மேயப் போன மாடு

அப்பாடி... வந்துட்டேன். ஒன்னுமில்ல. இல்ல, ஒன்னு. ஒரு மீட்டிங். பேசனும். பேசினேன். அதுக்கும் முன்னாடி என்ன பேசுறதுன்னு தெரியனுமில்ல. அதுக்குப் படிக்கனுமில்ல. அதானாலயும் இத்தன நாளா எழுதாம திரிஞ்சேன். முடிஞ்சவுடனே இங்கதான் ஓடியாறேன்.

நீங்க மாடு மேய்ச்சிருக்கீங்களா? நானும் மேய்ச்சதில்ல. ஆனா எங்கப்பா நா சின்னப் புள்ளயா இருந்தப்ப அடிக்கடி கேப்பார், என்னடா மாடு மேய்ச்சுட்டு வர்றியா?ன்னு. ஒழுங்கா அதைச் செய்திருக்கலாமோன்னு இப்ப அடிக்கடி அசை போடுறதுண்டு. எங்க வீட்டு மாடெல்லாம் தெருவுல இருக்க நிறைய மாடுகளோட மேயப் போவும். அதாப் போவாது. ஒருத்தரு ஓட்டிக்கிட்டுப் போவார். அவருக்கு மாசம் அஞ்சு ரூவாயும் பொங்கலுக்கு ஒரு வேட்டி துண்டும். மாட்டுக்குப் புல்லும், குளத்துத்தண்ணியும். காலையில ஓட்டிக்கிட்டு போய்ட்டு சாயங்காலம் திரும்பி ஓட்டிக்கிட்டு வந்து விடுவார். மாடெல்லாம் மெயின் ரோட்டிலிருந்து சின்ன ரோடுகளில் வர வரப் பிரிந்து தத்தம் வீடுகளுக்கு (அதாவது மாட்டின் சொந்தக்காரர் வீடுகளுக்கு) ஓடி வரும்.

அட சொல்ல வந்ததை வுட்டுட்டு எங்கயோ போறேன். என்ன சொல்ல வந்தேன்னா, அந்த மாடெல்லாம் மேஞ்சுட்டு வீட்டுக்கு ஒரு ஓட்டமா வரும் பாருங்க அது மாதிரி என்னோட வேலை முடிஞ்சதுக்கப்புறம் நம்ம வலைப்பதிவ நோக்கி ஓட்டமா ஓடியாந்தேன். எல்லாத்தையும் அலசனும். சில நேரம் படிக்கிறதா எழுதுறதான்னே புரியாது. எழுதலாம்னு நெனச்சு வர்றப்ப படிக்க ஆரம்பிச்சா எழுத நேரமிருக்காது இல்லன்னா படிச்சதுகளோட பாதிப்புல நம்ம எழுத்தின் வடிவம் மாறிப்போயிரும். வலைப்பூவில Nameகாரர் சொல்லுறதும் நல்லதாத்தான் படுது. மொத படிங்க. அப்புறமா எழுதுங்க. படிக்கலாந்தான். முடிஞ்சாத்தானே. அன்னிக்கு அப்படித்தான் ரெண்டு புத்தகங்களை எடுத்துக்கிட்டு வந்தேன், நூலகத்திலிருந்து. நாலு பக்கம் படிச்சதோட இருக்கு. வள்ளுவன் சொன்ன மாதிரி சின்ன சின்னதா இருந்தாலும் மொத்தமா பாரத்த ஏத்துனா அச்சு முறிஞ்சுடுமோன்னு பயம். இந்த பயத்துலதான் மரத்தடி டீக்கட பக்கமெல்லாம் போறதில்ல. பாப்போம். மனுசனுக்கு நேரமே கிடைக்காமயா போயிறப் போவுது.

அன்றைக்கு அப்படித்தான் என் நண்பன் கேட்டான், என்னடா மூனு நாளா எழுதாம இருக்கியே, சரக்கெல்லாம் சேர்ந்திருக்குமே, நாளைக்கு நிறைய எழுதுவியா அப்படின்னு. நாஞ்சொன்னேன், இல்லடா, அது நேத்தைய வெயில், நீ காயலன்னா மறுபடியும் வராது. போனது போனதுதான். இன்னிக்குப் புது வெயில். ஆனாலும் பாருங்க சில கருக்கள் சூல் கொண்டுவிட்டால் பிள்ளை பெக்குற மாதிரிதான், கொஞ்ச கொஞ்சமா வளந்துகிட்டே இருக்கும். அதை என்னைக்காச்சும் பிரசவிக்கிற வரைக்கும் உள்ளதான் இருக்கும், வளரும், உருமாறும். சிலநேரங்களில் காலம் அடுக்கடுக்காய் வீசும் மண்ணில் புதைந்து காணாமலேயும் போகும். எப்புடியோ நாம எழுதணும். என்ன சொல்றீங்க?
இப்படியாக நான் திரும்பி வந்திருக்கிறேன்.

0 comments: