தனி மே

மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். இது ஒரு வரம். இன்னொன்று, நல்லதொரு பிள்ளையைக் கொடுத்தான். சரி. வரமென்றால் மூன்றென்பது வழக்கம். மற்றொன்று? ரெண்டு பேரையும் ஒரு மாசம் ஊருக்கனுப்பினான். நாற்காலிக்குப் பின்னாலிருந்து படித்துப் பார்த்தபின் தோளிலே சுள்ளென்று அடிவாங்கி ஆ வலிக்குதேயென்றால், வலிக்கத்தானே அன்பே அடிப்பது, என்று சொல்ல ஆளில்லாத துணிச்சலில்தான் இப்படி எழுதுகிறேன்! இந்த ஒரு மாதம் இருவருக்குமான ஒரு மாற்றம். சில அந்திகளில் எட்டிப் பார்த்து மனசழுத்திப் போடும் அமெரிக்க வழமைச் சலிப்பை முறிக்க இந்தப் பயணம் இருவருக்கும் தேவை. ஒரு மாசந்தான். அதற்கு மேல் இல்லை. திருப்பிக் கொண்டு கொடுத்து விடு.

விமான நிலையத்தில் பயணிகள் மட்டுமே நுழையும் வாயிலில் கலங்கிய கண்களைக் கண்டு திரும்புகையில், மடையன், இன்னும் கொஞ்சம் நேரம் நின்றுவிட்டாவது வந்திருக்கலாம் என்று தோன்றியது. இதே மாதிரி எத்தனையோ நிகழ் கணங்களைத் தவறவிட்டுவிட்டு அப்புறமாய் யோசிப்பது காதலில் புதுசில்லையே. கையில் எடுத்துக் கொண்டு போன எதுவோ இல்லாதது மாதிரித் திரும்பி வந்தேன். வீடு அமைதியாய் இருந்தது. ஆமையாய் மல்லாந்து கிடந்த கணிணி மவுஸ், சிறுகோப்பையில் மீந்திருந்தவொரு கவளம், சூப்பிப் போத்தலில் பாதி குடித்தபடி ஜூஸ் எல்லாம் அவன் சத்தத்தைக் கேட்காமல் என் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தன. நான் யாரோடோ தொலைபேசியில் பேசியதைக் கேட்டிருந்த படவாப் பயல் இரண்டு நாட்களாய் என்னை நம்பா/நண்பா என்று ராகமாய்க் கூப்பிட்டுக் கொண்டிருந்தான். ஒரு மாதங்கழிந்து வரட்டும், சிரிக்கச் சிரிக்கப் பிடித்து நாலு உருட்டு உருட்டினால் சரிப்படுவான். சரி. காப்பதற்கு நிறைய வாக்குக்களையும், கடப்பதற்கு நிறைய காதங்களையும் இந்த ஒரு மாசத்துக்குள் நுழைத்து வைத்திருக்கிறேன்.

ஓய்தல் ஒழி
நாளெல்லாம் வினை செய்!

0 comments: