வெறுங்கனவா?

காணுஞ் செய்தி யெலாம்பொய்
யரசியலுஞ் சூழ்ச்சியுமாய் மற்று
நடப்போராயிரத்தாற் சிந்தை சோர்ந்தாலும்
என்றைக்கும்போல் நேற்றிரவு முண்டு
மூடியவிழியின்பின் திறந்த கனவொன்று:

குளங்காணிமரம்பேணச் சிந்தையோடக்
கடல்நிலமலை யேழுந் தாண்டிச்
சந்தி யெரிவிளக்கு வண்ணத்துக்குக்
கவனித்து நின்று செல்லுந்தேருருட்டிக்
காசும்பாராப் பெருமூச்சுக்காரன் செத்தான்.

சிறுபள்ளியருகே மயிர்க்கடை யதிற்
கால்மிதியாற் சுழலுஞ் சாணைக்கல்லிற்
தீட்டுங்கத்திக் கிளப்புந் தீப்பொறி
யவியுமோர் நொடியிலாபோல் நொடிக்கொரு
சீற்றமவியும் நெஞ்சினனு மடிந்தான்.

புதியவப்பிறப்பில் நின்றெரி பெருந்தீ
நேர்மை யுளத்தொடு
வேல்வாட் தரித்து வெம்போர்க்
களஞ்செல்லு நானோர்ப் புரட்சிக்காரன்.

குயிலுக்கு மெல்லிசைக்கு
முக்கியெச்சமிட்டே னெனக்கு
கறுப்புத் தோற்கை
அதிருந்தவில் பறைபிடிக்கும்

அரசின் காவற் துறையிற் சேர
அக்குள்மயிர்ப் புயம் வெயில்வாங்கிக் காத்தபின்
காலணியுஞ் சான்றிதழும் குப்பைக்கிழந்த
ஐந்து பத்து இருபதாயிரங் காளையரிவரொடு
நெஞ்சிற் கனலெரி பல்லாயிரம் பெண்டிர்
எல்லோருங் கிளர்ந்தெழுந்தோ மெம்படைக்கு
வெற்றிக்குப் பசிக்குமதி செயல்நூறு பசிதோள்

தரகுவெட்டிக் குளத்தில் தண்ணீர்
சேற்றுவாசம் மரநூறாயிரம் இடியாப்பாலம்
மறுபடியெங் குழவிகட் தும்பைச்
செடியெடுத்துப் பட்டாம்பூச்சி துரத்த
எம்படை ஊழியத்துக்குத் தலைவரோராள்

மீந்தமாலையிராவிற் பாட்டுஞ்சதிரு மோர்நாள்
தெருக்கூத்துக்கு வந்து பள்ளிகொண்டபெருமாளை
அடித்தெழுப்பிய கங்காணிக்குக் கூட்டங்
கைதட்டிச் சிரிக்கச்

சத்தமோங்க...

விழிப்பு
பாலுக் கழுதான் பிள்ளை.

0 comments: