மாமா

அந்த மாமாவப்பத்தி எழுதனும். எழுதி என்னாகுதுன்னு யோசிச்சா எழுத்து வராது. வராத எழுத்து பதினெட்டு வயசுல துள்ளுன மாதிரி துள்ளாது. பாயாது. அதுனால எழுதனும். எழுதிக்கிட்டே இருக்கனும். வேலய என்ன செய்ய. செய்யனுந்தான். ஆனாலும் எழுதனும். நடுவில நிக்கக் கத்துக்கனும். தொம்பக்கூத்தாடி நிதானம் வேணும். வேலயிடத்துல போயி நிமிசத்துக்கொருதரம் ஓடிப்போயி யாரு என்ன எழுதிருக்கான்னு பாக்காம இருக்கனும். அங்க வேலயப் பாக்கனும். அதச் செய்யலன்னா நல்ல வேலக்காரனா இருக்கமுடியாது. நல்ல வேலக்காரனா இல்லாதவன் நல்லா எப்படி எழுத முடியும். ஏன்னா எழுத்து கொஞ்சம் திருப்தியோட சம்பந்தப்பட்டது. நல்லா அனுபவிச்சு வேல செய்யனும். அனுபவிச்சு துக்கப்படனும். அனுபவிச்சு சிரிக்கனும். அப்பப்ப அததுல இருக்கனும். இதுல இன்னொரு இடக்கு நுழையுது. அததுல இருக்கப்ப அததுல படாம இருக்கனும்னும் ஒரு பக்கம் குரல் கேக்குது. எதுவுமே தீண்டாத் தன்மையில இருக்கவனுக்கு அங்க சொல்றதுக்கு ஒன்னுமிருக்காது. அந்த அமைதியப் பத்திக் கூடச் சொல்லத் தோனாது.

இப்புடித்தான். போயி உளுந்தம்பருப்பு வாங்கிட்டு வாடான்னா மறந்துராம இருக்க போற வழியெல்லாம் உளுந்து உளுந்துன்னு சொல்லிக்கிட்டே கடை(சி)யில போயி து.பருப்ப வாங்கிட்டு வந்து நிக்கிறது. தெருத்தெருவா அலயுறது. மாமா கதை. வருது.

அவர் ரத்த மாம இல்ல. ஆனாலும் மாமா. தெரு மாமா. தெருவுக்கே மாமா. ஆபீஸ்ல பியூனு. குட்டை. கருப்பு. வெள்ளைத் தாடி. தாடின்னாலே மார்வரை நீண்டுன்னு ஒரு பழக்கப்பட்ட மொழி ஆயின்மெண்டு மாதிரி பிதுங்கி வருது. அதைக் காத்தை உள்ளே இழுத்து அமுக்கிப்புட்டேன். எல்லாத்தையும் பழக்கத்தால செய்யுறது. ஏன்டா நகத்தக் கடிக்கிற. பழகிருச்சு. மாமா. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை. angka சீ சேமிக்கப் போயி திரும்பி வந்து F12 தட்ட மறந்து ஆங்கிலத்துல. தட்டி. தமிழ். அங்க அடையாளம் முக்கியமில்ல. அவர் வீட்டுல கோபால் பல்பொடி வச்சிருப்பார். வீட்டுப் பயோரியா உறைக்கும். அங்க அப்பப்ப போயி பல்பொடி ருசிக்கிறது. ஆபீஸ்லேருந்து அட்டை கொண்டு வருவார். புத்தகத்துக்குப் போட்டுத் தர. பள்ளி ஆரம்ப நாட்களில் மாமா அட்டை. அட்டை. அட்டை. எல்லாருக்கும். வரிசையா. சில பணக்காரதுகள் கடையில வாங்கிட்டு வந்து மாமாட்ட குடுத்து அட்டை. மாமாவுக்குப் பொண்டாட்டி இல்ல. தெரியாது. நாங்க பாத்தது இல்ல.

அவர் வீட்டிக்குள்ள புலித்தோலிருக்கும். சிவன் படத்தைத் தவிர நான் கண்ட ஒரே புலித்தோல். மாமா மூனு மணிக்கு எந்திருச்சு சாமி கும்புடுவாராம். சொல்லுவாங்க. பரீச்சை அன்றைக்கு அந்த சாமி ரூமுக்குள்ள போயி துண்ணூறு பூசிக்குவோம். ஓடு ஓடு. இன்னமும் ஓட்டம் வேறு கதை. துண்ணூறு இல்லை வேறு கதை. யாரது எட்டிப் பாக்குறது எழுதயில. சீ தள்ளு மனசே. மாமா காசிக்குப் போயிட்டு வந்து வெள்ளயா ஒரு முட்டாயி குடுப்பாரு. அப்புறம் மாமா ஒரு பானையில தண்ணி வச்சிருப்பாரு. விளையாட்டின் நடுவில் வந்து குடிச்சுட்டு ஓடுவோம். அண்ணாக்க. மாமா கதையெல்லாம் சொல்ல மாட்டார். பேசினதுகூட அதிகமில்ல. அட்டை போட்டுக் குடுப்பார். பிரெளன் அட்டை. ஆபீஸ்ல குப்பை. எங்களுக்குப் பெருசு. அப்புறம் நான் பரதேசியாக. ஒருதரம் போனப்ப மாமா ரிடையர் ஆகி சொந்த ஊருக்குப் போயிட்டாராம்.

மாமா - மூனு மணிக்கு எந்திரிச்சு புலித்தோல்ல உக்காந்து காசிக்குப் போயி அட்ட போட்டுக் குடுத்து தண்ணி வச்சு கோபால் பல்பொடி வச்சு...என்னத்தையோ தேடியிருக்கார். நன்றி மாமா.

0 comments: