ஒரு ஊர்ல ஒரு சேரா சேத்தி

மூனு மாசத்துக்கு ஒரு தரம், வாங்குற காசுக்கு என்ன செஞ்சோம்னு ஒரு அறிக்கை குடுக்கனும். அந்தக் கருமாந்திரத்துக்காக ஒரு வாரத்துக்கும் மேல வேலை செய்ய வேண்டியதாப் போச்சு! அன்றன்றைய வேலையை அன்றன்றைக்கே ஒழுங்கு செய்து வைத்திருந்திருந்தால் பிரச்சினை இருந்திருக்காது. ஆனால் அப்படி இருந்துவிட்டால் நானும் சுந்தரவடிவேலாக இருக்க முடியாதல்லவா?!

வீட்டுல நிறைய சுவர்கள். அதுல ஒரு சுவர்ல ஒரு சிலேட்டு தொங்குது. அதுல வரி, விசா, அதுக்கு இதுக்குன்னு செய்ய வேண்டிய வேலையெல்லாம் எழுதி இருக்கு. இல்ல தொங்குது. விடு கழுதையை. கடைசி நேரத்துல செய்ற மாதிரி ஒரு சொகம் உண்டுமா? எட்டு மணிக்கு பஸ்சுன்னா, டிரைவர் ஏறி, கண்டக்டர் ஏறி, எங்கய்யா ரிசர்வு பண்ணுன ஒரு ஆளக் காணோம்னு அவரு வேற யாரயாச்சும் ஏத்திக்கலாமான்னு யோசிக்கிறப்பதான் ரெண்டு கைலயும் பொட்டியும், தோள்ல ஒரு பையுமாப் போயி முக்கி முக்கி ஏறனும். அப்ப கண்டக்டர் மூஞ்சியையும், ரொம்ப முன் ஜாக்கிரதையா ஆறரையிலேருந்து பஸ்டாண்டுல ஒக்காந்திருந்த பக்கத்து சீட்டுக் காரர் மூஞ்சியையும் யோசிச்சுப் பாக்குறேன்.

நம்ம உடம்புல இருக்க செல்களுக்கு ஒரு திசையுணர்வு இருக்கு. Directionality அப்படிங்கறதை திசையுணர்வுங்கறேன். பாக்டீரியா இருக்க பக்கமாத்தான் வெள்ளையணு நகரும். அது மாதிரியே வளர்ச்சிக்கு உரம் இருக்க பக்கமாத்தான் பசிக்கிற செல் நகர்ந்து போவும். அதோட ஓட்ட சக்தியெல்லாம் போற பக்கமாத்தான் குவியும். மனசுக்கும் ஒரு திசையுணர்வு இருக்குங்கறேன். எதை நாம செய்யணும்னு நெனக்கிறோமோ அந்தப் பக்கமாத்தான் நம்ம சக்தியெல்லாம் குவியுது. ஒரு பக்கம் குவிஞ்சு இருக்கப்ப இன்னொன்னைப் பாக்க முடியறதில்ல. வேலையப் பாக்கறப்போ வலைப்பதியவோ, படிக்கவோ முடியறதில்லை. அதே மாதிரி வலைப்பூவுல இருக்கப்போ வேலையைப் பத்தி நெனக்க முடியல. இதையும் அதையும் பாத்துக்கறதுக்கு ஒரு நெதானமும், அலையா மனசும் ரொம்ப முக்கியம். நமக்குத்தான் அது கெடயாதே! வச்சா குடுமி, சிரைச்சா மொட்டை. "உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கனும் ஓட்டி மகிழ்ந்திடுவோம்" அப்புடின்னு பாரதி சொன்ன மாதிரி, வுடுங்க எங்க போவுதுன்னு பாக்கலாம்னு இருக்கது. இது ஒரு வகை. "சென்ற இடத்தாற் செலவிடாதீ தொரீஇ ஒன்றின்பால் உய்ப்பது அறிவு" அப்படின்னு வள்ளுவர் சொல்ற மாதிரி இருக்கது. இது இன்னொரு வகை. ரெண்டுக்கும் நடுவில ஊசலாடி காடாறு மாசம் நாடாறு மாசமா இருக்கது இன்னொரு வகை. சேரா சேத்தி அப்படின்னு எங்கம்மா சொல்றது. என்னைத்தான். சேரா சேத்தின்னா சின்னப்புள்ளை/பெரியபுள்ளை, நல்லவன்/கெட்டவன் இது மாதிரி எதுலயும் வகைப்படுத்த/சேர்க்க முடியாது! ஆளு மாதிரிதானே எழுத்தும், அதனால என்னோட எழுத்தையும் சேரா சேத்தின்னே வச்சுக்கலாம்!

0 comments: