அப்பாவின் பாட்டுக்கள்

ஊரிலிருந்தபோது ஒரு நாள் புத்தக அலமாரியைக் குடைந்து கொண்டிருந்தேன். அப்பாவின் நோட்டுப் புத்தகமொன்று கண்ணில் பட்டது. அவர் ஆசிரியப் பயிற்சி/பணிக் காலங்களின் போது சேர்த்து வைத்திருந்த பாட்டுக்கள். பிள்ளைகளுக்கான பாட்டுக்கள். அந்தக் காலத்து ஏர்முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லே மெட்டில் "கல்விச் செல்வம் போலொரு செல்வமேயில்லே" வகையிலிருந்து "நத்தையம்மா நத்தையம்மா எங்கே போகிறாய்" வகையான எளிமையான அழகான பாட்டுக்கள் வரை எல்லாமிருந்தன. அப்பா எழுதின பாட்டுக்களில்லை. அவர் திரட்டியவை. அக்காக்களின் அல்லது யார் யாரோ சின்னப் பிள்ளைகளின் பிஞ்சுக் கையெழுத்துக்களுமிருந்தன. அந்தப் பழைய குறிப்பேட்டிலிருந்த பாட்டுக்களை அப்படியே தட்டச்சிக் கொண்டுவிட்டேன். இவற்றை ஒரு நாள் புத்தகமாக்குவேன். இன்னொரு ஆச்சரியம், 1960-70களில் ஒரு கிராமத்து வாத்தியாருக்கு Here we go round the mulberry bush பாட்டின் தமிழ் வடிவம் தெரிந்திருக்கிறது! அந்தப் பாட்டின் ஒலி வடிவம் இங்கே, வரிகள் கீழே. நாங்கள் பாடினால் தலையைப் பக்கவாட்டில் ஆட்டி ஆட்டிச் சிரிக்கிறான் மகன்! நன்றி அப்பா!


மாமரத்தைச் சுற்றுவோம்
சுற்றுவோம் சுற்றுவோம்
மாமரத்தைச் சுற்றுவோம்
விடியற்காலையில்

இவ்விதம் பல்லைத் துலக்குவோம்
துலக்குவோம் துலக்குவோம்
இவ்விதம் பல்லைத் துலக்குவோம்
விடியற் காலையில்

இவ்விதம் முகத்தைக் கழுவுவோம்
கழுவுவோம் கழுவுவோம்
இவ்விதம் முகத்தைக் கழுவுவோம்
விடியற் காலையில்

இவ்விதம் தலையைச் சீவுவோம்
சீவுவோம் சீவுவோம்
இவ்விதம் தலையைச் சீவுவோம்
விடியற் காலையில்

இவ்விதம் உடையை மாற்றுவோம்
மாற்றுவோம் மாற்றுவோம்
இவ்விதம் உடையை மாற்றுவோம்
விடியற் காலையில்

இவ்விதம் பள்ளி செல்லுவோம்
செல்லுவோம் செல்லுவோம்
இவ்விதம் பள்ளி செல்லுவோம்
விடியற் காலையில்.

குழந்தைப் பாடல்களைப் பற்றிய என் முந்தைய பதிவொன்று - தாத்தா பண்ணை வச்சிருந்தார்.

17 comments:

said...

பையா, நல்ல பாடல்!
அவனும் பாடுகிறானா?

said...

இன்னும் இல்லை. ஆனால் நன்றாய்க் கதைக்கிறான்!

said...

:-)

said...

அருமையான பாடல்! //அந்தப் பழைய குறிப்பேட்டிலிருந்த பாட்டுக்களை அப்படியே தட்டச்சிக் கொண்டுவிட்டேன். இவற்றை ஒரு நாள் புத்தகமாக்குவேன். // அதற்கு முன் அவற்றை இங்கு இடுவீர்களா? தாத்தா பண்ணை (உங்களின் பதிவிலிருந்து) என் மகளிடம் பிரபலமாகிவிட்டது (இப்போதைக்கு வெறும் ஈ..யா.. ஈ..யா.. என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள்). நன்றி சுந்தரவடிவேல்!

said...

நன்றி பெயரிலி, ராதா. அந்தப் பாட்டுக்களை இங்கும் இடுகின்றேன்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

அப்பாவின் பாடல்களை இங்கே போடுங்கள். எங்க ஊர் தமிழ்ப் பள்ளிக்கு உபயோகப்படுத்தலாமா அல்லது காப்புரிமை தரப்படமாட்டாதா?

தாரா.

said...

தாரா, நிச்சயமாக. இங்கு இடுகின்றேன். அந்தப் பாட்டுக்களைக் 'காக்கும்' (அதாவது வழக்கொழிதலிலிருந்து காக்கும்) உரிமை எல்லோருக்கும் தரப்படும்!

said...

மிகவும் அருமை !!

said...

நானும் என் மகள்களுமாய் அந்த இசையை ஒலிக்க விட்டுவிட்டு தமிழும் ஆங்கிலமும் கலந்ததாய்ச் சில நிமிடங்கள் பாடிக்(!) களித்தோம். தமிழ்ப் பாட்டைச் சேர்த்து வைக்கச் சொன்னால் மகள்.

said...

அடேங்கப்பா!! நன்றி. செல்வராஜ், பிள்ளைகள் பாடுகிறார்கள் என்று கேட்கும்போது மகிழ்வு மேலிடுகிறது.

said...

test

said...

சுந்தரவடிவேல்,

நன்றாக கதைப்பதையிட்டு மிகவும் சந்தோஷம்.

அன்று,
இரயில் சினேகமாக அறிமுகமாகி,
எனக்கு தமிழ்மணத்தினை அறிமுகப்படுத்தி,
அதுவே என்னை Netல் இணைக்கும்போதெல்லாம்
தமிழ்மணம் வழியாக தமிழில் உள்ள Blogs பலவற்றை அறிந்து,
முதலில் "அப்பாலும் இப்பாலும்" வெகுவாக கவர
பின்னர் ஆறாறு முப்பத்தியாறில்-அல்பத்தனமாக ஆறு மணிநேர இரயில் சினேகத்தை தேடி,
இப்படியாக Blog ஒன்று போட வேண்டும் எனற தாகத்தை கூட்டி,
Blog போட வேடுவதற்கு இன்னமும் சில ஙுட்பங்களை தேடிக்கொண்டிருக்கும்
-குமரேஸ்-

said...

அருமை!

said...

நல்ல பாடல்.

said...

இப்படி இந்தப்பாட்டுகள் மக்களிடம் பரவினால் சரிதான். யாராவது இதற்கு இசையமைக்கவும் செய்யலாம்.

said...

அன்பு குமரேஸ், உங்களை மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கொரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.
நன்றி கங்கா, கார்த்திக்.
தங்கமணி, கவிதனோ யாரோ மதியின் கத்தரிக்காய் வெருளிப் பதிவில் சொன்னது மாதிரி இசை வடிவையும் வெளியிட முடிந்தால் நன்றாகத்தானிருக்கும். அது வருங்காலத்தில்! இப்போதைக்கு வரி வடிவங்களை இட மதி ஒரு குழுப்பதிவு தொடங்கியிருக்கிறார்: paadal.blogspot.com