ஒரு கொலைக் குறிப்பு

கொஞ்சம் இளகின மனசுக்காரர்கள் இதைப் படிக்க வேண்டாம். இல்ல, படிங்க. கொஞ்சம் கெட்டிப் படவும் வேணுந்தான்.

எனக்குக் கொலை செய்வதில் பெரும் விருப்பம் ஏதுமில்லை. சின்னப் பிள்ளையில் கரட்டான்களை அவ்வப்போது அடித்தது உண்மைதான். அதுல கூட 18 வயசுல ஒரு கரட்டான அடிக்கப் போயி அது என் கண்ணுக்கு ரொம்ப முன்னாடி துள்ளிவந்து துடிச்சுச் சாக, அந்தக் கலிங்கத்துல யாரோ ஒரு துறவி புத்தம் சரணம் கச்சாமின்னுகிட்டே நடக்க நானும் இனி கரட்டான்களை அடிக்கிறது இல்லன்னு முடிவு பண்ணினேன். யாருக்குத் தெரியும் விதி இன்னும் சில வருடங்களில் வேறு விதமாக என்னைக் கொலைகாரனாக மாற்றப்போவது பற்றி.

முதன் முதலாக நான் பயிற்றுவிக்கப் பட்டேன். எங்க கூட்டத்துல ஒரு ஆள். இப்போ பெரிய ஆள். கூட்டிக்கிட்டு போனார். தோ அதான் அப்படின்னார். புடிச்சுக்கிட்டு வந்தாங்ய. பெரிய சிரிஞ்சோட ஊசிய எடுத்து நெஞ்சுல பாச்சி, கிட்டத்தட்ட 50 மிலி ரெத்தம் வந்ததும் அது தலையச் சரித்தது. ராமுளுக்க அந்த வெள்ளை முயல் நினைப்புத்தான். இப்படியாகத் தொடங்கின ஆராய்ச்சிக் கொலைகள் முயல், எலி, சுண்டெலின்னு ரெக்கை விரிச்சு கடைசியில கோழி ரெக்கையில போயி நின்னுச்சு. கோழிகளைக் கொல்றது இல்லை. முட்டைகளைத்தான். அப்புறமா ஒரு நாலு வருசம் கொல்லாமை என் மேல் திணிக்கப் பட்டது. கொன்னு செல்லெடுத்துக் குடுக்க ஆளு இருந்துச்சு. அதுனால.

இப்போ இடமும், வேலையும் மாறிப் போச்சு. மறுபடியும் கொலை. முயல். சுண்டெலிகள். கொடுமை என்னன்னா சில நேரம் உடம்பெல்லாம் பச்சை நரம்பு தெரியும் குட்டிகள் மேலயும் கை வைக்கனும். கொல்லுறதுலயும் கொஞ்சம் இரக்கத்தோட கொல்லனுமாம். எப்படி வலிக்காம கொல்லுறது. இதோ இந்த halothane அறையில கொஞ்ச நேரம் விட்டா தூங்கிரும். தூங்கயில கழுத்தறுக்கனும். இப்படி ட்ரெயினிங் வேறு.

இப்போதைய உயிரியல் ஆராய்ச்சிகள்ல முடிஞ்ச வரைக்கும் வளர்த்த செல்களைத்தான் பயன் படுத்துறாங்க. ஆனாலும் அதுகளைக் கொண்டு மட்டுமே எல்லா விடைகளையும் பெற்றுவிட முடியாது என்கிற காரணத்தைக் காட்டி இந்தக் கொலைகளை நியாயப்படுத்த முனைகின்றன மனசும் ஆராய்ச்சிக் கட்டமைப்பும். நானில்லை என்றாலும் யாரேனும் கொன்று கொண்டேதானிருப்பார்கள். இவர்களுக்கு (என்னையும் சேர்த்துத்தான்) நிறைய வாழ்க்கைக் குறிக்கோள்கள். அவற்றுக்கு இத்தனை பலிகளும் அவசியம். காசுக்காக ஒரு வேலை என்கிற மனக்கிலேசம், மனம் இரண்டுபடுதல் ஆகியன இத்தகைய தருணங்களில்தான் மேலோங்கி நிற்கும். சித்தர்கள் எப்படி அத்தனையும் கண்டு பிடித்தார்கள். ஆயிரம் பேரைக் கொன்னா அரை வைத்தியன் அப்படீங்கறத யாரோ அது பேரை இல்லடா வேரை அப்படீன்னாங்க. பேரோ வேரோ, அந்த அறிவே தனி. தற்போதைய ஆராய்ச்சி முறைகள் அதுமாதிரியான மெய்யறிவைப் புறக்கணித்துவிட்டதா அல்லது சித்தர்களுக்குத் தெரியாத சங்கதிகளை இன்றைய விஞ்ஞானம் கண்டுபிடித்திருக்கிறதா? புரியலயே.

எல்லாம் சரி மாதிரியும் இருக்கு. அதுகளே தப்பு மாதிரியும் இருக்கு. நல்லது தீயது நாமறியோம் அன்னை நல்லது நாட்டுக தீமையை ஓட்டுகன்னு பாட்டு வருது. பாட்டுக்குப் பின்னாடியே, டோய் அன்னை நீதான்டா, நாட்டுறதும் ஓட்டுறதும் நீதான்டான்னு ஒரு வசனமும் வருது. என்னமோ என் பொழுது இப்படிச் சாகுது. பாக்கலாம்.

0 comments: