைதுயரோடவைக்கும் பொட்டிதட்டுங் கார/லமே.

டாய், எங்கடா ஓடுறீங்க, இங்க வாங்கன்னு ரமணி இழுக்குறதப் பாருங்க,
ரமணி:
வயித்துச்சோத்துக்குத் தூக்கிப் போட்ட பாட்டெல்லாம்
உள்ளார ஏத்திக்கிட்டதா ஒரே கிக்கு? பாத்திருக்க,
படமெடுத்து, புத்துப்பாம்பாட்டம் திசை மாத்திமாத்தி
ஆட்டமென்றால் ஆத்தோட்டமைய்யா ஓட்டம்!!

மலையேறும் சாமிக்குப் பழனி மொட்டை
மெய்யேறும் சாமிக்குப் பொட்டி தட்டல்
காத்திக்கு ஸ்வாமிக்கு சம்போ மஹாதேவா
அக்கா மதிக்கு ரகுபதி ராகவ ராஜாராம்
தேரோடும் பாரிக்கு நட ராஜா நட நீ
திண்ணைதூங்கிக்கு (த் தன்) வாத்தியோட (தீவிர)வாள்பைட்
அம்மணி இன்னிய இன்னிங்ஸ¤ இதோ இஸ்ரார்ட்டு!! :-(

ஐயா, வேலையிடத்திலே உக்காந்து கவிபாடியது போதுமென்று நான் சொன்னது,
சு.வ:
பாட்டுக் கொடுத்தக்கிக்கு
பாம்பாட்டம் கொடுத்தகிக்கு
நேத்தைக்கிருந்த கிக்குக்கொக்குக்
கழுத்தாநீண்டா லடுத்தவாரம்
இருக்கெனக்கு வாத்திக்கிக்கு :)

ரமணி படம் பார்த்த கதைக்குப் பதில் சொல்லுறார் மெய்யப்பன்,
மெய்:
நானிங்கே ஸ்ரோம்பலி எடுத்துப்பார்த்தால்
தூணிங்கே தலையில் இறங்கும் - கலைப்
படமே தடையாம் அதில் கருப்புவெள்ளைத்
தடம் பார்த்தால் ஆவேன் நான் முடம். :)

என்னமோ சினிமாப்படங்களப் பத்திப் பேசிக்கிட்டாங்க, நமக்கொன்னும் புரியல,
ரமணி:
சும்மாவா சொன்னார் ஸினிமா ஸ்ரோம்-பலி என்று!
புயலடிக்காமற் போகுமா? பலியெடுக்காமல் ஆகுமா?
அம்மாடி! போன கிழமை நோரா இனு; அடுத்ததுக்கு,
ஐரிசு, அப்பாலுக்குமப்பால், த கார்டின் ஒப் த பின்ஸி-கொண்டினி.
வீட்டம்மணி கொன்றாலும்விடுவேனோ, விட்டாரியோ டி ஸிகா!

அம்மணிக்கும் சொல்லியாச்சு, "கண்மணி நீயும் காணவேணும்,
பெண்மணியின் வாழ்க்கையெல்லோ ஸ்ரோம்பலியும் ஐரிசும்"
வைக்கிற மாதிரி வைத்தால், ஐஸ¤ ம் அப்பப்போ
வெகு நைஸா வேர்க் அவுட்டாகும்; அத்தியும் பூக்கும்!

பரி மறுபடியும் வந்தார், யோவ் நிறுத்துங்கய்யா நிறுத்துங்கய்யான்னு ஏதோ சினிமாவுல யாரோ கேக்குற மாதிரி கேட்டார், மாறாக மதியோ, அய்யோ என்ன முடிஞ்சுதான்னு அழப் போனார். ரமணியோ, நான் எதுக்கய்யா நிறுத்தனும்னு இப்படிப் போட்டார்,
ரமணி:
அரிசிக்கஞ்சின்னு அசரீரீயாகப் பேசுற நாஸ¤வாக்காரரை நிறுத்தச்சொல்லுங்க;
நா நிறுத்திடுறன்
நவதானியமுன்னு நாக்கைச் சப்பை கொட்ற யேலரை நிறுத்தச் சொல்லுங்க;
நா நிறுத்திடுறேன்
வாசனைநாசியோட அலையுற மேரி லாண்டரை நிறுத்தச் சொல்லுங்க;
நா நிறுத்திடுறேன்
அப்பப்ப வந்து தேர்வுடுற பெங்களூருக்காரரை நிறுத்தச் சொல்லுங்க;
நா நிறுத்திடுறேன்
வேலைலாம வேலை பத்திப்பேசுற மேடம் கியூபெக் அம்மையாரை நிறுத்தச் சொல்லுங்க;
நா நிறுத்திடுறேன்
அப்பப்ப நோவுற கையாலயும் ப்ளாக்ஸ்பாட்டுக்கு ப்ளாக்ஸ்பாட் வெக்குற
மிசூரியரை நிறுத்தச் சொல்லுங்க;
இந்த ஒடியற்கூழோடிச்செத்தான் நிறுத்திடுறேன்...
...அதுவரைக்கும்
குடிப்பேன் குடிப்பேன் குடிச்சிக்கிட்டிருப்பேன்;
நாக்கும் கூழும் உள்ளவரை
அடிப்பேன் அடிப்பேன் அடிச்சிக்கிட்டிருப்பேன்;
அம்மணி வந்து அதட்டும்வரை...
அய்யோ.. வந்திட்டாங்க..வரட்ட்ட்ட்ட்ட்ட் ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

நான் வேறு சும்மாயிருக்காமல், சாமியை மலையேத்துறேன் என்று சொல்லி,
சு.வ:
அண்ணே கண்ணே ஆலிலைத் தொன்னே
பண்ணே தின்னே புளியேப்பஞ் சொன்னே(ன்)
கொட்டிக் கவிழ்த்துக் கலயங் காலி
கூட்டிக் கழித்து நாளுங் காலி!

என்று சொல்ல ரமணியைக் காணவில்லை. அம்மணிக்குப் பயந்து போனாரா, போதும் தொலைங்கடான்னு பாவப்பட்டுப் போனாரா? மதி வந்து யாரோ வர்றாங்கன்னு பயமுறுத்தி நானலறப் பெரும் இடைவெளிக்குப் பிறகு செல்வராஜ் வந்தார்,
சும்மாவா என்றால், அதுதானில்லை, தானும் ஒரு பாட்டோடு,
செல்வா:
நாவெல்லாம் சுழன்றாடும்
நிலைகாணா திருந்தேனே
ஆட்டம் காணேனால்
யாதோரு கவலையில்லை
கஞ்சி எதுவும் உண்டென்றால்
கடிதுசொலும் குடிக்க வருவேன்!

ஐம்பதடித்துப் போன கார்த்திக் கிட்டத்தட்ட 123க்கு மறுபிறப்பெடுத்து வருகிறார்,
கார்த்திக்:
அழைத்த குரல் கேட்டு ஓடி வந்தோம்
பிழைத்து ஆர்? செத்தது ஆர்?
குழைத்த கஞ்சி அருந்தி அருள் பெறவும்
விழைந்து விரைந்து வருவது ஆர்?

அடடே ஐம்பதில் விட்டுச் சென்றேன்
விடடா என்றாலும் விட்டாரில்லை
சட சட வென வரும் கவிகள் பாரீ(ர்)
மடமட வெனத் தாண்டும் மனமும் நூறையுமே

நா நிறுத்திடுறேன் என்றாரே
நாணி யா நிறுத்தபோறார் நவிலுவாரா?
நான் நிறுத்தியபின்னும் கஞ்சி சுவையில் சுழன்று
வான் மழைபோல் பொழிவார்கவி பார் ரமணியாரே!

செல்வராஜரே செல்வரே ராஜரே
செல்வம் செவிச்செல்வம் அறிவீர் நீர் - செவிக்
கல்வி இல்லாக்கால் சிறிது கஞ்சி
உள்ளெ டுப்பீர் பசியுங்காலே!

சரி, இந்தக் கச்சேரி மறுபடியும் நீளப்போகுதேன்னு ஒரு பக்கம் இருந்தாலும், இவர்கள் இருவரின் ஆர்வத்தைப் பார்த்துவிட்டு என்னால் சும்மாயிருக்க முடியவில்லை!
சு.வ:
செல்லுவோம்யாமென்றே மங்களம்பாடி
வில்லெடுத்துப்பெட்டிவைத்தோம் வந்தார்
நின்றார், கண்ணாற் கதைசொல்லும் செல்வா
தின்போமுங் கஞ்சியிருந்தாலென்றார்,
பாரியின் தோழற்கு இலவென்று சொல்வருமோ?
சொல்வாய் செல்வா செல்லாதே வா.

அழைகுரற்கேட் டோடி வந்தோய்
அழைத்ததுயாமோ நீயோ அவரோ?
யாரும் யாரும் நீயாகியரே
நீரும் நீரும் யாமாகியமே
ஊரும் நீரும் யாமாகியதினால்
பிழைத்தோர்ச் செத்தோர் நாமாகினமே.

பவுண்டரி, சிக்ஸர் ஆட்களெல்லாம் போதுமப்பா என்று கழன்று உருப்படியான வேலைகளுக்குப் போன பிறகு, நானும் கார்த்தியும் கலயமுருட்டினோம்,
கார்த்திக்:
கூழ் குடிப்பதென்ன உம் ஊழ்விதியோ?
கூழோனே மலை பெயர் பெரியோனே
ஏழு பெக்கு வேண்டாம் என சொன்னீரே - நலமான
வாழ்வு தரும்; குடியும் கூழ் நாள் முழுக்க!

நடுவில் கார்த்திக் சிரிக்கும் ஸ்மைலியொன்றை ஒரு கவிதைக்குப் பரிசாய்ப் போட்டார், அதுக்குப் பதில்,
சு.வ:
மணக்கு மஞ்சள்முகஞ் சிரித்தாற் போதுமோ
வார்த்தை வேண்டாவோ மணக்கும் புட்டியே
பிணக்குப் பொடிசெய்யு நகையைக் காட்டியே
கோர்த்துப் போடுவாய் பாவொன்று கூட்டியே.

சு.வ:
அம்மணி வந்தாரா எம்மணிரமணியை
அள்ளிப்போனாரா, படங்காட் டென்றாரா
படமொன்று போட்டாரா பாரோரே
பாரீர்க் கேளீர் இம்மணியெங்கே
இழுத்துவாருமிம் மாலையிற்குறையுதே மணி.

கார்த்திக்:
கஞ்சி வெறுத்தனரா?
அஞ்சி ஒதுங்கினரா?
மஞ்சம் அடைந்தனரா?
எஞ்சினோர் நாமா? நாம் மட்டும் மாட்டுனமா?

சு.வ:
மாட்டுனமென்றும் கூட்டுனமென்றும்
ஆட்டினமெய்யை ஓட்டடா
மாட்டினதாரே கூட்டினதாரே
ஓட்டினதய்யன் சீட்டடா.

கார்த்திக்:
நாமே செய்வோம் நல்மாலை
நாறு இன்றிசெய்வோம் சொல்மாலை
வார இறுதி இது; வந்தது மாலை
சோரப் போவதில்லை இந்தப் பொன் வேலை/வேளை

கஞ்சிக்குடி கவிதை படைத்திடும் இடையில்
செஞ்சாந்து சிகப்பு முத்திரை குடித்த நண்ப
மிஞ்சித் தலைக்கேறிய போதையின் போது எம்மை
இஞ்சி கடித்தாற் போல் செய்வாரே இடைஞ்சல்

உணவருந்து வேளையிது வந்தது பார்
மனமது வேண்டேல் என்று சொன்னது பார்
தினமது சமைக்கும் ஒரே சாம்பார் பார்
இன்னும் மட்டும் கஞ்சி இங்கு இனிக்கும், பார்

வேங்கட மலையில் அமர் பாலாசீ
வெங்கஞ்சி நீர் வடிப்பீர் பால் காய்ச்சி
திங்க சுவைகொண்ட மோர் பீய்ச்சி - நா
தங்கும் அமுதூறும் சுந்தரவேலர் கஞ்சி

சு.வ:
கஞ்சிக்கஞ்சிக் கழனிக்கஞ்சி
சொல்லுக்கஞ்சிச் சுவையினுக்கஞ்சி
பண்ணுக்கஞ்சிப் பழத்துக்கஞ்சி
உண்ணுக்கஞ்சி உருத்தெரியானே :)

கார்த்திக்:
சந்திர மதி வதனாள் சொன்னாள்
தனித்து நான் இங்கு வந்த இன்னாள்
இன்னுமொரு கஞ்சிக் குடியர் பண்ணாய்
தின்னுவார் நம்முடன் என்(றா)னாள்

சு.வ:
உற்றுற்றுப் பார்த்தேன் உமைத்தான் சொன்னாளா
உமைத்தாள் பற்றியே உரைத்தேன் இன்னாளே
பற்றற்றுப் பார்த்தேன் தினைத்தேன் தின்னேனே
சமைத்தேன் வடித்தேன் குடித்தேன் நின்னேனே.

கார்த்திக்:
கஞ்சிக் கஞ்சியவர் பாட்டில்
கஞ்சி வந்து புகுந்ததென்ன அதுபாட்டில்?
கழனிக்கஞ்சியவரா? பழத்துக்கஞியவரா?
பழனிமீது கோவணனாய் விளையாட்டு செய்தவரார்?

இன்னொரு குடியரென்றாள் என்னையன்று
நான் நேற்றைய குடியனென்று அறிவாள்
இன்றும் கஞ்சியா நேற்று போல் இல்லையேல்
இன்றும் கஞ்சியா நேற்றைய கஞ்சியேதானா?

சு.வ:
கோவண விளையாட்டு
ஆட்டுத் தலையாட்டு
கோவெனத் தாள்போற்று
வீட்டுத் தளையோட்டு

இதுல இருந்த என்னத்துக்கோ கார்த்திக்குக் கோவம் வர,
கார்த்திக்:
வீட்டுத் தளையோட்டிவிட
ஆட்டுத் தலையாட்டு
கோவம் வரச் செய்தீரெனில்
கோவணமும் மிஞ்சாது மீட்ட :)

சு.வ:
இன்றுநேற்றும் பந்தின்சுழற்சி
இனியுதவாதே தூசியுமலர்ஜி
தும்மிச்சிவக்குதே நாசியும்வாசி
இம்மியும்பிரியேன் சிவசிவயோசி.

கோவமோ குணமோ கார்த்தியுநீரே
தாபமோ தவமோ வேலருநீரே
நீலமோ வெள்ளையோ உஜாலாநீரே
காலமோ மேளமோ குஜாலாதானே.

கார்த்திக்:
உண்மை சொன்னீர் மிக
நன்மை சொன்னீர் வெகு
வெண்மை மனத்தோனே
மின்னல் போல் தும்பும் நோயேன் ? நோவேன்?

சு.வ:
நோவெனப்படுதல் காட்சியின் பிறழ்வே
சாவெனப்படுதல் ஆட்சியின் திரிபே
நாமெனப்படுதல் ஆச்சியின் மதலேய்
தாமெனக்கெடுதல் பூச்சியின் கொடுக்கே.

கார்த்திக்:
சுந்தரரே சிந்தை லேசாய் சொக்குதே
இந்ததினம் இனிதேதான் கழிந்ததே
விந்தையிது நாமிருவர் மட்டுமே கவிபாட
மந்தைக் கவியர் எந்தவிடம் சென்றனர்?

சு.வ:
மந்தையது ஆட்டிடைய னோட்டுவழி
சிந்தையது ஓட்டுடைய னேட்டுவழி
மந்தையுஞ் சிந்தையு மோராகிடுமோ
வெந்தயம்பயறு கஞ்சி காய்ச்சிடுவீரே?

கார்த்திக்:
ஆட்டிடையோன் யாரே சொல்வீரோ?
வீட்டுக்கு அனுப்பும் மாலை வேளையோ?
பாட்டுடைக் காவலனே பகன்றிடிவீர் உம்
வீட்டில் காய்ச்சும் கஞ்சிக்கேன் வெந்தயம்?

மந்தையிலிருந்து இரு ஆடுகளாய் நாம்
சிந்தை சிதறிப் பிரிந்தது போல் ஆனோம்
கந்தம் கமழ் வடிவேல் உடையோரே நாளின்
அந்தம் இதுவெனச் சொல்வோமா நாம்?

கார்த்திக்:
வேலரே நீர் எமைப் போற்றியதுண்மை
சூலரே வீட்டு தளையோட்ட நான்சொன்ன தன்மை
எம்மிடமிருந்து நீர் கோவம் தவிர்க்க அல்ல
அம்மணி உம் வீட்டின் பெண்மணியின் கோபமதெனக் காண்

வயிறு நிறைஞ்சாச்சு
பயிறு தீர்ந்தாச்சு
ஞாயிறு மறைந்தாச்சு தூக்கக்
கயிறு திரிஞ்சாச்சு

சு.வ:
அந்தம் ஆர் ஆதி ஆர் பூதம் ஆர்
தொந்தம் ஆர் தொகுதி ஆர் விகுதி ஆரே
பந்தம் பார் பார் பார் பறங்கி பார்
நொந்தம் பார் கிறங்கிப் பார் பகுதிப் பாரே.

கார்த்திக்:
அண்ணே தூக்கம் என்னை அள்ளிக் கொண்டு போகுதே
கண்ணே சொக்க உடலும் தள்ளிக்கொண்டு போகுதே
பொன்னேபோல் பாட்டெழுதி பாட்டெழுதி களைத்தீரே
அண்ணி இல்லை கவனிக்க நிற்க உறங்குவீர் இனிதே!!

சு.வ:
பத்துப் பதினெட்டு
பரணியின்மேல் தட்டெட்டு
தட்டிலே லட்டெட்டு
தானுண்டுநீ யிமைவெட்டு.

இப்படி வெட்டிப் போட்டுப் போனவர்களை செல்வராஜ் அழைத்தார், பின் அவரே அடுத்த நாள் பயணத்துக்கு ஆகிறதைப் பார்க்கணுமென்று சொல்லிக் கிளம்பினார், அதையே நம் கூத்துக்கு மங்களமாக வைக்கிறோம்,
செல்வா:
நீர் உறங்கச் சென்றால் என்ன?
நான் வந்த திப்போ(து) தானே
நாலு வார்த்தை சொல்லா திங்கே
கஞ்சி மட்டும் குடிக்க மாட்டேன்.

காச்சி ஒரு தண்ணீர் குடியும்
கலங்கி ஓடித் தும்மல் விலகும்
ஆச்சி பெற்ற ஒருமகன் எழுதி
அங்கு வைத்தனன் கண்டீர் நீரோ

கஞ்சிக் குடியார் கவியாட்டம்
கட்டின்றித் தொடரட்டும்
காலை எழுந்த அதிநேரம்
காரோட்டி வேறூர் போகோணும்

கார்த்திக் ராமாசு தூங்காமல்
கண்ணை இமையோ மூடாமல்
கவிதை பாடித் திரியட்டும்
கஞ்சிச் சித்தர்கள் வாழியவே !

பின் குறிப்பெச்சரிக்கை: இனி வரும் சித்துக்களின் பாட்டுக்கள் (தப்பித் தவறி வந்தால்) அடுத்த மறுமொழிக் கவியருவியில் கொட்டும்!

3 comments:

said...

மறுமொழிகளை தொகுத்து போட்டால் நன்றாக இருக்கும் என்று சொல்ல நினைத்தேன். நினைத்தேன் வந்தாய் நூறு வயதுன்னு பாட வச்சிடுச்சு உங்க பதிவு.

கஞ்சி சூப்பர்

said...

நன்றி கேவியார்:)

said...

nalla kaviarankam.

Chandravathanaa
http://manaosai.blogspot.com/