இங்கும் அங்குமாகக் கொஞ்சம் சுற்றினோம். சுற்றும்போது தொலைந்து போனோம். மீண்டோம். கடலும் மலையும் கண்டோம். சோளக் கொல்லை, மாடுகள் கூட அதிசயமாய்ப் போயின. அவ்வப்போது நடப்பிலிருந்து கழன்று அமெரிக்காவுக்கும் ஊருக்குமிடையே பறந்தது ஒரு பறவை. ஒரு பட்டம் விட்டோம், கொஞ்சம் பறப்பதும் தலை குப்புறப் பாய்வதுமாய்ப் போய்விட்டது.
உலகம் ஒரு புறமாகச் சுற்றிக் கொண்டுதானிருந்தது. ஒடுக்குமுறைகள் அதே விகிதத்தில் குறைவின்றி நடந்தபடிதானிருந்தன. செயற்கைக் கருத்தரிப்பைப் போலவே காவிரித்தாயும் செயற்கையாய்ப் பெருக்கெடுத்தாள். மக்கள் ஆனந்தமாக ஆடிப் பெருக்கைக் கொண்டாடினார்கள். நாளை அணை மூடப்பட்டு வற்றப் போகும் காவிரித்தாயிடம் தாலிப் பிச்சை கேட்டார்கள், கன்னிகளும் காளையரும் கல்யாணப் பிச்சை கேட்டார்கள். பள்ளிகொண்ட சீரங்கத்து ரங்கநாதரும் திருப்பள்ளியெழுந்து அமுது செய்து, அம்மா மண்டபத்துக்குப் போய் காவிரித்தாயைப் பார்த்துத் தாலி, பூ, புடவையெல்லாம் கொடுத்து, ஆண்டாளையும் கண்டுவிட்டு வந்தாராம். மதத்துக்குத் திறந்த அணை மதகுகள் வயல்களுக்கென்றபோது மூடிக் கொண்டன. இத்தோடு நெஞ்சை அலைக்கழிக்கும் ஏழ்மை சார் தற்கொலைகள், திருட்டுக்கள், பெங்களூரிலே மந்திரம் ஓதிப் பயத்துடனும் பக்தியுடனும் அவுட் சோர்சிங் கிளை திறந்த ஜெர்மானிய SAP, பெண்ணை "இயற்கை"யென்று உடற்காரணங்களைக் காட்டித் தளையினை இறுக்கும் போப், வ.உ.சி வந்தாலும் இனி கப்பல் விட முடியாது, ஒற்றை வரிச் செய்திகளோடு கொல்லப் பட்ட பீகார் சிறுபான்மையினர், பாஜகவில் இந்துத்வா பூரணத்தை உள்ளே வைத்து வேக வைத்த தேசிய கொளுக்கட்டை, இவற்றோடு உலகம் சுற்றிக் கொண்டேதானிருந்தது. இயல்பு இதுதானென்று அடக்குமுறைகளுக்கு முதுகு காட்டிக் கொண்டிருக்கும் வரை நம் உலகம் இப்படியேதான் சுற்றும்.
மதியம் வியாழன், ஆகஸ்ட் 05, 2004
இத்தனை நாட்களாய்
Posted by சுந்தரவடிவேல் at 8/05/2004 07:03:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment