முறுக்குப்பிரி பிரித்து

மன்னிக்கனும். புரியக்கூடாதுன்னு நேத்து அப்படி எழுதல! ஏதோ ஆர்வக் கோளாறு காரணமா முறுக்கைக் கொஞ்சம் இறுக்கிச் சுத்திப் பிழிஞ்சுட்டேன். கவிதைக்கு வெளக்கஞ் சொல்றதும், அந்த வெளக்கத்தப் படிக்கிறதும் அவஸ்ததான். ஆனாலும் 3ல் 2 (பங்கு!) வாசகர்கள் கேள்வி எழுப்பயில அதுக்கு பதில் சொல்லுறது ஒரு எழுத்தாளனுக்குக் கடம இல்லயா? அதோட நம்ம செல்வராஜ்சார் வேற நேத்து சொற்சித்து அப்புடி இப்புடின்னு பெரிய வார்த்தையெல்லாம் போட்டு என்னைப் பாத்து நானே சிரிக்க வச்சுட்டார். சித்துன்னு இல்லன்னாலும் சிக்குன்னு கெடக்கப்புடாது பாருங்க. அதுனாலயும் வெளக்க நெனக்கிறேன். ஆனா இதுல பாருங்க ஒரு சிக்கல். நாம்பாட்டுக்கும் ஒரு அர்த்தத்த சொல்ல, ஏற்கெனவே இதப் படிச்சு வேற மாதிரி ஒரு நல்ல அர்த்தத்தப் புரிஞ்சு வச்சிருக்க ஒருத்தர் இப்ப இந்த அர்த்தத்தப் படிச்சா, பூ இதத்தான் சொன்னானா, நாங்கூட என்னமோ ஏதோன்னுல்ல நெனச்சேன் அப்படின்னு நெனைக்கவும் வாய்ப்பு இருக்கு. எப்புடி இருந்தாலும் என்னோட எழுத்து ஞாயத்தச் சொல்லுறதுல தப்பு இல்லன்னே படுது. அதுனால அடிச்ச கோனார் நோட்ஸ் கீழே!

மொத பத்தியில - பல நடப்புகளாலயும் நான் அவஸ்தப் படுறேன். அப்புடி இருந்தும் தெனம் சாப்புடற மாதிரியே சாப்புட்டுட்டு தூங்கற மாதிரியே தூங்குறேன். அதுல பாருங்க நேத்து ஒரு கனவு:

2ம் பத்தி - வயல் வரப்பெல்லாம் பாத்துக்கனும்கற கனவு இருந்தபோதிலும் அதெல்லாம் வுட்டுட்டு, நாடு விட்டு நாடு வந்து டிராபிக் சிக்னல் பாத்துக் காரோட்டி, அப்படியிருந்தும் பெருசா காசுகூட சேக்காம பெருமூச்சு விட்டுக்கிட்டுக் கெடந்தவன் செத்துப் போனான் (நாந்தான். கனவுல).

3ம் பத்தி - சின்னப் புள்ளயில பள்ளிக்கூடத்துப் பக்கத்துல ஒரு முடிவெட்ற கடை. அதுல காலால மிதிச்சு சுத்துற ஒரு சாணைக்கல்லு. அதுல தீட்டுற கத்தி. அப்ப வர்ற தீப்பொறி. அந்தத் தீப்பொறியின் வாழ்க்கை கண நேரந்தான். அது மாதிரி பல விதமான வேகங்கள்/முடிவுகள்/சீற்றங்கள் பொசுக் பொசுக்குன்னு அவிஞ்சு போற மனசுக்குச் சொந்தக் காரனும் செத்தான் (நானேதான்).

4ம் பத்தி - புதுசாப் பொறப்பு எடுக்குறேன். நெஞ்சுல தீ, கையில கத்தி கித்தி வேசமெல்லாங்கட்டி பொரச்சிக் காரன் (கனவுலதான்).

5ம் பத்தி - பொரச்சிக் காரனாச்சா, மெல்லிசையெல்லாம், குயில் கூவல் எல்லாம் துச்சம் எச்சம். தவில், பறைன்னு அடிச்சு நொறுக்குற நம்ம மக்களிசைதான் புடிக்குமாம். (இந்த 'முக்கியெச்சமிட்டது' வார்த்தை ரமணீதரனிடமிருந்து உறிஞ்சியது!)


6ம் பத்தி - கொஞ்ச நாளக்கி முந்தி தமிழ்நாட்டுல போலீஸ் செலக்சனுக்குப் போயி நொந்துபோயி சண்ட போட்டு, செறுப்பு சர்டிபிகேட் எல்லாந் தொலைச்சாங்களே அந்த ஆயிரமாயிரங் காளைகளும், பல்லாயிரம் வீராங்கனைகளும் சேந்து படை ஆரம்பிக்கிறோம். எங்க மனசுக்கு வெற்றிப் பசி. தோளுக்கு எதாச்சும் செய்யனும்கற பசி.

7ம் பத்தி - காண்ட்ராக்ட் ஆளுகளயெல்லாம் போவச்சொல்லிட்டு நாங்களே கொளம் வெட்டி, மரம் நட்டு இப்படி ஊரு செழிக்குதாம், புள்ளைக விளையாடுதாம். இந்தப் படைக்கு ஒரு தலைவன் வேணுமில்ல. அவன் எங்கள ஆட்டப்புடாது. எங்களுக்கு (படைக்கு) அவன் வேலக் காரனா இருக்கனும்.

8ம் பத்தி - கனவு தொடருது. சும்மா எல்லா நேரமும் சீரியஸா இருக்க முடியுமா, அதான் சாயங்காலம், ராவயில பாட்டு, ஆட்டம். ஒரு நா பாருங்க அந்தக் கூத்துக்குப் பெருமாளு வாராரு. எங்களுக்குச் சாமி செலயெல்லாங்கூட பொம்மைகதான். வந்து எப்போதும்போலத் தூங்குறாரு. அவரப் போயி, யோவ் எந்திரிய்யான்னு எங்க ஊரு கங்காணி தட்டி எழுப்புறாரு. இது எல்லாருக்கும் ஒரு சோக்கு, பகடி, முஸ்பாத்தி, குஷாலு...கேகொள்ளேன்னு கூட்டத்துல ஒரே சிரிப்பும் சத்தமும்.

சத்தம் கூடக் கூடக் கேக்குது...(இது கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட எடத்துல, அதான் கனவோட ஒட்டாம ஒரு வரித் தள்ளி நிக்குது)

சடக்குன்னு முழிப்பு வருது. பாத்தா, பக்கத்துல தூங்குன நம்ம பய எந்திரிச்சு ராப்பசியில அழுவுறான்.

அதாங்க நம்ம கத, கவித, கனவு. வெறுங்கனவாப் போவுமாங்கறது நம்ம கேள்வி!

0 comments: