கக்கா, சித்த கக்கா

ரெண்டு மூனு நாளா இதப் பத்தி எழுதனும்னு நெனச்சேன். தங்கமணியோட மழைப் பதிவைப் படிச்சதுக்கப்புறம் இவ்வளவு அழகா அவன் சொன்னத, இந்த நாத்தம் புடிச்ச பாணியில நாஞ் சொல்லனுமான்னு தோணுது. இருந்தாலும் சொல்லுறேன். நீங்க இந்தக் கக்கா விசயத்துனால உவ்வேன்னு பாதிக்கப்படுற ஆளா இருந்தா சாப்பிட்டுப்புட்டு படிங்க. இல்லன்னா படிக்காதீங்க. இல்லன்னா சாப்புடுறப்ப இத நெனக்காதீங்க!

சிக்கல்கள் இருக்கதுதான் வாழ்க்கை, உடம்பு. எனக்கென்னமோ எல்லாச் சிக்கலையும் விட ரொம்பக் கொடுமையான சிக்கல் இந்தக் கக்கா சிக்கல்தான்னு படுது. எங்க மாமா ஆஸ்பத்திரில கம்பெளன்டர் வேல பாத்தேன், லீவு நாளயில. முடியாமப்போயி வர்றவங்ககிட்ட மாமா கேக்குற மொதக் கேள்வி, "வெளிய ஒழுங்கா போச்சா?" சிரிக்காதீங்க. இது முக்கியம். உள்ள போனது வெளியில வரணும், இல்லன்னா அவஸ்தன்னு கண்ணனே ஒருநா சொன்னாரு! ஒரு நாள் முழுக்க எந்த அறிகுறியுமே இல்லாம ரெண்டாவது நாள் சுத்தமாப் போயிருச்சுன்னா ஒரு திருப்தி வரும் பாருங்க அடடா. அனுபவிச்சாத்தான் தெரியும்.

முந்தி எங்கப்பா எங்களுக்கு வரிசையா நிக்க வச்சுக் குடுப்பாரு பாருங்க, வெளக்கெண்ணெயில வாளப்பளத்தப் போட்டு, யப்பா.... என்னோட வயிறு சாதாரணமா என்ன, அதுக்கும் மசியாதே. அப்புறமாத்தான் அடுத்த அஸ்திரத்த எடுப்பாரு எங்கப்பா. அது பேரு அகத்தியர் குழம்பு. என்னமோ மீன்குழம்புன்னு நெனக்க வாணாம். அது ஒரு சித்தர் குழம்பு. சின்னோன்டு பாட்டில்ல மை மாதிரி இருக்கும். அகத்தியர் மை அப்படின்னும் சொல்லுவாங்க. வயிறு ஓட. உளுந்தளவு எடுத்து பாக்களவு கருப்பட்டிக்குள்ள வச்சு உருட்டி, வெறும் வயித்துல வெந்நீரோட. சனிக்கிழமை முழுக்க மவனே ஓடு. ஒரு தரம் எங்கப்பா இந்தப் பயலுக்கு ஒரு உளுந்தளவெல்லாம் சரிப்படாதுன்னு ரெண்டு மூனு உளுந்தாக் குடுத்துட்டாருன்னு நெனக்கிறேன். ஓட்டம் நிக்கல. சாயங்காலமா எங்கம்மா வசம்பை சுட்டு, தேனுல குழப்பி, முருகா, கருப்பையா, கொம்புக்காரா இத்தோட நிக்கனுமுடான்னு சொல்லி நாக்குல தடவுணாங்க. ஒரு வழியா நின்னுச்சு. நம்ம ஊருல பதினஞ்சு நாளக்கி ஒருக்க பேதிக்குக் குடுப்பாங்க. முக்கியமா சின்னப் புள்ளங்களுக்கு. பூச்சி, கீச்சி ஒன்னும் அண்டாது. இது நல்லது.

இப்ப விசயத்துக்கு வாரேன். ஆக வயித்துக் கசடு போறது நல்லது. திருப்தி தருவது. பாரதி எதுக்கோ சொன்ன மாதிரி உற்சாகந்தருவது, குதூகலந்தருவது. இந்தத் திருப்தியே இப்புடி இருந்தா, அதாவது உடம்புல இருக்க கசடு வெளியில போனாலே இம்பூட்டு லேசா ஆனோம்னா, மனசுல இருக்க கசடு வெளியில போயிட்டா எப்புடி இருக்கும்? இதை அடிக்கடி யோசிச்சுப் பாப்பேன். இதையெல்லாம் அனுபவிச்சுத்தான் யாரோ ஒரு நாயன்மார்(?) பாடியிருக்கார்:

"சித்த மலம் அறுவித்து சிவமாக்கி எனையாண்ட"

...அப்படின்னு. சித்த மலம் போயிருச்சுன்னா சிவம்.

நல்லது, கெட்டது எதுவுமே சித்தத்துல தங்கப்படாதாம். இதுல எனக்குக் கொஞ்சம் குழப்பம் வர்றதுண்டு. அனுபவம், அறிவுன்னு எதையுமே சேக்காம இருக்கது நடைமுறையாகாதே, எப்படி எதையும் கத்துக்காம வாழுறது? ஆனா பாருங்க நம்ம மனசு நம்மளுக்கு துக்கத்தை, அழுத்தத்தை, ஏக்கத்தை, பழசை நினைவுபடுத்துற அளவுக்கு சந்தோசத்தையோ, நிகழ்வையோ, நல்லனுபவத்தையோ திரும்பிப் பார்க்க விடுவதில்லை. அப்ப என்னத்துக்கு அதைச் சேத்து வைக்க? இந்த ஜென் கூட்டம் ஒரு வழி சொல்லுது, கத்துக்கறது, ஆபீஸ¤க்குப் போறது, வேலை செய்றது எல்லாம் அதது செய்ய வேண்டிய நேரத்துல செஞ்சுகிட்டே இருந்தாப் போதும். அப்பப்ப அததுல இருக்கனும். அப்ப ஒண்ணும் சேராது. பயபுள்ள மனசுக்கு முடிஞ்சாத்தானே. வயிறு மாதிரியே இதுவும் அழிச்சாட்டியம் பண்ணுது.

வயிறு முட்ட உப்புத்தண்ணி குடிச்சா வாயால போவும், அகத்தியர் குழம்பு தின்னா வயித்தால போவும், என்னத்தச் செஞ்சா மனசால போவும்? ஒன்னுஞ் செய்யாதே சவமேன்னு பின் மண்டையில ஒரு அடி.

0 comments: