கவிதைகளைப் பற்றி...

என்ன செய்யலாம்

பூவாய்க் கொய்யலாம்
தறியில் நெய்யலாம்
கதிராய் அறுக்கலாம்
தூண்டிலிட்டும் பிடிக்கலாம்...

அல்லது
பருவுடம்பின்றித் திரியும் இவற்றை
உள்ளின் அகண்ட பெருவெளியில்
வார்த்தை வடிவேதும் தராமல்
அப்படியே பறக்கவிட்டு விடலாம்.

(எங்கேனும் படித்தேனோ, எழுதப்படாத கவிதைகள் அழகானவை என்று?)
இதை எழுதியபோது தங்கமணியின் 'நான் நடந்து கொண்டிருக்கிறேன்' இலிருக்கும் 'வார்த்தை'களைப் பற்றிய ஒரு துண்டின் ராகத்தை இது புனைந்திருந்ததைக் கண்டேன். கீழே இருக்கும் வரிகள் அவனுக்கு, நன்றிகளுடன்.

====================================================================

அவனுக்கு

நான்
தனியே நடப்பதில்லை
தனியே படிப்பதில்லை
எனவே
என் கவிதைகளும்
உன்னுடையவையே.

====================================================================

மாற்றம்

விடிந்தெழும்பி
பப்பாளிக்கன்று வளர்ந்திருக்கிறதா போய்
பனி விழுந்திருக்கிறதா போய்
கட்டிலில் புரண்டு
கவிதை முளைகளை
எண்ணிக் கிடக்கிறேன்.

====================================================================

நிலை

நேற்றுப் பணியிடத்திலிருந்தேன்
எட்டிப் பார்த்துப்
புன்னகைத்துப் போக வந்தவனை
புரத மூலக்கூறுகளிரண்டு,
முதலாளியின் செல்லப் பிள்ளைகளாம்,
ஏதோ பேசி விரட்ட
வெளியே தேம்பி நின்றவனை
மாலையில் வரும்போது
வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

அங்கு
உடைகள்தாம் கூர்ந்து கவனிக்கப்படும்
நாளைக்கு
விஞ்ஞானியின் உடையில் வா.

0 comments: