அன்றொரு நாள்


பழைய டைரியைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

மே 25 2001
நாங்கள் கண்டவை

இன்று மாலை சுமார் 6 மணியளவில் எமது வீட்டிலிருந்து நானும் என் நண்பர் திரு ஆத்மசகாயமும் ஓடக் கிளம்பினோம். ஆத்ம சகாயத்துக்கு என்னைப் போன்ற அல்லது 'இதை'ப் போன்ற உடம்பு கிடையாதாகையால் நான் அவரைச் சுமந்தபடி ஓட வேண்டியிருந்தது. அவருக்குச் சிறகுகள் இருக்கின்றன என்ற மேல் விபரத்தை உங்களுக்காக இங்கே சொல்கிறேன். அவர் பேசிக் கொண்டே வந்தார். என்னிடம் ஏதாவதொன்றைக் கூறுவார். காற்றின் இரைச்சலில் நான் மறுபடியும் என்னவென்று கேட்பேன். தனக்குள்ளாகவே முனகிக் கொண்டு சும்மாயிருந்து விடுவார்.

நீங்கள் என்றைக்காவது அண்டாவில் நெல்லைக் கொட்டித் தண்ணீர் ஊற்றி, அதனை முக்கோணமாய் வைத்த மூன்று பெருங்கற்களின் மேலேற்றி, சவுக்கு செத்தையைப் போட்டுக் கொளுத்தி அவித்திருக்கின்றீர்களா? அப்படி இல்லையென்றால் ஒரு முறை அவித்துப் பாருங்கள். ஏன் என்று என்னிடம் கேட்காதீர்கள். நயாகரா அருவியைப் போய்ப் பாருங்கள் என்று யாரேனும் சொன்னால் ஏன் என்றா கேட்கிறீர்கள்?

செடிகளின் தூர்களில் பரப்பிப் போடும் பைன் செத்தை (pine straw என்று இன்னொரு மாதிரியில் சொல்லுவார்கள்), சவுக்கு செத்தை ரெண்டும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி. பைன் செத்தையைப் போட்டுக் கொளுத்தி நெல் அவித்துப் பார்த்ததில்லை.

திரும்பி வரும்போது நடந்துகிட்டு இருந்தோம். திடீர்னு அவரு பாதையோரத்துல இருந்த மக்னோலியா (magnolia, தமிழ்ல செண்பகப்பூன்னு ஒருத்தர் சொன்னார்) பூவப் பாக்க ஓடுனாரு. எத்தோ பெருசு. வெள்ளையா. ஏ ஆயே. மோந்து பாருன்னாரு. மோந்தேன். ஏ ஆயே என்னா வாசம். அதுகிட்ட போயி "இவனுக்குக் கலியாணம்" அப்படின்னாரு. எனக்கு வெக்கமாப் போச்சு. சும்மா இருங்கன்னேன் அவருகிட்ட. பூ பேசாம நின்னுச்சு. மகரந்தத் தூளாக் கொட்டிக் கிடந்துச்சு. அது தியானம் பண்ணுதுன்னாரு. இருக்கும். அப்புறம் 7.34க்கு நாங்கள் நலமுடன் வீடு வந்து சேர்ந்தோம்.



இந்தப் படத்தை எடுத்தவரின் மற்ற படங்களை இங்கு பார்க்கலாம்.

0 comments: