சித்தப் புரட்டு

நான் சும்மாயிருந்தாலும் யாராச்சும் பழசைக் கிளப்பி விட்டுர்றாங்க. விளைவு? மாட்டுறது நீங்க. நாம்பாட்டுக்கும் போயிக்கிட்டிருந்தேன், மெய்யப்பன் கூப்பிட்டு இங்க பாருங்க சித்துச்சாமி பாட்டுன்னு காமிச்சார். அந்த மாதிரி பெருஞ்சித்தா இல்லன்னாலும், 1999 வாக்குல நாந்திரிச்ச கயித்தை நெனப்புலேருந்து உருவிப் போடுறேன்.

அதுக்கு லேசா ஒரு முன்னுரை (இது வேறயா?). எனக்குக் கஞ்சின்னா ரொம்பப் பிடிக்கும். நவமோ அல்லது அதோட பன்னாட்டுத் திரிபுகளோ எந்தத் தானியம் கிடைச்சாலும் தனித்தனியாவோ அல்லது கலந்தோ காய்ச்சியடிச்சிருவேன். கஞ்சி பாருங்க, சமைக்கிறதுக்கும் சாப்பிடுறதுக்கும் வெகு சுலபம். தீவிர கஞ்சிக்குடியனாயிருந்த ஒரு காலத்திலே தங்கமணி, சாரா போன்ற நண்பர்கள் அடேய் ஒழுங்கா சமைச்சு சாப்பிடு, கஞ்சிக்குடியனா அலையாதேன்னு சொல்லுவாங்க. "கஞ்சிக்குடி" இந்தப் பேருக்குப் பின்னாடி இருந்த கவர்ச்சியில அது பின்னாடியே போயி, கஞ்சிக்குடியார் ஞானப் பொலம்பல்னு நாலைக் கிறுக்கினேன். அர்த்தம் இருந்தால் அதைக் கண்டு பிடிப்பதை அவரவர் பொறுப்புக்கே விட்டு விடுகிறேன்!

சொல்லென்னே பொருளென்னே சோளக் கஞ்சியென்னே
கற்றதென்னே மற்றதென்னே கம்மங் கஞ்சியென்னே
பொல்லாத குரங்காட்டம் நில்லாது பேயாட்டம்
புற்றீச லாசைகொல்வாய் கஞ்சி யேகம்பனே.

கல்லான் ஒருவழிநில்லான் பெருஞ்
சொல்லான் சரியான சுள்ளான்
என்றெல்லாம் என்னை எத்தித்
தள்ளுவையோ கஞ்சி யேகம்பனே?

உடுப்பான் உண்டு கொளுப்பான்
வஞ்சி மளுப்பான் நெஞ்சுபுளுப்பான்
என்றெல்லாம் என்னை எத்தித்
தள்ளுவையோ கஞ்சி யேகம்பனே?

அரிசிக் கஞ்சிகுடி அந்தரடிச்சான் முன்நிற்பான்
சோளக் கஞ்சிகுடி சொக்கன்வந்து முன்நிற்பான்
முன்வந்து நிற்பானுக்கு நீபடை தினைக்கஞ்சி
தினைக்கஞ்சி குடித்தானைத் திருவிழாக் கூத்தனை
கூத்தனைக் கூத்தாட்டும் கோலக் குரங்கை
குரங்கைக் குளிப்பாட்டும் கொக்கோகக் குளத்தை
குளத்தினுள் ளாடும் செவ்விய கமலத்தை
கமல மேந்திய காராம்பசுக் கன்றினை
கன்றிக் கன்றிக் கரைந்தேத் துவையே.

ஒரு பான்னா இந்தப்பா, அந்தப்பா, சித்தப்பான்னு எதாச்சும் பேர் இருக்கனுமில்ல. இதுகளுக்கு நான் வச்ச பேரு தடியடி குருட்டுப்பா. நீங்கள் என்னைத் தடியடிக்காமல் இருக்கும் வரை சரியப்பா!

0 comments: