சந்தையிலே

வழிக்குளத்துத்
தண்ணீரை மொண்டு
மூச்சு முட்டமுட்ட வயிறு நிரப்பி
குளிப்பாட்டி முடி வாரி
பெருவயிற்றுச் செழுமைகாட்டி
நரித்தரகு கைப்பிடிக்குள்
விரல்நுனி பேரமெல்லாம்
எங்களூர்வாரச் சந்தை
ஆட்டுக்குமட்டுமென்றிருந்தேன்
தேசியத்துக்கும்மதுதான்,
என் தேசப் பற்றுக்கும்மதுதான்.
சத்தில்லையடா நீர்வீங்கலென்றால்
உண்மை காணார்,
வயிறு தடவிப் பாரார்
ஆட்டுத் துரோகியென்பார்
சோழக்கொடிச் சிலுவையைத்
தோளிலே சாத்துவார்.
ஆட்டுக்குத் தழை பேணார்
சுரப்புமணம்போக நீராட்டார்
மேய்ப்பனுக்குஞ் சொல்லாரவனுக்கு
முழத்துண்டும் நீட்டார்
கண்மூடி மேய்க்கச் சொல்வாரவரும்
தடியெடுத்து மேய்ப்பார்
கையும் மெய்யும் பொத்தி
இயல்பிதுவென்று நீர்முட்டுவயிற்றுக்கு
மக்களைப் பழக்குவார்.

தனித்தனியாய்க் கூட்டாய்
வில்லோடுஞ் சொல்லோடும்
யாரெதையாண்டாலும்
எதைக் கட்டிவைத்தாலும்
இறுக்கினமூட்டையின் இடுக்கிலே
கட்டுத்தானியம் பிதுங்கியுதிரும்.
வேண்டுவதெல்லாம் விழித்துப்பார்
நிஜக் குழந்தையாய் ஒருமுறை
எல்லாவற்றையும் புதிதாய்ப் பார்
பரிசீலி, மறுபடி மறுபடி.
அவிழ்த்துக்கட்டு,
தளர்த்திக் கொள்
சாக்குப் பைகளைத் தைத்துக் கொள்
இல்லையேல் மாற்று.
என்பை பொன்பை உன்பையோட்டையென்றால்,
நாட்டு வணக்கப் பாடல்களை
நானும் மனனஞ்செய்தேன்
என்னிடஞ் சொல்லாதே.

தனியனைத் தனியளை
மதிக்குநாடு காக்கும்படைக்குச்
சிக்குமண்டைப் பிரித்து
உள்ளிறுகிப் போன கட்டுமானமுடைத்து
வலியாய்ப்பிரசவித்த வழியேதுமிருந்தால்
கொண்டுவை கேட்டுக் கொள்வேன்
இல்லாதாகின் பொத்திக் கொண்டு போ.

0 comments: