ஒரு நண்பரின் குதிரைகள்

நேற்று எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு நண்பர் இரண்டு குதிரைகளைக் கொண்டு வந்தார். குதிரை ரகங்களைப் பற்றிய அறிவு இல்லாமையால் அவற்றை வெள்ளைக் குதிரைகள் என்று மட்டும் அடையாளம் கண்டு கொண்டேன். ஒன்றுக்குப் பச்சையாலும் மற்றொன்றுக்குச் சிவப்பாலும் இடுப்புக்குக் கீழே (அதாவது கால்களை மறைப்பது போல்) சுருக்கம் வைத்த பாவாடை கட்டியிருந்தது. ஒன்றின் மேலே ஒரு ஆணின் மேல் பாதி உடம்பும், தலையும். உடம்பும் தலையும் தனித்தனியே ஆடும். அந்த ஆளுக்கு ஒரு அழகான மீசையும் உண்டு. இதேமாதிரி இன்னொரு குதிரையின் மேல் ஒரு பெண். அவருக்குப் பச்சை நிறச்சேலை. இருவருக்கும் தலையில் கிரீடம். அபினயம் பிடிக்கும் கைகள். குதிரைகள் இரண்டும் கூம்பு போன்றதொரு பீடத்தின் மேல். லேசாய்க் குதிரையை ஆட்டினால் குதிரை, குதிரைமேலிருக்கும் ஆளின் உடம்பு, தலை மூன்றும் தனித்தனியே ஆடும். பொய்க்கால் குதிரை என்று பையனுக்குச் சொல்லிக் கொடுத்தேன். பொய்க்கா வரைதான் அவனுக்குச் சொல்ல வருகிறது. எங்கள் வீட்டிலொரு சின்ன மேளமும் இருக்கிறது (banjos) அதை அடித்துக்கொண்டே அந்த ஆணை வீரபாண்டிய கட்டபொம்மனாகவும் பெண்ணை ஜக்கம்மாவாகவும் (அவர் மனைவி பெயர் மறந்து போனது, இன்னும் நினைப்புக்கு வரவில்லை), மற்றுமொருமுறை ஆணை பாரதியாகவும் பெண்ணை செல்லம்மாகவும் ஆக்கி, அல்லது சும்மாகவேனும், பாட்டுக்கள் பாடி, கதை சொல்லி, மேளமடித்து...பையன் ரசிக்கிறான். அந்தக் குதிரைகளை இந்தப் பையனுக்காகவே தமிழ்நாட்டிலிருந்து வரவழைத்துத் தந்திருக்கிறார். நன்றி நண்பரே.

0 comments: