நட்டாற்றில்

அன்றைக்கு என் மகனுக்கு ஒரு கதை படித்தேன். ஒரு ஆறு. குறுக்கே சின்னதாய் ஒரு மரப்பாலம். இரண்டு ஆடுகள் எதிரெதிரே அந்தப் பாலத்தின் மேல் வந்தன. ஒன்றுக்கொன்று விலகவில்லை. இரண்டும் முட்டிக் கொண்டு ஆற்றில் வீழ்ந்தன. மற்றொருநாள் வேறு இரண்டு ஆடுகள். அதே பாலத்தின் மேல் எதிரெதிரே. ஒன்று உட்கார்ந்து கொள்ள மற்றொன்று மெதுவாய் அதைத் தாண்டிக் கடந்தது. இரண்டும் கரை சேர்ந்தன. ஆற்றைக் கடக்க ஒன்றாகப் போய்க் கொண்டிருந்த பல ஆடுகளில் ஒன்று சில ஆடுகளைச் சேர்த்துக்கொண்டு நட்டாற்றுக்குப் போனவுடன் திரும்பி மற்ற ஆடுகளோடு மல்லுக்கு நின்றால் என்னவாகும்? எல்லாம் கூட்டமாக விழ வேண்டியதுதான். இத்தனை தூரம் கடந்ததெல்லாம் வீண்.

கருணாவிடம் நியாயமான கவலைகள் இருப்பதை உண்மையென்றே கொண்டாலும், அதாவது மேல்மட்டப் பொறுப்புகளில் வடக்கைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருப்பதாகவும், போர்வீரர்கள் கிழக்கைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் அவருக்கு முரணாகத் தெரிந்திருப்பதும் அதற்காகக் குரல் கொடுப்பதும், சிறிதும் தடுக்கப்பட வேண்டிய செயல்கள் அல்ல. ஏனென்றால் அடக்குமுறைகளைப் பற்றிச் சாதாரண மக்களுக்குத் தெரிவதை விட விடுதலை உணர்வு கொண்ட போராளிகளுக்கு நன்கே தெரியும். அதனால்தான் தலைமையிடத்தின் இந்தப் பாரபட்சமான நடவடிக்கைகள் கருணாவை உறுத்தியிருக்க வேண்டும். ஆனால் கருணாவின் பிரிந்து செல்லும் முடிவு, அதுவும் பயிற்சி பெற்ற வீரர்களையும் வீராங்கனைகளையும் தம்பக்கம் இழுத்துக் கொண்டு போவது எள்ளளவும் ஒத்துக் கொள்ளப் பட முடியாதது. தான் ரத்தம் சிந்தி வளர்த்ததற்கான உரிமையில் அந்த இயக்கத்தைப் பிரித்துக் கொண்டு போவது என்ன நியாயம்? தான் கடினமாக உழைத்ததற்காக ஒரு நிறுவனக் கிளையைத் தனியே எடுத்துக் கொண்டு போய்த் தனி நிறுவனம் ஆரம்பிப்பது தர்மமாகாது. அவருடைய பொறுப்பில் வளர்ந்த கிளை என்பது வெறுமனே அந்தத் தனிமனிதருக்குக் கிடைத்த அங்கீகாரமல்ல, அது ஒரு இயக்கத்திற்கான அங்கீகாரம். இந்த விஷயத்தை அவர் சரியாக மதிக்க வில்லையோ என ஐயுறுகிறேன். அதோடுமட்டுமின்றிக் கட்டுக்கோப்பான இயக்கத்தின் ரகசியங்களை அம்பலப் படுத்துவது அவரையும் இயக்கத்தையும் மட்டுமன்றித் தமிழினத்தையே பலவீனப் படுத்துகிறது.

கருணா செய்வது தவறு. இந்த இக்கட்டான தருணத்தில் தமிழன் தனக்குள்ளே இப்படிப் பிளவுபட்டுக் கிடப்பது சரியில்லை. எந்த ஒளவையார் இப்போது தூது போவார்? தமிழனுக்கு விடிவு என்பது வெறும் கனவுதானா, சாதிச் சண்டையும், கட்சிச் சண்டையும்தான் தமிழன் தலையில் எழுதி வைக்கப் பட்டதா? நரிகள் ரதங்களில் ஊர்வலம் போய்க் கொண்டிருக்கும் போது புலிகள் இப்படி அடித்துக் கொள்வதைக் காணச் சகியவில்லை எனக்கு.

0 comments: