மனம் போன போக்கில்

இங்க தூறிக்கிட்டிருக்கு. மிக மிக மெல்லிதாக. நீங்கள் நன்றாய் உற்றுப்பார்த்தால்தான் தெரியும். ஆனால் மின்கம்பிகளில் சேர்ந்த துளிகள் பெருந்துளியாய்ச் சேர்ந்து சொட்டும். அமைதியாயிருக்கிறது. ஞாயிறு மாலையென்றால் இப்படித்தான் இருக்கிறது. இது மற்ற மாதிரியும் இருந்திருக்கிறது. அது இனிமையும் கூட. அப்போதெல்லாம் கொண்டாட்டம் முடிந்திருக்காது. ஞாயிற்றின் மாலையும் கொண்டாட்டத்துடனேயே நிரம்பியிருக்கும். இப்போது இது ஒரு ஓய்வுக்கான நேரம் போல். இது மிகவும் ஓய்வான நேரம். சன்னலினருகே உட்கார்ந்து ஒரு புத்தகத்தை வைத்துக்கொண்டு மெல்லிய மழையின் இருளில் படித்துக் கொண்டிருக்கலாம். இருந்தேன். சில ஞாயிற்று மாலைகள் ஏனோ திங்களுக்கான கட்டியத்தைக் கூறி மனதுக்குள் ஒரு கலக்கத்தினை உண்டாக்கிக் கொண்டு கவிந்திருக்கும்.

மதியத்திலே வெயிலடித்தது. காரைச் சாலையிழுத்த வழியெல்லாம் ஓட்டினேன். அது ஒரு கடற்கரைச் சாலை. நேற்றைய மென்குளிர்க்காற்றுக்கு மாறுபாடாய் இன்றைய சூடான வெயிலிலே மக்கள் பந்தாடியும், படுத்தும், உட்கார்ந்துமிருந்தார்கள். நான் திறந்திருந்த என் கார்ச் சன்னல் வழியே பார்த்துப்போனேன். ஆளரவமில்லா ஒரு சாலை முடிவில் என் காரை நிறுத்திவிட்டு இறங்கிக் கடலைப் பார்த்தபோது இரண்டு கடற்பருந்துகளோ அல்லது கனேடியப் பெண்வாத்துக்களோ பறந்து போயின. கடல் நீலமும் கருமையும் கலந்ததாயிருந்தது. அவர்கள் வந்த பிறகு நானும் மணலில் விளையாடுவேன்.

பிறகு வந்து தென்றல் வானொலியில் சில பாட்டுக்களைக்கேட்டேன். தலைப் பத்துப் பாடல்கள். போட்டுத் தாக்கு என்று தாக்கினது. மக்களுக்கு வேகம் பிடிக்கிறது. இது நல்லது. தங்குதடையின்றி முழங்கும் இசை நன்று.

விருந்து முடிந்து இரண்டு நாட்களாயின. மதுக்கோப்பைகள், தட்டுகள், குவளைகள். கழுவிப்போட்டேன். வெள்ளியன்று என்னோடு சேர்த்து ஏழு பேருக்கு இட்லி, தோசை, சாம்பார்...இதெல்லாம் உங்களுக்கு முக்கியமில்லாததாயிருக்கலாம். நான் நன்றாகத்தான் சமைத்தேன். தரையில் உட்கார்ந்து கையால் பிரட்டிக் குழப்பிச் சப்பிச் சாப்பிட்டு, கிட்டத்தட்ட எல்லாச் சட்டிகளையும் காலி செய்து விட்டுப் போன என் பிரெஞ்சு நண்பர்களை நான் நேசிக்கிறேன்.

உங்களுக்கு வேறென்ன சொல்லலாம். ஒன்றுமில்லை. நன்றாயிருங்கள். அவன் ஊருக்குப் போயிருக்கான். அவர்கள் ஊருக்குப் போயிருக்கிறார்கள். நான் இங்கிருக்கேன்.

எவ்வளவு பைத்தியக்காரத்தனமாயிருந்தாலும் இதை இப்படியே உங்களுக்குச் சொல்லுவேன். அதில் நான் மகிழ்வடைகிறேன்.

0 comments: