மத்தாப்பு




ரொம்ப நாட்களாய் எழுதாமல் திரிந்து கொண்டிருந்தேன். விழித்துக்கொண்டிருப்பதால் உட்கார்ந்துவிட்டேன். எல்லாப் புது வருடங்களையும் போல நேற்றும் ஒரு புது வருடம் வந்தது. தேடிப்பிடித்து மத்தாப்பும் சங்கு சக்கரமும் வாங்கி வந்தோம். குளிரில் நடுங்கிக்கொண்டே கொளுத்தி முடித்தோம். இன்றைக்குக் கொஞ்சம் மீதி வைத்துக்கொண்டு. சின்னப்பிள்ளைகளுக்கு வம்பில்லாத பாடு. அவர்களுக்கு மத்தாப்பை யார் எங்கு செய்கிறார்கள் என்ற கவலை இல்லாமல் ஒளிர்ந்து தெறிக்கும் அந்தப் பொறியைப் பார்த்து ஆனந்திக்க முடியும். நமக்கு அப்படியா? முன்பொரு தரம் பதினான்காவது தடவையாய்க் காதல்வயப்பட்டிருந்த ஒரு தீபாவளி நேரத்தில் மத்தாப்பு கொளுத்திக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களைப் பார்த்து எழுதினேன்:

புது மத்தாப்பைக் கொளுத்துகிறது எரியும் மத்தாப்பு
எனக்குள் எரிவது உன்னைப் பற்றாதா?

காலம் எல்லாவற்றையும் எரித்துப் பொறியாக்கி, நெருப்புப் பழுத்துச் சிவந்து தணியும் கம்பிகளை வேலியோரத்தில் வீசிவிட்டுத் தன்பாட்டுக்குப் போகிறது. இதில் நானும், பதினான்காவது காதலும் எம்மாத்திரம்? புத்தாண்டு வாழ்த்துக்கள்!

0 comments: