அஞ்ஞானச் சந்தையில்

தினமணியில் நேற்றொரு செய்தியைப் பார்த்தேன். சென்னையில் ஒரு வியாபாரியாம். 3 கோடி பெருமானமுள்ள கழுத்தணியை (2 கிலோ) திருப்பதி வெங்கடாசலபதி சிலைக்குக் கொடுத்தாராம். பக்கத்தில் நின்றுகொண்டு பார்த்தது யார் தெரியுமா? மதச்சார்பற்ற இந்தியாவின் துணைப் பிரதமர். (இதை முடித்துவிட்டு புட்டபர்த்திக்குப் போய் சாயிபாபாவைத் 'தரிசிக்க' இருக்கிறது து. பிரதமர் என்ற மேலதிக விபரத்தையும் தருகிறேன்). 3 கோடிகள். கிட்டத்தட்ட 300 நல்ல மடிக்கணிணிகளை வாங்கலாம். எத்தனையோ பள்ளிக்கூடங்களுக்குப் புத்தகங்களாய் அள்ளித் தந்திருக்கலாம். அட அவர் யாரோ தெரியாதவர்க்குக் கொடுக்க வேண்டாமய்யா, அவரது சொந்த பந்தத்திலாவது நலிந்தவர்க்குக் கொடுத்திருக்கலாம். இந்த மடக்கூத்துகளைக் கண்டு நெஞ்சம் வேகிறது.

அமெரிக்கக் கோயில்களைக்கண்டால் இன்னும் பதைக்கும். டாலரில் கொட்டுகிறார்கள். இந்துக் கோயில்கள் மட்டுமல்ல, இங்குள்ள கிறிஸ்தவக் கோயில்களும்தான் நல்ல பணம் பார்க்கின்றன. செபக்கூட்டங்களில் பிரம்புக் கூடைகளைக் கொண்டு அள்ளிக்கொண்டு போவார்கள். வருமானத்தில் ஒரு தொகையைக் (10% என நினைக்கிறேன்) கோயிலுக்குக் கொடுக்கும் தர்மவான்களையும் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னத்துக்கு இப்படி கல்லில் கொண்டு போய்ப் பணத்தைக் கொட்ட?

கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போக என்று யாரோ சொன்னதெல்லாம் புதைந்து போயின. மெய்ஞானத்துக்கும், இறையியலுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத இந்தக் கோயில்களா நம் அகக்கண்களைத் திறக்கப்போகின்றன? உள்ளே வேதத்தை ஓதிவிட்டு வெளியே சாத்தானோடு சேர்ந்து ஆட்டம் போடும் மதங்களா நமக்கு விழிப்புணர்வைப் போதிக்கப் போகின்றன?

கோயிலுக்குச் சமூகக் கடமைகள் அனேகம் இருப்பதாகவும் அதனால் கோயில்களும் மதங்களும் அவசியம்தான் என்பது ஒரு சாரரின் வாதம். பழங்காலத்தில் ஆலயம் வெறும் வியாபாரத்தலமாக இல்லாதபோது, கல்விக்கும் கலைக்கும் இடமாயிருந்த போது வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அப்படியா? ஒவ்வொரு கலைக்கும், கல்விக்கும், சமூகக் கற்பிதங்களுக்கும்தான் தனித்தனியே நிறுவனங்கள் இருக்கின்றனவே. இப்போது கோயில்கள் ஒவ்வொன்றும் ஒரு வியாபார நிறுவனம். அதைச் சார்ந்து தொழில் நடத்துவோர் அனேகம். இவர்கள் தொழில் பாதிக்கப்பட்டுவிடும் என்பதால் மட்டுமே இப்படிப்பட்ட நிறுவனங்களை வளர்த்தெடுப்பது ஒப்புக்கொள்ள முடியாதது.

"செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம் சேர்ந்திடலாமென்றெண்ணியிருப்பவர் சுத்த மூடரென்றிங்கூதேடா சங்கம்" என்ற பாரதியின் வரியாகட்டும், "ஊர்கூடிச் செம்பை வைத்திழுக்கிறீர்" என்ற திருமூலனின் சாடலாகட்டும், "பாலென்று அழும் பாலகனுக்குப் பால் கொடாமல் பாழாய்ப் போன கல்லுக்குப் பாலாபிஷேகம் ஏனடா" என்று முகத்திலறைந்த பெரியார் கட்சிக் கூப்பாடாகட்டும்...எதுவும் நம்மைத் திருத்தாதோ என்று பரிதவிப்பாய் இருக்கிறது.

0 comments: