பாதரசம் சேர்ந்த மருந்துகள் - 2

மருத்துவர் ஜெயப்பிரகாஷ் நாராயணின் கட்டுரையின் மீதிப்பகுதி:

இரச மருந்துகளைப் பற்றிய எனது சில அனுபவங்கள்

இன்றைக்குச் சித்த மருத்துவத்துறையில் பரவலாக, மிக அதிகமாகக் கையாளப் படுகின்ற இரசக் கலப்புள்ள மருந்துகளில் மிக முக்கியமான ஒன்று இரசகந்தி மெழுகு. இந்த மருந்தை ஒரு வேளைக்கு 1 கிராம் வீதம் ஒரு நாளைக்கு இரு வேளை வீதம் முப்பது நாட்களுக்குத் தொடர்ந்து கொடுத்தாலும், அதன் பின் சோதனைக்குட்படுத்தப்பட்ட நோயாளியின் இரத்தத்தில் அல்லது சிறுநீரில் பாதகமான குறிகள் எதையும் காண முடிவதில்லை.

ஏனைய மருந்துகளோடு கலப்புறுகின்ற போது இரச மருந்துகளின் உலோக நச்சுத்தன்மை இழப்பதோடு மட்டுமல்லாமல் மருந்துத் தன்மையிலும் பாதுகாப்பான தன்மையோடு செயல்படுவதை நமது பட்டறிவு காட்டுகின்றது. நாட்பட்ட கீல்வாத நோய் (rheumatoid arthritis), தொழுநோய் (leprosy) போன்ற நோய்களுக்காக ஒரு மாதத்திற்கு ஒரு வாரம் இடைவெளிவிட்டுத் தொடர்ச்சியாக ரசகந்தி மெழுகு உண்டு வருகிறவர்களுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை serum creatinine, blood urea மற்றும் சிறுநீரில் புரதம், சீழ் அணுக்கள், சிவப்பு அணுக்கள் இருக்கின்றனவா என்று கவனித்துக் கொள்கிறேன். ஆனால் இரச மருந்துகள் பிருக்கம், ஈரல் மற்றும் நரம்பு மண்டலத்தின் மீது கடுமையான நச்சுத் தன்மையை ஏற்படுத்த வல்லது என்ற நவீன அறிஞர்களின் கணிப்பை எப்போதும் கருத்தில் கொண்டிருக்கிறோம்.

அத்தகைய மதிப்பீடு மகா வீர மெழுகு, வான் மெழுகு போன்ற இரச சம்பந்தமான பச்சைவெட்டு மருந்துகளை வழங்குகின்றபோது நமது அனுபவத்திலும் ஒத்து வருவதாகவே உள்ளது. அம்மெழுகுகளை அம்மருந்தின் குறைந்த அளவாகிய 50 மில்லி கிராம் அளவில் நாளுக்கு இரண்டு முறை என்ற கணக்கில் கொடுத்த மூன்று நான்கு தினங்களிலேயே வாயில் உலோகச் சுவை, முகம் வீங்குதல், தோலில் அரிப்பு போன்ற நச்சுக் குறிகுணங்களைக் காட்டுகின்றன. இப்படிப்பட்ட நோயாளிகளில் பலரின் சிறுநீர் பரிசோதனையின்போது புரதத்தின் தடயம் (traces of albumin) இருப்பதையும் கவனித்திருக்கிறேன்.

ஆனால் சண்டமாருதம், அயவீரம் ஆகிய மருந்துகளில் நிலைமை வேறு விதமாக இருக்கிறது. இவற்றைத் தேனில் குழப்பிக் கொடுப்பதால் இம்மருந்துகள் பெரும்பாலும் வாய்ப்புண், அல்லது ஈறு அழற்சியை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் மகாவீர மெழுகைப் போலவோ வான் மெழுகைப் போலவோ வழங்கிய இரண்டு மூன்று நாட்களிலேயே நச்சுத் தன்மையைத் தோற்றுவிப்பதில்லை. சிலரில் 20 முதல் 30 நாட்கள் வழங்கிய பின்னரே நச்சுக் குறிகுணங்கள் நோயாளிகளால் மருத்துவரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

நன்றாக முடிக்கப் பெறாத நிலையில் இரண்டாம் நாளிலேயே சண்ட மாருதத்தின் நச்சுத்தன்மையால் வாய் வீங்கியவர்கள் உண்டு.

என்னுடைய நோயாளிகளில் நீண்ட கால இரச மருந்து சிகிச்சை தேவைப்படுகின்ற நோயாளிகளுக்குச் சண்டமாருதத்தை 10 முதல் 20 மில்லி கிராம் அளவிற்கு மிகாமல் 500 மில்லி கிராம் அமுக்கிராச் சூரணத்தில் கலந்து ஒரு நாளைக்கு 2 முறை கேப்சூல்களில் போட்டு விழுங்கச் செய்து அரைத் தேக்கரண்டி தேனைக் குடிக்கச் சொல்வேன். இவர்களில் ஒரு மாத காலம் விழுங்கினாலும் எந்த வித நச்சுத் தன்மையும் தோன்றுவதில்லையென்பதைக் கவனித்திருக்கிறேன். இந்த நோயாளிகளின் நீர்ப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனைகளும் பாதகமான அறிவிப்புகளை ஏதும் தரவில்லை.

ஏனைய மருத்துவத் துறைகளில் மருத்துவம் பெற்றும் வலியின் காரணம் கண்டறியப்படவில்லை, வலியும் குணமாகவில்லை (pain of unknown origin) என வந்த மூன்று நோயாளிகளில் சண்ட மாருதத்தை வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறேன்.

இந்த மூன்று நோயாளிகளில் இருவர் sciatica வகை ஒத்தைக்கால் வலியினாலும் ஒருவர் brachial neuralgia வகை ஒத்தைக் கால் வலியினாலும் பல மாதங்களாகச் சிரமப் பட்டவர்கள்.

சண்டமாருதத்தை மிகக் குறைந்த அளவில் அமுக்கிராச் சூரணத்துடன் வழங்குகின்ற போது அதன் கூட்டுச் செயல்பாடு சண்ட மாருதத்தின் நச்சுத் தன்மையைக் குறைத்து மருத்துவத் தன்மையை மேம்படுத்துவதாகத் தெரிகிறது. இரசக் கலப்பினால் திசுக்கள் சேதமடையாமல் அமுக்கிரா காப்பதாகத் தெரிகிறது.

அண்மையில் போபாலில் நச்சுக் காற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தோன்றிய புண்களைப் பரிகரித்து லட்சுமணபுரி கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் நரேந்திர சிங் இரசாயனங்களால் திசுக்களில் ஏற்படுகின்ற சேதத்தை அமுக்கிரா தடுப்பதாக அவரது ஆய்வின் முடிவை அறிவித்திருக்கிறார்.

பூரம் (mercurous chloride) சேர்ந்த மலமிளக்கி மருந்துகள் முந்தைய நாட்களில் நவீன மருத்துவத் துறையில் வழக்கில் இருந்து வந்ததாகவும், அதன் நச்சுத் தன்மை பிருக்கத்தைப் பாதிக்கும் அறிகுறிகள் ஆய்வுகளில் நிரூபிக்கப் பட்டதால் மருத்துவ வழக்கிலிருந்து அகற்றப்பட்டு விட்டதாகவும் அறிகின்றோம்.

ஆனால் சித்த மருத்துவத் துறையில் சிற்றாமணக்கெண்ணெய், ஏலரிசி, சுக்கு இவை சேர்த்துச் செய்யப் படுகின்ற வெள்ளை எண்ணெய் மிகச் சிறப்பான மலமிளக்கியாகப் பயன்பட்டு வருகிறது. சிற்றாமணக்கெண்ணெய் குடித்தவர்களுக்குக் கழிச்சலைத் தொடர்ந்து ஏற்படுகின்றன மலச்சிக்கல் வெள்ளை எண்ணெய் வழங்கப்படும்போது காணப்படுவதில்லை. இப்படி வெள்ளையெண்ணெய் வழங்கப்பட்டவர்களில் பூரத்தினால் பிருக்க நச்சுத்தன்மை ஏற்பட்டிருக்குமா என்பதைக் கண்காணிக்கும் வகையில் வெள்ளையெண்ணெய் வழங்கப்பட்ட மறுநாள் இத்தகைய இருபது நோயாளிகளின் சிறுநீர் பரிசோதனைக்குட்படுத்தப் பட்டதில் எந்தவிதமான பாதகமான விளைவுகளையும் கவனிக்க இயலவில்லை.

கீல்வாத நோய்க்கு மருத்துவம் பெறுகின்றவர்களுக்கு இரண்டு வாரத்திற்கு ஒரு முறை அல்லது நான்கு வாரத்திற்கு ஒரு முறை வெள்ளை எண்ணெயை 15மிலி வழங்கி வருகிறோம். அவர்களில் எந்த வித பாதகமான நச்சுக் குறிகுணங்களையும் காண இயலவில்லை.

இரசக் கற்பூரத்தோடு சிற்றாமணக்கெண்ணெயும் அவற்றின் நச்சுத் தன்மையை இழந்து அவற்றின் மருத்துவப் பயனை மட்டுமே காட்டுகின்ற வகையில் வெள்ளையெண்ணெயின் மருத்துவக் கட்டு அமைந்திருக்கிறது. மேலும் வெள்ளையெண்ணெய் வழங்கப்பட்டவருக்குக் கழிச்சலை நிறுத்தும் பொருட்டு after purgative வழங்க வேண்டிய அவசியம் நேர்ந்தது கிடையாது.

பாதரச வெளிப்பூச்சு மருந்துகள் (Topical applications)

நவீன மருத்துவத் துறையில் வெளிப்பிரயோகத்திற்குப் பயன்படுத்துகின்ற களிம்புகளில் பாதரசத்தைச் சேர்ப்பதை அடியோடு நிறுத்திவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குச் சொல்லப் படுகின்ற காரணம் இத்தகைய களிம்புகளில் சேர்கின்ற இரசம் உடல் குருதிச் சுற்றோட்டத்தினுள் ஈர்க்கப்பட்டுப் பொதுவான நச்சுக் குணங்களைக் காட்டலாம் என்பதே. சுரம், தோல் அரிப்பு முதலிய நச்சுக் குறிகுணங்களைக் கவனித்திருப்பதாகப் பதிவும் செய்திருக்கின்றனர். ஆனால் நடை முறையில் சித்த மருத்துவர்கள் அமிர்த வெண்ணெய், மேகவிரணக் களிம்பு, ஆகியவற்றைப் பரவலாகவும் அடிக்கடியும் பயன்படுத்தி வருகிறோம். இவை நச்சுக் குணங்களைத் தோற்றுவிப்பதை எனது இருபது ஆண்டுகால அனுபவத்தில் பார்த்ததில்லை. குறிப்பிட்ட இடத்தில் மட்டும் செயல் படுமாறு அதனுடைய இரசாயனக் கலவையை எவ்வாறு அமைத்துள்ளனர் என்பதை இரசாயன அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்தால் இத்தகைய மருந்துகளைத் தரக்கட்டுப்பாடு செய்ய வசதியாக அமையும்.

ஆனால் இத்தகைய தரக்கட்டுப்பாடுகளைச் செய்வதற்கு மிக நுட்பமான தொழில் நுட்ப வசதிகள் தேவைப் படுவதாக அறிகிறோம். எடுத்துக்காட்டாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். சென்னையிலுள்ள சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் அதனுடைய பொறுப்பு இயக்குநர் டாக்டர் ஜி. வேலுச்சாமியின் வழிக்காட்டுதலில், இலிங்கச் செந்தூரத்தில் சுரத்தைக் குறைக்கும் ஆற்றலை மதிப்பீடு செய்திருக்கின்றனர். இலிங்கச் செந்தூரத்தை 200 முதல் 300 மிகி வரை பாதுகாப்பாக வழங்கலாம். ஆனால் இலிங்கச் செந்தூரம் வழங்கப்பட்ட நோயாளிகளில் இரத்தத்தைச் சோதித்துப் பார்த்ததில் அதில் பாதரசத்தின் தடயமே கிடைக்கவில்லை. சிறுநீரிலும் அதற்குரிய அறிகுறிகள் காணப்படவில்லை என்கின்றனர்.

அண்மையில் சென்னை மைய சித்த மருத்துவ ஆராய்ச்சி மாளிகையின் மருந்தியல் நிபுணர் திரு கோஷ் அவர்கள் நெல்லை சித்த மருத்துவக் கல்லூரிக்கு வந்திருந்த போது இது பற்றிக் கலந்துரையாடினேன். அவர்களுடைய கருத்துப்படி கொஞ்சமாவது பாதரசம் இரத்தத்தில் கலந்திருக்கக்கூடும். ஆனால் அதை அறுதியிட்டு ஆராயக் கூடிய வசதி இந்தியாவில் மிகச் சில அணுசக்தி நிலையங்களிலேயே இருக்கக் கூடும் என்றார்.

பாதரசத்தை சித்த மருத்துவத் துறையில் பயன்படுத்தாத பிரிவுகளே கிடையாது எனலாம். ஆகவே அத்தகைய பாதரச மருந்துகளைத் தரக்கட்டுப்பாடு செய்வதற்கு நுட்பமான கருவிகளோடு கூடிய மருந்துத் தரக்கட்டுப்பாடு நிலையம் ஒன்றினை நிறுவிட வேண்டும்.

முடிவுரை

சித்த மருத்துவத்தின் சிறப்பிற்குக் காரணமாக இருப்பவை அதனுடைய பாதரசக் கலப்புள்ள மருந்துகளே. பாதரச மருந்துகள் முக்கிய உறுப்புகளுக்குக் கேடு செய்யலாம் என்ற எச்சரிக்கையை நவீன மருந்தியல் அறிஞர்கள் தந்துள்ளனர். ஆனால் நடைமுறையில் இத்தகைய அச்சம் எல்லாப் பாதரச மருந்துகளுக்கும் பொருந்துவதில்லை என்பதைக் கண்டிருக்கிறோம். நன்றாக முடிக்கப் பெறாத, முறைகேடாக வாங்கப்படும் இரச மருந்துகளால் தீங்குகள் ஏற்படும் என்பதிலே நமக்கும் உடன்பாடுதான். ஆகவே பாதரச மருந்துகளை நீண்ட கால நோய்களுக்கு வழங்குகின்ற காலத்தில் முக்கிய உறுப்புகளுக்குப் பாதிப்புகள் ஏற்படுகின்றனவோ என்பதை ஆய்வுக்கூடப் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்வது பாதரச் அம்மருந்துகளைச் சிறந்த முறையிலும் ஆபத்து இல்லாமலும் வழங்குவதற்கு உதவியாக இருக்கும். நவீன வேதியியல் அறிஞர்களும், உயிர் வேதியியல் அறிஞர்களும், மருந்தியல் அறிஞர்களும், மருத்துவ அறிஞர்களும் அவர்களுக்குள்ள வாய்ப்பிற்கு ஏற்பச் சித்த மருத்துவத்திலுள்ள இரச மருந்துகளை ஆய்வு செய்ய முன் வர வேண்டும். அப்படி முன் வந்தால் உலக மக்களுக்குப் பயன்படும் விதத்தில் இன்னும் சிறந்த முறையில் பாதரச மருந்துகளைப் பயன்படுத்தலாம்.


---------------------------------------------------------------------------------------
இக்கட்டுரை கீழ்க்கண்ட புத்தகத்திலிருந்து தட்டச்சு செய்யப்பட்டது:

சித்த மருத்துவ ஆய்வுக் கோவை. தொகுதி -1, பக்கம் 9-19
தொகுத்தவர் பேராசிரியர் மு. சதாசிவம், இயக்குனர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்.
முதற்பதிப்பு 1990. இரண்டாம் பதிப்பு 2000. விலை ரூ 125.

இப்புத்தகம் 1990ல் நடந்த சித்த மருத்துவக் கருத்தரங்கில் வெளியிடப்பட்ட 75 கட்டுரைகளின் தொகுப்பு. இதில் பல அரிய செய்திகளும், வழிகாட்டுதல்களும் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்குப் பெரிதும் பயன்படும்.

2 comments:

said...

மிக நல்ல, பயன் தரும் பதிவு. பாதரசம், உலோகங்கள் இவைகளைப்பற்றிய நவீன அறிவியலின் முடிவுகளை மட்டும் (அதுவும் நாளுக்கொன்றாய் வந்துகொண்டிருக்கும் நிலையில்) கணக்கில் கொண்டு மிக நீண்ட பாரம்பரிய சித்த மருத்துவத்தை மீளாய்வு செய்யாமலேயே புறக்கணிப்பது நமக்கு மிகப்பெரிய இழப்பாகும். அபாயம் தரும் கதிவீச்சுகளைக் கூட நவீன ம்ருத்துவம் தேவை கருதி அதன் பக்கவிளைவுளையும் கணக்கில் கொண்டு பயன்படுத்திவருகையில், இந்த பாதரசம் கலந்த மருந்துகள் புற்று நோய், எய்ட்ஸ் போன்ற போன்ற நோய்களையும் குணப்படுத்தும் தன்மைகொண்டவைகளாய் இருப்பதால் அவற்றை மிகவிரைவில் ஆராய்ந்து மேம்படுத்துவதும், பயன்படுத்துவதும் செய்யத்தக்கது.

இதை விக்கிபீடியாவில் இணைக்கமுடியுமாவெனப் பார்.
நன்றிகள் பையா!

said...

ஆற்றாமைதான் மிஞ்சுமா?!
நன்றி உனக்கு.