நிலை மாறுபாடுகள்

ஓடையாய் ஓடிக்கொண்டிருந்தது உறைந்து கிடக்கிறது. வீசின அலைகள் 'கல்லாகப் போகக் கடவாய்' என்று சாபம் பெற்றது மாதிரி அகடும் முகடுமாய்ச் சமைந்து கிடக்கின்றன. குளிர் இண்டு இடுக்கு விடாமல் எல்லா இடங்களிலும் பரந்தாகி விட்டது. உடம்பில் மாட்டியிருக்கும் அங்கிகள் எல்லா அசைவுகளையும் தன் கட்டுக்குள்ளேயே வைத்திருக்கின்றன. வெளியில் வருவதற்காகக் காத்திருந்ததுபோல் வா என்று கூவி ஓங்கி முகத்திலறையும். மூக்குச் சிவந்து முகம் சுருங்கித் தொய்ந்து போகும் ஒவ்வொரு நொடியையும் வீணாக்காமல் அடித்துத் துவைக்கும்.

ஒரே பொருள். திட, திரவ, வாயு வடிவங்கள்.

சுழற்சிகளின் மீது வைக்கும் நம்பிக்கையைத் தவிர இப்போதைக்கு வேறென்ன இருக்கிறது? ஆனால் இந்த நம்பிக்கை நிகழ்வடிவின் மறுதலிப்பு. அந்நம்பிக்கை இவ்வடிவினைப் புறக்கணித்ததாகி விடுமோ?

ஒரு பொருள், பல வடிவங்கள். எந்த வடிவை உண்மையென்று கொள்ள? எல்லா வடிவங்களுமே இயல்புதான், இவற்றில் எது 'இயல்பான' இயல்பு? அப்படி ஒன்று இருக்க முடியுமா?

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான் எனது என்றவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை...(திருவாசகம்)

என்ன சொல்வேன்?!

0 comments: