நமனை விரட்ட

"நமனை விரட்ட மருந்தொன்றிருக்குது நாகூர் தர்காவிலே"ன்னு ஒரு பாட்டு கேட்டிருக்கீங்களா? நாகூர் அனீபா பாடினது. இப்ப நமனை விரட்ட அல்லது அவரது எருமையை இன்னும் கொஞ்சம் தாமதமா வரச் சொல்ல ஒரு மருந்து வந்திருக்காம். இந்தச் சேதி அரசல் புரசலா ஏற்கெனவே தெரிஞ்சதுதான். ஆனாலும் இப்போ ஒரு சோதனையில இன்னும் உறுதிப் படுத்தியிருக்காங்க. என்னன்னு பாக்கலாமா?

சிவப்பு ஒயின் மற்றும் திராட்சைப் பழங்களில் காணப்படும் ரெஸ்வெரட்ரால் ("ரெஸ் அப்படின்னு ஒரு பொண்ணு நமனை வெரட்டுறாள்" ன்னு நினைச்சுக்கங்க! resveratrol) எனும் ஒரு வேதிப் பொருள்தான் அது. மூப்பியல் துறையில ஈடுபாடு கொண்ட மூனு பேர், Brown, Harvard, Connecticut ஆகிய மூனு பல்கலைக்கழகங்கள்ல இருந்து, இதை மூனு விதமான உயிரினங்கள்ல பரிசோதிச்சுச் சொல்லியிருக்காங்க.

போன ஜூலை மாசம் நம்ம ப்ரௌன் காரர், பேரு மார்க், ஹார்வர்டுக்குப் போனாராம். அங்க இருந்த நண்பர் டேவிட்டோட ஆய்வுக்கூடத்துக்குப் போயிருக்கார். ரெண்டு பேருக்குமே இந்த மூப்பு எப்படிடா வருதுன்னு ஒரே மண்டைக் குடைச்சல். டேவிட் ஈஸ்ட்லயும் (yeast), மார்க் பழ ஈக்கள்லயும் (fruit flies, Drosophila melanogaster) ஆராய்ச்சி செய்றாங்க. டேவிட் கொஞ்சூண்டு திரவத்தைக் குடுத்து இது பாதுகாப்பான சரக்குதான், உன்னோட ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திப் பாருன்னு சொல்லி குடுத்தார்.
மார்க் உற்சாகத்தோட அதை வாங்கிட்டு வந்து சோளத்தோட காய்ச்சி அவரோட பழ ஈக்களைச் சாப்பிடச் சொன்னாராம். அதுகளும் சாப்பிட்டுட்டு 30% அதிக நாட்கள் வாழ்ந்துச்சாம். அதாவது 43 நாட்கள்ல சாகுற பூச்சிகள் 51 நாட்கள் வரைக்கும் பறந்து திரிஞ்சுச்சாம். மார்க் டேவிட்டுக்குக் குடுத்தது ரெஸ்வெரட்ரால்தான்.

இதை இன்னும் நல்லா பரிசோதிக்க ஸ்டீபன்னு கனெக்டிகட் பல்கலைக் கழகத்துக்காரரையும் சேர்த்துக்கிட்டாங்க. இவரு நுண்புழுக்கள்ல (nematodeக்குத் தமிழ்ல என்ன?) ஆராய்ச்சி செய்றவர். மூனு பேருமா சேர்ந்து ரெஸ்வெரட்ரால் கூட அதே மாதிரி இன்னொரு வேதிப்பொருளான பிஸெட்டின் (fisetin) அப்படிங்கறதையும் எடுத்துக்கிட்டாங்க. இதெல்லாம் சிர்ட்டூயின் (sirtuin) அப்படிங்கற பெரிய குடும்பத்துல வருது. இந்த மூலக்கூறுகள் எல்லாமே அந்த மூனு உயிரிகள்லயும் மூப்பைத் தள்ளிப் போட்டனவாம்.

எப்படி? இப்போ இன்னொரு சமாச்சாரம் உள்ளே நுழையப் போகுது. அதாவது உணவுக் கட்டுப்பாடு. உணவுக் கட்டுப்பாட்டுல இருக்கவங்களுக்கு மூப்பு சீக்கிரம் வராதுங்கறது ஏற்கெனவே தெரிஞ்சிருக்கு. இது எப்படி நடக்குதுன்னு தெளிவாத் தெரியலை. ஆனா மார்க் என்ன சொல்றாருன்னா, "உயிர் வாழ்க்கையின் முக்கியமான பணியே இனப்பெருக்கம் செய்றது. உணவுக்கட்டுப்பாடு/பசி போன்ற நிலைமைகள்ல உடம்பு என்ன நினைக்குதுன்னா இப்போ பற்றாக்குறையில இருக்கோம், அதனால இனப்பெருக்கத்துக்கு இன்னும் நாம தயாராகலைன்னு நெனச்சுக்கிட்டு, எதிர்ப்புத்தன்மை/வாழுந்தன்மையை அதிகப்படுத்திக்குது. தகுந்த காலம் கனியும் வரைக்கும் காத்திருக்குது, அதனால ஆயுள் நீளுது. இந்த நேரத்தில சில தாக்குதல்களும் அவசியந்தான், அப்போதான் அந்த உயிரினம் பரிணாம வளர்ச்சி அடையும்" அப்படிங்கறார். ஆக உணவுக்கட்டுப்பாட்டினால் மூப்பினைத் தள்ளி வைக்கலாம். இந்த ஒரு விதியின் மேலதான் ரெஸ்வெரட்ரால் வேலை செய்யிறதா இந்த மூனு பேரும் நம்புறாங்க. அதாவது உணவுக் கட்டுப்பாடு எப்படி வேலை செய்யுதோ அதே மாதிரிதான் ரெஸ்வெரட்ராலும் வேலை செஞ்சு ஆயுளை நீட்டிக்குதாம். ஆனா என்ன புதிரா இருக்குன்னா, கட்டுப்பாடான உணவோட இந்த சரக்கைக் குடுத்தா வாழ்க்கை நீளுவதில்லையாம். அதே மாதிரி ரெஸ்வெரட்ரால் சாப்பிட்டா இனப்பெருக்கமும் பாதிப்படையவில்லையாம் (நல்லதுதானே!). மேல் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

இந்த இளமைக் குளிகை கடையில் கிடைக்க இன்னும் சில ஆண்டுகளாகலாம். ஏனென்றால் சிர்ட்டூயின்கள் தற்போதைய வேதி வடிவில் ரத்தத்தில் நிலையாய் இருப்பதில்லையாம். இதை நிலைப்படுத்திய பிறகு விற்பார்கள் என நம்பலாம். இத்தகைய மருந்துகள் இதய மற்றும் சர்க்கரை நோய்களுக்கும் பயன்படுத்தப் படலாம் எனத் தெரிகிறது. ஆக, இன்னும் கொஞ்ச நாட்கள்ல நாம எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து பாடலாம்:
காலா உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன் - என்றன்
காலருகே வாடா சற்றே உன்னை மிதிக்கிறேன்!
(சுப்ரமணிய பாரதி)

செய்திக்கு ஆதாரம்