St Patrick's Day Parade

உடைகள், தொப்பி, தலை முடி, தாடி, மீசை எங்க பாத்தாலும் பச்சை. யாரப் பாத்தாலும். என்னன்னு கேக்குறீங்களா? புனித பேட்ரிக் தினமாம். அப்புடின்னா. அவரு அயர்லாந்துல கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புனாராம். கி. பி. 400 வாக்கில். பதின்ம வயதில் ஏதோ ஒரு சண்டையில் பிடிபட்டு அடிமையாய் விற்கப்பட்டு, ஞானமடைந்து தப்பியோடி, கிறிஸ்தவ போதனையை அயர்லாந்து முழுக்கப் பரப்பியிருக்கார். ஐரிஷ் குடிகளைக் கிறிஸ்தவக் குடிகளாக்கியிருக்கார். அயர்லாந்து முழுக்கப் பாம்புகளே கிடையாதாம். இவருதான் ஓடிப் போன்னுட்டாருன்னு ஒரு கதை. என்னென்னமோ கதையையெல்லாம் நம்புறீங்கள்ல இதையும் நம்புங்க.

உலகமெங்கும் சுமார் 70 மில்லியன் ஐரிஷ் குடிகளாம். அயர்லாந்தின் வரலாறு எல்லா வரலாறுகளையும் போலவே ஆக்கிரமிப்பும், 'அரசங்கீகாரம்' பெற்றக் குடியமர்வுகளும், பின் தோன்றிய மதங்களும், மதங்களுக்கிடையேயான பூசல்களும், பூனைகளின் ஆப்பத்தைப் பங்கு பிரித்த நாட்டாமைக் குரங்குகளும், இத்தனைக்கும் நடுவிலே குடியும், இசையும், கூத்துமாய் அந்தப் பசும் நிலத்தில் மக்களைப் புரட்டியெடுத்திருக்கிறது.

மார்ச் 17, இந்த நாள் உலகெங்குமிருக்கும் அத்தனை ஐரிஷ் காரர்களுக்கும் மண்ணை நினைத்துக் கொள்ளும் ஒரு நாள். புனித பேட்ரிக்கை நினைக்கிறார்களோ இல்லையோ, தாயகத்தை நினைத்துக் கொள்கிறார்கள். கோயிலுக்கும் போகலாம், குடிக்கடைக்கும் போகலாம். சந்தோஷமாயிரு.

Image hosted by Photobucket.com

அமெரிக்காவிலும் பல நகரங்களில் இந்நாள் ஒரு கொண்டாட்டந்தான். 17ந்தேதி வார நாளில் வருவதால் முன்னதாகவே முந்தாநாள் ஊர்வலத்தை நடத்திவிட்டார்கள். போனோம். ஸ்கர்ட்டு போட்ட ஆண் பாண்டு வாத்தியக் காரர்கள், பெரிய பெரிய தலைப்பாகைகள், மீசைகள், பழங்கால இக்கால உடைகள், வாத்தியங்கள், வாகனங்கள். ஐரிஷ் மட்டுமில்லை, அமெரிக்க-ஐரிஷ், அமெரிக்கக் கலாச்சாரமும் ஒட்டிக் கொண்டே வருகிறது. அமெரிக்கத் தீயணைப்பு, காவல், ஆமி, நேவி, போரில் ஊனமுற்றோர். இப்படித்தான் எங்காவது கூட்டம் திரண்டுவிட்டால் அமெரிக்கா நாட்டுப் பற்றை ஊடே சொருகி விடும்.

Image hosted by Photobucket.com

பார்க்கத் திகட்டாத ஊர்வலம் வந்து கொண்டேயிருந்தது. ரெண்டுமணி நேரந்தான் நிக்க முடியும். கிளம்பியாச்சு. பெருமூச்சு. திருமூலனுக்கு ஒரு விழாக் கொண்டாடலாமா இப்படி? உலகத் தமிழரெல்லாம் இப்படிச் சேருவமா?... இதுக்கு மேல நினைக்க முடியல அல்லது நெனக்கிறத எழுத முடியல. அயர்லாந்துக் குடியரசுப் படைக்காரன், ரெண்டு குண்டு போட்டு பன்னிரெண்டு வருஷம் சிறையிலிருந்தவனெல்லாம் ராஜ மரியாதையோடு ஊர்வலத்துல போவான், கேட்டா மண்ணும்பான், விடுதலைம்பான், மொழிம்பான். தமிழனின் ஒற்றுமை, இனவுணர்வு, விடுதலை மட்டும் தமிழனுக்கே கேலி, பயங்கரவாதம்!

Image hosted by Photobucket.com

0 comments: