பட்டறி

கடந்தகடலில் உன்காதல் கரையவேண்டும்
காத்துவைத்த நூலெல்லாம் கருகவேண்டும்
அரிவாளும் கத்தியுமாய் ஐம்பதுபேர்
அர்த்தராவில் உன்கதவை யுடைக்கவேண்டும்
நாளாறு கழிந்து கிணற்றிலுன்
நங்கியின் பிணம் நாறவேண்டும்
குத்துப்பட்டுக் குடல்சரிய உன்
கணவன் உன்முன்னே வீழவேண்டும்
உள்ளேயோ வெளியேயோ நீயிருக்க
உன் தொழிற்கூடம் எரியவேண்டும்
வெளியேபோன தம்பியு மப்பனும்
வரக்கூடாது வரவே கூடாது
செறுப்புங் காசுமிழந்து நீ
தெருத் தெருவாய்த் திரியவேண்டும்
திருட னென்றும் வேசியென்றும்
பொய்யேச்சு வாங்க வேண்டும்...

இத்தனையையும் நீ பார்க்கவேண்டும்
அப்புறமாய் நீபேனா எடுக்கவேண்டும்
அப்போது போடுவாயா விட்டைச்சட்டம்?
அப்போதெழுதுமா உன்கைப் பொய்ச்சாத்திரம்?
என்தோலும் உன்தோலும் வெவ்வேறுதான்
என்தோலை யணிந்துபார் அப்போதேனும்
சூட்டின் வலி தெரியலாம்
சிறிது சுரணையும் வரலாம்

நாயாய்ப் புழுவாய்ப்பன்றியாய்ப் பிறக்காமல்
மனிதருள் மனிதராய்ப் பிறந்து
நலிந்துகெட்ட கொடுவாழ்வு நெடிதுவாழ
முனியாயிருந்தா லுன்னைச் சபித்திருப்பேன்
ஒன்றுமிலாத் தமிழன்நான்
கவிதைமட்டு மெழுதிவிட்டேன்.



0 comments: