உயரும் கோபுரங்களில் முறியும் சிறகுகள்

Image hosted by Photobucket.com

நேற்று வானொலியில் பறவைகளைப் பற்றிய செய்தியொன்றைக் கேட்டேன். இப்போது கொஞ்சம் இணையத்தை அலசிப் பார்த்தால் அதிர்ச்சியாகத்தானிருக்கிறது:

வட அமெரிக்காவில் வானுயரக் கட்டிடங்களின் கண்ணாடிகளில் மோதி வருடத்துக்கு பில்லியன் பறவைகள் சாகின்றன. இது இங்கேயிருக்கும் மொத்தப் பறவைகளில் 5%. ஏற்கெனவே காடழிப்பால் அவற்றுக்கு இடம் காணாமல் போவதுடன் நாடாக்கலில் இப்படியொரு சிக்கல்.

இரவில் கண்ணாடியின் வழியே தெரியும் உள்ளேயெரிகின்ற விளக்குகளாலும், பகலில் கண்ணாடிகளின் பிரதிபலிப்பாலும் கண்ணாடி அவற்றுக்குத் தெரிவதில்லை.

கலங்கரை விளக்கம், பரப்பிக் கோபுரங்கள், காற்றாலைகள் என்று உயர்ந்த கட்டுமானங்கள் பலவற்றிலும் பறவைகள் மோதிக் கொள்கின்றன.

கால நிலைக்கு இடம் பெயரும் பறவைகளும், இரவில் பயணிக்கும் பறவைகளும் பெருமளவு இத்துயருக்கு உள்ளாகின்றன.

பறவைகள் வேகமாகப் பறக்கின்றதால் அடி (தலையில்) பலமாயிருக்கும். அடிபடுகின்றவைகளில் பாதிக்கு மேல் மரணிக்கின்றன (அப்படியென்றால் அடிபடுவது இன்னொரு பில்லியனா?).

இதற்கான தடுப்பு முறைகளாகத் தெரிகின்றவை: கண்ணாடிக் கட்டிடங்களுக்குள் இரவில் விளக்குகளைப் போடாமலிருத்தல், கண்ணாடிகளை பிரதிபலிப்பற்றதாக ஆக்குதல். கண்ணாடிக் கட்டிடங்களை மரங்களிடமிருந்து சற்றுத் தள்ளி வைத்தல்.

அ.முத்துலிங்கத்தின் "மகாராஜாவின் ரயில் வண்டி" சிறுகதைத் தொகுப்பில் ஒரு கதையில் கட்டிடத்துக்குள் பறந்து வந்து மோதிச் செத்துப் போகும் ஒரு பறவையைப் பற்றி வரும். அவர் அதிலே அந்தப் பறவை தவறான திசையில் திரும்பியதால் இறந்ததாகச் சொல்லியிருப்பார். அதையே ஒரு பாடமாகக் காட்டி அவரது நிறுவனம் ஒரு தவறான திசைக்குத் திரும்புவதைத் தடுக்குமாறு உரையொன்று நிகழ்த்துவதாகக் கதை இருக்கும். படிப்பவருக்குப் பறவைதான் ஏதோ தெரியாமல் தப்பு செய்துவிட்டதாகத் தோன்றும். பாத்து வந்திருக்கக் கூடாதான்னு அடியில சத்தம் கேக்கும். ஆனா தப்பு செஞ்சது அந்தப் பறவை இல்ல. மனுசங்க.

செய்தி: NPR
படம்: சியாட்டிலில் எடுத்தது.

2 comments:

said...

அமெரிக்கா மட்டும் இதுவரை கொன்றழித்திருக்கும் மக்கள் தொகை மட்டும் 125 கோடி என்று ஒரு கட்டுரையில் படித்தேன். அது எனக்கென்னவோ குறைவாகப் படுகிறது.

பறவைகளுக்கு மட்டும் விமானம் ஓட்டத்தெரிந்திருந்தால்?

said...

நவன், வீட்டோரங்களில் மண்டிக்கிடக்கும் அந்த பெர்ரிப் பழம் இத்தனையைச் செய்கிறதாவென்று ஆச்சரியமாயிருக்கிறது. இதிலும் இடம்பெயர் பறவைகளே அதிகம் பாதிக்கப் படுகின்றன, புது இடத்தில் தெரியாமல் தின்றுவிடுகின்றன போலிருக்கிறது.

தங்கமணி, //125 கோடி// இதில்லாமல் இந்த சாப்பாட்டை ஊட்டிக் கொல்வது பெருந்தொகை! சாப்பாடு என்றதும் இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. சுற்றுலாப் பயணிகள் பலவிடங்களில் பறவைகளுக்கு ப்ரெஞ்ச் ப்ரைஸ், பட்டர் பாப்கார்ன் போன்ற 'நல்ல' தீனிகளை வீசியெறிவதால் அவையும் பருத்துப் போய் நோய்வாய்ப்பட சாத்தியமிருக்கலாம்.