வலைப்பதிவாளர்களின் குரலாய்


தயவுசெய்து இம்முறையும் இதைக்
கண்ணீரால் அணைக்கப் பார்க்காதீர்கள்.


இந்தச் சூடு ஆறுவதற்குள்
கூரைகளைத் தூக்கியெறிந்து
செங்கல் அடுக்குவோம்.


பள்ளிப் பாதுகாப்புக்கான சட்டங்கள்/விதிமுறைகள் ஏற்கெனவே இருக்கின்றன. அவை சரிவரக் கடைபிடிக்கப் படாமையாலேயே இவ்விபத்து நிகழ்ந்திருக்கின்றது. இருந்தாலும் நாம் அறிந்த வரையில் நமக்குத் தோன்றும் பாதுகாப்பு முறைகளை நம் அரசுக்குத் தெரிவிக்கலாம் என்ற வகையில் இங்கே கருத்துக்களைச் சேகரிப்போம். உங்களுக்குத் தோன்றும், நீங்கள் அறிந்த பள்ளிகளில் பின்பற்றப்படும், விதிமுறைகளை மறுமொழிப்பெட்டியில் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன். நாம் அவற்றைத் தொகுப்போம், குறைநிவர்த்தி செய்வோம், தமிழ் வலைப்பதிவாளர்களின் குரலாக இதை அரசுக்கு/பள்ளி நிர்வாகிகளுக்கு அனுப்புவோம்.  இவை இப்போதைக்கு எனக்குத் தோன்றுபவை.
 
இவ்விதிமுறைகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இரண்டிற்குமானவை:
 
1. ஓலைக் கூரையுடன் கூடிய பள்ளிக்கூட அறைகளுக்கு அங்கீகாரம் உடனடியாக மறுக்கப் பட வேண்டும். இத்தகைய வகுப்பறைகளை உடனடியாக வருவாய்த்துறை மூடி முத்திரையிட வேண்டும்.
 
2. பள்ளிக் கட்டிடங்களைப் பார்வையில் படும்படியான இடங்களில் கட்ட வேண்டும்.
 
3. ஒவ்வொரு வகுப்பறைக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட நுழை வாயில்கள் இருக்க வேண்டும்.
 
4. அந்தப் பகுதியின் தீயணைப்புத் துறையின் தீயணைப்பு எந்திரங்கள் சென்றடையக் கூடிய பாதை வசதி ஒவ்வொரு வகுப்பறைக்கும் இருக்க வேண்டும்.
 
5. அந்தப் பகுதித் தீயணைப்புத் துறையினரின் அனுமதியைப் பெற்ற பிறகே ஒரு பள்ளி ஆரம்பிக்கப் பட வேண்டும். புதுக் கட்டிடம் கட்டப் படும் பட்சத்தில் அந்தக் கட்டிடமும் நெறிமுறைகளுக்கு ஒத்து இருக்கிறதா என்பதைத் தீயணைப்புத் துறை சான்றளிக்க வேண்டும்.
 
6. ஒவ்வொரு வகுப்பறையிலும் போதுமான அளவு வாளிகளும், அவற்றில் மணல், தண்ணீர் போன்றவை எப்போதும் நிரப்பப் பட்டிருக்க வேண்டும்.
 
7. ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையேனும் தீ ஏற்பட்டால் என்ன செய்வது என்று "மாதிரிச் சோதனை" நடத்த வேண்டும். இத்தகைய சோதனைகளில் எந்தெந்த வகுப்பு மாணவர்கள் எந்தெந்த வாயிலின் வழியே வெளியேற வேண்டும் என்று கற்பிக்கப் பட வேண்டும்.
 
8. அந்தந்த வட்டாரத் தீயணைப்புத் துறையினர் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று செயல்முறை விளக்கங்களைச் செய்து காட்ட வேண்டும், தீயணைப்புக் கருவிகளைப் பற்றிச் சொல்லித் தர வேண்டும், தீ விபத்துக்களைப் பற்றிய சிறிய திரைப் படங்களைத் திரையிட வேண்டும்.
 
9. மழலைப் பள்ளிகளை அடுக்கு மாடிக் கட்டிடங்களில் அமைக்கக் கூடாது.
 
10. தீ ஏற்பட்டால் என்ன செய்வது என்று ஆசிரியர்களுக்குப் போதிக்கப் பட வேண்டும். அவர்கள் மாணவர்களைப் பாதுகாப்புடன் வெளியேற்றுவதற்கான முயற்சிகளைச் செய்த பின்னரே தாம் வெளியேறுவதைப் பற்றி யோசிக்க வேண்டும்.
 
11. உயர் வகுப்பு மாணவர்கள் மழலை வகுப்பு மற்றும் ஊனமுற்ற மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும்படி சொல்ல வேண்டும்.
 
12. பதின்மூன்று வயதுக்குக் குறைந்த மாணவர்கள் இருக்கும் வகுப்புக்கள் ஆசிரியரின் துணையின்றி இருக்கக் கூடாது.
 
13. காவல் துறைக்கும் தீயணைப்புத் துறைக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கக் குழந்தைகளுக்குச் சொல்லித் தரப்பட வேண்டும்.
 
14. மதிய உணவு சமையற்கூடங்களை வகுப்பறைகளை ஒட்டி அமைக்கக் கூடாது. இத்தகைய சமையற்கூடங்களிலும் தீயணைப்பு வாளிகளும் அவற்றில் தண்ணீர், மணல் போன்றவையும் நிரப்பபட்டுமிருக்க வேண்டும்.
 
15. ஓலை, மரம் போன்றவற்றையோ அல்லது எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களையோ பள்ளி வளாகத்தினுள் கிடத்தக் கூடாது.
 
16. ஒவ்வொரு மாதமும் வருவாய்/பொதுப்பணித்துறை ஆய்வாளர்கள் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அங்கிருக்கும் பாதுகாப்பு முறைகளை ஆராய்ந்து உறுதி செய்ய வேண்டும்.  
 
அமெரிக்கப் பள்ளிகளின் தீப் பாதுகாப்பு விதிமுறைகளைக் கண்டு தமிழாக்கி இத்துடன் இணைக்கலாம் என்று பத்ரி சொல்லியிருக்கிறார். அதைச் செய்கிறேன்.வெங்கட் தீப்பிடிக்காத கூரைகளைப் பற்றித் தன் பதிவில் எழுதியுள்ளார்.பாஸ்டன் பாலாஜி 'வலைப்பூ'வில் NGOக்களை இதில் ஈடுபடுத்துவது பற்றியும், ஊடகங்களைக் கொண்டு பாதுகாப்பற்ற பள்ளிகளை மக்களின் கவனத்துக்குக் கொண்டு வரச் செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார். ஈழநாதன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவிகளைச் செய்ய இயலுமா என்று கேட்டிருக்கிறார்.உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கவும், நன்றி.





0 comments: