நம்பற்குரியர் அவ்வீரர்?!



அப்போது நான் கல்லூரியில் இளங்கலைப் படிப்பிலிருந்தேன். தேசிய மாணவர் படை முகாமொன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கு இந்திய இராணுவத்திலிருக்கும் வீரர்களால் பல்விதமான மைதானப் பயிற்சிகளோடு வகுப்பறைகளிலும் பாடங்கள் நடத்தப்படும்.

இந்த வகுப்புக்கு ஒரு நாள் ஒரு அவில்தார் வந்தார். கேரளத்துக்காரர். இவர் அன்றைக்குச் சொல்லித்தந்திருக்க வேண்டியது என்னவென்று எனக்கு நினைப்பில்லை. ஆனால் அப்போதுதான் இலங்கையிலிருந்து திரும்பி வந்திருந்தாராம். இந்திய அமைதிப் படையிலே இருந்தாராம். இவர், நம் இராணுவம் எதற்காகப் போனது என்பதையோ, அதன் அரசியல் காரணங்களையோ, போன வேலையைச் செய்ததா, இல்லையா, ஏன் இல்லை என்பதையோ எங்களுக்குச் சொல்லவில்லை. மாறாக அவர் சொன்னதெல்லாம் தான் எப்படி அவ்வூரிலிருந்த ஒரு பெண்ணை படிப்படியாக மயக்கிப் படுக்கை வரை அழைத்துச் சென்றார் என்பதைக் கதையாகச் சொன்னார்.

இப்போது அந்தக் கதையைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்ததற்காக வெட்கப் படுகிறேன். ஆனால் அன்றைக்கு எனக்கோ என்னையொத்த மாணவர் படையினருக்கோ அது ஒரு அவில்தாரின் வெற்றி பெற்ற காமக் கதை. வன்புணர்ச்சியாக இல்லாத போதும் இது ஒரு கீழ்த்தரமான பாலியல் ஒடுக்குமுறை. இது மிக மிக நாகரீகமான ஒரு உதாரணம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் கீழ்க்கண்ட பதிவுகளைப் படியுங்கள். இவை இரண்டும் ஈழத்தில் ஒரே ஒரு இடத்தில், வல்வெட்டித்துறையில், இரண்டு நாட்களில் இந்தியப் படையினரால் நிகழ்த்தப்பட்ட வன் செயல்கள். இது குஜராத் மதவெறிக் குண்டர்களின் கலவரத்திலிருந்தோ அல்லது சிங்களக் காடையரின் இனவெறியிலிருந்தோ சற்றும் குறையாமலிருப்பதை உணர்வீர்கள். இதை ஒரு இராணுவம் நிகழ்த்தியிருப்பது அசிங்கம். அதைவிட அசிங்கம் இது நம் தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிறபகுதிகளிலும் இருட்டடிப்பு செய்யப் பட்டிருப்பது. ஊரடங்கை அமல்படுத்திவிட்டு 63 பொதுமக்களை வெட்டியும் எரித்தும் படுக்க வைத்து முதுகிலே சுட்டும், பாலியல் காட்டுமிராண்டித்தனத்தைக் கட்டவிழ்த்துவிட்டும், நூலகங்களைக் கொளுத்தியும் ஒரு இராணுவம் "அமைதிகாக்கும் பணி" புரிந்ததாம். இது ஒரே ஒரு உதாரணந்தான். இந்தியப் படையின் நடவடிக்கைகளை ஊர் ஊராக ஒவ்வொருவரும் பதிய ஆரம்பித்தார்களென்றால், வங்காலைக் கிராமத்தில் சன்னல், கதவிடுக்குகள் வழியே மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது போகிற போக்கில் தெருக்காரக் குடியானவனைக் குத்திக் குடலையுருவிப் போட்டுவிட்டுப் போன வீரக் கதைகளும் இன்னும் எத்தனையோவெல்லாமோ வந்து சேரும்.

இத்தகைய நிகழ்வுகளை, பாதிப்புகளிலிருந்து எழுந்த கதைகளை, கட்டுரைகளை இப்போது சேர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கான தகவலையும் கீழே தந்திருக்கிறேன். இலங்கை இனப் போராட்டம் என்றவுடனேயே மாலை போட்டு ராஜீவ்காந்தி போட்டோவைத் தூக்கிக் கொண்டு வந்து ஊதுபத்தியைக் கொளுத்தி வாழைப்பழத்தின் மேல் குத்தி வைத்து விட்டுப் போராட்டத்தை இழிவு படுத்தும் நம் போக்கு மாற வேண்டும். நமது இந்திய அமைதிகாக்கும் படை இலங்கையில் நிகழ்த்திய அசிங்கங்கள் அம்பலப் படுத்தப் பட வேண்டும்.

1. ஈழநாதனின் பதிவு
2. கரிகாலனின் பதிவு (நான் மேலே இட்டிருக்கும் படத்தை இவரது பதிவிலிருந்தே எடுத்தேன்).
3. கட்டுரைகள் மற்றும் படைப்புகளைக் கேட்டிருக்கும் "ஒல்காரின்" வேண்டுகோள் (சந்திரவதனா வலைப்பூ உரையாடற்பெட்டியில் இட்டிருந்தார்).

1 comments:

said...

வங்க தேச விடுதலைப் போரின் போதே இந்திய ராணுவத்தின் அட்டூழியங்கள் பற்றிய தகவல்கள் வெளியாயின.

உள்நாட்டுக் கலவரங்களின் போது பணியமர்த்தப்படும் ராணுவம் தம் மக்களிடமே மிருகத்தனமாக நடந்து கொள்வதைத்தான் கண்டு வந்திருக்கிறோம்.

ராணுவத்திற்கும் - ஏன் காவல் துறைக்கும் கூட - மனித நாகரிகத்தையும் மனிதப் பண்புகளையும் பயிற்றுவிப்பது முதலாவது தேவை. அவர்கள் அதில் தேறிய பிறகு ஆயுத பயிற்சி மேற்கொண்டால் போதும் என்ற நிலை வர வேண்டும்.

வெளித்தோற்றத்தில் தெரியும் ஒழுங்கும் கட்டுப்பாடும், வலிமையற்ற அப்பாவி மக்களைக் கண்டதும் காணாமல் போகிறது என்றால், அது எவ்வளவு போலியானது என்று புலனாகிறது. கட்டுப்பாடும் ஒழுங்கும் உண்மையானதாக, உள்ளார்ந்ததாக அமைய வேண்டும். தவறு செய்வதைப் பற்றிய அச்சமும் தவறுகளுக்குப் பொறுப்பாவோம் என்ற பயமும் அவர்களுக்கு வேண்டும்.

நாம் ஒன்றும் சர்வாதிகார நாட்டில் வாழவில்லை. நமது தேசபக்தியை புலப் படுத்த நமது ராணுவத்தின் தவறுகளை மூடி மறைக்க வேண்டியதில்லை.