தட்டுவோம், திறக்கும்.

பத்தொன்பது வருடங்களுக்கு முன் இதே மே மாதம், 15ம் தேதி. 1985. ஒரு பயணியர் படகு. பெயர் குமுதினி. நெடுந்தீவிலிருந்து குறிக்கட்டுவன் தோணித்துறைக்குப் போனது. பயணம் செய்தது எத்தனை பேரென்று யாருக்குத் தெரியும்? ஐம்பதிருக்கலாம். ஆறு சிங்களக் கடற்படையினரும் ஏறினார்கள். நடுக்கடலில் ஒவ்வொரு பயணியையாக அழைத்தார்கள். உன் பெயரைச் சத்தம் போட்டுச் சொல் என்றார்கள். நடுங்கிய பயணிகள் சொன்னார்கள். வயசெத்தனை, எந்த ஊரு, எங்க போறே, கத்திச் சொல் என்றார்கள். சொன்னார்கள். பிறகு வெட்டிக் கொன்றார்கள். இரண்டு வயதுக் குழந்தை, பெண்கள் என்று நாற்பத்தெட்டு தமிழர்களை அந்தப் படகில் வைத்துக் கொன்றார்கள். நைனத் தீவுக் கடற்படைக் காரர்கள்தான் இந்தப் படுகொலைகளைச் செய்தது என்று நீதிமன்ற முறையீடு. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் கண்ணால் கண்ட சாட்சிகளை வைத்து அது சிங்களக் கடற்படையினரே என்று வாதிட்டது. லலித் அதுலத் முதலியோ "யார் செய்தது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை"யென்று சொல்லிப் போய்விட்டார். நீதி மன்றத்தில் பத்தொன்பது வருடங்களாகத் தூங்குகிறது குமுதினிப் படகுப் படுகொலைக் கோப்பு. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி இந்தப் பிறவியில் கிடைக்குமா?

காங்கோ இனப் படுகொலையில் இதே மாதிரி ஒரு படகுக் கொலை நடந்தது உலகத்துக்கே தெரிகிறது. நியூயார்க் படகு விபத்தில் பத்து பேர் செத்துப் போனதற்கு உலகம் முழுக்கப் பதறுகிறது. 1994ல் க்யூபாவிலிருந்து தப்பிக்க 72 பேரோடு கிளம்பியவொரு படகு அந்நாட்டுக் கடற்படையால் மூழ்கடிக்கப்பட்டு, அதில் 41 பேர் செத்ததற்கு போப்புசாமி ஆறுதலாவது சொன்னாராம். ஆனால் இந்தக் குமுதினிப் படகுப் படுகொலையைப் பற்றி இணையத்தில் தேடிப் பார்த்தால், கிடைக்கும் பதிவுகளை ஒரு கையினால் விரல் விட்டு எண்ணி விடலாம். காங்கோ, நியூயார்க் சம்பவங்கள் கடந்த ஒரு வருடத்துக்குள் நடந்தவை. இப்போதிருக்கும் தொலைத் தொடர்பு வசதி 1985இலே இல்லையென்பதால்தான் அதைப் பற்றிய செய்திகள் இணையத்திலே கிடைக்கவில்லை என்பது காரணமா? அல்லது குறை நம்மிடம் இருக்கிறதா? நாம் எதையும் அம்பலப் படுத்துவதில்லை. எண்ணிக் குமைவதை யாரிடமும் சொல்வதில்லை. அதனாலேயே நாம் உலகின் பார்வையிலிருந்து விலகிக் கிடக்கிறோமா? நாம் பட்ட பழைய கஷ்டங்களை யாரிடம் சொல்லி என்ன ஆகப் போகிறது, எல்லாம் விதி, தலையெழுத்து என்ற மனப்பான்மை நமக்கு இருக்கிறதோ? சின்னதாயிருந்தாலும், பெரிதாயிருந்தாலும் நம்மிடையே நடக்கும் மனித உரிமை மீறல்களைப் பேரொலியுடன் அம்பலப் படுத்துவதன் மூலம்தானே பரபரப்பான இவ்வுலகின் கவனத்தை நாம் ஈர்க்க முடியும்? போராட்டமும், குரலெழுப்புதலும்தானே நமக்குத் தீர்வைத் தரும்? எனவே மனித உரிமைகள் மீறப்படும்போது நாம் துளியும் சகித்துக் கொள்ளாமல் (Zero Tolerance) குரலெழுப்ப வேண்டும்.

ஆதாரங்கள்:
http://www.atimes.com/ind-pak/DC23Df05.html
http://www.tamilnet.com/art.html?catid=79&artid=8990
http://www.tamilnaatham.com/(மே 10, மாலைச் செய்திகள்)