அறுந்த வேர்

வாய்க்காலோடு தண்ணீரில் பறித்துப்போட்டு
வாமடை வரை ஓடிப்பார்த்த ஓனாம்பூ.
கையாற் களைபிடுங்கி வரப்பிலெறியும் அப்பாவிடம்
அப்பா அங்கின ஒரு பாம்பு கண்டேனென்றால்
சரி சரி அந்தப் பக்கம் போகாதேயென்பார்.
என்னசார் பூச்சிமருந்து போட்டாச்சா, கேட்ட
செல்லத்துரை மாமாவோடு பேச்சு சுழல
நான் மண்வெட்டியெடுத்து வாய்க்காலில்
ஆறு கொண்டுவந்து படர்த்த மணல்
வெட்டிப் பார்ப்பேன், நீரூறிச்
சரக்கென ஆற்றுமணல் வெட்டச் சுலபம்.
பச்சையெலாந் தாண்டித்தொலை ரோட்டிற்போகும் பஸ்.
பையனை நல்லா படிக்க வைங்க சார்,
யார்யாரோ சொல்லிப் போனதைக்
கேட்டு இப்படியுமப்படியுந் தலையசைத்த பச்சை.

போனவாரத் தொலைபேச்சில் அப்பா சொன்னார்:
ஊரில் ஆரிடமிருக்கு வண்டியும் மாடும் ஏரும்?
மழையில்லையென்று முத்தும் வித்தார்
கலியமூர்த்திப் போனமாசம் துபாய்க்குப் போனான்
குளமும் பாதிதான் ரொம்பிக்கிடக்கு
ஒடம்பும் ஓடலை, வாரத்துக்கு விடலாமென்றால்
என்னத்த நம்பி யாருதான் மெனக்கெடுவா?

பயிர்த்தொழில் சாக்காட்டில் இதோ என் கைகளும்.
முனுக்கென்றால் அமெரிக்காவைத் தூக்கியெறிந்து
அட்லாண்டிக்கில் குதித்து அக்கரைப் போகுமவன்
அன்றும் ஓடினான், கட்டித் தரிசுத்தரை வெட்டிக் கொத்த.
பாதியிற் திரும்பி வேலைக்குவந்து ஓய்ந்தவொரு மாலையில்
தண்ணீர்ப் படமெடுத்து இணையமிட்டான்.


0 comments: