கே.வி சார்

காலையில் எழுந்ததும் உட்கார்ந்து எழுதுவது சுகம். எதையும் படித்து எந்தக் கருத்தையும், செய்தியையும், வடிவையும் ஏற்றிக் கொள்ளாமல் மனசை இறக்கி வைப்பது மாதிரி இருக்கும். இலகுவாயும் இருக்கும்.

எனக்கு இவரப்பத்தி எழுதனும்னு ரொம்ப நாளாவே தோணிச்சு. ஆனா நேத்து ஒரு பொறி அதைத் தூண்டிருச்சு. எங்க ஆய்வகத்துல ஒரு பிரெஞ்சுக் காரன் இருக்கான். நல்ல நண்பன். நேத்து காபி குடிக்கும்போது பக்கத்திலிருந்த உலக வரைபடத்தைப் பாத்துட்டு (செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவின் எல்லாச் சுவர்களிலும் இது ஒட்டிக் கொண்டது), ஏனோ உலகின் சின்ன நாடுகளப் பத்திப் பேச்சை ஆரம்பிச்சேன். ஒரு நகரம்-ஒரு நாடான மொனாக்கோ (Monaco) வப் பத்திச் சொன்னான். என்னமோ உள்ள ஒரு பொறி, Monte Carlo, a French gambling centre... அப்படின்னு 11 அல்லது 12 வது வகுப்பில படிச்ச கதையொன்னுல (சிந்துபாத் என நினைக்கிறேன்) வரும். அ...அதான் மொனாக்கோவோட பழைய பேருன்னான். இந்த வார்த்தைகளை மனதில் பதித்தவரைப் பத்திச் சொல்லனும்னு ஆசையா இருக்கு.


கேவி சாரை உங்கள்ல நிறைய பேருக்குத் தெரியாது. கே. வெங்கடாசலம். செங்கோட்டைக் காரர். ஒரு புதுக்கோட்டை மாவட்ட கிராமத்துப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகள் திருநெல்வேலித் தமிழைக் கேட்டது அவரால்தான் சாத்தியமானது. அந்தப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்குக் கொஞ்சமாவது ஆங்கிலம் தெரிந்ததும் அவரால்தான்.

எனக்கு ஒன்பதாவது வகுப்பிலிருந்து பன்னிரண்டாவது வரை ஆங்கிலம் கற்பித்தவர். அழகான இந்தக் காலத்திற்கு அவரது இருப்பு ஒரு முழுமையைச் சேர்த்ததாக இப்போது எண்ணுகிறேன். நன்றாகப் பாடம் நடத்துவார். கண்டிப்புக் காரர். பாடம் முடிந்தவுடன் அதற்கான கேள்வி பதில்களைத் தாமே கைப்படக் கரும்பலகையில் எழுதிப் போடுவார். அழகான கையெழுத்து. சிலரைப் பார்த்தவுடன் அவரை மாதிரி எழுதவேண்டும் எனத் தோன்றுமல்லவா. அதுபோலத்தான் எழுத்து வடிவமின்றிக் கிறுக்கித் திரிந்துகொண்டிருந்த எனக்கு அவரது கையெழுத்து ஒரு முன்மாதிரி. அவரை மாதிரி எழுத ஆசைப் பட்டேன். எழுதவும் செய்தேன். உன் கையெழுத்து அழகாயிருக்கிறது என்று யாரேனும் சொன்னால் அந்தப் பாராட்டெல்லாம் இவருக்கே. (தமிழ் எழுத்து வடிவமும், பாராட்டுக்களும் மலையாண்டி ஐயாவுக்கு. அதுவும் இதே காலத்தில்தான் உருப்பெற்றது). அவர் அதிகமாய் யாரையும் அடிக்க மாட்டார். செத்த பயக்கா என்று திட்டுவதோடு சரி. ஒரு நாள் வகுப்பின் நடுவில் இவர் எங்கேயோ போக, நான் போய் அவர் நாற்காலியில் உட்கார்ந்து ஏதோ அட்டகாசம் செய்ய, திரும்பி வந்தவர் தலையைப் பிடித்து வளைத்து முதுகில் ஒரு அடி விட்டார். அது மட்டும்தான். பாராட்டும் வெளிப்படையாய் வராது. ஒரு நாள் இடம் மாறி உட்கார ஐம்பது பேருக்கு நடுவில் அங்குமிங்கும் தேடிவிட்டு, எங்கல அவன சுந்தரவடிவேல, ன்னதுதான் எனக்குக் கிடைச்ச பெரிய பாராட்டு.

என் வகுப்புப் பிள்ளையொருத்தியின் கண்வீச்சும், என் குறிப்பேட்டில் சிவப்பு மையால் இவர் சரி என்று போடும் 'டிக்'கும் ஒன்றையொன்று சார்ந்தே அந்நாட்களில் உள்ளிறங்கின மாதிரி ஒரு பிரமை. நான் ஆங்கிலத்தில் எழுதும் காலம் வரை அவர் நன்றியுடன் நினைவு கூரப்படுவார்.

0 comments: