சோழவள நாட்டில் மன்னார்குடி. மன்னார்குடிக்குப் பக்கத்துல தலையாமங்கலம். அங்க ரெண்டு வீடுகள். ரெண்டு தாத்தாக்கள். ஒரு பெரிய தாத்தா. ஒரு சின்ன தாத்தா. தாத்தாக்களுக்குப் பிள்ளைகள். பெரிய வளவு. வளவுன்னா காம்பவுன்டு. வளவுக்குள்ள ஒரு கோயில். கோயிலில பெருமாளு. பெருமாளுகிட்ட சீதையும் லெச்சுமணனும். காலுகிட்ட குந்தியிருக்கும் அனுமாரு. எல்லாருக்குமா சேர்த்து வருசம் ஒருதரம் கம்ப சேவை. அப்படின்னா என்னன்னு தெரியலயா? ஒரு திருவிழான்னு வச்சுக்கங்க. தீப்பந்தமெடுத்துகிட்டு தாத்தா ஊர்வலமா போவாரு. யானையும் போவும். வாலு மொளச்சு, மேலெல்லாம் ஊதாச் சாயம் பூசி ஆடிக்கிட்டு, வாழைப் பழத்தத் தூக்கி வானத்துல வீசி லபக்குன்னு வாயில புடிக்கிற அனுமாரும் போவாரு. நாங்க பின்னாடியே போவோம். ஊர்வலம் முடிஞ்சு சாப்பாடு. ராத்திரி நாடகம் லவகுசா இல்லன்னா வேறொன்னு. வருசா வருசம் அம்மாவும் நானும் போயிருவோம். இப்படியா கம்ப சேவை சின்னப்புள்ளயில கண்ட அழகுக் கதை.
மன்னார்குடிலேருந்து வடக்கே போனா கும்பகோணம். கும்பகோணத்துல ஒரு குளம். பன்னென்டு வருசத்துக்கொருதரம் அதுல குளிச்சா புண்ணியம். மேலே சொன்னதுல ஒரு தாத்தாவுக்குப் பிள்ளை ஒருத்தர். மாமா. மாமா கம்ப சேவை அன்றைக்கு எனக்குப் பணம் கொடுப்பார். பணத்துக்கு நுங்கு, பொரிஉருண்டை, ஊதல், கட்டையுருட்டு. அந்த மாமாவுக்கொரு பிள்ளை. மச்சான். கும்பகோணத்துக்குக் குளிக்கப் போனாங்க. அம்மாவும் தோழியும் குளிக்கப் போனாங்க. குளிக்க வந்தவுங்களப் பாக்க சனங்க போனாங்க. சனங்க காலுக்குள்ள மாட்டி மாமனும் மச்சானும் போனாங்க.
மதியம் சனி, பிப்ரவரி 28, 2004
கம்ப சேவை
Posted by சுந்தரவடிவேல் at 2/28/2004 07:09:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment