ஒரு பழைய தேர்வுத்தாள்

பாகம் ஆ
சுருக்கமான விடையளி
(3 x 2 = 6)

1. கற்பனையின் விளைவுகள் யாவை?
2. ஆராய்ச்சி என்பது கற்பனையிலிருந்து வேறுபட்டதா? ஆம், இல்லை என்பதற்கு விளக்கம் கூறுக.
3. உண்மை என்றால் என்ன? அதன் குணங்கள் யாவை?

விடைத்தாள்

பெயர்: ப. பொட்டியாண்டி
வகுப்பு: 7 ஆம் வகுப்பு ஆ பிரிவு

விடைகள்
1. காசிக்குப் போகலாம்
கவிதை வாங்கலாம்
ஒண்ணுமில்லாமலே
ஒலகம் சுத்தலாம்
பிரியாணி வாங்கலாம்
பசிய மறக்கலாம்
சுரண்டச் சுரண்டச்
சுரணையில்லாமக் கெடக்கலாம்
காசக் கேக்கக்
கடங்காரன் வரமாட்டான்
நெனக்க மாளல
நிம்மதியா இருக்கலாம்.

இப்படி எழுதின விடையை அழித்துவிட்டு, இப்படி எழுதுகிறான் பொட்டியாண்டி

1. ஒரு பொட்டி இருக்கும். கேக்குறது எல்லாம் அதுக்குள்ள இருக்கும்.

2. மூடுன பொட்டிக்குள்ள என்ன இருக்கும்னு யோசிக்கிறது, தொறந்து பாக்குறது ஆராய்ச்சி. மூடுன பொட்டிக்குள்ள இது இருந்தா, அது இருந்தான்னு நெனச்சுக்கிறது கற்பனை. இது ரெண்டையும் தாண்டி ஒன்னு இருக்கு. பொட்டி மூடிக்கிடந்தா என்ன, தொறந்து கெடந்தா என்ன, அல்லது பொட்டி இருந்தா என்ன இல்லாட்டிதான் என்ன அப்படின்னு போறது. அதுக்குப் பேரு சவம். அல்லது ஞானப்பழம்.

3. உண்மை என்பது, அதான் அந்த மூடுன பெட்டிக்குள்ள இருக்கது. நீ பாத்துட்டுப் போனாலும் பாக்காம போனாலும் பாத்துக்கிட்டேதான் இருக்கும்.


பி.கு: இது ரெண்டு வருசத்துக்கு முந்திய பாடத்திட்டத்துல இருந்த பதில்கள். அப்ப பையன் இப்படித்தான் எழுதியிருந்தான்.அப்போதைய பாடத்திட்டத்துல கவிதைக் கற்பனையின் விளைவு என்றுதான் இருந்திருக்கிறது. அது ஆராய்ச்சியின் வெளிப்பாடு என்று கருதவும் இடமுண்டு. இப்போதைய பாடத்திட்டத்துல வேற பதில்கள் இருக்கான்னு யாராச்சும் சொல்ல முடியுமா?

0 comments: